Followers

Tuesday 16 January 2024

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

 


இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேரு பீஜிங் சென்றபோது இரண்டு நாடுகளும் தங்கள் உறவுகளை மேம்படுத்த முயன்றன. இரண்டு நாடுகளும் ஒன்றிற்கு ஒன்றும் பெருந்தன்மையுடனும் மரியாதையுடனும் நடந்து கொள்வதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அமெரிக்கா இரண்டு நாடுகளையும் வல்லரசுகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அப்போது சீனா தெரிவித்திருந்தது. ஆனால் இன்று இந்தியா ஐக்கிய நாடுகளின் பாதுகப்புச் சபையில் நிரந்தர உரிமை பெற்று வல்லரசாக உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படுவதை எதிர்க்கும் ஒரே வல்லரசு நாடாக சீனா இருக்கின்றது.

இந்தியா பிராந்திய வல்லரசல்ல ஆக்கிரமிக்கப்பட்ட நாடு

பிராந்திய வல்லரசு என்ற பதத்தை தற்போது பல்கலைக்கழகங்களும் அரசறிவியலாளர்களும் பாவிப்பதை தவிர்த்து நடுவண் வல்லரசு என்ற பதத்தைப் பாவிக்கின்றனர். ஆனால் எம்மில் சிலர் இந்தியாவை வல்லரசு என அடிக்கடி சொல்கின்றனர். இந்தியா ஒரு படைவலிமை மிக்க நாடுதான். ஆனால் உலகிலேயே அணுக்குண்டு வைத்திருக்கும் இரண்டு போட்டி நாடுகளை அயல் நாடுகளாகக் கொண்டிருப்பதுடன் அவற்றுடன் தீர்க்க முடியாத எல்லைத் தகராற்றைக் கொண்ட நாடு இந்தியா. அதனால் அதன் பாதுகாப்பு மிகவும் வலிமை குறைந்ததாக இருக்கின்றது. அதுமட்டுமல்ல இந்தியாவின் அரசியலமைப்பின் படி இந்தியாவிற்கு சொந்தமானதாக உள்ள பிரதேசங்களை சீனாவும் பாக்கிஸ்த்தானும் கைப்பற்றி வைத்திருக்கின்றன. இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் இந்தியாவிற்கு சொந்தமான 38,000சதுர கிலோ மீட்டரை சீனா கைப்பற்றியிருப்பதாக 2020இல் தெரிவித்திருந்தார். ஆக்கிரமிக்கப் பட்ட நாடாகிய இந்தியா ஒரு “பிராந்திய வல்லரசு” அல்ல. மேலும் இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த ஒரு நாட்டிலும் இந்தியாவால ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் இந்தியா இருக்கின்றது.

ஓங்கி அடித்த பெரியண்ணனான சீனா

1954-ம் ஆண்டு நேரு மாவோ சே துங் சந்திப்பின் பின்னர் சீனாவை இந்தியாவின் பெரியண்ணன் என விபரித்தார். ஆனால் 1962இல் சீனா தீபெத்தைக் கைப்பற்றியதுடன் இந்தியா மீதும் படையெடுத்து இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களைக் கைப்பற்றியது. அசாம் மாநிலத்தில் இருந்து இந்தியர்கள் அரச பதிவுகள் வங்கிகளில் இருந்த பணங்களை எல்லாம் தீயிட்டுக் கொழுத்தி விட்டு இந்தியர்கள் தலை தெறிக்க ஓடினர். அதனால் இன்றும் அசாமில் யார் மண்ணின் மைந்தர்கள் என்ற பிரச்சனை இருக்கின்றது.

இந்தியாவைத் தன்பக்கம் இழுக்க முயலும் அமெரிக்கா

சீனாவை அடக்கும் அமெரிக்கக் கொள்கையை ஒட்டிய செயற்பாட்டில் இந்தியாவையும் இணைக்க அமெரிக்கா விரும்புகின்றது என சீனா சொல்கின்றது. இந்தியாவும் தனது வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவுக்கு சார்பாக மாற்றி வருகின்றது என சீனா கருதுகின்றது. சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்று மடங்காகும். சீனாவிற்கு எதிராக இந்தியா அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்வதில் தயக்கம் காட்டி வந்தது. சீனாவுடன் நல்ல உறவில் இருந்தால் மட்டுமே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற முடியும் என இந்தியா கருதி இருந்தது. 2017-ம் ஆண்டு இந்திய சீன எல்லையை ஒட்டியுள்ள டோக்லம் பிரதேசத்தில் இந்தியப் படைகளுக்கும் சீனப் படைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட பின்னர் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடிவு செய்தது. ஜப்பான் முன்வைத்த குவாட் அமைப்பில் இணைய இந்தியா காட்டிய தயக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. இவை மட்டுமல்ல இந்தியாவும் அமெரிக்காவும் 2+2 என்னும் பெயரில் இரண்டு நாடுகளினதும் வெறியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் அடிக்கடி கூடி இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை அதிகரித்துவருகின்றனர். அதுமட்டுமல்ல அமெரிக்கா இந்தியாடுடனான உறவை தனது கேந்திரோபாய பங்காளியாக தரமுயர்த்தி உள்ளது.

தைவானை இந்தியா காப்பாற்றுமா?

தைவான் மீது சீனா ஓர் ஆக்கிரமிப்பு போரை ஆரம்பித்தால் சீனாவை திசை திருப்ப சீன எல்லையில் இந்தியப் படைகள் தம் நிலங்களை மீட்பது என்னும் பெயரில் ஒரு போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. இந்த நம்பிக்கையில் தான் இந்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா முழுக் கஷ்மீரையும் கைப்பற்றுவோம் என சூளுரைப்பார். ஆனால் கஷ்மீர் போர் என வரும் போது இந்தியா சீனாவுடனும் பாக்கிஸ்த்தானுடனும் மோத வேண்டி வரும்.

இந்திய சீன ஒத்துழைப்பு

இந்தியாவும் சீனாவும் பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் ஆகிய இரு முக்கிய அமைப்புக்களில் உறுப்பு நாடுகளாக உள்ளன. அவற்றில் இரசியாவும் இருக்கின்றது. இந்தியா அமெரிக்கா பக்கம சாயாமல் இருக்கும் படை சீனா நடந்து கொள்ள வேண்டும் என இரசியா எதிர்பார்க்கின்றது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் படைத்துறை மேம்பாட்டையும் பார்க்கும் சீனர்கள் இந்தியா தக்கு சவால் விடக்கூடிய வல்லரசாக வளரும் என நம்புகின்றனர். அதனால் இந்தியா வளரக்கூடாது என அவர்கள் காய்களை நகர்த்தலாம். சீனாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நீரிணைக்கு அண்மையாக இந்தியாவிற்கு சொந்தமான அந்தமான் தீவுகளில் இந்தியாவின் படைவலிமை அதிகரிப்பதும் சீனாவை கரிசனை கொள்ள வைக்கின்றது.

சீனாவின் ஒரு துருவ ஆசியா – இரு துருவ உலகம்

சீனாவின் இலக்கு ஒரு துருவ ஆசியாவும் இரு துருவ உலகமுமாகும். அதாவது ஆசியவில் சீனா தனியாதிக்கம் செலுத்த வேண்டும். உலகின் மற்றப்பகுதிகளில் அமெரிக்காவும் சீனாவும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சீனா தனது படைவலுவைப் பெருக்கும் போது இந்தியா பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது. அதனால் சீனாவிற்கு போட்டியாக இந்தியா தன் படைவலுவைப் பெருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியிலும் பார்க்க சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி ஐந்து மடங்கானது. ஆனால் சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்றரை மடங்கானது. இதனால் இந்தியா தனது பாதீட்டில் அதிக பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

பங்களாதேசம், இலங்கை, மால தீவு போன்ற தெற்காசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் செலுத்துவது இந்தியாவிற்கு அச்சுறுத்தலானது. அத்துடன் இந்தியாவில் இருந்து சீனா செய்யும் இறக்குமதியிலும் பார்க்க அதிக அளவு இறக்குமதியை சீனாவில் இருந்து இந்தியா செய்கின்றது. இதை சமநிலைப்படுத்தக் கூடிய வகையில் சீனா தனது இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என்ற இந்தியவின் நீண்ட நாள் கோரிக்கையை சீனா உதாசீனம் செய்கின்றது.

சீனா தன்னை சமமாக நடத்த வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கையில் சீனா தன்னை ஆசியாவின் தலைமை நாடாகப் பார்க்கின்றது. இந்த முரண்பாடு இல்லாமல் போக வாய்ப்பில்லை.


Thursday 4 January 2024

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் மறைமுகப்போர்?

ஈரான் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராக நிகராளிப் போர் (Proxy war - அதாவது மூன்றாம் தரப்பினர் மூலமாகச் செய்யும் தாக்க்குதல்) செய்வதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம் சாட்டி வருகின்றன. லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பு, யேமனில் செயற்படும் அன்சர் அல்லா அமிப்பு உட்பட பல இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு பணம், பயிற்ச்சி படைக்கலன் போன்றவற்றை ஈரான் வழங்குகின்றது எனவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம் சாட்டுகின்றன. இந்த அமைப்புக்களின் உருவாக்கத்தில் இருந்து வளர்ச்சி வரை கடுமையாக உழைத்தவர் ஈரானின் முன்னாள் தளபதி காசிம் சுலைமான்.

சுலைமானி நினைவுநாளில் படுகொலை

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிரான இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்களை ஈரானியப் படைத்தளபதி காசிம் சுலைமானி நெறிப்படுத்துகின்றார் என்பதால் ஈராக்கிற்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்த வேளை அங்கு வைத்து அமெரிக்க ஆளிலி விமானம் மூலமாக குண்டுகளை விச்சி அவர் 2020 ஜனவரியில் கொல்லப்பட்டார். 2024 ஜனவரி மூன்றாம் திகதி அவரின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்வு பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருக்கும் வேளையில் இரண்டு குண்டுகள் வெடித்து நூற்றிற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் பல நூறு மக்கள் காயப்பட்டனர்.

ஹிஸ்புல்லா தளபதி படுகொலை

2023-ம் ஆண்டின் இறுதியில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமாக காசா நிலப்பரப்பில் குண்டுகளை வீசுவதை நிறுத்திவிட்டு தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீது துல்லியத் தாக்குதல்களைச் செய்யும்படி அறிவுறுத்தியிருந்தது. அதன் பின்னர் பெருமளவு இஸ்ரேலியப் படையினர் காசா நிலப்பரப்பில் இருந்து வெளியேறினர். அத்துடன் லெபனானில் இருந்து செயற்படும் ஈரானியா ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் பலஸ்த்தீன மேற்குக் கரைக்குப் பொறுப்பான தளபதியும் ஹிஸ்புல்லாவிற்கும் ஈரானுக்குமான தொடர்பாளராக கடமையாற்றுபவருமான சலே அல் அரூரி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து இஸ்ரேலிய ஆளிலி மூலம் குண்டு வீசிக் கொல்லப்பட்டார்.

ஈரானிற்கு எதிராக பலுச் இனமக்களா?

2023 டிசம்பர் 17-ம் திகதி ஈரானின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள ராஸ்க் நகரத்தின் காவல் துறையின் தலமையகம் மீது பலூச் இன போராளிகள் தாக்குதல் நடத்தினர். பலுச் இன மக்கள் பாக்கிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான், ஈரான் ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் வாழும் நிலப்பரப்பு பிரிக்கப்பட்டு அந்த மூன்று நாடுகளிலும் இருக்கின்றது. பலுச் மக்கள் வாழும் பாக்கிஸ்த்தானிய நிலப்பரப்பில் சீனா-பாக்கிஸ்த்தான் பொருளாதாரப் பதையின் முக்கிய பகுதி அமைந்துள்ளது. சீனாவின் முத்துமாலைத் திட்ட துறைமுகமான குவாடர் பலுச் மக்கள் வாழும் பலுஸ்சிஸ்த்தான் மாகணத்தில் உள்ளது. உலக அரசியல் போட்டியில் பலுச் மக்கள் வாழும் பகுதி முக்கியமானதாகும்.

2023 ஒக்டோபர் 7-ம் திகதி ஈரானிய ஆதரவு பெற்ற கமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபின்னர் பலுச் விடுதலைப் போராளிகளின் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது. ஈரானுக்கு எதிராக பலுச் போராளிகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் தனித்தோ அல்லது இணைந்தோ பாவிக்கத் தொடங்கிவிட்டார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது.  ஏற்கனவே இஸ்ரேல் ஈரானின் அணு விஞ்ஞானிகளைக் கொல்லுதல் யூரேனியம் பதப்படுத்தும் நிலைகளில் தாக்குதல் செய்தல், இணையவெளித்தாக்குதல் எனப் பல பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்துள்ளது. அது ஈரானுக்கு எதிராகச் செய்யும் முதலாவது நிகராளிப் போர் இதுவா?


சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் பற்றி அறிய கீழே சொடுக்கவும்:


Wednesday 20 December 2023

அமெரிக்கப் பொறியில் இந்தியா அகப்பட்டதா?

 

 















2024 ஜனவரி 26-ம் திகதி நடக்கவுள்ள இந்தியக் குடியரசு நாள் விழாவில் ஜோ பைடன் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள இந்தியா செல்வதாக ஏற்பாடாகி இருந்தது. அத்துடன் மறுநாள் 27-ம் திகதி இந்தியாவில் நடக்கவுள்ள கோட் (QUAD) என்னும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளைக் கொண்ட அமைப்பின் உச்சி மாநாடும் இந்தியாவில் நடக்கவிருந்தது. ஜோ பைடன் ஜனவரி 2024இல் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள மாட்டார் என இப்போது எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியக் குடியரசு நாள் விழாவிற்கான புதிய முதன்மை விருந்தினரை சில வாரங்களுக்குள் தேடிப் பிடிக்க வேண்டிய நிலையில் இந்திய அரசு உள்ளது. இந்தியத் தலைமை அமைச்சர் மோடி குடியரசு நாள் விழாவில் தன்னை ஓர் உலகம் மதிக்கும் உன்னதமானவராக காட்ட முடியாமல் போய்விடுமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடனான அமெரிக்க உறவில் பிணக்கு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது. 

அமெரிக்க நீதித்துறையின் குற்றப்பத்திரிகையில் இந்தியா!

சீக்கிய விடுதலைச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான குர்பத்வந்த் சிங் பன்னுன் என்னும் அமெரிக்க குடிமகளை கொல்வதற்கு அமெரிக்காவில் செய்த முயற்ச்சியானது கனடா, வான்கூவரில் ஹர்திப் சிங் நிஜாரைக் கொன்ற பெரிய திட்டத்தின் ஒரு பகுதி ஆகும் என அமெரிக்க நீதித்துறையின் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் குற்றப் பத்திரிகையில் நிக்கில் குப்தா என்னும் இந்தியக் குடிமகனும் பெயர் குறிப்பிடாத ஓர் இந்திய அரச ஊழியரும் குர்பத்வந்த் சிங் பன்னுன்னைக் கொல்வதற்கு ஓர் அடியாளை அமர்த்தினார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒளிக்க இடமில்லாமல் தலையாரி வீட்டில் ஒளித்த கதை

பாவம் குப்தா! பன்னுன்னைக் கொல்வதற்கு அவருக்கு ஓர் அடியாள் தேவைப்பட்டது. அந்த அடியாளைத் தேடிப்பிடிக்க ஒரு தரகரும் தேவைப்பட்டது. அவருக்கு அகப்பட்டது தரகர் அல்ல தரகர் போல் நடித்த அமெரிக்க உளவாளி. அந்தத் தரகர் ஏற்பாடு செய்த அடியாளும் அமெரிக்க உளவுத்துறையைச் சேர்ந்தவர். அதனால் நிக்கில் குப்தா மாட்டிக் கொண்டார். கொலைக்கான கூலி ஒரு இலட்சம் டொலர், முற்பணம் பத்தாயிரம் டொலர். 2024 ஜூன் 9-ம் திகதி வழங்கப்பட்டது. ஆனால் குப்தா எப்படியோ செக் குடியரசுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அதனால் அவரை நாடுகடத்தும் வேண்டுகோள் செக் குடியரசுக்கு விடுக்கப்பட்டதால் அவர் செக் குடியரசில் Prague விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது (ஜூன் 30-ம் திகதி) கைது செய்யப்பட்டார். அவரை ஒரு SUV வண்டியில் வைத்து மூன்று மணித்தியாலங்கள் விசாரணை செய்தனர். அவர் மீதான ஆட் கொணர்வு மனுவை அவரது குடும்பத்தினர் இந்திய நீதி மன்றத்தில் கொடுத்தனர். அது தங்களது நியாய ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்டது என்ற இந்திய நீதிமன்றம் மனுவை ஜனவர் 4-ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனது. நிக்கில் குப்தா இதை எழுதும் போது செக் குடியரசுச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை

கனாடாவில் கொலை மற்றும் அமெரிக்காவில் கொலை முயற்ச்சி ஆகிய இரண்டு நிகழ்வுகளிலும் தனது தொடர்பை இந்தியா மறுத்துள்ளதுடன் அவை தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பதாகச் சொல்கின்றது. இந்தியாவிற்கு தொடர்பில்லை என்று விட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியது தானே? இந்தியா தான் செய்யாத செயலுக்கு ஏன் விசாரணைக்கு ஒத்துக் கொள்கின்றது? அதற்கான விடை ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் தெரியும்.

அரசுறவு கொலை முயற்ச்சியை மறைக்குமா?

சீனாவிற்கு எதிரான கூட்டணி அமைப்பதில் இந்தியாவிற்கு முக்கியத்துவம் இருப்பதால் அமெரிக்கா தம்மை மதித்து நடக்க வேண்டும் என இந்திய ஆட்சியாளர்கள் நினைக்கின்றார்கள். அதனால் அமெரிக்க அரசு இந்தியாவிற்கு எதிராக ஒரு பகிரங்க குற்றச்சாட்டை வைக்க மாட்டாது என இந்தியா நினைத்திருந்தது போலிருக்கின்றது. அமெரிக்கா தனது நீதித் துறை தனது கடமையைச் சரியாகச் செய்யும் என விட்டுவிட்டது. அமெரிக்காவில் சீக்கிய விடுதலைச் செயற்பாட்டாளர் குர்பத்வந்த் சிங் பன்னுமை கொல்ல நடந்த முயற்ச்சி தொடர்பாக இந்தியா விசாரிப்பதாகச் சொன்னது காலத்தை இழுத்தடித்து அதைப் புதைக்கவா என அமெரிக்க மனித உரிமைச் செயற்ப்பாட்டாளர்கள் ஐயப்படுகின்றனர்.

கனடாமீது சீறிய ஜெய்ஷங்கர் அமெரிக்காவிற்கு அடக்கம்

கனடா ஹர்திப் சிங் நிஜார் கொலை தொடர்பான குற்றச் சாட்டை முன்வைத்த போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரின் பதில் கடுமையானதாக இருந்தது. அக்குற்றச் சாட்டு அபத்தமானது உள்நோக்கம் கொண்டது என்றார் ஜெய்ஷங்கர். கனடா தீவிரவாதிகளின் புகலிடம் என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் குற்றச் சாட்டில் அவர் கடுமையான பதில் கொடுக்கவில்லை. கனடாவிற்கு எதிரான ஜெய்ஷங்கரின் கருத்து அமெரிக்காவை விசனமடைய வைத்திருக்கலாம்.

கனடாவோ அமெரிக்காவோ யோக்கியமான நாடுகளல்ல

1985இல் ரொறென்ரோவில் இருந்து இந்தியா சென்ற Air India விமானம் அயர்லாந்துக் கரையில் குண்டு வெடிப்பில் சிதறி அதில் பயணித்த 329 பேரும் கொல்லப்பட்டதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்பாக கனடா நடந்து கொண்ட விதம் ஐயத்திற்கு இடமானது. அமெரிக்கா நீதிக்குப் புறம்பான வகையில் தான் பயங்கரவாதிகள் எனக் கருதும் பல்லாயிரக் கணக்கானவர்களை ஆளில்லா விமானங்களில் இருந்து குண்டுகளை வீசிக் கொன்றுள்ளது.

சதிக்கோட்பாடு

உக்ரேன் போரின் பின்னர் அமெரிக்கா இரசியாமீது விடுத்த பொருளாதாரக் கட்டுப்பாடுகளை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை. சினாவிற்கு எதிரான கூட்டணியில் இணைய இந்தியா அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்தப் பின்னணியில் அமெரிக்கா வெளிநாடுகளில் வாழும் சீக்கிய விடுதலைப் போராளிகள் பற்றிய இந்திய உளவுத்துறையின் நகர்வுகணை வேவு பார்த்துக் கொண்டிருக்கின்றதா? அதில் குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்லும் நோக்கில் நிக்கில் குப்தா எடுத்த முயற்ச்சிகளில் தனது உளவுத்துறையை புகுத்தி அவர்களையே அடியாளாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

பன்னுன் என்னும் பயங்கரவாதி



இந்தியா மீது பொருளாதாரத் தடை வருமா?

ஆ ஊ என்றால் பொருளாதாரத் தடைகளை மற்ற நாடுகளில் விதிக்கும் அமெரிக்கா தன்னாட்டில் வைத்து தனது குடிமகனை அந்நிய நாடு ஒன்று கொல்ல எடுத்த முயற்ச்சிக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகின்றது? அமெரிக்கா உலகில் தனது ஆதிக்கத்தை பேணுவதற்கு “மனித உரிமை மீறல்”, “பன்னாட்டு நியம மீறல்” ஆகியவற்றை படைக்கலன்களாகப் பயன்படுத்துகின்றது.



Thursday 14 December 2023

உலக அரசியலில் அயோக்கித்தனத்தைப் புகுத்திய கிஸ்ஸிங்கர்

 


உயர்ந்த கல்விமானாக இருந்து வெற்றீகரமான அரசுறவியலாளராக (இராசதந்திரியாக) மாறிய ஹென்றி கிஸ்ஸிங்கர் உலக அரசியலில் அயோக்கியத்தனத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய நியதியாக்கியவர். 2023 நவம்பர் 29-ம் திகதி அவர் காலமானார். அவர் அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்க உலக அரங்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நாட்ட மக்களாட்சியின் விழுமியங்களை காலின் கீழ்ப்போட்டு மிதிக்கத் தயங்காதவர். இவரின் உலக அரசியல் சிந்தனையின் வழிவந்தவர்களால் தான் தமிழ் ஈழத்தில் மூன்று இலட்சம் உயிர்களைப் பலியெடுக்கப்பட்டன. இவருக்குப் பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையிலும் வெளியுறவுத்துறையிலும் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் அவரது மாணக்கர்கள், அவருக்கு கீழ் பணிபுரிந்தவரகள், அல்லது அந்த இருதரப்பினரின் வழிவந்தவர்கள் ஆகும்.

ஜேன்மனியில் பிறந்த யூதர்

1923-ம் ஆண்டு ஜேர்மனியின் ஃபேர்த் நகரில் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த யூத குடும்பத்தில் பிறந்த ஹென்றி கிஸ்ஸிங்கர் அங்கு நிலவிய அடக்குமுறைக்குத் தப்பி அமெரிக்கா நியூயோர்க் நகரில் குடியேறி அங்கு முன்னணிப் பல்கலைக்கழகத்த்தில் கற்றுத்தேர்ந்து அமெரிக்கப்படையில் இணைந்து மொழிபெயர்ப்பாளராகவும் உளவாளியாகவும் ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் உலகப் போரின் போது செயற்பட்டார். 1947இல் மீளவும் அமெரிக்கா சென்று மேற்படிப்பை மேற்கொண்டு ஹாவார்ட் பலகலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுத்துறையில் 1957இல் இருந்து பேராசிரியராகவும் பணியாற்றினார். அமெரிக்கர்கள் ஒழுக்கவாதத்தை ஒதுக்கிவிட்டு நடைமுறைக்கு ஏற்ப செயலாற்ற வேண்டும் என்பது அவரது போதனை. அவரது கொடூரமான கொள்கைகளை வெறுத்த பல மாணவர்கள் அவரை விட்டு வெளியேறினர்.

அரசியல் உரையாற்றுவதற்கும் நூல்கள் எழுதுவதற்கும் கட்டணமாகப் பெரும் தொகை பெறுபவர் கிஸ்ஸிங்கர் அவரது ஒரு நூலுக்கான் முற்பணமாக ஒரு மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது. பேராசிரியர் கிஸ்ஸிங்கள் ஜோன் எஃப் கென்னடியின் ஆட்சிக்கு பகுதி நேர ஆலோசகராகப் பணியாற்றினார். பின்னர் ரிச்சர்ட் நிக்ஸனின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரானர்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மாற்றியவர்

1901 முதல் 1905 வரை அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட் அமெரிக்கா ஒரு நல்ல அயல்நாடாக இருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர். அவருக்குப் பின்னர் 1914 முதல் 1921 வரை அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த வூட்ரு வில்சன் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை உயர்குறிக்கோள், அறம், ஆகியவற்றின் அடிப்படையில் மக்களாட்சியை பரப்பும் வகையில் வரையறை செய்யப்பட வேண்டும் என்றார். இந்த கொள்கைகளை மாற்றி அயோக்கியத்தனமான வெளியுறவுக் கொள்கைகளை யதார்த்தவாதம் என்னும் பெயரில் முன்னெடுத்தவர் ஹென்றி கிஸ்ஸிங்கர். அவரது கொள்கை அமெரிக்காவில் மட்டுமல்ல உலகின் பலநாடுகளில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அவை மாறுவதறகன அறிகுறிகள் ஏதும் இல்லை.

கறுப்பின மக்களை வெறுத்த கிஸ்ஸிங்கர்

கிஸ்ஸிங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலராகப் பணியாற்றிய போது நைஜீரியாவிற்கான அமெரிக்க தூதுவராகவும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆபிரிக்க அலுவர்களுக்கான துணைச் செயலராகவும் இருந்த Donald Easum கிஸ்ஸிங்கர் ஆபிரிக்க நாடுகளின் தூதுவர்களையும் பிரதிநிதிகளையும் மதிப்பதில்லை என்றும் ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடித்தார் என்றும் எழுதியுள்ளார். தென் ஆபிரிக்காவில் பெரும்பான்மை கறுப்பின மக்களின் ஆட்சி அமைவதை கிஸ்ஸிங்கர் விரும்பவில்லை. அதற்காக பல சதி நடவடிக்கைகள் செய்தார்.

வியட்நாம் இனக்கொலை சிலி ஆட்சி மாற்றம்

கண்மூடித்தனமான Carpet Bombingஐ வியட்னாமில் மேலும் தீவிரப்படுத்தும் படி ரிச்சர்ட் நிக்சனுக்கு ஒரு புறம் ஆலோசனை வழங்கிவிட்டு மறுபுறம் அமைதிப்புறா போல் தோற்றத்தை மாற்றி வியட்னாமியர்களுடம் பேச்சு வார்த்தை நடத்தி பல அமெரிக்க உயிரழப்புக்களைக் கொடுத்த வியட்னாம் போரை நிறுத்தினார். கம்போடியா தரைமட்டமாகியதற்கும் கிஸ்ஸிங்கரே காரணமாகும். சிலியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகவுடமைவாதி சல்வடோர் அலெண்டேயை ஆட்சியில் இருந்து அகற்றியவர். ஹென்றி கிஸ்ஸிங்கர். பொதுவுடமைவாதம், சமூகவுடமைவாதம் போன்றவற்றைப் பின்பற்றுபவர்கள் எந்த ஒரு நாட்டிலும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற அமெரிக்காவின் கொள்கையை கொடூரமான முறையில் முன்னெடுத்தவர் கிஸ்ஸிங்கர்.

வங்க இனக்கொலை

பங்களாதேசத்தில் இனக்கொலை செய்த பாக்கிஸ்த்தான் சர்வாதிகாரி ஏ. எம் யஹியா கானின் ஆட்சிக்கு எல்லாவகையிலும் உதவியர் ஹென்றி கிஸ்ஸிங்கர். சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாடு என்பதற்காக பாக்கிஸ்த்தானிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் கிஸ்சிங்கர். இந்திரா காந்தியை பெட்டை நாய் எனவும் இந்தியர்களை வேசிமகன்கள் எனவும் அழைத்தார் என்ற குற்றச்சாட்டு கிஸ்ஸிங்கர் மீது முன்வைக்கப்படுகின்றது.  பாக்கிஸ்த்தானில் ஆட்சியில் இருந்த மற்றும் இருக்கின்ற அயோக்கியர்களுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுக்கின்ற நாடாக இன்றும் இருப்பது அவரது சிந்தனைப் பள்ளியின் அடையாளமே. பாக்கிஸ்த்தானில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான் கான் 2023 ஓகஸ்ட்டில் சிறையிலடைக்கப்பட்டார்.

குர்திஷ் மக்களைக் கால்வாரியவர்

1970களில் ஈராக்கிய ஆட்சியாளர் சதாம் ஹுசேய்ன் சோவியத் ஒன்றியத்துடன் தன் உறவை வளர்த்ததுடன் அங்கிருந்து பெருமளவு படைக்கலன்களையும் வாங்கினார். இதனால் சினமடைந்த கிஸ்ஸிங்கர் ஈராக்கில் வாழும் குர்திஷ் மக்களை சதாமிற்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டினார். ஆனால் 1979இல் ஈரானில் மன்னர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு மதவாதிள் ஆட்சியைக் கைப்பற்றிய போது ஈரானுக்கு எதிராக ஈரக்கின் சதாம் ஹுசேய்னை கிஸ்ஸிங்கர் தூண்டினார். அதற்காம சதாமின் வேண்டுகோளிற்கு இணங்க குர்திஷ் மக்களுக்கு உதவி செய்வதை அமெரிக்கா நிறுத்தியது. குர்திஷ் மக்களை கைவிடுவது சரியான செயல் அல்ல என கிஸ்ஸிங்கரின் உதவியாளர் சொன்னபோது அவரது பதில் நான் நடத்துவது மறைமுக அரசுறவியல் கிருத்துவ பரப்புரையகமல்ல (underground diplomacy not missionary) என்றார் கிஸ்ஸிங்கர். பின்னர் குர்திஷ் மக்கள் தடைசெய்யப்பட்ட படைகலன்களால் கொடூரமாக அழிக்கப்பட்டனர்.

கிஸ்ஸிங்கர் சூ என் லாய் சந்திப்பும் நோபல் பரிசும்

1971-ம் ஆண்டு கிஸ்ஸிங்கர் சீனத் தலைமை அமைச்சர் சூ என் லாயை தான் இரகசியமாகச் சந்தித்ததாக அறிவித்த போது அவரது பெயர் உலகப் புகழ் பெற்றது. அப்போது சோவியத் ஒன்றியத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு மோசமடைந்து கொண்டிருந்தது. சீனாமீது ஓர் அணுக்குண்டுப் போரைத் தொடுக்க சோவியத் ஒன்றியம் தயாராக வருகின்றது என்ற செய்தியை அடிப்படையாக வைத்து சீனா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவுடன் உறவை வளர்க்க முன்வந்தது. அமெரிக்காவுடன் கடும் போட்டியில் இருந்த சீனாவையும் சோவியத் ஒன்றையத்தையும் பிரித்து வைக்க கிடைத்த சந்தர்ப்பத்தை கிஸ்ஸிங்கர் பயன்படுத்தி அமெரிக்காவும் சீனாவும் ஒன்றை ஒன்று பாதுகாக்க ஷாங்காய் உரையாடல் என்னும் பெயரில் ஒப்புக்கொண்டன. 1972இல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அல் ஜசீரா இணையத்தளத்தில் நோபல் பரிசு பெற்ற ஒரு போர்க்குற்றவாளி கிஸ்ஸிங்கர் என்ற தலையங்கத்தில் ஒரு கட்டுரை ஹின்றி கிஸ்ஸிங்கர் இறப்புச் செய்தி வெளிவந்தவுடன் பதியப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாற்றையும் அவரது சிந்தனைப் பள்ளி மேற்குலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் அறியாதவர்களே ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் பரிகார நீதி பெற்றுத்தரும் என நம்புகின்றனர். 

ஹென்றி கிஸ்ஸிங்கர் பற்றிய முந்தையய கட்டுரையைக் காண இந்த இணைப்பைச் சொடுக்கவும்:

ஹென்றி கிஸ்ஸிங்கர்-100வது வயதைக் காணும் போர்க்குற்றவாளி

வல்லரசு நாடுகளின் ஆறாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தி பற்றி கிழ் உள்ள இணைப்பில் காணலாம். 

Thursday 10 August 2023

பிரெஞ்சு சுரண்டலும் நைஜர் ஆட்சி மாற்றமும்



 மேற்கு ஆபிரிக்க நாடாகிய நைஜரில் நடந்த பின்னணி:

1. திறனற்ற தூய்மையற்ற ஆட்சி

2. எரிபொருள், தங்கம், யூரேனியம் போன்றவை உள்ள நைஜரின் பொருளாதாரத்தை பிரான்ஸ் சுரண்டுவதாக நைஜர் மக்கள் சினமடைந்துள்ளனர்.

3. Global South எனப்படும் தெற்குலகில் 1. சீனா, 2. இரசியா 3. திரண்ட மேற்கு ஆகியவற்றிடையே ஆதிக்கப்போட்டி

4. இஸ்லாமியத் தீவிரவாதம்

5. கால நிலை மாற்றம் உணவு உற்பத்தியை பாதித்தது. கொவிட்-19, உக்ரேன் போர்,


செய்திகள்

1. 99.3% இஸ்லாமியர்களைக் கொண்ட நைஜரில்2021-ம் ஆண்டு தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த மொஹமட் பஜௌம்மின் ஆட்சி 2023 ஜூல 26-ம் திகதி செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

2. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியை படையினர் புரட்சி மூலம் கவிழ்த்தனர். அதில் இரசியாவின் கை இருக்கின்றது என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அதுவும் வாக்னர் குழு சம்பந்தப்பட்டதாக குற்றச் சாட்டு. Telegram channel என்ற சமூக வலைத்தளத்தில் வாக்னர் குழுவினர் தங்கள் அடுத்த இலக்கு நைஜர் என தகவல்களைப் பரிமாறியிருந்தனர்.

3. 1500 பிரெஞ்சுப் படையினர் நைஜரில் உள்ளனர்.

4. ஏழாவது பெரிய யூரேனியம் உற்பத்தி செய்யும் நாடு.

5. நைஜரில் இரசியாவின் தேசியக் கொடிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அவர்கள் மக்கள் இரசியாவை விரும்புகின்றனர். பிரான்ஸ் அங்கு செய்து கொண்டிருக்கும் சுரண்டலே இதற்கு காரணம். 

நைஜர் ஆட்சி மாற்றத்தின் விளைவுகள்

திரண்ட மேற்கு நாடுகளுக்கு பெரும் சவால்.

படையினரின் புரட்சி மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நைஜரின் உள்ள அமெரிக்காவின் Nigerien Air Base 201 என்ற விமானத்தளத்தை அமெரிக்கப் படையினர் பாவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 6200 அடி விமான ஓடுபாதையைக் கொண்ட இத்தளம் 2019இல் $110மில்லியன் செலவில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் முன்னணி ஆளிலியான MQ-9 Reapersயும் மற்றும் விமானிகள் ஓட்டும் விமானங்களும் இத்தளத்தில் உள்ளன.

நடுவண் ஆபிரிக்காவில் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பெரும் அடி.

இனி நடக்கவிருப்பவை

1. 55 நாடுகளைக் கொண்ட ஆபிரிக்க ஒன்றியம் படையினரின் ஆட்சி கலைக்கப்படுவதற்கு விதித்த இரண்டு வாரக் காலக்கெடு முடிந்து விட்டது.

Benin, Burkina Faso, Cabo, Verde, Cote de Ivoire, The Gambia, Ghana, Guinea, Nuinea-Bissau, Liberea, Mali, Niger, Nigeria ஆகிய 15 நாடுகளைக் கொண்ட Economic Community of West African States (ECOWAS) என்ற அமைப்பும் காலக் கெடு விதித்திருந்தது. நைஜரின் அயல் நாடாகிய நைஜீரியாவின் இஸ்லாமிய அறிஞர்கள் அவை நைஜரின் குழப்பத்தை தீர்பதற்கு தமது ஒத்துழைப்பை வழங்க முன் வந்துள்ளது. 2023-08-10 வியாழக்கிழமை அவர்கள் இது தொடர்பாக நைஜரின் தற்ப்போது ஆட்சியில் இருப்பவர்களுடம் கலந்துரையாட முயல்கின்றது. நைஜருக்கு எதிரான பொருளாதாரத் தடையை அந்த அவை கண்டித்துள்ளது. 

மேற்கு ஆபிரிக்க பொருளாதார சமூகம் படைகளை அனுப்புமா? 1990இல் லைபீரியாவிற்கு அனுப்பியது. வேறும் பல உறுப்பு நாடுகளில் உள்நாட்டுப் போர் நடந்த போது அமைதிப்படையை அது அனுப்பியது. மேஆபொசமூகம் விதித்த காலக்கெடு 2023 ஆகஸ்ட் 6-ம் திகதியுடன் முடிவடைந்தது.

மேற்கு ஆபிரிக்க பொருளாதார சமுகம் பொருளாதாரத் தடையை விதித்தது.

நைஜீரியா நைஜருக்கு மின்சார விநியோகத் தடை செய்தது. நைஜருக்கு தேவையான 80% மின்சாரம் நைஜீரியாவில் இருந்தே செல்கின்றது.

ஆனால் நைஜர் தற்போது உள்ள நிலையில் மே ஆ பொ சமூகத்தின் படையினர் சென்றால் அங்கு கடும் மோதல் ஏற்பட்டு பிராந்திய அமைதிக்கு பாதகம் ஏற்படும்.

நைஜீரியா படைத் தளபதி பேச்சு வார்த்தை மூலமாகவோ அல்லது போர் மூலமாகவோ நைஜரில் மக்களாட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

புரட்சி செய்த படையினரிடையே பிளவு ஏற்பட்டுள்ளது/ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அமெரிக்காவும் பிரான்ஸும் இருக்கலாம். 

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

ஆபிரிக்க மக்களின் வேணவாக்கள் பல பத்தாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. அதன் விளைவாக கடுமையான உள்ளகப் போட்டி ஆபிரிக்க நாடுகளில் நிலவுகின்றது. திரண்ட மேற்கு நாடுகளின் ஆதரவு ஆட்சியாளரகள் கடும் சவால்களை எதிர் நோக்குகின்றார்கள்.வ் 

Wednesday 24 May 2023

ஹென்றி கிஸ்ஸிங்கர்-100வது வயதைக் காணும் போர்க்குற்றவாளி

அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் (1969-73) வெளியுறவுத் துறைச் செயலாளராகவும் (1973-1977) பணியாற்றிய ஹென்றி கிஸ்ஸிங்கர் 2023 மே மாதம் 27-ம் திகதி தனது நூறாவது வயதை நிறைவு செய்கின்றார். அவர் விரும்பத்தகாத ஒருவராக இருந்தாலும் அவரது வாழ்க்கை வரலாறு அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல கற்றுக் கொள்ள வேண்டிய பலவற்றைக் கொண்டதாகவும் இருக்கின்றது. வியட்னாம் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன்னின்றமை, சோவியத் ஒன்றியத்தையும் சீனாவையும் பிரித்து உலக அரசியலைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டமை அவரது பெரும் சாதனைகளாகும்.

குர்திஷ் மக்களின் காலை வாரியவர்

உலக அரசியலை அதன் சரியான பரிமாணத்தில் உணர்ந்து கொள்ள அவரது வாழ்க்கை வரலாறு பற்றிய அறிதல் உதவும் என நிச்சயமாகச் சொல்லலாம். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இலண்டனில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் ஒரு கலாநிதி அமெரிக்கா குர்திஷ் மக்களுக்கு தனிநாடு பெற்றுக் கொடுக்கும் என்றார். அதை நான் மறுத்து துருக்கி இருக்கும் வரை அது நடக்காது என்றேன். என்னை பேசவிடாமல் பண்ணினார்கள். ஹென்றி கிஸ்ஸிங்கரின் வாழ்க்கை வரலாறு நான் அறிந்திருந்த படியால் நான் சொன்னது சரியாகப் போனது. 1972-ம் ஆண்டு சதாம் ஹுசேன் ஆட்சியில் அவர் சோவியத் ஒன்றியத்துடன் நெருங்கிய உறவைப் பேணினார். பெருமளவு படைக்கலன்களையும் சோவியத்திடம் இருந்து வாங்கினார். அப்போது அவரது ஆட்சிக்கு எதிராக ஈராகில் வாழும் குர்திஷ் மக்களுக்கு ஹென்றி கிஸ்ஸிங்கர் படைக்கலன்களை வழங்கி அவர்களை சதாமிற்கு எதிராக கிளர்ச்சி செய்யச் செய்தனர். 1979இல் ஈரானில் மதவாத ஆட்சி தொடங்கிய பின்னர் ஈராக்கில் சதாமின் ஆட்சிக்கு ஈரானால் ஆபத்து என்பதால் அமெரிக்காவிற்கும் சதாமிற்கும் இடையில் நட்பு வளர்ந்தது. அப்போது குர்திஷ் போராளிகளைக் கொல்ல கிஸ்ஸிங்கர் சதாமிற்கு உதவினார். கிஸ்ஸிங்கரின் உதவியாளர் குர்திஷ் மக்களுக்கு நாம் செய்தது தவறு என்ற போது கிஸ்ஸிங்கர் சொன்ன பதில் இதுதான்: Underground diplomacy இது Christian Missionary அல்ல; சரி பிழை பார்க்க முடியாது. அன்று இந்தியாவும் இன்று அமெரிக்காவும் இதையே எமக்கு செய்கின்றது. குர்திஷ் மக்களை அமெரிக்கா கால் வாருவது கிஸ்ஸிங்கருடன் முடியவில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகளை அழிக்கவும் அமெரிக்கா குர்திஷ் மக்களைப் பாவித்தது.

வாழ்க்கை வரலாறு

ஜேர்மனியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்து அவரது குடும்பத்தில் பலர் கொல்லப்பட்ட பின்னர் 15வயதில் ஜேர்மனியில் இருந்து தப்பி ஓடி அமெரிக்கப் படையில் இணைந்து ஹிட்லருக்கு எதிராகப் போராடியதுடன் அவரது ஜேர்மனிய மொழியறிவால் அமெரிக்காவின் உளவுத்துறையிலும் பணியாற்றியவர். முன்னாள் போர்வீரர்களுக்கான சலுகையைப் பாவித்து ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் எம் ஏ பட்டத்தையும் கலாநிதி பட்டத்தையும் பெற்றார். ரிச்சர்ட் நிக்சனுக்கு தேர்தல் ப்ரப்புரையின் போது வெளியுறவுத்துறை ஆலோசகராக செயற்பட்டு பின்னர் அவரது ஆட்சியிலும் அவருக்குப் பின்னர் ஜெரால்ட் போர்ட்டின் ஆட்சியிலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் செயற்பட்டவர். அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பல அரசுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆலோசகராகச் செயற்பட்டவர். டிரம்பின் ஆட்சிக் காலத்தில் சீனாவிற்கும் ஆலோசகராகச் செயற்பட்டவர். அவர் எழுதிய நூல்களில் ஒன்று செயற்கை நுண்ணறிவு பற்றியது. அரசியில் இருந்தவர் செயற்கை நுண்ணறிவு பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கின்றார். அரசியலில் ஆழமான அறிவு பெற வரலாறு, அரசியல், பொருளாதாரம் போன்றவற்றைப் பற்றி அறிந்து வைத்தால் மட்டும் போதாது. தொழில் நுட்பங்களைப் பற்றியும் படைக்கலன்களைப் பற்றியும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என நாம் கிஸ்ஸிங்கரின் வாழ்க்கையில் இருந்து உணர்ந்து கொள்ளலாம்.

இந்திரா காந்தியை வெறுத்தவர்.

ஹென்றி கிஸ்ஸிங்கர் இந்தியாவை வெறுப்பவராகவும் குறிப்பாக இந்திராகாந்தியை வெறுப்பவராகவும் இருந்தவர். பங்களா தேச விடுதலையின் போது அவரது அரசுறவியல் நுட்பங்களை இந்திராகாந்தி முறியடித்தார். இந்தியா மீது போர் தொடுக்க இந்தோனோசியா, பிரித்தானியா, ஜோர்தான், ஆகிய நாடுகளை ஒன்று திரட்டினார். இந்தியாவிற்கு எதிராக ஒரு துரும்பைக் கூட நகர்த்த சீனா மறுத்தது. இரசியா அமெரிக்காவுடன் போருக்கு தயாரானது. அதனால் கிஸ்ஸிங்கர் தனது இந்தியாவிற்கு எதிரான போர் முயற்ச்சியைக் கைவிட்டார். கிஸ்ஸிங்கர் பாக்கிஸ்த்தானிற்கு கேந்திரமுக்கியத்துவம் கொடுத்தார். அவர் எழுதிய World Order என்ற நூலில் இலங்கை கேத்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் இருக்கின்றது எனக் குறிப்பிடவில்லை.

கிஸ்ஸிங்கரின் தீய செயல்கள்

1969இல் கிழக்கு திமோரில் நடந்த இனக்கொலைக்கு கிஸ்ஸிங்கர்தான் காரணம் என நம்பப்படுகின்றது.  

1969இல் கம்போடியாமீது மோசமான குண்டு வீச்சு செய்யப்பட்டமைக்கு பின்னால் நின்றவர் கிஸ்ஸிங்கர்.

1973-ம் ஆண்டு சிலியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சல்வடோர் அலெண்டேயை சதிமூலம் பதவியில் இருந்து அகற்றுவதில் முன்னின்றவர் கிஸ்சிங்கர்.

1974இல் சைப்பிரஸுக்கு எதிராகவும் துருக்கிக்கு ஆதரவாகவும் சதி செய்தார் கிஸ்ஸிங்கர்.

1980இல் ஈரான் ஈராக் போருக்கு தூபமிட்டவர் ஹென்றி கிஸ்ஸிங்கர்.

1981இல் பங்களா தேசம் விடுதலையடைவதை கடுமையாக எதிர்த்தவர் கிஸ்ஸிங்கர்.

உக்ரேன் – இரசியாப் போர்

2023 ஜனவரியில் நடந்த DAVOS மாநாட்டில் காணொலி மூலமாக கிஸ்ஸிங்கர் உரையாற்றும் போது உக்ரேன் – இரசியப் போர் பற்றி சொன்னவை:

1. இரசியாவிற்கு எதிராக தாக்குப் பிடிப்பதிலும் மேற்கு நாடுகளை ஒன்றுபடுத்துவதிலும் உக்ரேன் வெற்றியடைந்துள்ளது.

2. உக்ரேன் குடியரசுத் தலைவரையும் அதன் மக்களையும் நான் பாராட்டுகின்றேன்.

3. 2022 பெப்ரவரிக்குப் பின்னர் இரசியா ஆக்கிரமித்த உக்ரேன் பிரதேசங்களில் இருந்து இரசியா வெளியேற வேண்டும் ஆனால் அதற்கு முன்னர் ஆக்கிரமித்த கிறிமியாவில் இருந்து அது வெளியேறத்தேவையில்லை.

4. உக்ரேனுக்கு நேட்டோவில் இணைய உரிமையுண்டு.

கிஸ்ஸிங்கரின் பேட்டி

கிஸ்ஸிங்கரின் 100வது பிறந்த நாளை ஒட்டி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை அவரது பேட்டியை “எப்படி மூன்றாம் உலகப் போரைத் தவிர்ப்பது” என்னும் தலைப்பில் பிரசுரித்துள்ளது. நூறுவயதிலும் புத்தி கூர்மை சற்றும் குறையாமல் இருக்கின்றார் என்றது அந்த சஞ்சிகை.  அவரது பேட்டியில் கூறியுள்ளவற்றில் முக்கியமானவை:

·         சீனாவைச் சமாளிக்க அமெரிக்காவிற்கு இந்தியா அவசியம்.

·         ஜப்பான் ஐந்து ஆண்டுகளுக்குள் அணுக்குண்டு உற்பத்தி செய்யும்.

·         ஆசியாவின் வலு ஈடாக்கலுக்கு அமெரிக்காவிற்கு பிரான்சும் பிரித்தானியாவும் உதவ வேண்டும். 

·         உலக மேம்பாட்டிற்கு சிறந்த தலைமைகள் அவசியம். முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர்களான Franklin Roosevelt, John F Kennedy, பிரான்சின் Chares de Gaulle, ஜேர்மனியின் Otto Von Bismarck ஆகியோர் சிறந்த ஆளுமைகள்.

·         சீன அமெரிக்க முறுகலை செயற்கை நுண்ணறிவு மேலும் தீவிரப்படுத்தும்.

·         அமெரிக்கா கீழ்முகமாகச் செல்வதாக சீனர்கள் நம்புகின்றார்கள்.

·         அமெரிக்கா தன்னை அடக்கப்பார்க்கின்றது என சீனா நினைக்கின்றது.

·         உலகின் முதன்மை நிலையில் இருக்கும் அமெரிக்காவை அந்த நிலையில் இருந்து வீழ்த்த சீனா முயல்கின்றது என அமெரிக்கா நினைக்கின்றது.

·         முதலாம் உலகப் போரின் முன்னர் இருந்தது போன்ற பெருவல்லரசுகள் மோதும் நிலை தற்போது உருவாகியுள்ளது.

·         சினாவின் வலயத்தினுள் இரசியா விழுந்து கொண்டிருக்கின்றது.

·         தனது கணிப்புக்கள் தவறானது என புட்டீன் இறுதியில் உணர்ந்து கொள்வார்.

·         அமெரிக்கா போன்ற நாடுகள் நியதிகள் அடிப்படையிலான பன்னாட்டு ஒழுங்கு என்பது பற்றிச் சொல்லுவது சீனர்களைச் சினமடைய வைக்கின்றது.

·         சீனர்கள் காள் மாக்ஸை பின்பற்றுவதிலும் பார்க்க கொன்ஃபியூசியசை அதிகம் பின்பற்றுகின்றனர்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் நடப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்கின்றார் ஹென்றி கிஸ்ஸிங்கர்.

Monday 22 May 2023

உக்ரேன் போரை F-16 போர்விமானங்கள் மாற்றுமா?

 

உக்ரேனுக்கு அமெரிக்காவின் நான்காம் தலைமுறைப் போர்விமானமான F-16 வழங்கப்படுவதை அமெரிக்கா தடுக்க மாட்டாது என அதன் உச்ச அதிகார நிலையமான வெள்ளை மாளிகையில் இருந்து அறிவிப்பு வந்துள்ளது. வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. உக்ரேனுக்கு வல்லூறு என்னும் குறியீட்டுப் பெயர் கொண்ட F-16 போர் விமானங்களை வழங்கும் நாடுகள் பெரும் இடர்களை எதிர் நோக்கும் என இரசியாவின் துணைப் பாதுகாப்பு சமைச்சர் அலெக்சாண்டர் குருக்ஷோ எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரேன் போர் முனையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப்பட்ட அமெரிக்காவின் HIMARS செலுத்திகளில் இருந்து வீசப்படும் ஏவுகணைகளின் செயற்படு திறன் இரசியாவின் இலத்திரனியல் குழப்பிகளால் பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உக்ரேன் தனக்கு நான்காம் தலைமுறைப் போர் விமானம் தேவை என்பதை நேட்டோ நாடுகளிடம் கடந்த பல மாதங்களாக வலியுறுத்தி வந்தது. உக்ரேன் போர் 2022 பெப்ரவரி தொடங்கிய போது அது 145 போர் விமானங்களை வைத்திருந்தது. இதுவரை போரில் 45 விமானங்களை இழந்துவிட்டது. போலந்து, எஸ்தோனியா ஆகிய நாடுகள் தம்மிடமிருந்த MIG-29 போர் விமானங்களை உக்ரேனுக்கு வழங்கியிருந்தன. அமெரிக்காவிடமிருந்து F-16 போர் விமானங்களை வாங்கிய நாடுகள் அவற்றை இன்னொரு நாட்டுக்கு விற்பனை செய்வதாயின் அதை அமெரிக்காவின் முன் அனுமதியுடனேயே செய்ய முடியும்.

விமானங்களின் தலைமுறைகள்

போர்விமானங்கள் அவற்றின் தொழில்நுட்பத் தரங்களுக்கு ஏற்ப தலைமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. ஒலியிலும் குறைந்த வேகத்தில் பறப்பவை முதலாம்தலைமுறை என்றும், ஒலியின் வேகத்தில் பறப்பவை இரண்டாம் தலைமுறை என்றும், ஒலியின் வேகத்திலும் இரண்டு மடங்கு அல்லது அதற்கு அதிக வேகத்தில் பறப்பவை நான்காம் தலைமுறை என்றும் சிலர் வகுத்துள்ளனர். ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் ரடாருக்கு புலப்படாதவையாகும். அமெரிக்கா தனது ஆறாம்தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கிவிட்டது. அமெரிக்காவின் F-22 Raptor, F-35 Lightening ஆகியவை ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களாகும். சீனா தனதுJ-20ஐயும் இரசியாதனது SU-35ஐயும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் என்கின்றன. திரண்ட மேற்கு (Collective West) நாடுகளின் போரியல் ஆய்வாளர்கள் அவற்றின் புலப்படாத்தன்மை போதியன அல்ல என்பதால் அவற்றை நான்கரையாம் தலைமுறைப் போர்விமானம் என்கின்றனர். F-16 போர்விமானம் நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவை. அவற்றின் புதிய வகைகள்

சாதனை படைத்த F-16

1972-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒன்றை இருக்கை ஒற்றைப் பொறி (இயந்திரம்) கொண்ட F-16 போர்விமானம் களம்பல கண்ட போர்விமானமாகும். இதுவரை 4500இற்கு மேற்பட்ட F-16 போர்விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பல்வேறு பட்ட மேம்படுத்தல்கள் செய்யப்பட்டன. அவை பற்பணிப் போர்விமாங்களாகும். பற்பணிப் போர்விமானமான F-16 வான் பாதுகாப்பு, வானில் இருந்து வானிற்கு தாக்குதல், வானில் இருந்து தரை/கடல் தாக்குதல், இலத்திரனியல் போர்முறைமை, எதிரியின் வான்பாதுகாப்பை அழித்தல் ஆகியவற்றைச் செய்யக் கூடியன. ஒலியிலும் பார்க்க இரு மடங்கு வேகத்தில் பறக்கக் கூடிய F-16 20மிமீ பீராங்கி குண்டுகளை எதிரியின் விமானத்தின் மீது பாய்ச்சக் கூடியது. உலக வரலாற்றில் 13மில்லியன் பறப்புக்களைச் செய்த விமானம் என்ற சாதனையை F-16 தனதாக்கிக் கொண்டுள்ளது. அத்துடன் உலகில் பல போர்களில் பரந்த அளவில் பாவிக்கப்பட்ட விமானமும் F-16தான். இதன் பற்பணிச் சிறப்பு அம்சங்களால் F-16ஐ வானில் பறக்கும் Swiss Army Knife என்பார்கள்.

அதிக F-16 வைத்திருக்கும் நாடுகள்.

உக்ரேனுக்கு F-16 போர் விமானங்களை இலவசமாக விநியோகிக்க கூடிய நாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமே. எகிப்த்திடம் இருநூற்றி இருபது F-16கள் உள்ளன, துருக்கியிடம் இருநூற்றி எழுபது F-16கள் உள்ளன, இஸ்ரேலிடம் 362 F-16கள் உள்ளன. பாக்கிஸ்த்தானிடம் எண்பதிற்கும் அதிகமான F-16கள் உள்ளன. இவை எதுவும் உக்ரேனுக்கு F-16களை வழங்க மாட்டாது. அமெரிக்காவிற்கு வெளியே எனப் பார்க்கும் போது ஐரோப்பிய நாடுகளில் குறைந்த அளவு F-16 போர் விமானங்கள் உள்ளன. F-16 A/Bஇல் இருவகை F-16 C/Dஇல் இருவகை F-16 E/F என ஏழிற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றில் உக்ரேனுக்கு போலந்திடமுள்ள F-16 C/Dவகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களே அதிகமாகவுள்ளன. போலந்திடம் 48 F-16 உள்ளன. போலந்தைப் போலவே எஸ்தோனியாவும் உக்ரேனுக்கு படைக்கலன்கள் வழங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றது. எஸ்தோனியா தேவை ஏற்படின் அமெரிக்காவிடமிருந்து F-16களை வாங்கி உக்ரேனுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தன்னிடமுள்ள F-16 விமானங்களை அகற்றிவிட்டு F-35 விமானங்களை பாவிக்க திட்டமிட்டுள்ள பெல்ஜியம் தன்னிடமுள்ள F-16களை உக்ரேனுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெல்ஜியத்திடம் எட்டுF-16 B, நாற்பத்தி எட்டு F-16 A ஆகியவை இருக்கின்றன. டென்மார்கிடம் முப்பது F-16, நோர்வேயிடம் அறுபத்தி நான்கு F-16கள் உள்ளன. இவற்றில் எத்தனை உக்ரேன் போரில் பாவிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளன எத்தனை அனுப்பப்படும் என்பவை பற்றி உறுதியாகச் செல்ல இன்னும் சில வாரங்கள் எடுக்கலாம்.

அமெரிக்கா உக்ரேனுக்கு F-16 வழங்க மாட்டாது?

ஜேர்மன் அதிபர் Olaf Scholz உக்ரேனுக்கு F-16 வழங்கும் திட்டம் தம்மிடமில்லை என்றார். G-7 மாநாட்டின் போது அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் உக்ரேன் விமானிகளுக்கு F-16 செலுத்தும் பயிற்ச்சியை மட்டுமே குறிப்பிட்டார். அமெரிக்காவின் நட்பு நாடுகள் தம்மிடமுள்ள F-16களை உக்ரேனுக்கு வழங்கலாம் என்ற பைடன் அமெரிக்கா உக்ரேனுக்கு F-16களை வழங்குவது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. F-16 போர் விமானங்களால் உக்ரேன் போரில் பாரிய மாற்றம் ஏற்படாது என பைடன் கருதுகிறார். இரசியாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு முறைமை F-16களை இலகுவில் அடையாளம் காணக் கூடியவை. எஸ்-400ஐ அழிக்கக் கூடிய தொலைதூர ஏவுகணைகள் அல்லது ஆழ ஊடுருவும் அணிகள் உக்ரேன் போரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். F-16 Block 70 மிகவும் மேம்படுத்தப்பட்டவையாகும். அவை நான்கரையாம் தலைமுறைப் போர்விமானங்களாகும். அவை இப்போது உக்ரேனுக்கு கிடைக்காது. உக்ரேனுக்கு F-16 போர் விமானங்கள் வழங்குதல் போரை மேலும் தீவிரமாக்கும் என சில நேட்டோ கூட்டமைப்பின் உறுப்புரிமை கொண்ட நாடுகள் கரிசனைச் கொண்டுள்ளன.


கிறிமியாவிற்கு ஆபத்து

F-16 போர்விமானங்கள் மிகத்தொலைவில் உள்ள இலக்குகளை அறிந்து கொள்ளக் கூடிய உணரிகளைக் கொண்டுள்ளன. இரசியாவின் SU-35 என்னும்புதிய விமானம் இரசியாவின் பழைய விமானமான MIG-29இலும் பார்க்க ஐந்து மடங்கு தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடியன. உக்ரேனிடம் 1991இற்கு முன்னர் (சோவியத் கால) உருவாக்கப்பட்ட MIG-29கள் உள்ளன. இரசியக் கடற்படையின் இதய நிலமாக கருதப்படும் கிறிமியாவின் எப்பகுதியிலும் உக்ரேனியர்களால் தாக்கக் கூடிய வலிமையை F-16 வழங்குகின்றது. இரசியாவின் வான்பாதுகாப்பு முறைமைகளான எஸ்-400, எஸ்-300 ஆகியவை இல்லாத இடங்களாகப் பார்த்து உக்ரேனியர்கள் தாக்கலாம். அல்லது எஸ்-300, எஸ்-400 ஐ அழிக்க வல்ல ஏவுகணைகளை அமெரிக்கா உக்ரேனில் தேர்வுக்கு உள்ளாக்கிப் பார்க்கலாம். சிரியப் போரில் இருந்து இரசியாவின் வான் பாதுகாப்பை உடைக்கும் வழிகளை அமெரிக்கா ஆய்வு செய்து வருகின்றது. உக்ரேன் போரில் இரசிய இலக்குகளை இலகுவில் வீசி அழிக்கும் திறன் F-16 போர்விமானத்திடம் உண்டு. இரசியா ஆக்கிரமித்துள்ள உக்ரேனின் நிலப்பரப்புக்கள் மீது F-16 துல்லியமாகத் தாக்குதல் செய்யும். போலாந்து வழங்கும் என எதிர் பார்க்கப்படும் F-16இல் எல்லா புதிய ஏவுகணைகளை எடுத்துச் செல்லலாம். எந்த வகையான F-16, எத்தனை F-16 உக்ரேனுக்கு வழங்கப்படவிருக்கின்றது என்பதும் அவற்றுடன் எந்த வகையான ஏவுகணைகள் உக்ரேனுக்கு வழங்கப்படவிருக்கின்றன என்பதும் தான் உக்ரேனின் போரில் F-16 செய்யவிருக்கும் தாக்கத்தை முடிவு செய்யும். அரபு நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் தனது F-16மூலம் செய்யும் தாக்குதல்களைப் போல் உக்ரேனால் இரசியாமீது தாக்குதல் செய்ய முடியாத அளவிற்கு இரசியாவின் வான் பாதுகாப்பு முறைமை உன்னதமானவை.

விமானிகளின் திறன் விமானங்களையும் தாண்டி போர்முனையின் முடிவுகளைச் செய்யக் கூடியவை என்பதை இஸ்ரேலியப் வான்படையினர் பல தடவைகள் உறுதி செய்துள்ளனர். உக்ரேன் விமானிகளின் திறன் முக்கிய பங்கு வகிக்கும். F-16 போர் விமானங்களை ஓட்டும் பயிற்ச்சியை ஒரு தேர்ச்சி பெற்ற விமானிக்கு போதிக்கவே மூன்று மாதத்திற்கு மேல் எடுக்கும். உக்ரேன் தனது Spring Offensiveஇல் F-16 போர் விமானங்களை களத்தில் இறக்கி சண்டை செய்ய முடியாது Spring பருவகாலம் ஜூன் மூன்றாம் வாரத்துடன் முடிந்துவிடும். Summer Offensive?

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...