Followers

Monday 30 November 2020

இஸ்ரேல் சவுதி கள்ளக் காதலும் ஈரானிய விஞ்ஞானி கொலையும்



இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாகூ சவுதி அரேபியாவிற்கு சென்று சவுதியின் பட்டத்துக்குரிய இளவரசரைச் சந்தித்தார் என்பதை சவுதியின் வெளியுறவுத் துரை அமைச்சர் ஃபசல் பின் ஃபார்ஹல் அல் சவுத் மறுத்துள்ளார். இஸ்ரேலின் பெஞ்சமின் நெத்தன்யாகூ, சவுதியின் மொகமட் பின் சல்மன், துருக்கியின் ரெசெப் எர்டோகான், ஹங்கேரியின் விக்டர் ஓபன், பிரித்தானியாவின் பொறிஸ் ஜோன்சன், பிரேசிலின் ஜெர் பொல்சொனாரோ, இரசியாவின் விளடிமீர் புட்டீன், இந்தியாவின் நரேந்திர மோடி, மெக்சிக்கோவின் மானுவேல் ஓப்ரடோர் ஆகியோர் டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் அவருக்கு வேண்டப்பட்டவர்களாக இருந்தவர்கள் ஆகும். ஆனால் அமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றத்தால் கலக்கமடைந்தவர்களாக இஸ்ரேலின் பெஞ்சமின் நெத்தன்யாகூ, சவுதியின் மொகமட் பின் சல்மன் ஆகிய இருவரும் இருக்கின்றார்கள். புதிய அமெரிக்க அதிபர் ஜோன் பைடனை எப்படிக் கையாள்வது என்பது பற்றி இருவரும் நிச்சயமாக கலந்துரையாடி இருப்பார்கள்.

எந்த ஆண்டி பெருவல்லரசு?

இஸ்ரேல் அமெரிக்க உறவு உறுதியானதாகவே கடந்த பல பத்தாண்டுகளாக இருக்கின்றது. சில வேளைகளில் இஸ்ரேல் தன்னை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பதுமுண்டு. 1996-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும் இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாகூவும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய போது நெத்தன்யாகூ அரபு இஸ்ரேலிய மோதல்களின் வரலாறு பற்றி கிளிண்டனுக்கு பாடம் எடுப்பது போல் நடந்து கொண்டார். சினமடைந்த கிளிண்டன் பேச்சு வார்த்தையின் பின்னர் “எந்த ---- ஆண்டி இங்கு பெருவல்லரசு (Who is the f—king superpower here?) என தனது உதவியாளர்களிடம் கேள்வி எழுப்பினாராம். பொதுவாக அமெரிக்காவின் குடியரசுக் கட்சி அதிபர்கள் மக்களாட்சிக் கட்சியின் அதிபர்களுடன் ஒப்பிடுகையில் இஸ்ரேலுக்கு அதிக சாதகமாக நடந்து கொள்வார்கள். ஆனாலும் டிரம்பைப் போல் இஸ்ரேலுடன் தாராளமாக எந்த ஓர் அமெரிக்க அதிபரும் நடந்து கொண்டதில்லை. டிரம்பின் வெளியுறவுத் துறையினரும் அவரது யூத மருமகனும் ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், சூடான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் அரசுறவை ஏற்படுத்த வழிவகுத்தனர். இஸ்ரேல் ஜோர்டானிடமிருந்து அபகரித்த கிழக்கு ஜெருசேலத்தை இஸ்ரேலுடன் இணைத்து ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார். இஸ்ரேல் சிரியாவிடமிருந்து அபகரித்த கோலான் குன்று பகுதிகளை இஸ்ரேலுடன் பன்னாட்டு நியமங்களுக்கு முரணாக இணைத்ததை டிரம்ப் ஏற்றுக் கொண்டார். இஸ்ரேலின் ஜேருசேலம் இணைப்பு நடவடிக்கையை பலஸ்த்தீனியர்கள் எதிர்த்த போது டிரம்ப் அவகளுக்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்தினார். பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தின் வாஷிங்டன் பணிமனையை மூட உத்தரவிட்டார். அத்துடன் பலஸ்த்தீனியர்களின் மேற்கு கரையில் இருந்த அமெரிக்க துணைத் தூதுவரகத்தையும் மூட உத்தரவிட்டார். இஸ்ரேலுக்கு அச்சம் கொடுப்பவராக இருந்த ஈரானியப் படைத் தளபதி காசிம் சுலேமானியைக் ஈராக்கில் வைத்து ட்ரம்பின் படையினர் குண்டு வீசிக் கொலை செய்தனர். புதிய அமெரிக்க அதிபர் ஜோன் பைடன் பலஸ்த்தீனியர்கள் விவகாரத்தில் சற்று அவர்களுக்கு சார்பான நிலைப்பாட்டை எடுப்பார். அவர் இஸ்ரேலுக்கு எதிராகச் செய்யும் நகர்வுகள் அறுதிப் பெரும்பானமையில்லாமல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் நெத்தன்யாகூவின் ஆட்சி கவிழ்க்கப்படுவதில் போய் முடியலாம்.

அரபு மக்களுக்கு உதவாத சவுதி அரச குடும்பம்.

2019-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சவுதி அரேபியாவின் உளவுத்துறையின் தலைவராக இருந்த சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த அல் ஃபைசல் சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன் ஆகிய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உள்ள இரகசிய அரசியல், பொருளாதார மற்றும் படைத்துறை உறவுகளை அம்பலப்படுத்தினார். வஹாபிசமும் சியோனிசமும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது புவிசார் அரசியல் நலன்களுக்காக வளர்த்து விட்டவை எனக் குற்றம் சாட்டுவோரும் உண்டு. சவுதி அரச குடும்பமே பிரித்தானியாவால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூட குற்றச்சாட்டு உள்ளது என்பது மட்டுமல்ல சவுதி அரச குடும்பம் உண்மையில் யூதர்கள் என்ற ஐயம் தெரிவிப்போரும் உள்ளனர். பதினொரு நூல்களுக்கு மேல் எழுதிய செயட் அபூரிஸ் என்ற பலஸ்த்தீனிய ஊடகவியலாளர் அரபு நாட்டு ஆட்சியாளர்களை மேற்கு நாடுகளின் அடிவருடிகள் என்றே விபரித்தார். அவர்கள் தங்கள் குடிமக்களின் நலன்களில் அக்கறை இல்லாதவர்கள் என்பதும் அவரது குற்றச் சாட்டு. 2005-ம் ஆண்டு இறந்த சவுதி அரசர் பஹ்ட்டை சோம்பேறி, ஊழல்காரர், அறிவற்றவர், குடிகாரர், காணொலி விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் என விபரித்திருந்தார். அரபு நாடுகளில் இருக்கும் ஆட்சியாளர்கள் சட்டபூர்வமானவர்கள் அல்லர் என்பது அவரது ஆணித்தரமான கருத்து. அரபு நாட்டு ஆட்சியாளர்களை மேற்கத்தைய நாடுகளினதும் எரிபொருள் நிறுவனங்களினதும் மாவட்ட அலுவலகர்கள் என அவர் தனது நூல்களில் விபரித்திருந்தார். சவுதி அரேபியா இஸ்ரேலுடன் இரகசிய உறவுகளை பேணுவதன் மூலம் சவுதியில் தமக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்களின் விபரங்களை இஸ்ரேலிய உளவுத்துறையிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றது. சவுதியில் இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க சவுதியில் செயற்படும் இஸ்ரேலிய உளவுப் படையினர் தீவிரமாகச் செயற்படுகின்றனர். இஸ்ரேல் கைப்பற்றிய அரபு நிலங்களைவிட்டு வெளியேறும் வரை அதனுடன் உறவு இல்லை என சவுதி அரேபியா சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

சவுதியும் டிரம்பும்

சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொகமட் பின் சல்மான் ஆட்சியில் தனது பிடியை இறுக்குவதற்கு டிரம்ப் உதவியாக இருந்தார். ட்ரம்பின் மருமகனுடனும் அவர் நல்ல உறவை வைத்திருந்தார். யேமனில் சவுதி அரேபியா செய்த தாக்குதல்களுக்கும் டிரம்ப் படைக்கல உதவிகளையும் நேரடி நிபுணத்துவ உதவிகளையும் செய்தார். சவுதியில் இருந்து வெளியேறி துருக்கியில் வசித்த ஊடகரான ஜமால் கஷோக்ஜியின் உண்மையான கொலையாளிகளை தண்டிப்பதில் டிரம்ப் அதிக அக்கறை காட்டவில்லை. ஆனால் ஜோன் பைடன் நிச்சயம் அக்கறை காட்டுவார்.

நால்வரின் இரகசிய சந்திப்பு

2020 நவம்பர் 22-ம் திகதி பெஞ்சமின் நெத்தன்யாகூ அமைச்சரவைக் கூட்டத்தை திடீரென இரத்துச் செய்து விட்டு தனிப்பட்ட விமானம் ஒன்றில் ஏறிப் பறந்ததாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிப்பது நெத்தன்யாகூ – சல்மான் சந்திப்பை உறுதி செய்கின்றது. நெத்தன்யாகூ, சவுதி இளவரசர் சல்மான், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோ இஸ்ரேலின் உளவுத் துறையான மொசாட்டின் தலைமை இயக்குனர் யொஸ்ஸி கொஹென் ஆகியார் சவுதி அரேபியாவின் செங்கடல் கரையோர நகரமான நியோமில் சந்தித்து ஐந்து மணி நேரம் உரையாடியுள்ளார்கள். இவர்களின் சந்திப்பின் முக்கிய நோக்கம் ஈரானை இனி எப்படிக் கையாள்வது என்பது பற்றியே இருந்திருக்கும் என மேற்காசியாவின் புவிசார் அரசியலை புரிந்தவர் எவரும் அடித்துச் சொல்வர். ஆனால் 2021 ஜனவரி 20-ம் திகதி டிரம்பின் ஆட்சி முடியுமுன்னர் ஈரான் மீதான ஒரு தாக்குதல் செய்வது என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்குமா என அறுதியிட்டு சொல்ல முடியாது.  

ஈரான் அணு விஞ்ஞானி கொலை

ஒரு புறம் ஈரானுக்கு எதிராக சில அரபு நாடுகளும் இஸ்ரேலும் கள்ள உறவுகளையும் பகிரங்க உறவுகளையும் வளர்க்கும் போது மறுபுறம் ஈரானின் நான்காவது அணு விஞ்ஞானி மோஷேன் ஃபக்ரிஸாதேவை கொல்லப்பட்டார். இது ஈரானில் கொல்லப்பட்ட நான்காவது விஞ்ஞானியாகும். இது வரை கொல்லப்பட்டவர்களில் உயர் தரமான விஞ்ஞானியும் ஆவார். எல்லாக் கொலைகளிற்கும் இஸ்ரேல் காரணம் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. 2021-ம் ஆண்டு ஜூன் 18-ம் திகதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் ஒரு படைத்தளபதிதான் அதிபராக வரவேண்டும் என ஈரானில் தீவிரப் போக்குடையவர்கள் முனைப்புடன் செயற்படுகின்றார்கள். 2019இல் நடந்த தளபதி சுலேமானி கொலையும் இந்த அணு விஞ்ஞானி கொலையும் ஈரானில் ஒரு அதிதீவிரவாதப் போக்குடையவர் ஒருவரே அதிபராக வருவதை நிச்சயப் படுத்தியுள்ளது. அதை இஸ்ரேலும் விரும்புகின்றது. ஏனென்றால் ஈரானில் திவிரவாதப் போக்குடையவர்களின் கை ஓங்கும் போது ஈரானுக்கும் அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோன் பைடனுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை சுமூகமாக நடக்காது. ஈரானின் இரண்டு பெறுமதிமிக்க குடிமக்கள் கொல்லப் பட்டமை ஈரானால் அவர்களைப் பாதுகாக்க இயலாத நிலையைக் காட்டுவதாக மேற்கு நாட்டு ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஈரானிய ஆட்சியாளர்கள் மீது கரி பூசுவது அந்த ஊடகங்களின் நோக்கங்கள். அந்த ஊடகங்கள் இஸ்ரேலுக்கு தொடர்பு இருக்கலாம் என ஐயம் வெளியிட்டுள்ளன. ஆனால் இஸ்ரேலைக் கண்டிக்கும் வாக்கியங்களை அவை எழுதவோ பேசவோ இல்லை. ஈரான் இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் உளவுத்துறைகளை விஞ்சக் கூடியவகையில் தனது உளவுத்துறையை வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம். 

மருமகன் குஷ்ணர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளின் கணவரும் யூதருமான ஜெரார்ட் குஷ்ணர் வெள்ளை மாளிகையின் உயர் பதவியான அதிபரின் மூத்த ஆலோசகர் பதவியில் இருக்கின்றார். டிரம்ப் 2017 ஜனவரியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து குஷ்ணர் சவுதியின் முடிக்குரிய இளவரசர் பின் சல்மானுடன் நெருங்கிய நடபை வளர்த்துள்ளார். குஷ்ணர் 2020 டிசம்பர் முதல்வாரம் இஸ்ரேலுக்கும் சவுதிக்குமான பயணம் ஒன்றை மேற்கொள்கின்றார். இவரது பயணத்தின் முக்கிய நோக்கம்: 1. சவுதி – இஸ்ரேல் உறவை மேலும் நெருக்கமாக்குவது 2. கட்டார்(கத்தார்) நாட்டின் மீது சவுதி அரேபியா, எகிப்த்து, ஐக்கிய அமீரகம் ஆகியவை மேற்கொண்டுள்ள பொருளாதாரத் தடையையும் மற்றும் நெருகுவாரஙக்ளை நீக்குவதாகும். அதன் மூலம் கட்டார்(கத்தார்) ஈரான் மீது தங்கியிருப்பதை இல்லாமல் செய்யலாம்.

 

 

http://www.veltharma.com/2020/11/blog-post_24.html

http://www.veltharma.com/2013/01/blog-post_28.html

Wednesday 25 November 2020

தைவானைச் சுற்றி ஆசியப்படை வலுப்பெருக்கல் போட்டி


இந்திய-சீன மற்றும் இந்திய-பாக்கிஸ்த்தான் படைத்துறைப் போட்டி தீவிரமடைவதற்கான காரணம் அமெரிக்கா தைவானைப் பாதுகாப்பதற்கு செய்யும் நடவடிக்கைகளாகும். அமெரிக்கக் கடற்படையின் Rear Admiral Michael Studeman 21/11/2020 தைவானிற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டதாக தைவானில் இருந்து செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன. இவர் அமெரிக்கப் படையின் ஆசிய பசுபிக் கட்டளையகத்தின் உளவுப் பிரிவின் உயர் அதிகாரியாவார்.  இதற்கு முன்னர் அமெரிக்கப் படையினர் தைவானியப் படையினருக்கு பயிற்ச்சி வழங்குவதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. கடந்த ஓராண்டாக அமெரிக்கா பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை தைவானிற்கு விற்பனை செய்தது சீனாவைக் கடும் சினத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

1995-96 தைவான் நெருக்கடி
1994 பில் கிளிண்டன் தைவானிய அதிபர் லீ டெங் கூ அமெரிக்கா செல்ல அனுமதி மறுத்தார். சீனாவுடனான உறவைக் கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க நாடாளமன்றம் 1995 மே மாதம் மக்களவையில் 396-1 என்ற பெரும்பான்மையுடனும் மூதவையில் 97-1 என்ற பெரும்பான்மையுடனும் அவருக்கு பயண அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. 1979 ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்க சீன அரசுறவை நிலை நிறுத்திய போது தைவானும் சீனாவின் ஒரு பகுதி என ஒத்துக் கொள்ளப்பட்டது. 1995 ஜூலை தான் படித்த கோர்ணல் பல்கலைக் கழகத்தில் தைவானின் மக்களாட்சி பற்றி தைவானிய அதிபர் லீ டெங் கூ உரையாற்றினார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவானை இலக்கு வைத்து 1995-ஜூலை முதல் தொடர் ஏவுகணைச் சோதனை, கடற்படைப் போர் ஒத்திகை போன்றவற்றைச் செய்தது. சீனப் படைகள் ஃபிஜீயன் மாகாணத்திற்கு பெருமளவில் நகர்த்தப்பட்டனர். அவர்களை வைத்து ஈரூடக தாக்குதல் ஒத்திகையச் செய்தது. தைவானை கைப்பற்றும் நகர்வுகளைச் சீனா செய்வதை அறிந்த அதிபர் பில் கிளிண்டன் USS NIMITZ, USS INDEPENDENT என இரு விமானம் தாங்கிக் கப்பல்களின் தலைமையில் இரு பெரும் கடற்படைப்பிரிவுகளை தைவான் நீரிணைக்கு அனுப்புகின்றார். அந்த இரண்டு கடற்படைப் பிரிவுகளையும் தம்மால எதிர் கொள்ள முடியாது என உணர்ந்த சீனா தனது தைவான் ஆக்கிரமிப்பு முயற்ச்சியைக் கைவிட்டது. இது சீனாவின் மூக்குடைபட்ட ஒரு நிகழ்வாகும். சினம் கொண்ட சீனா அவசரமாக இரசியாவிடமிருந்து பல தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள், எழுபத்தாறு SU-30-MKK, இருபத்தினான்கு SU-30-MK2 ஆகிய போர்விமானங்கள் போன்றவற்றை வாங்குகின்றது. அமெரிக்காவிற்கு இணையாக சீனா தனது படைவலுவை உயர்த்த முடிவு செய்து. அதன் நீண்ட காலத் திட்டத்தால் அது இன்று அமெரிக்காவிற்கு சவால் விடக்கூடிய ஒரு படைத்துறையைக் கொண்டுள்ளது. அமெரிக்கா இன்று சீனாவின் வளர்ச்சியை இட்டு கரிசனை கொண்டுள்ளது. சீனாவின் படைத்துறை வளர்ச்சி அது தென் சீனக் கடலில் உள்ள தீவுகளை தனதாக்கி அங்கு தன் படை நிலைகளை நிறுவ வழிவகுத்தது. அதைத் தடுக்க அமெரிக்காவால் முடியவில்லை. அந்த தீவுகளுக்கு மேலாக அமெரிக்கா தனது போர் விமானங்களைப் பறக்க விடுவதும் அத்திவுகளுக்கு அண்மையில் தனது கடற்படைக் கலன்களை அனுப்புவதும் மட்டுமே அமெரிக்காவால் செய்ய முடிந்தது. இது பிலிப்பைன்ஸ் ஆட்சியாளர்களை அமெரிக்காமீது அதிருப்தி கொள்ள வைத்தது. 

சீனாவின் அயல் நாடுகளின் கரிசனை

சீனாவின் கிழக்குப் பக்கம் ஜப்பானும் தென் கொரியாவும் சீன அச்சுறுத்தலைச் சமாளிக்க இரண்டு வழிகளைக் கையாள்கின்றன. ஒன்று தனது படைவலிமையைப் பெருக்குவது இரண்டாவது அமெரிக்காவுடன் படைத்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது. மேற்குப் புறம் இந்தியா சீனப் படைத்துறை வளர்ச்சியால் அதிக கரிசனை கொள்கின்றது. சீனா அருணாச்சலப் பிரதேசம் தனது நாட்டின் ஒரு பகுதி எனச் சொல்கின்றது. ஆரம்பத்தில் இந்தியா இரசியாவுடன் படைத்துறை ஒத்துழைப்பையும் இரசியாவிடமிருந்து பெருமளவு படைக்கலன் கொள்வனவையும் செய்கின்றது. சீனா தொடர்ச்சியாக இந்திய எல்லையில் செய்யும் அத்து மீறல்களால் இந்தியா தனது பாதுகாப்பையிட்டு முழுமையான மனநிறைவு அடையவில்லை. அமெரிக்க இந்திய படைத்துறை ஒத்துழைப்பு உருவாக்கி அதிகரிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் படை வலிமை அதிகரிப்பால் பாக்கிஸ்த்தானைச் சிந்திக்க வைக்கின்றது. அதுவும் தன் படைவலிமையை அதிகரிக்கின்றது. இந்தியா தனக்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள படை வலிமை இடைவெளியை அமெரிக்க உறவால் நிரப்ப முயல பாக்கித்தானும் தனக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள படைவலிமை இடைவெளியை சீன உறவால் நிரப்ப முயல்கின்றது.

குவாட் உரையாடல்

சீனாவின் பொருளாதார, படைத்துறை, தொழில் நுட்ப வளர்ச்சியும் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளுக்கு கடன் கொடுத்து அவற்றின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதும் ஜப்பானையும் ஒஸ்ரேலியாவையும் கரிசனை கொள்ள வைக்கின்றது. இதனால் ஜப்பான் நான்குமுனை உரையாடல் (Quadilateral Dialogue) என்னும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளைக் கொண்ட உரையாடலைத் தொடக்குகின்றது. இதன் நோக்கம் இந்து மாக்கடலிலும் பசுபிக் மாக்கடலிலும் சுதந்திரமான கடற்போக்குவரத்தை உறுதி செய்ய நான்கு நாடுகளும் ஒத்துழைத்தல் எனச் சொன்னாலும் அதன் உண்மையான நோக்கம் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் படைவலிமையை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பாகும்.

தைவான் சீனாவின் மணிமுடி

சீனாவின் தொழில்நுட்ப வலுவின்மையான புள்ளிகளில் semiconductors உற்பத்தியும் ஒன்று. தகவல் தொழில்நுட்பத்தின் உயிர்நாடியான அந்தத் துறையில் அமெரிக்கா, தென் கொரியா, தைவான் ஆகியவை உலகில் முன்னணியில் திகழ்கின்றன. தைவானை சீனாவின் ஒரு பகுதியாக்குதல் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும்.  

உலகெங்கும் துறைமுகங்களைத் தேடித் தேடி அபிவிருத்து செய்யும் சீனாவிற்கு 15 துறைமுகங்களைக் கொண்ட தைவான் பெரும் வாய்ப்பாகும். தைவானை சீனா கைப்பற்றினால் பசுபிக் பிராந்தியத்தில் அதன் ஆதிக்க வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும். 2019 ஜனவரியில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் தைவான் சீனாவினது ஒரு பகுதி என்றும் தேவை ஏற்படின் படைகளைப் பாவித்தாவது அதை சீனாவின் ஒரு பகுதியாக்குவோம் என முழங்கினார். தைவானின் தனித்துவத்தை காப்பாற்றுவோம் என அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக அறிவித்தது. அது தைவானியர்களின் சுதந்திரத்தில் கொண்ட அக்கறையால் அல்ல பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவே.

சீனாவிற்கு எதிராக இந்தியாவை இழுத்த அமெரிக்கா

தைவானை நோக்கி சீனாவின் படைநகர்வுகளிற்கு பதிலடியாக 2018-ம் ஆண்டு அமெரிக்கா மூன்று தடவை தனது கடற்படையை சீனாவிற்கும் தைவானிற்கும் இடையில் உள்ள தைவான் நீரிணைக்கு அனுப்பவேண்டியிருந்தது. சீனா தைவானைக் கைப்பற்ற முயற்ச்சித்தால் ஒரு அமெரிக்க சீனப் போர் நிச்சயம் ஊருவாகும். இதில் சீனாவிற்கு பாதகமான சூழலை ஏற்படுத்த இந்தியா சீனா எல்லையில் சீனாவிற்கு எதிராக படை நகர்த்தலைச் செய்ய வேண்டும் என்ற திட்டம் இரகசியமாக ஆலோசிக்கப்பட்டது. சீனா தைவான் போரில் ஈடுபடும் வேளையில் பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரை இந்திய கைப்பற்ற திட்டமிட்டது. அமித் ஷா பாக்கிஸ்த்தானும் சீனாவும் கைப்பற்றி வைத்திருக்கும் கஷ்மீரை எப்படியும் மீட்போம் என இந்தியப் பாராளமன்றத்தில் முழங்கினார். அதை எப்படியோ அறிந்த சீனா தைவான் போரின் போது இந்தியா அப்படி ஒரு படை நகர்வை மேற்கொண்டால் பாக்கிஸ்த்தானும் சீனாவும் இணைந்து இந்தியாவிற்கு எதிராக ஒரு போர் செய்ய முடிவு செய்துள்ளன. பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரினூடாக சீன அமெரிக்க பொருளாதாரப் பாதை செல்கின்றது.

இரு குழுக்கள்

பாக் + சீனா ஒரு புறம் அமெரிக்கா+ஜப்பான்+இந்தியா+ஒஸ்ரேலியா+ தென் கொரியா + வியட்நாம் இன்னொரு புறம் என்ற போட்டி நிலை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தீவிரமாகிக் கொண்டிருக்கின்றது. குவாட் பாதுகாப்பான கடற் போக்கு வரத்தை உறுதி செய்தல் என்னும் பெயருடன் ஒரு படைத்துறை ஒத்துழைப்பு. இது நேட்டோ போல் நெருக்க மாக இருக்காது. அமெரிக்கா நேட்டோ நாடுகளைப் பாதுகாக்க எடுத்த பொறுப்பைப் போல் சீனாவின் அயல்நாடுகளை சீனாவிடமிருந்து பாதுகாக்க முழுப்பொறுப்பு எடுக்காது. ஆனால் தனது தீவிர ஒத்துழைப்பை வழங்கும்.

இரசியாவின் நிலைப்பாடு

2014-ம் ஆண்டு கிறிமிய இணைப்பின் பின் நெருங்கி வந்த இரசிய சீன உறவு 2019இல் இருந்து நெருக்கம் குறைந்து கொண்டு போகின்றது. மத்திய ஆசியாவில் சீனா செய்யும் நகர்வுகளை இட்டு இரசியா கரிசனை கொண்டுள்ளது. இரசியா சீனாவிற்கு வழங்க ஒத்துக்கொண்ட எஸ்-400 என்ற வான் பாதுகாப்பு முறைமையை விநியோகிப்பதை தாமதப் படுத்தியுள்ளது. சீனாவின் நட்பு நாடாக வட கொரியாவும் கம்போடியாவும் மட்டும் இருக்கின்றன.

ஜோ பைடனின் தலைமையில் அமெரிக்கா

அமெரிக்க இந்திய படைத்துறை ஒத்துழைப்பில் ஜோன் பைடனும் அதிக அக்கறை காட்டுவார். டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக வர்த்தகப் போர் செய்ய தயாராக இருந்தார். பைடன் அதில் அக்கறை காட்டமாட்டார். ஆனால் இந்தியாவின் மனித உரிமை மீறல்களிற்கு எதிராக நிற்பார். கமலா ஹரிஸ் இந்தியப் பெண்களுக்கு ஆதரவான நிலைப்பாடு இந்துத்துவாவாதிகளைச் சினமடையச் செய்யலாம். சீனாவுடன் டிரம்பின் வர்த்தகப் போர். பைடனும் தொடர்வார். ஆனால் அமெரிக்காவிற்கு பாதகம் ஏற்படாத வகையில் அவரது நடவடிக்கைகள் இருக்கும். தைவானை அவரும் காப்பாற்றுவார். டிரம்ப் இருந்திருந்தால் தைவானில் இரகசியமாக இருக்கும் அமெரிக்கப் படைகள் அதிகரிக்கப் பட்டிருக்கலாம். ஜோன் பைடன் உலக தாராண்மைவாத்தை கையில் எடுப்பாரானால் ஆதிக்கப் போட்டி மற்றும் படைத்துறைப் போட்டி ஒரு புறம் இருக்க வர்த்தக ஒத்துழைப்பை சுமூகமாகச் செய்யும் முயற்ச்சியில் இறங்குவார். ஆசியான் நாடுகளும் சீனா, ஒஸ்ரேலியா, தென் கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுமாக இணைந்து மொத்தம் பதினைந்து நாடுகள் Regional Comprehensive Partneship (RCEP) என்னும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்தது. இதுவும் ஆதிக்கப் போட்டி ஒரு புறமிருக்க நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சுமூகமாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் வளர்ச்சி சீனாவின் ஆதிக்க மனப்பான்மையை குறைக்க உதவாது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ஊரை அடிச்சு உலையில் போடுவது என்றால் சீனாவின் வெளியுறவுக் கொள்கை “உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய், என் விட்டுக்கு வரும்போது என்ன கொண்டு வருவாய் என்பதே”



Monday 23 November 2020

ஈரான் மீது டொனால்ட் டிரம்ப் தாக்குதல் செய்வாரா?

ஈரானை சுற்றி அமெரிக்கப்படைகள்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் “நொருக்கும் பதிலடி” கொடுப்போம் என ஈரான் 2020-11-17 செவ்வாய்க்கிழமை சூளுரைத்தது. இஸ்ரேலுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்யாதது ஒன்று உண்டென்றால் அது ஈரான் மீது தாக்குதல் நடத்தாததுதான். டிரம்ப் பதவியில் இன்னும் இரண்டு மாதங்களே இருக்க முடியும் என்ற நிலையில் அதையும் செய்ய முயல்கின்றார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. குறைந்தது ஈரானின் நடான்ஸ் நகரத்தில் உள்ள யூரேனியம் பதப்படுத்தும் நிலையிலாவது தாக்குதல் நடத்த வேண்டும் என டிரம்ப் தனது அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துள்ளார். ஈரான் மீது தாக்குதல் செய்வதை துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோ, பாதுகாப்புத் துறைப் பதில் செயலர் கிறிஸ்டோபர் மில்லர் உட்பட பலர் ஒத்துக் கொள்ளவில்லை. 2020 நவம்பர் 21-ம் திகதி அமெரிக்காவின் பி-52 (B-52H “Stratofortress) குண்டு வீச்சு விமானங்கள் ஈரானைச் சுற்றவுள்ள அமெரிக்க படைத்தளங்களுக்கு அனுப்பப்பட்டன. 

ஈரான் அசையாது

2020 நவம்பர் 20-ம் திகதி ஈரானிய அரசு தனது நட்பு அமைப்புக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ஈரானின் சிறப்புப் படையணியின் தளபதி இஸ்மயில் கானி ஈராக்கில் உள்ள ஈரான் சார்பு தீவிரவாதக் குழுக்களுடன் அமெரிக்கத் தாக்குதல் தொடர்பாக கலந்துரையாட ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார். இஸ்ரேல் ஒழிக, அமெரிக்கா அழிக என்ற கொள்கையில் உறுதியாக நிற்கும் ஈரானின் மதவாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பாரிய தாக்குதல் செய்ய வேண்டும் என இஸ்ரேல் கடந்த இருபது ஆண்டுகளாக முயன்று வருகின்றது. ஈரானுடைய மலைகளும் பாறைகளும் நிறைந்த பூகோள அமைப்பு அதை இலகுவில் தாக்கி அழிக்க முடியாத ஒரு நாடாக வைத்திருக்கின்றது.

டொனால்ட் டிரம்பும் இஸ்ரேலும்

டொனால்ட் டிரம்பின் மகளின் கணவர் ஜரார்ட் குஷ்ணர் ஒரு யூதராவார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் உயர் ஆலோசகராக பதவி வகிக்கும் குஷ்ணர் அங்கு செல்வாக்கு மிக்கவராக இருக்கின்றார். அவரும் சவுதி அரேபிய பட்டத்துக்குரிய இளவரசரும் நெருங்கிய நண்பர்கள். அதனால் டிரம்பின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரேலுக்கு சாதகமான பல நகர்வுகள் மேற்காசியாவில் நடந்தன. பலஸ்த்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் தமது தலைநகரம் எனக் கொண்டாடிய கிழக்கு ஜெருசேலம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது. அத்துடன் ஜெருசேலம் இஸ்ரேலின் தலைநகர் என இஸ்ரேல் அறிவிக்க அதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. சிரியாவிடமிருந்து இஸ்ரேல் 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேல் போரில் இஸ்ரேல் சிரியாவிடமிருந்த அபகரித்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோலான் குன்றுகள் இஸ்ரேலின் ஒரு பகுதி என அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. பலஸ்த்தீனியர்களின் மேற்குக் கரைப் பிரதேசத்தில் இஸ்ரேல் செய்த யூதக் குடியேற்றங்களை அமெரிக்கா சட்ட விரோதமாக கருதமாட்டாது என்றும் டொனால்ட் டிரம்ப் பிரகடனம் செய்தார். ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், சூடான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் அரச உறவுகளை உருவாக்க டிரம்பின் ஆட்சி முன்னின்று உழைத்தது. இஸ்ரேல் மிகவும் வெறுத்த ஈரானின் படைத் தளபதியை கசீம் சுலேமானியை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி கொலை செய்தது.

பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்

பாதுகாப்புச் செயலர் எனப்படும் பாதுகாப்பு அமைச்சுப் பதவியில் இருந்த மார்க் எஸ்பரை நவம்பர் 6-ம் திகதி நடந்த தேர்தலில் தான் தோல்வியடைந்த பின்னர் டிரம்ப் பதவி நீக்கம் செய்தார். ஆப்கானிஸ்த்தானில் இருந்தும் ஈராக்கில் இருந்தும் அமெரிக்கப் படையினரை வெளியேற்றாமை போன்ற காரணங்களுக்காக அப்பதவி நீக்கம் நடந்ததாக சொல்லப்பட்டாலும் ஈரான் மீது தாக்குதல் நடத்த மார்க் எஸ்பர் மறுத்தமையும் ஒரு முக்கிய காரணமாகும் எனக் கருதப்படுகின்றது. இதற்கிடையில் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிறையன் தான் பதவியில் இருந்து விலக முன்னர் கட்டார்(கத்தார்) நட்டிற்கு எதிராக ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, எகிப்த்து, பாஹ்ரேன் ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொண்டுள்ள முற்றுகையை நீக்குவேன் எனத் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டார்(கத்தார்) நாட்டின் மீதான முற்றுகையால் அந்த நாடு ஈரானில் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஈரானின் இந்த அரசுறவியல் நெம்பு கோலை வலிமையிழக்கச் செய்யவே இந்த நடவடிக்கை.  

இஸ்ரேல் பாஹ்ரேன் உறவு

இஸ்ரேல் சிரிய எல்லையில் ஆட்கொல்லி கண்ணிவெடிகளை புதைக்கப்பட்டதற்கு பதிலடியாக சிரியாவில் உள்ள ஈரானியப் படை நிலைகள் மீது இஸ்ரேல் 2020 நவம்பர் 18-ம் திகதி தாக்குதல் நடத்தியது. அதில் இரு சிரியப் படையினர் கொல்லப்பட்டதாக சிரிய அரசு அறிவித்தது. அந்த தாக்குதலைத் தொடர்ந்து பாஹ்ரெயின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் லத்திஃப் அல் ஜயானியும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பியோவும் இணைந்து இஸ்ரேலுக்கு பயணம் செய்தனர். அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பாஹ்ரேனிய அதிகாரிகள் சூழ ஒரு பேச்சு வார்த்தை இஸ்ரேலியத் தலைநகரில் நடந்தது. பாஹ்ரேனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை சுமூகப் படுத்தவே அமெரிக்க மற்றும் பாஹ்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பயணம் செய்ததாக சொல்லப்பட்டது. இருவரும் இணைந்து இஸ்ரேலுக்கு பயணித்தமை மிகவும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.



யூரேனிய பதப்படுத்தல் ஒப்பந்தம்

2015-ம் ஆண்டு P-5+1 எனப்படும் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சீனா, இரசியா, பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளையும் ஜேர்மனியையும் கொண்ட குழுவுடன் ஈரான் தனது யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தை செய்தது. அந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் 90 நாட்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கும் கையொப்பம் இடவேண்டும். இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் கடுமையாக எதிர்த்தன. டொனால்ட் டிரம்ப் 2016 நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 2017 ஜனவரியில் பதவி ஏற்றார். 2017 ஒக்டோபரில் அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்து கையொப்பமிடவில்லை. அதனால் மற்ற ஆறு நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா செய்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. ஈரான்மீது அமெரிக்கா மேலதிகப் பொருளாதாரத் தடைகளையும் விதித்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜொன் பைடன் தான் மீண்டும் அந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பேன் எனச் சொல்லியுள்ளார். அப்படி அங்கீகரிக்கும் போது ஈரான் அந்த ஒப்பந்தப்படி மட்டுப்படுத்தப்பட்ட யூரேனியப் பதப்படுத்தலைச் செய்யலாம். அதை இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் விரும்பவில்லை. இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாகூவுடனும் சவுதி அரச குடும்பத்துடனும் தனிப்பட்ட அடிப்படையில் அதிக நட்புக் கொண்ட டொனால்ட் டிரம்ப் தான் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற முன்னர் ஈரானின் யூரேனியப் பதப்படுத்தலை தடுக்கும் நடவடிக்கையை செய்ய முயல்கின்றார் என நம்பப்படுகின்றது. டிரம்ப் ஈரானுடனான யூரேனியம் பதப்படுத்தல் ஒப்பந்தத்தை இரத்துச் செய்த பின்னர் ஈரான் தன்னிடமுள்ள பதப்படுத்தப்பட்ட யூரேனிய இருப்பை 12 மடங்காக உயர்த்தியுள்ளது. இப்போது ஈரானிடம் இரண்டு அணுக்குண்டுகளை உருவாக்கக் தேவையான பதப்படுத்தப்பட்ட யூரேனியம் உள்ளது. அத்துடன் ஜோன் பைடனுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்தால் அதில் தொலை தூர ஏவுகணைகளை மட்டுப்படுத்தும் நிபந்தனை உள்ளடக்கப் படுவதை ஈரான் ஏற்றுக் கொள்ளாது எனவும் அறிவித்துள்ளது. அமெரிக்கா யூரேனியம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பின்னர் அந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் பெருமளவு யூரேனியத்தைப் பதப்படுத்தியதும் ஒப்பந்த மீறலாகும்.

பாஹ்ரேய்னின் முக்கியத்துவம்

ஈரானின் யூரேனியம் பதப்படுத்தும் நிலைகள் பாறைகளுக்கு உள்ளே அறுபது அடிகளுக்கு மேற்பட ஆழத்தில் உள்ளன. அவற்றின் மீது அமெரிக்கா தாக்குதல் செய்வதற்கு பாஹ்ரேனில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவின் பங்கு மிக முக்கியம். அதற்கு பாஹ்ரேனின் ஒத்துழைப்பு அவசியம். பாஹ்ரேயின் வெளியுறவுத் துறை அமைச்சரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும் ஒன்றாக இஸ்ரேலுக்கு பயணித்ததின் நோக்கம் பாஹ்ரேனின் ஒத்துழைப்பைப் பெறுவதாக இருக்கலாம். சியா இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக்  கொண்ட பாஹ்ரேனில் சுனி இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி நடக்கின்றது. அங்கிருந்து சியா இஸ்லாமிய நாடான ஈரானின் மீது தாக்குதல் செய்யப்பட்டால் பாஹ்ரேனில் உள்ள சியா இஸ்லாமியர்கள் கிளர்ந்து எழலாம். அதை அடக்குவதற்கான முன்னேற்பாட்டை செய்ய வேண்டும். அதற்கு இஸ்ரேலிய உளவுத்துறையின் பங்களிப்பு அவசியம்.

ஈரானின் மீதான தாக்குதல் சியா இஸ்லாமியர்களைப் பெரும் பான்மையினராக கொண்ட ஈராக்கிலும் பெரும் குழப்பத்தை உருவாக்கலாம். ஈரானின் ஆதரவு பெற்ற சியா இஸ்லாமியப் போராளிகள் அமைப்பான ஹிஸ்புல்லாவும் மற்ற போராளி அமைப்புக்களும் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தலாம். இதனால் அமெரிக்க படைத்துறை மற்றும் வெளியுறவுத் துறை நிபுணர்கள் ஈரான் மீதான தாக்குதலை எதிர்ப்பார்கள். ஆனால் ஜோன் பைடனின் வெற்றி இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் போரைக் கொண்டு வரும் என இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் எக்காளமிட்டுள்ளார். ஈரான் மூன்று பக்கம் மலைகளையும் நான்காம் புறம் பெரும் கடலையும் எல்லைகளாக கொண்ட ஆக்கிரமிக்க முடியாத கோட்டை. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது உலக எரிபொருள் உற்பத்தியையும் விநியோகத்தையும் பெருமளவில் பாதிக்கும். ஈரானை ஏவுகணைகளால் தாக்குவது குளவிக் கூட்டில் கல்லெறிவது போன்றது. ஈரானின் ஆதரவு பெற்ற பல போராளி அமைப்புக்கள் வட அமெரிக்காவிலும் மேற்காசியாவிலும் உள்ள அமெரிக்காவின் படைத்துறை, அரசுறவியல், குடிசார் நிலைகள் மீது தாக்குதல் நடத்தலாம்.

டொனால்ட் டிரம்பைப் பொறுத்தவரை தனக்கு அடுத்ததாகப் பதவிக்கு வரவிருக்கும் ஜோன் பைடனுக்கு எப்படி சிக்கல்களை ஏற்படுத்துவதுதான் முக்கியமானதாகும்.


அவியுமா அமித் ஷாவின் பருப்பு?

 


இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், சதிஸ்கர், ஜார்கண்ட், கேரளா மஹாராஸ்ட்ரா, ஒடிசா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய முக்கிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ஆட்சி நடக்கவில்லை. இந்தியப் பொருளாதாரத்தை பாஜகவின் பிடியில் வைத்திருக்க மஹராஸ்ட்ரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதன் ஆட்சி நடக்க வேண்டும். இந்த மூன்று மாநிலங்களும் இந்தியாவில் பொருளாதார அடிப்படையில் பெரிய மாநிலங்களாகும். மக்கள் தொகை அடிப்படையில் உத்தரப் பிரதேசம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக இருக்கின்ற போதிலும் மொத்த பொருளாதார உற்பத்தி அடிப்படையில் மஹாரஸ்ட்ரா முதலாம் இடத்திலும் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உத்தரப் பிரதேசம் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. இந்தியப் பாராளமன்றத்தின் மாநிலங்களவையில் பெரும்பான்மை வலுவைப் பெற மாநில சட்ட சபைகளிலும் பாஜக வலிமை பெற்றிருக்க வேண்டும். 

தளபதி அமித் ஷா

குஜராத்தில் மூன்று தடவை பாரதிய ஜனதாக் கட்சியை ஆட்சியில் அமரச் செய்து புகழ் பெற்ற நரேந்திர மோடியின் தளபதியாக விளங்கியவர் அமித் ஷா. மோடி இந்தியாவின் தலைமை அமைச்சராகிய போது மாநில அரசியல்வாதியாக இருந்த அமித் ஷா 2014-ம் ஆண்டு பாஜகவின் தேசியத் தலைவரானார். தற்போது மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் இருக்கின்றார். இந்தியாவின் உள் துறை அமைச்சர் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு, காவல் துறை, மாநில அரசுகள், ஆட்சி மொழி ஆகியவற்றிற்கு பொறுப்பான அமைச்சாகும். மாணவப் பருவத்திலேயே மதவாத ஆர் எஸ் எஸ் அமைப்பில் இணைந்த அமித் ஷா தனது 33வது வயதில் குஜராத் சட்ட சபை உறுப்பினரானார். அதைத் தொடர்ந்து பாஜகவின் தேர்தல் கடமைகளில் முக்கிய பங்கு வகித்தார். அவரது ஆரம்ப கால அரசியல் செயற்பாடே காங்கிரசுக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களைச் சந்தித்து அவர்களை பாஜக பக்கம் இழுத்து பாஜகவின் உறுப்பினராக்குவதே. அதை குஜராத் முழுவதும் வெற்றிகரமாக செயற்படுத்தியதால் குஜராத் மாநிலத்தில் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு 2001-ம் ஆண்டு பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இன்றுவரை அமித் ஷா குஜராத்தில் காங்கிரசுக் கட்சியை தலையெடுக்க அனுமதிக்கவில்லை. தேர்தலுக்கு முன்னர் எதிர்கட்சியில் இருந்து ஆட்களை தமது கட்சிக்கு இழுப்பதில் மட்டும் அமித் ஷா வல்லவரல்லர். தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சியினரை பெரிய அளவில் கட்சி மாறச் செய்வதிலும் திறன் மிக்கவர். இதற்காக அவர் பஞ்சதத்திரத்தில் கூறப்படும் சாம, பேத, தான, தண்டம் ஆகியவற்றை பயன்படுத்துவார் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. இந்தியாவில் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் வருமான வரித்துறை, சிபிஐ என்னும் சட்ட அமூலாக்கத் துறை மற்றும் பல உளவுச் சேவைகளை தமது தேவைகளுக்காக பயன்படுத்துவார்கள் என்ற குற்றச் சாட்டும் பரவலாக உண்டு. ஒரு நடிகர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இல்லாவிடில் அவரது வீட்டில் வருமான வரி திடீர் சோதனை, அவரது திரைப்படத்திற்கான தடை போன்றவை மேற்கொள்ளப்படுவதாகவும் நம்பப்படுகின்றது.

மேற்கு வங்காளம்.

மேற்கு வங்கத்தில் 2016-ம் ஆண்டு நடந்த சட்ட சபைக்கான தேர்தலில் 294 தொகுதிகளில் பாஜகவால் மூன்று தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற முடிந்தது. ஆனால் 2019-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத்திற்கான தேர்தலில் மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற திரிணாமுல் காங்கிரசுக் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2014-ம் ஆண்டு பாராளமன்றத் தேர்தலில் பெற்ற இரண்டு தொகுதிகளில் இருந்து 18 தொகுதிகளை 2019இல் பெற்றது பெரிய முன்னேற்றம் என்றாலும் நாடாளவிய அடிப்படையில் பாஜக பெற்ற வெற்றியுடன் பார்க்கையில் அது காத்திரமான வெற்றி அல்ல. மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜீ தலைமையிலான திரிணாமூல் காங்கிரசின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வர அமித ஷா மாதம் இரண்டு தடவையும் பாஜகவின் செயற் தலைவர் ஜே பி நட்டா மாதம் மூன்று தடவையும் மேற்கு வங்கத்திற்கு பயணம் செய்வதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் சதிகள் நிறைந்த தலையீட்டின் பின்னர் மேற்கு வங்க அரசியலில் இனவாதமும் மதவாதமும் அங்கு தீவிரமடைந்து வருகின்றது. திரிணாமூல் காங்கிரசில் உள்ள இந்து மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதிகள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைகின்றார்கள். அதே வேளை சோனியாவின் காங்கிரசுக் கட்சியில் உள்ள இஸ்லாமியத் தலைவர்கள் அதில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைகின்றார்கள். இந்த இரு வகையான தாவல்களில் 2021 ஏப்ரல் மாதம் நடக்க விருக்கும் மேற்கு வங்க சட்ட சபைக்கான தேர்தல் முடிவுகள் தங்கியிருக்கின்றன.

நடந்து முடிந்த பிஹார் தேர்தல்

பிஹார் சட்ட சபைத் தேர்தலில் வீசிய பாஜக சார்பு அலை மேற்கு வங்கம் வரை பரவும் என பாஜகவினர் நம்புகின்றனர். ஆனால் பிஹாரில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெறவில்லை. பிஹாரில் அமித் ஷாவின் தந்திரம் முதற்கட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. அங்கு நிதிஸ்குமாருடன் அவருக்குத் தான் முதலமைச்சர் பதவி என்ற உறுதி மொழியை வழங்கி அவருடன் கூட்டணி அமைத்த போது பாஜக 110 தொகுதிகளிலும் நிதிஸ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக முடிவு செய்யப் பட்டது. அதே வேளை பாஜக் இன்னும் ஒரு கூட்டணியை லோக் ஜன் சக்தி கட்சியுடன் செய்து கொண்டது. அதன் படி பாஜக போட்டியிடும் இடங்களில் லோக் ஜன் சக்தி கட்சி போடியிட மாட்டாது. பாஜகவிற்கு அது ஆதரவு வழங்கும் ஆனால் நிதிஸ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து எல்லா தொகுதிகளும் பரப்புரை செய்யும். இந்த இரட்டை முக கூட்டணியால் பாஜக 74 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. உறுதி மொழி வழங்கிய படி நிதிஸ்குமார் முதலமைச்சராக்கப்பட்டார். ஆனால் இன்னும் ஓராண்டுக்குள் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஜக அங்கு ஆட்சியைக் கைப்பற்றும். பாஜகவின் இரட்டை முகக் கூட்டணி அண்ணா திமுகாவிற்கும் காங்கிரசுக் கட்சி தன் வலிமைக்கு அதிக தொகுதிகளில் போட்டியிட்டு கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது திமுகவிற்கும் சிறந்த முன்னுதாரணங்களாக அமைந்துள்ளன. 

கேரளா

கேரளாவின் சட்டசபைக்கான தேர்தல் 2021 ஜூன் மாதம் நடக்கவிருக்கின்றது. 2016-ம் ஆண்டு நடந்த கேரள சட்ட சபைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 14% வாக்குகளைப் பெற்றிருந்த போதும் 140 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் அது வெற்றி பெற்றது. 2019-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத்திற்கான தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து இருபது தொகுதிகளிலும் போட்டியிட்ட போதும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதன் பின்பு பாஜக கேரளாவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது என்றாலும் 2021 ஜூனில் நடக்கவிருக்கும் தேர்தலில் சில தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற வாய்ப்புண்டு.

தமிழ்நாடு

2021 மே மாதம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தலில் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்றாலும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பாஜக உறுதியாக நிற்கின்றது. அதற்காக பல திரையுலகப் பிரபலங்களை தமது கட்சியில் இணைக்க திட்டமிட்டுள்ளது. அண்ணா திமுகவுடன் கூட்டணி அமைப்பதும் அறுபது தொகுதிகளில் போட்டியிடுவதும் அதன் முதல் இலக்கு. பின்னர் மாற்றுக் கட்சிகளின் சட்ட மன்ற உறுப்பினர்களில் 20விழுக்காட்டுக்கு அதிகமான உறுப்பினர்களை பாஜகவிற்கு தாவச் செய்து தமதி கட்சியைப் வலிமையக்குவதும் ஆட்சியைப் பிடிப்பதும் பாஜகவின் அடுத்த இலக்கு. அதை மனதில் கொண்டு அமித் ஷா 2020 நவம்பர் 21-ம் திகதி தமிழ்நாடு சென்றுள்ளார். அண்ணா திமுக இருபது தொகுதிகளுக்கு அதிகமான தொகுதிகளை பாஜகவிற்கு கொடுக்க தயாரில்லை. அண்ணா திமுகவின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் தாம் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களுக்கு எதிராக வருமான வரித்துறை பாயாமல் இருக்க சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய தயாராக இருக்கின்றார்கள். ஆனால் அண்ணா திமுகவின் இடைநிலைத் தலைவர்களும் தொண்டர்களும் 2019-ம் ஆண்டு நடந்த பாராளமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் தாம் வெற்றி பெற்றதற்கு பாஜகவுடன் அண்ணா திமுக அமைத்த கூட்டணிதான் காரணம் என நம்புகின்றார்கள்.

அமித் ஷாவின் தமிழ்நாட்டு வியூகம்

பாஜகவின் திட்டங்களுள் முதலாவது திமுகவை தேர்தலில் வெற்றியடையாமல் செய்ய வேண்டும். இரண்டாவது அண்ணா திமுகவை அடுத்துக் கெடுக்க வேண்டும். 2021 தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அமித் ஷாவிற்கு தெரியும். திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட கருணாநிதியின் மூத்த மகனான முக அழகிரியை இரண்டாவது மகன் மு க ஸ்டானிற்கு எதிராக திருப்பவும் அமித் ஷா முயல்கின்றார். திமுகவின் தேர்தல் வெற்றிகளுக்கு காரணமாக இருக்கும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேலைகளை இல்லாமற் செய்ய வேண்டும். திமுகவில் இருந்து சிலரை கட்சி தாவச் செய்ய வேண்டும். இவற்றின் மூலம் திமுகவை வெற்றியடையாமல் தடுக்க வேண்டும். 2026-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் நடக்க விருக்கும் தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் கழகங்களில் இருந்து முக்கிய தலைவர்களைப் பிரித்து பாஜகவுடன் இணைத்தும் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டு தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவது அமித் ஷாவின் வியூகத்தில் முக்கிய இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டிற்கு நவம்பர் 21-ம் திகதி சென்ற அமித் ஷா அங்கு நடந்த அரச விழாவில் திமுகவை வாரிசுக் கட்சி எனச் சாடினார். அதற்கு பதிலடி கொடுத்த திமுக அரச செலவில் நடக்கும் அரச நிகழ்வை கட்சி அரசியல் பரப்புரைக் களமாக உள் துறை அமைச்சர் ஷா பயன்படுத்தினார் என்றது; அண்ணா திமுகவில் உள்ள வாரிசு அரசியல் அமித் ஷாவிற்கு தெரியவில்லையா என்றது; உள்நாட்டு விற்பனை வரியில் தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய நிதியை ஏன் பாஜக அரசு வழங்கவில்லை எனக் கேள்வி எழுப்பியது; பாஜகவும் அண்ணா திமுகவும் இணைந்து செய்தவை இந்தி திணிப்பு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு என தனது விவாத த்தை முன் வைத்தது. இரு தரப்பு விவாதங்களைப் பார்க்கும் போது திமுக அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அமித் ஷா தோல்வியடைந்துள்ளார். அமித் ஷாவால் பாஜகவுடனான அண்ணா திமுக கூட்டணி தொடரும் என்பதை மட்டும் உறுதியாக்க முடிந்தது. அவர்கள் கேட்ட 60 தொகுதிகளுக்கு அண்ணா திமுக உடன்படவில்லை. கடந்த முறை தமிழ்நாட்டுக்கு அமித் ஷா பயணம் செய்த போது துக்ளக் குருமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் எதையும் அவர் செய்து முடிக்கவில்லை என்ற சினம் அமித் ஷாவிற்கு இருந்ததாம். செய்திகளில் அடிப்பட்டது ரஜனிகாந்தை அமித்ஷா சந்திக்கவில்லை.

குஜராத்தில் கட்சித் தொண்டனாக இருந்து ஊர் ஊராகச் சென்று பாஜக அரசை அமைத்தது போல் தமிழ்நாட்டில் செய்ய உள்துறை அமைச்சர் அமித ஷாவிற்கு நேரமில்லை. இந்தியா முழுவதும் மட்டுமல்ல கஷ்மீர் எல்லைகளிலும் அவரது கவனம் சிதறிக் கிடக்கின்றது. அதனால் தமிழ்நாட்டை அடுத்த பத்து ஆண்டுகளில் பாஜக கைப்பற்றும் வாய்ப்பு இல்லை.

அமித் ஷாவால் நடிகர் ரஜனிகாந்தையோ கருணாநிதியின் மகன் அழகிரியையோ சந்திக்க முடியவில்லை. ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் பாஜகவில் இணைந்ததாகவும் தெரியவில்லை.  பாஜகவின் வாக்கு வங்கி சிறிதளவு அதிகரித்திருக்கலாம். ஆனால் அண்ணா திமுகவின் வாக்கு வங்கி அமித் ஷா முன் அதன் தலைவர்கள் குனிந்ததால் குறைந்திருக்கும். 

 

Sunday 15 November 2020

பங்களாதேசம் பணிகின்றதா துணிகின்றதா?

 


பங்களாதேசத்தை சூழவுள்ள புவிசார் அரசியல் போட்டி பல மாற்றங்களை கடந்த பத்து ஆண்டுகளாக கண்டு கொண்டிருப்பதுடன் அப்போட்டி தற்போது தீவிரமடைகின்றது. அந்த போட்டியில் ஈடுபட்ட நாடுகளிடையே வெளிப்படைத்தன்மை இல்லை. போட்டிக்கான காரணிகளையும் போட்டியாளர்களின் நகர்வுகளையும் சரியாக அறிந்து அதற்கு ஏற்ப தனது நிலையைத் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பங்களாதேசம் இருக்கின்றது. உலகின் மூன்றாவது பெரிய இஸ்லாமிய நாடான பங்களாதேசம் மத தீவிரவாதத்தை சமாளிக்கும் அனுபவத்தைப் பெற்றுள்ளது. இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனா தான் மட்டும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற வெளிப்படுத்தாத கொள்கையுடன் செயற்படுவது பங்களாதேசத்தையும் பாதிக்கின்றது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சீனா தனது முத்துமாலைத் திட்டத்தை தொடக்கிய போது வெளிப்படாத சீனக் கேந்திரோபாய நோக்கங்களை தற்போது உணரக் கூடியதாக இருக்கின்றது.

தங்மென மின்னத்தொடங்கியுள்ள வங்கப் பொருளாதரம்

2005-ம் ஆண்டில் இருந்து பங்களாதேசத்தின் பொருளாதாரம் காத்திரமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. பங்களாதேச மக்களில் 43.8 விழுக்காட்டினர் வறுமை கோட்டின் கீழ் இருந்தனர். 2016-ம் ஆண்டு 14.8 விழுக்காட்டாகக் குறைந்துள்ளது. மக்களின் கல்வியறிவு, ஆயுள் எதிர்பார்ப்பு, உணவு கொள்வனவு போன்றவை காத்திரமான மேம்பாட்டைக் கண்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதாரமாக பங்களாதேசமும் மிக மெதுவாக வளரும் பொருளாதரங்களாக பாக்கிஸ்த்தானும் ஆப்கானிஸ்த்தானும் இருக்கின்றன. சீனாவில் தொழிலாளர்களின் ஊதியம் அதிகரித்தமையை வாய்ப்பாக வைத்து பல உலக ஆடை அணிகலன் உற்பத்தி நிறுவனங்கள் பங்களாதேசத்தில் தமது உற்பத்திகளைச் செய்கின்றன. அரிசியும் சணலும் பங்களாதேசத்தின் பாரம்பரிய உற்பத்திப் பொருட்களாகும். ஆரம்பத்தில் பங்களாதேசப் பொருளாதாரம் சணல் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருந்தது.

பெருமை மிக்க வங்கம்

வங்க தேசம் என்பது பங்களாதேசத்தையும் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தையும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களையும் கொண்ட ஒரு நாடாக இருந்தது. 23 கோடி மக்களால் பேசப்படும் வங்காள மொழி இந்தியாவில் இந்திக்கு அடுத்த படியாக அதிக மக்கள் பேசும் மொழியாகும். ஆசியாவில் சிறந்த இலக்கியங்களை கொண்ட மொழிகளுள் வங்க மொழியும் ஒன்றாகும். இந்தியாவினதும் பங்களாதேசத்தினதும் நாட்டுப் பாடல்களை (தேசிய கீதம்) வங்கக் கவிஞர் ரவீந்திர நாத் எழுதியுள்ளார். வங்க மொழி கிழக்குப் பாக்கிஸ்த்தானின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையே பிரிவினையை வளர்த்து பங்களாதேசம் தனிநாடாக பிரிந்து செல்ல வழிவகுத்தது.13-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பால் பல வங்காளி மக்கள் காளியம்மனை முழுமுதற் கடவுளாக வழிபடும் மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டனர். அதனால் தற்போது பங்களாதேசம் இருக்கும் பிரதேசம் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகவும் தற்போதைய மேற்கு வங்கம் இந்துக்களைப் பெரும்பான்மையாக கொண்ட பிரதேசமாகவும் உருவாகின. இதனால் பாக்கிஸ்த்தான் இந்தியாவில் இருந்து பிரியும் போது மேற்கு வங்கம் இந்தியாவுடனும் தற்போதைய பங்களாதேசம் பாக்கிஸ்த்தானுடனும் இணைக்கப்பட்டன.



இந்தியாவும் பங்களாதேசமும்

பங்களாதேசம் இந்தியாவுடன் 54 நதிகளை பகிர்ந்து கொள்கின்றது. இந்தியாவில் இருந்து பங்களாதேசத்திற்கு செல்லும் கங்கை, பிரம்மபுத்திரா, ஆகிய நதிகள் பங்களாதேசத்தின் 1.72மில்லியன் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்புடை நீர்ப்பிடி பிரதேசத்திற்கு நீர் வழங்குகின்றது. பங்களாதேசத்தின் உணவு உற்பத்தி பிரம்மபுத்திரா, கங்கை நதிகளின் வடிநிலத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது. இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் நீர்ப்பங்கீடு, எல்லை போன்றவை தொடர்பான பல முரண்பாடுகள் உள்ளன. இந்தியாவுடன் உறவை சீர் செய்ய பல இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிராக பங்களாதேசம் பல நடவடிக்கைக்களை மேற்கொண்டது. மேற்கு வங்கத்தில் இருக்கும் இந்து வங்காளிகளுக்கும் பங்களாதேசத்தில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு உண்டு. வங்காளிகள் மதத்திலும் பார்க்க இன மற்றும் மொழி உணர்வுகளால் அதிகம் பிணைக்கப் பட்டுள்ளார்கள். பங்களாதேசப் பிரிவினைக்கு முன்னர் கிழக்கு பாக்கிஸ்த்தானில் உள்ள வங்காளிகளுக்கு அட்டூழியம் நடந்த போது மேற்கு வங்காளத்தில் உள்ள வங்காளிகள் கிளர்ந்து எழுந்தனர். பங்களாதேசமும் இந்தியாவும் 4000கிலோ மீட்டர் நீளமான எல்லையைக் கொண்டுள்ளன. இது உலகின் ஐந்தாவது நீளமான எல்லையாகும். மியர்மார், வங்கக்கடல் தவிர பங்களாதேசத்தின் மூன்று திசைகளில் இந்திய எல்லைகள் இருக்கின்றன. இந்தியாவின் அசாம், திரிபுரா, மிசொரம், மெகாலாயா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பங்களாதேசத்துடன் எல்லைகளைக் கொண்டுள்ளன. சீனாவின் வடகிழக்கு மாநிலங்கள் ஏழையும் இந்தியாவின் முதன்மை நிலப்பரப்பையும் இணைக்கும் சில்குரி இணைப்புப் பாதை மிகவும் சிறியது என்றபடியால் அது கோழிக்கழுத்து என அழைக்கப்படுகின்றது. இதை சீனா கைப்பற்றினால் அசாம், திரிபுரா, மிசொரம், மெகாலாயா, நாகலாந்து, மணிப்புரி ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் இருந்து துண்டிக்கப்படும். அப்படி ஒன்று நடக்கும் போது இந்திய பங்களா தேசத்தின் ஊடாகவே தனது விநியோகங்களை அந்த ஏழு மாநிலங்களுக்கும் செய்ய முடியும். அந்த மாநிலங்களை சீனா முழுமையாக கைப்பற்றாமல் இருக்க பங்களாதேசத்தின் உதவி இந்தியாவிற்கு அவசியமாகும்.

பங்களாதேசத்தின் பொருளாதாரம்

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பங்களாதேசத்தில் இருந்து தமது நாடுகளுக்கு இறக்குமதி செய்யும் பல பொருள்களுக்கு வரிச்சலுகை வழங்கியுள்ளன. அதற்கு போட்டியாக் சீனாவும் பங்களாதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பலவற்றிற்கு இறக்குமதி வரிச்சலுகை வழங்கியுள்ளது. அமெரிக்காவிற்கு பங்களாதேசம் ஆறு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியுள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. பங்களாதேசம் சீனாவில் இருந்து 14பில்லியன் டொலர்கள் பெறுமதியான இறக்குமதியை செய்கின்ற வேளையில் அமெரிக்காவில் இருந்து ஒரு பில்லியன் டொலருக்கும் குறைவான இறக்குமதியையே செய்கின்றது. பங்களாதேசம் அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடாக அமெரிக்காவும் அதிக அளவு இறக்குமதி செய்யும் நாடாக சீனாவும் இருக்கின்றது. சீனாவிற்கு செய்யும் ஏற்றுமதியிலும் பார்க்க பல மடங்கு ஏற்றுமதியை பங்களாதேசம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செய்கின்றது. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதி பங்களாதேசத்தின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் இருக்கின்றது. பங்களாதேசத்தில் முதலீடு செய்யும் நாடுகளில் தென் கொரியா, சீனா, இந்தியா, எகிப்த்து, பிரித்தானியா ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. பக்களாதேசம் விடுதலை பெற்றதில் இருந்து சீனா மூன்று பில்லியன் நிதி உதவியை அதற்கு வழங்கியுள்ளது.



பங்களாதேசமும் சீனாவும்

1971-ம் ஆண்டு சீனா ஒரு வல்லரசு நாடாக ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தவுடன் பாதுகாப்புச்சபையில் செய்த முதல் இரத்து (வீட்டோ) அதிகாரம் பங்களாதேச விடுதலைக்கு எதிரானதாகவே இருந்தது. பின்னர் பங்களாதேசம் ஐநா சபையில் உறுப்புரிமை பெறுவதை சீனா தனது இரத்து அதிகாரத்தின் மூலம் தடை செய்தது. சுதந்திரமடைந்த பங்களாதேசம் சீனாவின் எதிரிகளான இந்தியாவுடனும் இரசியாவுடனும் நெருங்கிய உறவை ஏற்படுத்தியது. 1976இல் சீனா பங்களாதேசத்தை ஒரு நாடாக அங்கீகரித்தது. 1980களின் நடுப்பகுதியில் சீனா பல படைக்கலன்களை பங்களாதேசத்திற்கு வழங்கியது. 1986-ம் ஆண்டு பங்களாதேசமும் சீனாவும் தங்களுக்கு இடையிலான உறவை கேந்திரோபாய பங்காண்மையாக மாற்றிக் கொண்டன. 2008-ம் ஆண்டிற்கு முன்னர் பங்களாதேசத்திற்கு வழங்கிய கடன்களை சீனா இரத்து செய்தது. சீனாவிடமிருந்து பெற்ற கடன்கள் மூலம் பங்களாதேசம் தனது உட்கட்டுமான அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது. சீனாவின் முத்து மாலைத் திட்டத்தில் பங்களாதேசத்தின் சிட்டகொங் துறைமுகமும் சீனாவால் அபிவிருத்தி செய்யப்பட்டதுடன் அங்கிருந்து சீனாவிற்கு மியன்மாரூடாக ஒரு நெடுஞ்சாலையும் நிர்மாணித்தது.

சீன-மியன்மார்-பங்காள-இந்திய பொருளாதாரப் பாதை

சீனா, மியன்மார், பங்களாதேசம், இந்தியாவை உள்ளடக்கிய பொருளாதாரப் பாதை ஒன்று இது சீனாவின் பட்டி – பாதை முன்னெடுப்பு என்னும் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் ஒன்றாக இல்லாமல் தனியாக திட்டமிடப்படுகின்றது. சீனாவின் புதிய பட்டுப்ப்பாதை திட்டத்தை இந்தியா புறக்கணிப்பதால் இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. நாடுகளுக்கு இடையிலான அரசுறவு நீயா நானா போட்டியாகவோ அல்லது உனக்கு அவன் வேண்டுமா என்பதாகவோ பார்க்கப்படுவதில்லை. தேவை ஏற்படின் நாம் எதிரிகள் என நினைப்பவர்கள் தங்களுக்குள் ஒத்துழத்துக் கொள்வாரகள்.

சீனாவிற்கு பங்களாதேசம் அச்சப்பட தேவையில்லை

பங்களாதேசம் உருவாகும் போது கடுமையாக எதிர்த்த அமெரிக்காவிலும் சீனாவிலும் பங்களாதேசம் தங்கி இருக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று. பங்களாதேசம் உருவாக ஒத்துழைத்த இந்தியாவுடன் மட்டும் தான் அது உறவை வைத்திருக்க வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நிலையில் சீனா அபிவிருத்தி செய்யவிருந்த பங்களாதேசத்தின் மதர்பாரி துறைமுகத்தின் அபிவிருத்தி ஜப்பானிடம் வழங்கப்பட்டமை பங்களாதேசம் வெளி அழுத்தங்களுக்கு பணிந்து செய்ததாக கருதப்படுகின்றது. சீனாவிடமிருந்து இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் போல் பங்களாதேசம் கரிசனைக்குரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை. சீனாவின் தென் சீனக் கடலைத் தவிர உலகின் மற்றப் பகுதிகளில் எல்லாம் சீனா செய்யும் நகர்வுகள் புவிசார் பொருளாதார நகர்வுகளாகவே இருக்கின்றன. சீனாவின் உலக நகர்வுகளின் படைத்துறை விரிவாக்கம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் சீனா தனது கடற்போக்கு வரத்துக்கு ஏற்படவிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பாக அதிக கரிசனை கொண்டு பல நகர்வுகளைச் செய்து வருகின்றது. தனது கடல் மற்றும் தரைப்பிராந்தியத்தில் தனக்கு ஒரு சிறந்த கவசம் இருக்க வேண்டும் எனக்கருதுகின்றது.

பங்களாதேசம் குவாட் கூட்டமைப்பிற்கு பணியத் தேவையில்லை.

பங்களாதேசம் தனது நாட்டில் சீனாவின் படைத்தளம் அமைக்க அனுமதிக்காதவரை சீனாவின் போட்டி நாடுகளுக்கு அது அஞ்சத் தேவையில்லை. அதையே இலங்கையும் செய்கின்றது. இலங்கை சீனாவிற்கு விட்டுக் கொடுப்பதிலும் பார்க்க குறைந்த அளவு விட்டுக் கொடுப்பையே பங்களாதேசம் செய்கின்றது. ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா, அமெரிக்கா, தென் கொரியா, வியட்னாம் ஆகிய நாடுகளைக் கொண்ட ஒரு படைத்துறைக் கூட்டமைப்பில் இணைய வேண்டிய அவசியம் பங்களாதேசத்திற்கு இல்லை. அமெரிக்கா, ஆனால் இந்த நாடுகள் பங்களாதேசத்தை சீனா பக்கம் சாராமல் இருக்கச் செய்யும் நகர்வுகளுக்கு பங்களாதேசம் இணங்கிச் செயற்படுவது பணிவு அல்ல. போரில் ஈடுபடும் என அஞ்சப்படும் இரண்டு நாடுகளின் கூட்டமைப்பில் ஒன்றில் இணைவது துணிகரமான செயலாகும்.

பின்லாந்து, சுவீடன், சுவிஸ் போன்ற நாடுகள் நான்கு வல்லரசுகளின் போட்டிகளுக்கு இடையில் பக்கம் சாரா நிலையை பேணுவது போல் பங்களாதேசத்தாலும் பேண முடியும்.

Monday 9 November 2020

பாரதிய ஜனதா கட்சியும் நூறு பிரபலங்களும்

 


தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்பதில் இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி (பாஜக) அதிக முனைப்புடன் காய்களை நகர்த்துகின்றது. பாஜக அண்ணா திமுகவுடன் அல்லது திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மட்டுமே 2021-ம் ஆண்டின் முற்பகுதியில் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கான தேர்தலில் சில தொகுதிகளிலாவது வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. பாஜக தனக்கு அதிக வாக்கு வங்கி தற்போது உள்ளது என்பதை மற்றக் கட்சிகளுக்கு உணர்த்த தமிழ்நாட்டில் குறைந்தது நூறு பிரபலங்களையாவது தனது கட்சியில் இணைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது. நூறு பிரபலங்களை இணைத்தால் அவர்கள் மூலம் தேர்தல் தொகுதி ஒன்றிற்கு ஒரு பிரபலத்திற்கு 250வாக்குகள் பெற முடியும் என்றால் மொத்தம் 25,000 வாக்குகளை பாஜகவால் பெறமுடியும் என்ற நிலை ஏற்படுத்தலாம். தொகுதி ஒன்றிற்கு 25,000 என்றால் அது பல தொகுதிகளில் வெற்றி தோல்விகளை முடிவு செய்யும் வலிமையை பாஜகவிற்கு கொடுக்கும். அதனால் பாஜகவை தம்முடன் இணைந்து தேர்தலில் போட்டியிட இரண்டு கழகங்களும் முன்வரும் என்பது பாஜகவின் திட்டம்.

கழகங்கள் கை கோர்க்கும்

அண்ணா திரவிட முன்னேற்றக் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தேவை ஏற்படும் போது மறைமுகமாக இணைந்து செயற்படுவதை வழமையாகக் கொண்டுள்ளன. இரண்டு கழகங்களும் பாஜகவைக் கழற்றி விடுவதில் ஒன்றுபட்டு குறைந்த தொகுதிகள் மட்டும் தருவோம் எனச் சொன்னால் பாஜக தனித்தோ அல்லது மருத்துவர் ரமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, விஜயகாந்தின் தேதிமுக போன்றவற்றுடன் இணைந்து மூன்றாம் அணி ஒன்றை அமைத்து போட்டியிடலாம். கடந்த காலங்களில் மூன்றாம் அணி என ஒன்று போட்டியிடும் போது திமுக பின்னடைவைச் சந்திப்பதுண்டு. ஆனால் அந்த மூன்றாம் அணியில் பொதுவுடமைவாதக் கட்சிகள் இருக்கும். பாஜக அணியில் அவை இணைய வாய்ப்பில்லாத படியால் பாஜக தலைமையிலான மூன்றாம் அணி அண்ணா திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். இரண்டு கழகங்களும் பாஜகவிற்கு சொற்ப தொகுதிகளை மட்டுமே தர முடியும் என அடித்துச் சொல்லக் கூடாது என்பதற்காகவே பாஜக தனது கட்சியில் நூறு பிரபலங்களை இணைக்க முடிவு செய்துள்ளது.

பாரதிராஜாவின் கட்சியானது

கர்நாடக மாநிலத்தில் காவற் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி புகழ் பெற்ற அண்ணாமலை என்பவர் 2020 ஓகஸ்ட் மாத இறுதியில் பாஜகவில் இணைத்துள்ளார். சிறந்த மேடைப்பேச்சும் ஊடகர்களை எதிர் கொள்ளும் திறனும் கொண்ட இவரிடம் நூறு பிரபலங்களை பாஜகவில் இணைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தமிழ்நாடு மாநிலத்திற்கான துணைத்தலைவராகவும் அவர் இணைக்கப் பட்டுள்ளார். கட்சிக்குள் புதிதாக வந்த ஒருவருக்கு முக்கிய பொறுப்புக்களை வழங்கியம பழைய முகங்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழரல்லாதவராகக் கருதப்படும் இவர் ஒரு கட்டத்தில் பாரத ஜனதா கட்சியை பாரதிராஜாவின் கட்சி எனவும் குறிப்பிட்டிருந்தார். பாஜகவில் இணைந்த முதலாவது பிரபலமாக நடிகை குஷ்புவைப் பார்க்கலாம். தமிழரல்லாத இவர் தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்டவர் என்றாலும் அவரால் எத்தனை வாக்காளரைப் பெற முடியும் என்பது கேள்விக்குறியே. அவர் திமுகவில் இருந்து காங்கிரசுக்கு தாவிய போது காங்கிரசுக் கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கவில்லை.

மிரட்டல் முறை

அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ஒரு கட்சியின் கொள்கைகளால் கவரப்பட்டு அந்தக் கட்சியில் பிரபலங்கள் இணைவது ஒரு வகை. அதிகாரத்தில் உள்ள கட்சி பிரபலங்களை வருமானவரித்துறை, உளவுத்துறை, காவற்றுறை போன்றவற்றால் மிரட்டி தம்முடன் பிரபலங்களை இணைப்பது இன்னொரு வகை. அதிலும் திரைப்படத் துறையை சேர்ந்தவர்களின் திரைப்படங்கள் வெளியில் வராமல் பல் வேறு வழிகளில் தடை போட்டு மிரட்டி கட்சியில் இணைய வைக்கவும் முடியும்.


வந்தது வந்தாய் சிறுநீரக நோயுடன் வந்தாய்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அதிகம் கவனிக்கும் பிரபலம் நடிகர் ரஜனிகாந்த். அவரை தமிழ்நாட்டில் ஆட்சியை முதலில் கைப்பற்ற வைத்து பின்னர் பார்ப்பனப் பெண்ணான அவரின் மனைவியை ஆட்சியில் அமர்த்த சிலர் முயற்ச்சி செய்கின்றார்கள் எனவும் சிலர் கருதினர். அரசியலுக்கு வருவேன் வருவேன் கட்சி தொடங்குவேன் என அடிக்கடி சொல்லி வந்த ரஜனிகாந்த் தன் வயது ஓடிக்கொண்டிருப்பதையோ அத்துடன் தன் உடல் நலம் தேய்ந்து கொண்டிருப்பதையோ கருத்தில் கொள்ளவில்லை. 2021இல் தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம் என இருந்த அவருக்கு அவரது சிகிச்சை செய்யப் பட்ட சிறுநீரகமும் நாட்டில் பரவியுள்ள கொவிட்-19 தொற்று நோயும் அரசியில் ஈடுபட முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டது. ரஜனிகாந்த் ஒன்று பாஜகவிற்கு ஆதரவு அறிக்கையாவது விட வேண்டும் இரண்டு திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று வாக்காளர்களுக்கு கோரிக்கை விட வேண்டும் என பாஜக எதிர்பார்க்கின்றது. பொதுவாக சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுக்க தயக்கம் காட்டும் ரஜனிகாந்த் இங்கும் தயக்கத்தை காட்டுகின்றார். திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு தன்னை அது எப்படி பழிவாங்கும் என அவர் கரிசனை கொண்டுள்ளார். கமலஹாசனின் மக்கள் மய்யம் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டால் அதற்கு இருக்கும் செல்வாக்கையும் இழக்க நேரிடலாம். மக்கள் மய்யத்தின் வளர்ச்சி மற்றக் கட்சிகளிலும் பார்க்க திமுகவிற்கு அதிக வாக்கு இழப்பை ஏற்படுத்தலாம்.



திரையுலகப் பிரபலங்கள்.

விஜய், அஜித் ஆகிய திரையுலகப் பிரபலங்களில் அஜித் எப்போதும் ஒதுங்கி இருக்கவே விரும்புபவர். விஜய் அரசியிலுக்கு செல்லும் நோக்கத்துடன் தான் அவரது திரைப்பட பாத்திரங்களும் அவை பேசும் வசனங்களும் கடந்த சில ஆண்டுகளாக அமைந்திருக்கின்றன. ஆனால் அவர் கட்டியெழுப்பும் விம்பமும் பாஜகவின் கொள்கையும் ஒத்து போகதவையாக உள்ளன. அவரது வீட்டில் திடீர் வருமான வரிச் சோதனை நடந்தது. அவர் பாஜகவில் இணைய மாட்டார். அவரது தந்தையார் எஸ் ஏ சந்திரசேகர் விஜய் பேரில் தொடக்கிய கட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை என விஜய் அறிவித்துள்ளார். ஏதோ ஒரு வெளி மிரட்டலுக்கு அடிபணிந்துதான் சந்திரசேகர் கட்சி ஆரம்பித்திருக்கலாம். அடுத்த திரைப்படப் பிரபலம் சூர்யா. ஏற்கனவே சூர்யாவிற்கும் அவர் மனைவி ஜோதிகாவிற்கும் தந்தை சிவக்குமாருக்கும் பல கசப்பான மோதல்கள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது. அவரும் பாஜகவில் இணைய மாட்டார். அடுத்த தமிழ்த் திரைப்பட பிரபலமான தனுஷ் இன்னும் பல வெற்றிப்படங்களை தொடர்ந்து தரும் வாய்ப்புள்ளதால் அந்த வாய்ப்பை சர்ச்சைக்குரிய பாஜகவில் இணைந்து கெடுக்க மாட்டார். அடுத்து தெலுங்கரான விஷால் பாஜகவில் இணைவதற்கான கொடுப்பனவு பேச்சு வார்த்தை செய்து கொண்டிருக்கின்றார். ராதிகாவும் அவர் கணவர் சரத்குமாரும் பாஜகவில் இணைவதற்கான பேச்சு வார்த்தையை செய்து கொண்டிருக்கின்றார்கள். ராதிகாவின் நாடகத் தயாரிப்புக்களுக்கு அங்கிருந்து பெரிதாக ஏதும் கிடைக்காது. சரத்குமார் தனது அரசியல் கட்சியை பாஜவுடன் இணைப்பதற்கு பிரதி உபகாரமாக அகில இந்தியப் பதவி ஒன்று பாஜகவில் தனக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜேந்தர், பார்த்திபன், பாக்கியராஜா ஆகியோரையும் பாஜக அணுகியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக நடிகர் வடிவேலுவை பாஜகவில் இணைக்க தீவிர முயற்ச்சி நடக்கின்றது. அவர் அரசியலை வெறுப்பவர். அவர் மிரட்டலுக்கு பயந்து ஒரு கட்சிக்காக பரப்புரை செய்ததால் அவர் இழந்த திரைப்பட வாய்ப்பை இன்னும் ஈடு செய்ய அவரால் முடியாமல் இருக்கின்றார்.

வேல் எடுத்து விளையாடும் பாஜக

பாஜகவினர் தமது கட்சியில் இணைக்கத் துடிக்கும் இன்னொரு பிரபலம் முருகன். பாஜக கந்த சட்டிக் கவசத்தை கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பை இகழ்ந்ததை அரசியலாக்கி தனது செல்வாக்கை தமிழ்நட்டில் அதிகரிக்க முயல்கின்றது. தமிழ்நாட்டில் முருகனைப் பாதுகாக்க வேலுடன் ஆறுபடை வீட்டிற்கும் பாதயாத்திரை செய்வோம் என சூளுரைத்தனர். திடீரென்று பாஜகவினர் வேல் மீதும் முருகன் மீதும் அதிக அக்கறை காட்டுகின்றனர். வேலுடன் செல்ல ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்க அண்ணா திமுக அரசு அனுமதி மறுத்தது. அதன் மூலம் பாஜகவின் சொல்படி ஆடுகின்றது அண்ணா திமுக என்ற குற்றச் சாட்டை பொய்ப்பிக்க அண்ணா திமுக முயல்கின்றது. இரு கட்சிகளும் சேர்ந்து ஆடுகின்ற ஒரு நாடகமாகவும் இது இருக்கலாம். ராமர் ரத யாத்திரை பாஜகாவிற்கு வட மாநிலங்களில் கை கொடுத்து தூக்கி விட்டது போல தமிழ்நாட்டில் வேல் யாத்திரை கை கொடுக்கும் என பாஜக போட்ட திட்டம் நிறைவேறவில்லை.

 

தேர்தலுக்கு முன் வாக்காளர்களை வாங்கி வெற்றி பெறுவது கழகங்களின் பாணி என்றால் தேர்தலின் பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை வாங்குவது அமித் ஷாவின் பாணி.

Monday 2 November 2020

அமெரிக்கத் தேர்தல் களம்

 


நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் நான்கால் பிரிபடக் கூடிய ஆண்டின் நவம்பர் மாதத்தின் முதலாம் திகதிக்குப் பின்வரும் செவ்வாய்க் கிழமையில் அமெரிக்க அதிபருக்கும் துணை அதிபருக்குமான தேர்தல் நடைபெறும். 2016-ம் ஆண்டு நான்கால் பிரிபடக் கூடியது. அதன் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக் கிழமையாதலினால் மூன்றாம் திகதி வரும் செவ்வாய்க் கிழமையில் (03-11-2016) அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கின்றது. இலங்கையைப் போல அமெரிக்க அதிபர் நேரடி வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்வதில்லை. ஒவ்வொரு அமெரிக்க மாநிலத்திற்கும் என ஒதுக்கப்பட்ட தேர்தல் குழுக்கள் (Electoral College) அதிபரைத் தேர்ந்தெடுக்கின்றன.

தேர்தல் குழுக்கள் (Electoral College)

அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் இரண்டு என நூறு உறுப்பினர்களை அமெரிக்காவின் பாராளமன்றத்தின் மூதவைக்கு மக்கள் நேரடி வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்கின்றனர். ஐம்பது மாநிலங்களில் இருந்தும் அவற்றின் மக்கள் தொகைகு ஏற்ப அமெரிக்க பாராளமன்றத்தின் மக்களவைக்கு 435 உறுப்பினர்களை நேரடி வாக்களிப்பின் மூலம் மக்கள் தெரிவு செய்கின்றனர். மூதவையின் நூற்றையும் மக்களவையின் 435ஐயும் பாராளமன்ற உறுப்பினர் இல்லாத வாஷிங்டனுக்கு மூன்று தேர்தல் குழுக்கள் எனவும் கூட்டி மொத்தம் 538 தேர்தல் குழுக்கள் (Electoral College) அமெரிக்காவில் உள்ளன. உதாரணத்திற்கு கலிபோர்ணியா மாநிலத்தை எடுத்துக் கொண்டால் அது மக்களவைக்கு 53 உறுப்பினர்களையும் மூதவைக்கு இரண்டு உறுப்பினர்களையும் தெரிவு செய்கின்றது. அதனால் அங்குள்ள மொத்த தேர்தல் குழுக்கள் 55ஆகும். ஒருவர் அதிபராகத் தெரிவு செய்யப்படுவதற்கு இந்த குழுக்களில் உள்ளவர்களின் 270பேரின் வாக்குகள் தேவை. கலிபோர்ணியா மாநிலத்தின் மொத்த 55 தேர்தல் குழுக்களில் 28ஐ ஒரு அதிபர் வேட்பாளரும் மற்ற வேட்பாளர் 27ஐயும் பெற்றால் அந்த மாநிலத்தின் மொத்த 55 வாக்குகளும் அதிகப்படியான 28 தேர்தல் குழுக்கள் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு உரியதாக்கப்படும். இதை “வெற்றி பெற்றவர் எல்லாவற்றையும் அள்ளிக் கொள்ளுவார்” என்பர். Maine, Nebraska ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் “வெற்றி பெற்றவர் எல்லாவற்றையும் அள்ளிக் கொள்ளுவார்” என்ற முறைமை இல்லை. தேர்தல் குழுக்கள் மூலமான தேர்வு முறையால் இரண்டு கட்சிகள் மட்டும் ஆதிக்கல் செலுத்துவது இலகுவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களுக்கு இரண்டு முதலாளித்துவக் கட்சிகளைத் தவிர வேறு தெரிவு இல்லை.

அமெரிக்க பாராளமன்றத் தேர்தலும் நடக்கின்றது.

2020 நவம்பர் 3-ம் திகதி அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையின் 435 தொகுதிகளுக்குமான தேர்தலும் நடைபெறுகின்றது. மக்களவைக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தற்போது ஜோ பிடனின் மக்களாட்சிக் கட்சி மக்களவையில் அதிக பெரும்பான்மையுடன் இருக்கின்றது. ஆனால் மூதவையில் டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும்பான்மையுடன் இருக்கின்றது. ஒரு மூதவை உறுப்பினரின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள். ஆனால் மொத்த மூதவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை சுழற்ச்சி முறையில் நடைபெறும். 2020 நவம்பர் 03-ம் திகதி 35 மூதவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடை பெறுகின்றது. இதில் மக்களாட்சிக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி மூதவையிலும் அது பெரும்பான்மையுடன் இருக்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது. ஒரு அதிபர் சிறப்பாக செயற்பட மக்களவையிலும் மூதவையிலும் அவருக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

கேள்விக் குறியான மக்களாட்சி

கலிபோர்ணியா மாநிலம் அமெரிக்காவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமாகும். அங்கு 718,000 மக்களுக்கு ஒரு தேர்தல் குழு என வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால் வையோமிங் (Wyoming) மாநிலத்தில் 193,000 மக்களுக்கு ஒரு தேர்தல் குழு எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த வேறுபாட்டால் அமெரிக்க தேர்தல் முறைமை மக்களாட்சி முறைமைக்கு விரோதமானது எனப்படுகின்றது. 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஹிலரி கிளிண்டனுக்கு டொனால்ட் டிரம்பிலும் பார்க்க அதிக மக்கள் வாக்களித்திருந்த போதிலும் தேர்தல் குழு முறையினால தேர்தலால் டிரம்ப் வெற்றி பெற்றார். பெரிய ஒரு சில மாநிலங்கள் மற்ற மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க இந்த தேர்தல் குழு முறைமை உதவி செய்கின்றது என அதை விரும்புபவர்கள் சொல்கின்றனர். மொத்த ஐம்பது மாநிலங்களில் California, New York, Texas, Florida, Pennsylvania, Ohio, Illinois, Michigan, New Jersey, North Carolina, Virginia ஆகிய பதினொரு மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று ஒரு வேட்பாளரால் அதிபராக முடியும். 1787-ம் அமெரிக்க அரசியல் யாப்பு வரையும் போது குடியரசுத் தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதா அல்லது பாராளமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதா என்ற இருதரப்பு விவாதங்களின் உடன்பாடுதான் தேர்வுக் குழு முறைமை.

இரு கட்சிகளைத் தவிர வேறு தேர்வில்லை.

அமெரிக்கத் தேர்தல்களில் குடியரசுக் கட்சி மக்களாட்சிக் கட்சி என இரண்டு பெரிய கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த இரண்டு கட்சிகளும் தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் அதிக பணம் செலவழிக்கப்படும். இம்முறை குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் மக்களாட்சிக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றார்கள். ஒவ்வொரு வேட்பாளர்களும் நிச்சயம் வெற்றி பெறக் கூடிய மாநிலங்கள், வெற்றி வாய்ப்புள்ள மாநிலங்கள் என உள்ளன. அத்துடன் கடும் போட்டி நிலவும் மாநிலங்களும் உள்ளன. 2020 ஒக்டோபர் 29-ம் திகதிய நிலவரப்படி மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் கலிபோர்ணியா, நியூ யோர்க், இலியான, நியூ ஜேர்சி, போன்ற பெரிய மாநிலங்கள் உட்பட பத்தொன்பது மாநிலங்களில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நிலை உள்ளதாக கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் அவருக்கு 207 தேர்தல் குழு வாக்குகள் கிடைக்கும். மேலும் ஏழு மாநிலங்களில் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளன. அவற்றில் இருந்து ஜோ பிடனுக்கு 72 தேர்தல் குழு வாக்குகள் கிடைக்கலாம். இரண்டிலும் மொத்தமாக அவருக்கு 279 தேர்தல் குழு வாக்குகள் கிடைக்கலாம் என்பதால் அவர் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்படுகின்றது. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 17 மாநிலங்களில் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவற்றில் இருந்து 83 தேர்தல் வாக்குகளைப் பெறுவார். டிரம்ப் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ள ஆறு மாநிலங்களில் இருந்து 42 தேர்தல் குழு வாக்குகளை டிரம்ப் பெறலாம். அதனால் டிரம்ப் 125 தேர்தல் குழு வாக்குகளைப் பெறலாம். கடும் போட்டி நிகலும் எட்டு மாநிலங்கள் எல்லாவற்றிலும் டிரம்ப் வெற்றி பெற்றாலும் அவரால் தேவையான 270 வாக்குகளைப் பெற முடியாது. நடளாவிய கருத்துக் கணிப்பில் ஜோ பிடனுக்கு ஆதரவாக 51.4% மக்களும், டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக 42.8% மக்களும் உள்ளனர். இவை யாவும் 2020 ஒக்டோபர் 29-ம் திகதி நிலவரங்கள். இறுதி நேரத்தில் செய்யப்படும் பரப்புரைகள் மற்றும் ஒரு வேட்பாளரைப் பற்றிய அந்தரங்க தகவல்களை அம்ப்லமாக்குதல் போன்றவை நிலைமையை மாற்றலாம்.

ஒதுக்கப்பட்ட உலகம்

வழமையாக தேர்தல் பரப்புரைக் கூட்டங்களிலும் நேரடி தொலைக் காட்சி விவாதங்களிலும் உலக அமைதி, உலக ஒழுங்கு போன்றவை காத்திரமான பங்கு வகிக்கும். இந்த முறை அவை பெரிதாக அடிபடவில்லை. துணை அதிபர்கள் பதவிக்குப் போட்டியிடும் மைக் பென்ஸுக்கும் கமலா ஹரிஸுக்கும் இடையில் நடந்த விவாதத்தில் உலக வெப்பமயமாதல் மற்றும் சூழல் பாதுகாப்பு போன்றவை விவாதிக்கப்பட்டன. சிரியாவில் நடந்த பேரழிவு, பத்தொன்பது ஆண்டுகளுக்கு மேல் தொடரும் ஆப்காலிஸ்த்தான் போர், மனித உரிமை மீறல் போன்றவற்றைப் பற்றிய விவாதமே நடக்கவில்லை எனச் சொல்லலாம். கொவிட்-19 தொற்று நோயை டிரம்ப் கையாண்ட விதம் அவருக்கு பெரும் பாதகமாக அமைந்துள்ளது. கடும் போட்டி நிலவும் மாநிலங்களில் ஒன்றான புளோரிடா மாநிலத்தில் டிரம்பிற்கு எதிரான பரப்புரையில் நாவன்மை மிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஈடுபட்டுள்ளார்.

தபால் மூலம் அளிக்கப் படும் வாக்குகளில் குளறுபடிகள் நடந்தன என்ற குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து டிரம்ப் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாமல் பதவியில் தான் தொடருவேன் என அடம் பிடிப்பார் எனவும் அஞ்சப்படுகின்றது. அதனால் நாட்டில் பெரும் கலவரம் உருவாகலாம் எனவுக் எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க பாதுகாப்புத் துறை அதற்கு தயாரான நிலையில் உள்ளது. 2020 நவம்பர் 3-ம் திகதி நடக்கும் அமெரிக்க தேர்தல் முடிவுகள் உலக அமைதிக்கோ அல்லது செழுமைக்கோ உதவாது.

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...