Followers
Monday 29 June 2020
நேபாளத்தில் சீனாவின் பூபாளம் இந்தியாவின் முகாரி
Monday 22 June 2020
இந்திய வெளியுறவில் இரசியாவின் இடத்தை பிரான்ஸ் பிடிக்குமா?
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு ஆகிய மூன்று வல்லரசு நாடுகளுக்கும் தமக்கிடையிலேயிலான ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் அவற்றிற்கு இடையில் பிளவு ஏற்பட்டால் உள்ள தீமையையும் நன்கு உணர்ந்துள்ளன. அந்த மூன்று நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைச் சந்திப்பதுண்டு. எஞ்சிய வல்லரசுகளான இரசியாவும் சீனாவும் தாம் ஒன்றுபட வேண்டும் என நினைத்தாலும் எந்த அளவிற்கு ஒன்று பட முடியும் என்பதில் நிச்சயமற்றிருக்கின்றன. அதற்கு அடுத்த நிலையில் தமது பாதுகாப்பையிட்டு கரிசனை கொண்ட நாடுகளாக இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகள் இருக்கின்றன. இவற்றில் இந்தியாவின் கேந்திரோபாயப் பாதுகப்புப் பங்காண்மை மற்ற நாடுகளின் பங்காண்மை கேள்விக்கு உள்ளாகியுள்ளது.
எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமை
எதிரிகள் வீசும் ஏவுகணைகளை இடைமறிப்புச் செய்து அழிக்கும் எஸ்-400 என்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமையை அமெரிக்க எதிர்ப்பையும் மீறி இந்தியா 2018 ஒக்டோபரில் இரசியாவிடமிருந்து வாங்கும் ஒப்பந்தத்தை இந்தியா செய்தது. இரசியாவின் S-400 Triumf air defence missile systems என்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமை உலகிலேயே மிகச் சிறந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பதுடன் அமெரிக்காவின் "தாட்" ஏவுகணை எதிர்ப்பு முறைமையிலும் பார்க்க சிறந்ததும் மலிவானதுமாகும். இரசியாவினது $500மில்லியன் விலை என்றும் அமெரிக்காவினது $3பில்லியன் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இரசியா எஸ்-400 முறைமையின் இந்தியாவிற்கான விநியோகத்தை 2020 ஒக்டோபரில் ஆரம்பித்து 2021-ம் ஆண்டு முடிப்பதாக இருந்தது. ஆனால் 2020 பெப்ரவரியில் இரசியா கொவிட்-19 தொற்று நோயைக் காரணம் கட்டி எஸ்-400 விநியோகத்தில் இரண்டு ஆண்டுகள் தாமதம் ஏற்படும் என அறிவித்தது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரசியாவிற்கு பயணமானார். மூன்றுமாதங்கள் தடங்கல் ஏற்படுத்திய கொவிட்-19 தொற்று நோய் இரண்டு ஆண்டு கால தாமதம் ஏற்படுத்துகின்றது என்பது நம்ப முடியாத ஒன்று. அது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த பிரச்சனைக்குரிய நேரத்தில் பாதுகாப்பு அமைச்சர் இரசியா செல்கின்றார் என்பது இந்த தாமத்தில் வேறு அரசுறவியல் பிரச்சனை இருக்கலாம் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. எஸ்-400 முறைமையை ஏற்கனவே சீனாவிற்கு இரசியா வழங்கிவிட்டது. மேற்கு நாடுகள் சீனாவிற்கு எதிராக தொழில்நுட்ப போரை தொடுத்துள்ள நிலையில் சீனா அதிக படைக்கலன்களை இரசியாவிடமிருந்து இனி வாங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துச் செல்கின்றது. இந்தியாவிற்கு உயர் தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு உள்ள தடைகளை மேற்கு நாடுகள் நீக்குவது அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதனால் இந்தியா இரசியாவிடமிருந்து படைக்கலன்களை வாங்குவதை குறைத்து மேற்கு நாடுகளிடமிருந்து அதிக படைக்கலன்களை வாங்க வாய்ப்புண்டு.
இந்திய இரசிய உறவு
இந்தியாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான கேந்திரோபாயப் பங்காண்மை பாக்கிஸ்த்தானில் இருந்து பங்களாதேசத்தைப் பிரிக்க 1971 நடந்த இந்திய பாக்கிஸ்த்தான் போரின் போது மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தியா மீது போர் தொடுக்க அமெரிக்கா தனது கடற்படையை இந்தியாவை நோக்கி நகர்த்திய போது இரசியாவும் தனது கடற்படையை இந்தியாவை நோக்கி நகர்த்தியது. பிரித்தானியாவின் விமானம் தாங்கிக் கப்பல் இந்தியாவை நோக்கி நகர முற்பட்ட போது மத்திய தரைக் கடலில் அதை இரசியா தனது நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் தடுத்து நிறுத்தியது. பனிப்போர்க் காலத்தில் இது போல பல சந்தர்ப்பங்களில் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் இரசியா இந்தியாவிற்கு ஆதரவாக நடந்து வருகின்றது. இரசிய இந்திய உறவு எந்த சூழலிலும் மாற்ற முடியாது என்ற நிலை இது வரை காலமும் இருந்து வந்தது. இரசிய தரப்பில் இந்த உறவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் இந்தியாவின் பாதுகாப்புச் சூழல் வேறு விதமாக மாறிக்கொண்டிருக்கின்றது.
இரசியாவிற்கு சீனா தேவைப்படுகின்றது
விளடிமீர் புட்டீன் அமெரிக்காவின் ஒரு துருவ ஆதிக்கத்தை மிகவும் வெறுக்கின்றார். மீண்டும் சோவியத் ஒன்றியம் போன்ற ஒரு பல நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பை இரசியா தலைமையில் உருவாக்க வேண்டும் என உறுதியாக இருக்கின்றார். இரசியாவிற்கு எதிராக மேற்கு நாடுகள் விதிக்கும் பொருளாதாரத் தடையில் இருந்து இரசியப் பொருளாதாரத்தை தக்க வைக்க இரசிய சீன உறவை மேம்படுத்த விரும்புகின்றார். இரசியா உக்ரேன் விவகாரத்தின் பின்னர் சீனாவுடன் கை கோர்க்க முயன்றாலும் அதற்கு இரண்டு முக்கிய தடைகள் உள்ளன. ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் மத்திய ஆசியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி உண்டு. இரண்டாவது இரு நாடுகளும் ஒன்று சேர்ந்தால் இந்தியா அமெரிக்காவுடன் அதிக நட்பையும் படைத்துறை ஒத்துழைப்பையும் வளர்க்கும் அது இரசியாவின் படைத்துறை வர்த்தகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்த்தும். இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தத்தமது நாட்டில் தமது பிடியை உறுதியாக்கியுள்ளனர். அவரிகளின் வெளியுறவுக் கொள்கைக்கு அவர்களின் மக்களிடையே காத்திரமான ஆதரவு உள்ளது. 2020-ம் ஆண்டு இரசியா தான் படைத்துறையில் முன்னணி வகிக்க வேண்டும் எனக் கருதுகின்றது. அதற்கு அவசியமான ஐந்தாம் தரப் போர்விமானங்களையோ பாரிய கடற்படையையோ அதனால் உருவாக்க முடியவில்லை. இரசியாவின் SU-57 போர் விமான உற்பத்தி நிறைவடைந்த வேளையில் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாக அதை மாற்றுவதற்கான இயந்திரங்களை உருவாக்க இரசியாவால் முடியவில்லை. SU-57 போர் விமானங்களை பெருமளவில் உற்பத்தி செய்யக் கூட முடியவில்லை. 2017-ம் ஆண்டு இரசியா தனது பாதுகப்புச் செலவை 20விழுக்காட்டால் குறைத்தது.
இந்தியாவின் இரசியா தேவைப்படுகின்றது.
இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளர்களின் வலதுசாரி-பழமைவாதச் சிந்தனை இந்திய அமெரிக்க நட்புறவிற்கு சாதகமாக உள்ளது. நேரு இந்திராவின் வெளியுறவுக் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையைக் கடைப்பிடித்து இந்தியாவை உலக அரங்கில் முன்னேற்ற அவர்கள் விரும்புகின்றார்கள். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இலக்குகளில் முக்கியமானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற்று ஒரு வல்லரசாக வேண்டும்; அதற்கு ஏற்ப்ப தனது பொருளாதாரத்தையும் படைவலிமையையும் பெருக்க வேண்டும். ஐநா பாதுகாப்புச் சபையில் இரத்து (வீட்டோ) அதிகாரத்துடன் இருக்கும் சீனாவின் ஆதரவின்றி இது நடக்காது. அதுவரை இந்தியாவிற்கு பாதகமாக பாதுகாப்புச் சபை எடுக்கும் முடிவுகளை இரத்துச் செய்ய இரசியாவின் நட்பு இந்தியாவிற்கு தேவைப்படுகின்றது.
இந்தியாவின் முக்கியத்துவத்தைப் பெறும் பிரான்ஸ்
இந்திய இரசிய உறவைப் பற்றி சிந்திக்க வைக்கும் இரு நிகழ்வுகள் 2020 மே மற்றும் ஜூன் மாதங்களில் நடந்தன. ஒன்று இரசியாவின் தாஸ் செய்தி நிறுவனம் அமெரிக்க சீனா போட்டியில் இருந்து இந்தியா விலகி நிற்க வேண்டும் என ஒர் அறிவுறுத்தலை ஒரு நிபுணர் மூலமாக இந்தியாவிற்கு விடுத்திருந்தது. இரண்டாவது பிரெஞ்சு அரசுறவியலாளர் ஒருவர் இந்திய பிரெஞ்சு உறவு பல முனைகளிலும் வளர்கின்றது என்றார். அவரிடம் இரசியாவின் இடத்தை பிரான்ஸ் பிடிக்கப் போகின்றாதா என்ற கேள்விக்கு நேரடியாக அவர் பதிலளிக்காமல் புது டில்லியில் இரசியாவின் இடத்தில் பிரான்ஸ் எனச் சொல்வது பெருமை சேர்ப்பதாகும் என்றார். கஷ்மீர் மாநிலத்தின் உரிமைகளைப் பறித்த போது பிரான்ஸ் இந்தியாவுடன் உறுதியாக நின்றது. இந்தியாவிற்கு தேவையான போதெல்லாம் ஐநா பாதுகாப்புச் சபையில் பிரான்ஸ் இந்தியாவிற்கு முழுமையான ஆதரவுடன் செயற்பட முடியும். அதனால் இந்தியாவிற்கான இரசிய உறவின் முக்கியத்துவத்தை குறைக்கலாம. அது மட்டுமல்ல இந்தியாவிற்கு தேவையான படைக்கலன்களை பிரான்ஸால் வழங்க முடியும். இந்தியாவுடன் படைத்துறைத் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இருந்த தடைகளை அமெரிக்கா தொடர்ந்து தளர்த்தி வருகின்றது. படைத்துறைத் தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வரும் இஸ்ரேலும் இந்தியாவிற்கு தனது தொழில்நுட்பங்களை விற்பனை செய்வதை விரும்புகின்றது. படைத்துறைத் தொழில்நுட்பத்தில் இரசியாவின் தேவை இந்தியாவிற்கு குறைந்து கொண்டே போகின்றது. சுவீடன் சிறந்த போர்விமானங்களை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்கின்றது. அவற்றின் இலத்திரனியல் திறன் தன்னிகரற்றவையாக இருக்கின்றன. அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, வியட்நாம், தென் கொரியா ஆகிய நாடுகள் சீனாவிற்கு எதிரான கூட்டமைப்பில் இந்தியாவும் இணைவதை விரும்புகின்றன. அமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறிய பின்னர் அமெரிக்க வெளியுறவில் பாக்கிஸ்த்தானின் முக்கியத்துவம் பெரிதும் குறைந்து விடும். அதனால் இந்திய அமெரிக்க உறவு மேம்படலாம். இந்திய வெளியுறவில் இரசியாவின் முக்கியத்துவம் குறைந்து செல்லும் வாய்ப்பு அதிகமாகின்றது.
திட்டமிடப்பட்ட நகர்வுகளா?
இந்தியாவிற்கும் பிரான்ஸிற்கும் இடையில் உறவை வளர்ப்பது மேற்கு நாடுகளின் திட்டமிட்ட நகர்வாகவும் இருக்கலாம். அதன் மூலம் இரசியாவிடமிருந்து இந்தியாவைப் விலக்கி இந்தியாவைச் சீன-இரசியாவிற்கு எதிரான தமது அணியில் இனைப்பது அவர்களின் எண்ணமாகவும் இருக்கலாம். 2020 ஜூன் நடுப்பகுதியில் நேட்டோவின் பொது செயலாளர் சீனாவிற்கு எதிராக நேட்டோ நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்ற அறைகூவலை விடுத்திருந்தார். இந்தியாவிற்கு எதிராக சீனா படைக்கலன்களைப் பாவிப்பதிலும் பார்க்க சீனாவில் இருந்து இந்தியாவிற்குப் பாயும் ஆறுகளை திசை திருப்பி இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் சீனா எப்போதும் இந்தியாவிற்கு அச்ச மூட்டும் ஒரு நாடகவே இருக்கும். சீனா உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை நிதானமாகவும் காத்திரமாகவும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. சீன வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க இந்தியாவிற்கு ஒரு வலிமையான நட்புக் கட்டமைபு தேவை. சீனாவை நெருங்கி நட்பை வளர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் இரசியாவின் நட்பு இந்தியாவிற்கு எந்த அளவு உதவியாக இருக்கும் என்பதை இந்தியா கவனமாக கருத்தில் கொள்ளும்.
Monday 15 June 2020
புவிசார் குழாயடிச் சண்டை
மசகு எண்ணெயும் எரிவாயுவும் குழாய்களூடாக பல நாடுகளுக்கு விநியோகிக்கப்படுகின்றது. பூமிக்கடியில் 3.5மில்லியன் கிலோ மீட்டர் நீளமான குழாய்கள் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அது மேலும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. குழாய்கள் நிலத்திற்கு அடியில், நிலத்திற்கு மேலே, கடலுக்கு அடியில் என பதிக்கப்பட்டுள்ளன. இதில் அதிக முனைப்புக் காட்டுவது தன்னை ஒரு எரிபொருள் பெருவல்லரசாக்க முயலும் இரசியாவாகும். இரசிய எரிபொருள் நிறுவனங்களான காஸ்புரோமின் பெறுமதி 60 பில்லியன் டொலர்களாகவும் ரொஸ்நெஃப்ட்டின் பெறுமதி 70பில்லியன் டொலர்களாகவும் இருக்கின்றன. இவை இரண்டும் இரசியப் பொருளாதாரத்தின் உயிர்நாடிகளாகும்.
எரிபொருள் அரசியல்
உலகின் மிக நீளமான எண்ணெய்க் குழாய் துருஜ்பா இரசியாவில் ஆரம்பித்து பெலரஸ் நாட்டுக்கு சென்று அங்கு அது இரண்டாகப் பிரிந்து ஒன்று போலாந்து ஜேர்மனி போன்ற நாடுகளுக்கும் மற்றது உக்ரேன், ஹங்கேரி, சுலோவேக்கிய செக் குடியரசு ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றது. மற்ற ஐரோப்பிய நாடுகளின் எரிவாயுத் தேவையில் 37% இரசியாவில் இருந்து செல்லும் குழாய்கள் மூலமாகவே பெறப்படுகின்றன. இரசியா மீது மற்ற ஐரோப்பிய நாடுகள் எரிபொருளுக்கு தங்கியிருக்கக் கூடாது என்பதற்காக சிரியாவினூடாக வளைகுடா நாடுகளில் இருந்து குழாய்கள் மூலமான எரிபொருள் விநியோகம் செய்வதற்கு பஷார் அல் அசாத் உடன்படாமையால் அவரது ஆட்சியை அகற்ற சதி செய்யப்பட்டது. இரசியா தலையிட்டு அவரது ஆட்சியைக் காப்பாற்றியுள்ளார். உக்ரேனுடாகச் இரசியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை எடுத்துச் செல்லும் குழாய்கள் உக்ரேனை ஒட்டிய புவிசார் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கித்துக் கொண்டிருக்கின்றது. உக்ரேன் இரசியாவின் எதிரிகளுக்கு சார்பான நாடாக மாறக் கூடாது என்பதில் இரசியா உறுதியாக இருந்தது.
கொவிட்-19 தொற்று நோயின் தாக்கத்தின் பின்னர் எரிபொருள் பெருமளவில் வீழ்ச்சியடைந்திருப்பதால் இரசியாவின் ஏற்றுமதி வருமானத்தில் 60% விழுக்காடும் பாதீட்டு வருமானத்தில் 30% விழுக்காடும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் இரசியப் பொருளாதாரத்தின் மொத்த உற்பத்தி எட்டு முதல் பன்னிரண்டு விழுக்காடு அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. உலக எரிபொருள் சந்தையில் இரசியா ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க அமெரிக்கா பெரும் முயற்ச்சி எடுக்கின்றது.
இரசிய எரிபொருளுக்கு மாற்றீடாக மத்திய ஆசிய நாடான தேர்க்மெனிஸ்த்தானில் இருந்து துருக்கிக்கும் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கும் குழாய் மூலம் எரிபொருள் விநியோக்கிக்கும் திட்டமும் செயற்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றது. கஸ்பியன் கடலுட்டாகச் செல்லும் இந்தக் குழாயகள் Trans-Caspian Gas Pipeline என அழைக்கப்படுகின்றது.
Nord Stream - 2 திட்டம் ஜேர்மனியில் இருந்து இரசியாவிற்கு இயற்கை வாயுவை போல்ரிக் கடலினடியில் போடப்படும் குழாய்களூடாக வழங்கும் திட்டமாகும். இந்தக் குழாய்த் திட்டம் Nord Stream 2 AG என்ற இரசிய நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இரசியாவின் மிகப்பெரும் எரிபொருள் நிறுவனமான காஸ்புரோம் ஆகும். இது உலகின் மிகப்பெரிய எரிபொருள் நிறுவனமாகும். முதலில் Nord Stream-2 குழாய் பின்லாந்துக்கும் எஸ்தோனியாவிற்கும் இடையிலுள்ள கடலின் நடுவிலும் பின்னர் சுவீடனுக்கும் லத்வியா, லித்துவேனியா ஆகிய வற்றின் நடுவிலும் பின்னர் போலாந்துக்கும் சுவீடனுக்கும் இடையில் உள்ள கடற்பரப்பினூடாகவும் செல்கின்றது. இரசியாவின் NORD STREAM – 2 என்னும் குழாய் மூலமான எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக அமெரிக்காவின் இரு கட்சிகளையும் சேர்ந்த இரண்டு மூதவை உறுப்பினர்கள் முதவையில் புதிய சட்ட முன்மொழிவை 2020 ஜுன் மாதம் முன்வைத்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்கா இரசியாவின் இந்த் திட்டத்தில் பங்கு கொள்ளும் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அறிமுகம் செய்துள்ளது. அது மேலும் இறுக்கமாக்கப்படவுள்ளது.
முறியடிப்பு முயற்ச்சி
NORD STREAM – 2 குழாய்த் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க விதித்த பொருளாதாரத் தடையால் 2019 டிசம்பரில் இன்னும் நூறு மைல்கள் நீளமான குழாய்களே கடலடியில் இடப்பட வேண்டியிருக்கும் நிலையில் அது நிறுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின் 94% நிறைவேற்றப்பட்டு விட்டது. ஐரோப்பிய ஒன்றியம் தனது உள்ளக எரிவாயுச் சந்தையில் இரசியாவின் காஸ்புறோம் நிறுவனம் செயற்படுவதைக் கடுமையாக்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. NORD STREAM – 2 திட்டத்தை முழுமையாக முறியடிக்கும் திட்டத்தை அமெரிக்கா இப்போது முடுக்கி விட்டுள்ளது. Allseas என்ற சுவிஸ்-டச் நிறுவனம் தனது இரண்டு கப்பல்கள் மூலம் NORD STREAM – 2இற்கான கடலுக்கு அடியில் குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அமெரிக்கப் பொருளாதாரத்தடையால் அது தனது குழாய் பதிக்கும் கப்பலை காஸ்புறோமிற்கு விற்பனை செய்யலாம். அமெரிக்க மூதவை உறுப்பினர்களின் சட்ட மூலம் பின்னோக்கிச் வகையில் செயற்படக் கூடிய வரையப்பட்டுள்ளது. இரசிய காஸ்புறோம் நிறுவனத்திற்கு காப்புறுதிச் சேவை, உபகரணங்கள், தொழில்நுட்பம், துறைமுக வசதி, இணைப்புப்பணி, அளவைப்பணி, கல்லுப்போடும்பணி ஆகியவற்றை வழங்கிய நிறுவனங்களுக்கும் வழங்கவிருக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கவிருக்கின்றது. இந்தப் பொருளாதாரத் தடை இரசியாவில் இருந்து துருக்கிக்கு கருங்கடலூடாக எரிவாயு விநியோகிக்கும் TurkStream pipeline திட்டத்திற்கு எதிராகவும் நடைமுறைப்படுத்தப்படும். இரசியாவின் NORD STREAM – 2 திட்டத்திற்கு போலாந்து, உக்ரேன், லித்துவேனியா, லத்வியா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகளும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் தனது எரிபொருள் உறுதிப்பாட்டில் இரசிய ஆதிக்கத்தையிட்டு கரிசனை கொண்டுள்ளது. இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் NORD STREAM – 2 திட்டம் வெளிநாடுகளின் செயற்பாடுகள் இல்லாமல் இரசியாவாலேயே நிறவேற்றி வைக்கபடும் என சூழுரைத்துள்ளார்.
பல நாடுகள் சம்பந்தப்பட்ட Nord Stream 2
ஜேர்மனி Nord Stream 2 திட்டத்தால்
நன்மையடையவிருக்கின்றது. அதனால் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது பாவனை
செய்கின்றது. இது முழுக்க முழுக்க ஒரு வர்த்தகத் திட்டம் என்கின்றது ஜேர்மனி.
ஒஸ்ரியா, ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த எரிபொருள் நிறுவனங்கள் Nord Stream 2 திட்டத்தில் ஒரு
பில்லியன் யூரோ முதலீடு செய்யவிருந்தன. Nord Stream 2 AG என்ற
நிறுவனத்தின் தகவலின் படி 25 நாடுகளைச்
சேர்ந்த ஆயிரம் நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா தனது நாட்டுக்கு
வெளியில் நடக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டம் இயற்றுவதையும் அதை
நிறைவேற்றுவதையும் பன்னாட்டு சட்டங்களுக்கு விரோதமானவையாகப் பார்க்க வேண்டும்
என்றார் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கான
உறுப்பினர் ஒருவர்.
ஐரோப்பிய ஒன்றியம் சூழல் பாதுகாப்பிற்காக கரியற்ற சூழலை 2050 உருவாக்க திட்டமிட்டுள்ளது.
அதனால் எரிவாயுப் பாவனை முற்றாக இல்லாமல் போகலாம். அது இரசிய எரிபொருள் விநியோகத்தை
பெருமளவு குறைக்கலாம். ஆனால் சீனாவில் எரிவாயுப்பாவனை பெருமளவில் அதிகரித்துக் கொண்டே
போகின்றது. 2014-ம் ஆண்டு மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக விதித்த பொருளாதாரத்
தடையைத் தொடர்ந்து இரசியாவிலிருந்து சீனாவிற்கு குழாய் மூலம் எரிபொருள் விநியோகம் செய்யும்
திட்டத்தை இரு நாடுகளும் ஆரம்பித்தன.
இரசியாவுடன் மென்போக்கை கடைப்பிடித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக எரிபொருள் ஆதிக்கம் என வரும்போது அவர் இரசியாவிற்கு எதிராக உறுதியாக நிற்கின்றார். ஜேர்மனி இரசியாவில் இருந்து எரிபொருள் வாங்குவதற்குப் பதலாகா அமெரிக்காவிடமிருந்து கப்பல் மூலம் விநியோகிக்கும் எரிபொருளை அது வாங்க வேண்டும் என அவர் நினைக்கின்றார். இந்த அடிப்படையில் இரசிய ஆக்கிரமிப்பில் இருந்து ஜேர்மனியைக் காப்பாற்றுவது எனச் சொல்லிக் கொண்டு ஜேர்மனியில் இருக்கும் அமெரிக்கப் படைகளைக் குறைக்கப் போவதாக அவர் சொல்லியுள்ளார். ஜேர்மனியில் தற்போது 34,500 அமெரிக்க படையினர் உள்ளனர். அவர்களில் 9,500ஐ வெளியேற்றி 25000 ஆக குறைக்க டிரம்ப் ஆலோசித்து வருகின்றார். இதற்கு அமெரிக்காவில் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2020-06-14: Nord Strem 2 குழாய்த் திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா அதிகரித்துள்ள பொருளாதாரத் தடையையிட்டு ஜேர்மனி தனது கவலையை வெளியிட்டதுடன் ஐரோப்பாவின் எரிபொருள் பாதுகாப்பில் அமெரிக்க தலையீடாக அமெரிக்காவின் பொருளாதாரத்தடை கருதப்பட வேண்டியுள்ளது என்றது ஜேர்மனி.
Saturday 13 June 2020
தமிழர்களும் கையாள்தல் அரசுறவியலும்
கையாள்தல் அரசுறவியல் (Engagement Diplomacy) உலகில் நீண்ட காலமாக இருந்துள்ளது. அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது அது பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 2008-ம் ஆண்டு பிரித்தானிய வெளியுறவுத்துறை அதற்கு ஒரு கோட்பாட்டு வடிவம் கொடுத்தது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009இல் அதை தனது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய பகுதியாக்கினார். முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில் கிளிண்டனும் பராக் ஒபாமாவும் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்சியாளர்களுடன் மோதலை தவிர்த்து அவர்களை கையாளுதல் என்பதை தமது வெளியுறவுக் கொள்கையில் பாவித்தனர். அமெரிக்காவிற்கு ஒவ்வாத சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் முரண்படாமல் “கையாள்தல்” செய்ய வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது. அமெரிக்காவிற்கு ஒவ்வாத அரசுகளை அயோக்கிய அரசுகள் என ஒதுக்காமல் அவர்களுடன் இருதரப்புக்கும் நலன் தரக்கூடிய வகையில் செயற்படுவதை கையாளும் கொள்கை எனப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை கையாள்தல் என்பது இறுதி இலக்கல்ல, இலக்கை நோக்கிய நகர்வு. மியன்மார் படைத்துறையினரை பராக் ஒபாமா கையாண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூக்கியை ஆட்சிப் பதவியில் அமர வழிவகுத்தார்.
பில் கிளிண்டன் பொஸ்னியாவிலும் கொசொவாவிலும் படைத்துறைக் கையாளலையும் செய்யத் தயங்கவில்லை. அந்த நடவடிக்கை சீனத் தூதுவரகத்தின் மேல் தெரிந்து கொண்டே குண்டு வீசும் அளவிற்கும் இரசியாவுடன் ஒரு போர் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் வரைக்கும் தள்ளப்பட்டது. தைவானை சீனா ஆக்கிரமிக்க முயன்ற போது தைவான் நீரிணைக்கு அமெரிக்காவின் இரு விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பி சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்ச்சியைக் கிளிண்டன் கைவிடச் செய்தார். எதிரிகளுடன் தெளிவான உறவை உருவாக்க எடுக்கும் முயற்ச்சியை கிளிண்டன் மேற்கொண்டார். இரசியாவை ஜீ-8 அமைப்பிலும் ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு அமைப்பிலும் மற்றும் பல பன்னாட்டு நிதி அமைப்புக்களிலும் இணைய கிளிண்டன் வழிவகுத்தார். பராக் ஒபாமா கையாள்தல் என்பது இறுதி இலக்கல்ல, இலக்கை நோக்கிய நகர்வு என்றார். மியன்மார் படைத்துறையினரை அவர் கையாண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூக்கியை ஆட்சிப் பதவியில் அமர வழிவகுத்தார்
. இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற நாடுகளின் எதிர்ப்புக்கிடையிலும் ஈரானுடன் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பான ஒப்பந்தத்தை ஐந்து நாடுகளுடன் இணைந்து ஒபாமா செய்தார். ஒபாமாவின் கையாள்தல் இருதரப்பு மரியாதை, பொதுவான அக்கறைகள், பகிரும் விழுமியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இரசியா உக்ரேனுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் அமெரிக்காவின் கையாள்தல் அரசுறவியலின் தோல்வியாகப் பார்க்கப்பட்டது.
விரும்பத்தகாத ஆட்சியாளர்களால் ஆளப்படும் நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்தி அந்த நாட்டு மக்களையும் வர்த்தக அடிப்படையில் சுரண்டுதலை நோக்கமாகக் கொண்டதுதான் பராக் ஒபாமாவில் கையாள்தல் அரசுறவியல்.
ஹென்றி கிசிஞ்சரின் கள்ளத்தனமான கையாளல் அரசுறவியல்
1981 முதல் 1989 வரை அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் ஆட்சியின் போது உலகெங்கும் தென் ஆப்ரிக்காவின் இன ஒதுக்கல் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்த போது தென் ஆபிரிக்காவை ஒதுக்காமல் அதனுடன் உறவை பேணுவதற்கு ரீகனின் வெளியுறவுத்துறைச் செயலர் ஹென்றி கிசிஞ்சரின் “ஆக்கம்சார் கையாளல்” (Constructive Engagement) என்ற பெயரைக் கொடுத்தார். அமெரிக்கா தீவிரமான பனிப்போரில் ஈடுபட்டிருக்கும் வேளையில் இரசியாவிற்கு எதிரான அணியில் தென் ஆபிரிக்கா இருப்பது அவசியமானதாக இருந்தது. சஹாரா பாலைவனத்திற்கு தெற்கில் உள்ள நாடுகளின் பொதுவுடமைவாதம் பரவாமல் இருப்பதற்கு தென் ஆபிரிக்க நிறவெறி அரசின் உதவி அமெரிக்காவிற்கு தேவைப்பட்டது. அதனால் அந்த கள்ள உறவை நியாயப்படுத்த ஹென்றி கிசிஞ்சர் “ஆக்கம்சார் கையாளல்” என்ற பதத்தை பாவித்தார். அவரது திடுட்டுத்தனம் அம்பலமான பின்னர் யாரும் “ஆக்கம்சார் கையாளல்” என்ற பதத்தை பாவிப்பதில்லை. தென் ஆபிரிக்கா மீதான பொருளாதாரத் தடைகளால் அது நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கையில் “ஆக்கம்சார் கையாளல்” என்னும் போர்வையில் படைக்கல ஏற்றுமதி, முதலீடு உட்பட பல உதவிகளை ரீகன் - கிசிஞ்சர் ஆட்சி செய்தது. அப்படிச் செய்வதால் அங்கு மக்களாட்சியை நோக்கிய சீர்திருத்தம் முன்னெடுக்கப்படும் என அவர்கள் சொன்னார்கள். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
இந்திய ஜெய்சங்கரின் கையாளல்
இந்திய அமெரிக்க உறவை மிக நெருக்கமாக்குவதில் முன்னின்று செயற்படும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் 2019 டிசம்பர் நடுப்பகுயில் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் 2+2 சந்திப்பை வாஷிங்டனில் நடத்தி முடித்த பின்னர் இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாவதை விரும்பாதவர்களுக்கு பதிலளிக்கும் போது இந்தியா பாக்கிஸ்த்தானைத் தவிர தன்னுடன் முரண்பட்டுக்கொண்டு இருப்பவர்களை எப்போதும் “கையாள்வதை” வழக்கமாகக் கொண்டிருக்கின்றது என்றார். இந்தியாவை சீனாவிற்கு எதிரான அணியில் இணைவதால் உள்ள ஆபத்தை மறைக்க ஜெய்சங்கருக்கு அந்த கையாள்தல் எனற திரை தேவைப்பட்டது.
தமிழர்களால் இந்தியாவைக் கையாள முடியுமா?
“இந்தியா தொடர்பாக தமிழ்த் தரப்பு எதிர் நிலையும் எடுக்க வேண்டாம். எடுபிடியாகவும் இருக்க வேண்டாம். கையாளும் மார்க்கங்களைக் கண்டு பிடிக்க வேண்டும்.” என்ற கருத்தை சிலர் ஈழத் தமிழர்கள் முன் வைக்கின்றார்கள். நாம் இந்தியாவை அப்படிக் கையாள முடியுமா? 2009 மே மாதத்தின் பின்னர் ததேகூ ஐ சந்தித்த எம் நாராயணனும் ஷிவ் ஷங்கர் மேனனும் உங்களுக்கு என்ன வேண்டுமென நீங்கள் சொல்ல வேண்டாம், உங்களுக்கு என்ன தேவை என்பதை நாம் முடிவு செய்கின்றோம் என்றனர். கொடுப்பதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக்காரர்கள் நீங்கள் என அவர்களின் நிலைப்பாடு இருந்தது; இன்றும் இருக்கின்றது. அப்படி இருக்கும்போது இருதரப்பு மரியாதை இல்லாத நிலையில் கையாளல் என்ற கொள்கையை தமிழர்கள் முன்னெடுக்க முடியாது. பில் கிளிண்டனின் வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்த ரொபேர்ட் சூட்டிங்கர் கையாளுதல் என்ற சொல் மோசமாக வரையறைச் செய்யப்பட்டு அளவிற்கு அதிகமாகப் பாவிக்கப்படுகின்றது என்றார். அதைத் தான் தமிழர்களும் செய்ய வேண்டுமா? கையாள்தல் என்றால் என்ன, அதை எப்படி முன்னெடுப்பது என்ற விளக்கம் இல்லாமல் இந்தியாவைக் கையாளுவோம் என்கின்றனர். 2013-ம் ஆண்டு இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டைக் கூட்டக் கூடாது என தமிழர்கள் முன்வைத்த போது அதன் பொதுச் செயலராக இருந்த இந்தியர் சொன்னது நாங்கள் இலங்கையை கையாள வேண்டும். என்பது அப்பது அவர்கள் சொன்னது ஒரு நொண்டிச்சாட்டு மட்டுமே. தமிழர்களை ஏமாற்ற சிலர் கையாள்தல் அரசுறவியலைக் கையில் எடுத்துள்ளனர்.
தமிழர்கள் இந்தியாவைக் கையாள வேண்டும் எனப் போதிக்கும் அரசியல் அறிஞர்களின் கருத்துக்கள் நிலையானதாகவோ அல்லது உறுதியானதாகவோ இல்லை. அவர்களின் கருத்துக்கள் 1980களில் இருந்து இப்படி மாறிக் கொண்டு போகின்றது:
சிங்களத் தலைவர்களின் மாறிய நிலைப்பாடு
இந்தியக் கொள்கை வகுப்பாளரகள் தமிழர்களை தமது வெளியுறவுக் கொளையைப் பொறுத்தவரை ஒரு முள்ளாகவே கருதுகின்றனர். சிங்களவர்களை தமது பக்கம் நிற்க வைப்பதே இந்தியாவின் நோக்கமாக இருக்கின்றது. இலங்கையை ஆட்சியாளர்கள் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க மாட்டாரகள் என்பது தலைமை அமைச்சர் மஹிந்த ராஜ்பக்ச 2020 மே மாதம் நியூஸ்-18 தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் இருந்து தெளிவாகத் தெரிகின்றது. 2014-ம் ஆண்டு நடந்த இலங்கை அதிபர் தேர்தலின் பின்னர் ராஜபக்சேக்கள் இந்தியா அதிருப்தியடையும் வகையில் சீனாவுடன் உறவை வளர்ப்பது ஆபத்து என்பதை உணர்ந்து கொண்டனர்.
கையாள்தல் அரசுறவியல் என்றால் என்ன?
அரசுறவியலில் தற்போது அரசுகள் அரசிலா அமைப்புக்கள், பன்னாட்டு பொது அமைப்புக்கள், இனக்குழுமங்கள், குடிசார் சமூகங்கள், படைக்கலன்கள் ஏந்திய குழுக்கள் என்ப பல உள்ளடக்கப் பட்டிருக்கின்றன. இவற்றை அரசு அல்லது அமைப்பு எனச் சுருக்கமாக அழைப்போமாக
கையாள்தல் என்ற சொல் கள்ளர்களின் கடைசிக் குகை.
Tuesday 9 June 2020
சீனாவின் (அஞ்சுவது) அஞ்சாமை
துணிவுள்ளவனுக்கு அச்சமில்லை என்பது கொன்பியூசியசின் போதனையாகும். சீனாவின் புள்ளிவிபரங்கள் அதிசயிக்கத் தக்கன. உலகிலேயே பெரிய மக்கள் தொகை, உலகிலேயே அதிக அளவு வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, இரண்டாவது பெரிய பொருளாதாரம், மிகப் பெரிய படைத்துறை ஆளணி, இரண்டாவது பெரிய படைத்துறை, விண்வெளியில் பல சாதனைகள், அதிக நீர் மூழ்கிக்கப்பல்கள், மிகப் பெரிய அருங்காட்சியகம், மிகப் பெரிய நீன் மின் உற்பத்தி நிலையம், மிகச் சிறந்த தொடருந்துக் கட்டமைப்பு, உலகில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் மிகப் பெரிய வர்த்தகம், உலக தொழில்துறை உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவில் செய்யப்படுகின்றது, இரண்டாவது பெரிய அந்நிய முதலீடு இவை யாவும் சீனா ஆட்சியாளர்களுக்கு பெருமையை மட்டுமல்ல துணிச்சலையும் கொடுக்கக் கூடியவை. 2020 மே மாதம் சீனா வியட்னாமின் படகை மூழ்கடித்தது, தைவான் வான்பரப்புக்குள் தன் போர் விமானங்களைத் தொடர்ச்சியாக அனுப்பியது, ஹொங் கொங் மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதியை மீறி அங்கு தன் அதிகாரப் பிடியை இறுக்கும் சட்டத்தை நிறைவேற்றியது, இந்திய எல்லையில் செய்யும் அத்து மீறல்களை அதிகரித்தது, அமெரிக்காவுடன் ஒரு வார்த்தைப் போரைச் செய்து வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்துகின்றது.
இரசியாவும் அதைத் தொடர்ந்து ஜப்பானும்
1914இல் இருந்து 1918வரை நடந்த உலகப் போரின் முன்னரும் பின்னரும் பிரித்தானிய உலகப் பெருவல்லரசாக இருந்தது. 1929இல் இருந்து 1933வரை நிலவிய பொருளாதாரப் பெருமந்த நிலைக்குப் பின்னர் அதன் நிலை தேயத் தொடங்கியது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்கா உலகப் பெருவல்லரசாக உருவெடுத்தது. அமெரிக்காவின் அந்த நிலைக்கான சவால் சோவியத் ஒன்றியத்திடமிருந்து இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்கா உலக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது போல் கொவிட்-19 தொற்று நோய்ப் பிரச்சனையின் பின்னர் சீனா உலகில் ஆதிக்கம் செலுத்தப் போகின்றதா? 1980களில் இனி ஜப்பான் உலகை ஆளப் போகிறது சொன்னவர்கள் பலர். பின்னர் முப்பது ஆண்டுகளாக அது பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்தது. ஜப்பானின் தனிநபர் வருமானம் அதிகரித்த போது ஜப்பானிய ஊழியர்களின் வேதனம் அதிகரித்தது, அதனால் ஜப்பானின் உற்பத்திச் செலவு அதிகரித்தது. அந்தத் நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுவதாக ஜப்பானின் மக்கள் தொகையில் முதியோர் அதிகமாயினர். அதனால் உலகப் பொருளாதார அரங்கில் ஜப்பான் தனது போட்டி போடும் திறனை இழந்து. அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் பனிப்போர் நடந்த போது சோவியத் ஒன்றியம் உலகை ஆளப்போகின்றது என்றனர். சோவியத் ஒன்றியம் அமெரிக்காவுடன் உலக ஆதிக்கத்திற்காக போட்டியிடும் போது அதன் மொத்த தேசிய உற்பத்தி அமெரிக்காவின் அமெரிக்காவினுடைய மொ.தே.உஇன் அரைப்பங்காக இருந்தது, தனிநபர் வருமானம் காற்பங்காக இருந்தது. ஆனால் படைத்திறையில் அமெரிக்காவிற்கு ஈடாக நின்றது. அதன் பொருளாதாரப் பின்னடைவால் அது பனிப்போரில் பின்னடைவைக் கண்டதுடன் சோவியத் ஒன்றியம் சிதைவடைந்தது.
அனுபவங்களைக் கருத்தில் கொண்ட சீனா
இரசியாவினதும் ஜப்பானினதும் அனுபவங்களை சீனா நன்கு புரிந்து வைத்துள்ளது. அமைதியான எழுச்சி என்னும் பெயரில் தனது பொருளாதாரத்தையும் படைத்துறையையும் தொழில்நுட்பத்தையும் அது உறுதியாக மேம்படுத்தி வருகின்றது. அதனால் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் சீனாவால் அமெரிக்காவிற்கு வரும் அச்சுறுத்தல் சோவியத் ஒன்றியத்திடமிருந்த வந்த அச்சுறுத்தலிலும் பார்க்க கையாள்வதற்கு சிக்கலானதாக இருக்கின்றது என்பதை உணர்ந்துள்ளனர். சீனர்களின் சராசரி சம்பளம்1990-ம் ஆண்டு $150, 2005-ம் ஆண்டு $2800, 2015-ம் ஆண்டு $8900, 2020-ம் ஆண்டு $13500. இந்த பன்மடங்கு அதிகரிப்புக்கு மத்தியிலும் சீனா உலகில் முதற்தர உற்பத்தி நாடு என்ற நிலையை இழக்கவில்லை. ஊழியர்களின் வருவாய் அதிகரிப்பை உற்பத்தித் திறன் அதிகரிப்பால் சீனா ஈடு செய்ய முயற்ச்சிக்கின்றது. இதனால் ஜப்பானைப் போல் சீனா தொடர்ச்சியாக பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கப் போவதில்லை.
அமெரிக்கா எதிர்பார்த்தது போல் சீனா நடக்கவில்லை
1979-ம் ஆண்டு நிக்சன் - கிஸ்ஸிங்கர் நிர்வாகம் சீனாவுடனான அமெரிக்க உறவை உயர்த்திய போது சீனா உள்நாட்டில் மக்களாட்சி நோக்கிய நகர்வுகளை உருவாக்கும் என்றும் உலக அரங்கில் அமெரிக்காவிற்கு எதிராக செயற்படமாட்டாது என்றும் அமெரிக்கா தரப்பில் நம்பப்பட்டது. 2011-ம் ஆண்டு சீனா உலக வர்த்தக நிறுவனத்தில் இணைய அமெரிக்கா அனுமதித்த போது சீனா மேற்கு நாடுகளில் உள்ளது போன்ற பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இவை ஏதும் இனி நடக்காது என்பதை சீன அதிபர் ஜீ ன்பிங்கின் தொடர்ச்சியான பல நடவடிக்கைகள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அத்துடன் அமெரிக்க வர்த்தக மற்றும் படைத்துறை இரகசியங்களை சீனா தொடர்ச்சியாக திருடிக் கொண்டிர்க்கின்றது என அமெரிக்கர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில்தான் அமெரிக்கா சீனாமீது வர்த்தகப் போரை 2018ஆரம்பித்ததுடன் 2019இல் தொழில்நுட்பப் போரை ஆரம்பித்தது. கடைசியாக அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று நோய்க்கான தடுப்ப்பு மருந்து ஆராய்ச்சிகளைக் கூட சீனா திருட முயற்ச்சிக்கின்றது என்றும் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2020 பெப்ரவரியில் நடந்த மியூனிச் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்ப்பர் சீனாவை “அதிகரிக்கும் அச்சுறுத்தல்” என விபரித்ததோடு மற்ற நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து சீனாவுடன் ஒரு மோதலுக்குத் தயாராக வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். 2020 மே மாதம் சீன அதிபர் சீனப்படைகளை ஒரு போருக்கு தயாராகும் படை அறைகூவல் விடுத்தார்.
இந்தியாவை மிரட்டும் சீனா?
2020 மே மாத நடுப்பகுதியில் சீன அரச ஊடகம் தற்போதைய சூழலில் சீனா மூன்று கேந்திரோபாயங்களை முன்னெடுக்கின்றது என்றது. 1. அமெரிக்காவைக் கையாளுதல், இந்தியா, ஜப்பான், இரசியா உள்ளிட்ட அயல்நாடுகளுடனான உறவிற்கு முன்னுரிமை கொடுத்தல், சீன நிகழ்ச்சி நிரலின் அடிப்படையாக வளர்முக நாடுகளை கருதுதல். ஆனால் சீனப் படைகள் இந்திய எல்லைகளில் அத்து மீறுவது சீனாவின் இரண்டாவது கொள்கைக்கு முரணாக இருக்கின்றது. அமெரிக்காவின் வெளியுறவுச் செயற்பாடுகளை “ஊரை அடித்து உலையில் போடுதல்” எனவும் சீனாவின் செயற்பாடுகள் “உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய், என்வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்?” எனவும் விபரிக்கலாம். சீனா தனது நிகழ்ச்சி நிரலுக்குள் இந்தியா வரவேண்டும் என எதிர்பார்க்கின்றது. கொவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னர் இந்தியா சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டுடன் இணைந்து நிற்கின்றது. தைவானை உலக சுகாதார நிறுவனத்தில் இணைக்க வேண்டும் என இந்தியா கருதுகின்றது. கொவிட்-19 தொற்று நோய்க்கு சீனாதான் காரணம் என இந்தியாவும் கருதுகின்றது. இவற்றால் சினமடைந்த சீனா மோடி அரசுக்கு இந்திய மக்களிடையே அவமதிப்பை ஏற்படுத்த எல்லைப் படை நகர்வுகளை மேற்கொள்கின்றது. சீனாவின் நிபந்தனைகளுக்கு மோடி அரசு பணியாவிடில் ஒரு சிறிய போரை சீனா இந்திய எல்லையில் செய்யத் துணிந்து நிற்கின்றது. சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர் (சிறப்பு அடையலாம் என்றாலும் சிறப்பற்றதை செய்யமாட்டார் சிறப்புடன் திடமான மனிதனாய் வாழ வேண்டுபவர்.)
பொருளாதார பேரரசு
சீனா தனது பட்டி+பாதை முன்னெடுப்பில் (BELT & ROAD INITIATIVE)138 நாடுகளையும் முப்பது பன்னாட்டு நிறுவனங்களையும் ஈடுபடுத்தியுள்ளது. 2027-ம் ஆண்டளவில் இந்தத் திட்டத்திற்கு சீனா செய்யும் மொத்தச் செலவு 1.2ரில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது சீனாவை ஒரு பொருளாதார ஏகாதிபத்திய நாடாக்கும் முயற்ச்சி எனவும் சீனாவை ஒரு பொருளாதாரப் பேரரசாக்கும் திட்டம் எனவும் விமர்சிக்கப்படுகின்றது. இன்னொரு புறம் சீனா இந்த நாடுகளுக்கு உயர்வட்டிக் கடன்களை வழங்கும் பொறிக்குள் சிக்க வைத்து அந்த நாட்டின் வளங்களைத் தனதாக்கும் முயற்ச்சி எனவும் விமர்சிக்கப்படுகின்றது. சீனாவின் எதிரிகள் இந்தத் திட்டத்தை முறியடித்து சீனாவிற்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்த முயற்ச்சிக்கலாம். இந்த நாடுகளை சீனா பொருளாதார அடிப்படையில் சுரண்டுகின்றது என்ற பரப்புரையை சீனாவின் எதிரிகள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டனர். அந்த நாடுகளில் ஒரு புரட்சிகர அரசு பொறுப்பேற்று பன்னாட்டு நியமங்களை மீறி அங்குள்ள சீனச் சொத்துக்களை அரசுடமையாக்கலாம். உதாரணத்திற்கு இலங்கையில் ஒரு அரசு பதவியேற்று தற்போது சீனாவிற்குச் சொந்தமான அம்பாந்தோட்டை துறைமுகத்தை அரசுடமையாக்கி அதில் சீனாவிற்கு எதிரான நாடுகளை தளம் அமைக்க வழங்கலாம். இது போன்ற நடவடிக்கைகளால் சீனா தனது முதலீடுகளை முற்றாக இழக்கலாம் என்பதையிட்டு சீனா அஞ்சாமல் இருக்கின்றது.
அஞ்சுவது அஞ்சாமை பேதமை
கொவிட்-19 தொற்று நோய்த்தாக்கம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாதிப்பிலும் பார்க்க குறைந்த அளவு பாதிப்பையே சீனாவிற்கு ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவின் மொத்தத் தேசிய உற்பத்தி உலகின் மொத்த உற்பத்தியின் மூன்றி இரண்டு பங்கு என்ற உயர்ந்த நிலையில் இருந்த நிலையில் இருந்தது. அதை அடிப்படையாக வைத்து அமெரிக்கா தனது உலக ஆதிக்கத்தைக் கட்டி எழுப்பியது. அப்போது மற்ற முன்னணி நாடுகள் ஒரு போர் செய்து சலித்துப் போயிருந்தன. இப்போது அந்த மாதிரியான நிலையில் சீனா இல்லை. படை, குடி, கூழ், ஆகியவை சீனாவிடம் சிறப்பாக இருந்தாலும் நட்பும் அரணும் அமெரிக்காவிற்கு இருப்பது போல் சீனாவிற்கு இல்லை.
இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?
இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...
-
2024 ஜனவரி 26-ம் திகதி நடக்கவுள்ள இந்தியக் குடியரசு நாள் விழாவில் ஜோ பைடன் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள இந்தியா செல்வதாக ஏற்பாடாகி ...
-
உயர்ந்த கல்விமானாக இருந்து வெற்றீகரமான அரசுறவியலாளராக (இராசதந்திரியாக) மாறிய ஹென்றி கிஸ்ஸிங்கர் உலக அரசியலில் அயோக்கியத்தனத்தை ஏற்றுக்கொள...
-
மேற்கு ஆபிரிக்க நாடாகிய நைஜரில் நடந்த பின்னணி: 1. திறனற்ற தூய்மையற்ற ஆட்சி 2. எரிபொருள், தங்கம், யூரேனியம் போன்றவை உள்ள நைஜரின் பொரு...