Followers

Thursday 29 April 2021

சீனாவிடமிருந்து இந்தியாவை அமெரிக்கா பாதுகாக்குமா?

 


பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது அமெரிக்க இந்திய உறவை மேம்படுத்துவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. சீனா பொருளாதாரம், படைத்துறை, தொழில்நுட்பம் ஆகியவற்றில் அசுர வேகத்தில் முன்னேறியதும் சீன விரிவாக்கத்திற்கு சீனா தயாராகின்றது என்ற நிலையுமே அமெரிக்க இந்திய உறவிற்கு வித்திட்டது. பராக் ஒபாமாவின் ஆசியச் சுழற்றி மையம் கொள்கையில் இந்தியாவிற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. தனது நாட்டிலோ அல்லது அயல்நாடுகளிலோ வல்லரசு நாடுகளின் படையினர் இருக்கக் கூடாது என்ற கொள்கையை நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்த இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement (LEMOA) என்ற ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொண்டது. அதன் படி அமெரிக்கப் படையினர் இந்தியாவில் உள்ள படைத்தளங்களை தேவை ஏற்படும் போது பாவிக்கலாம். இந்தியா ஒரு வல்லரசு நாடாக இல்லாத போதிலும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கும் போட்டியில் படைத்துறைச் சமநிலையை தீர்மானிக்கும் நாடாக இருக்கின்றது. அமெரிக்கா சீனாவிற்கு எதிராக அமெரிகாவுடன் பெருமளவில் படைத்துறை ஒத்துழைப்பை மேற்கொண்டால் ஆசிய பசுபிக் படைத்துறைச் சமநிலை சீனாவிற்கு பெரும் பாதகமாக அமையும். அமெரிக்காவின் உடனடி தேவை சீனா தைவான் தீவைக் கைப்பற்றுவதை தடுப்பதாகும்.

நேட்டோவின் பங்காண்மை நாடாக இந்தியா

2021 ஜூன் 14-ம் திகதி நடக்கவிருக்கும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியாவை நேட்டோவின் பங்காளியாக்க வேண்டும் என்ற ஆலோசனை ஒரு நிபுணர் குழுவால் முன்வைக்கப்படவுள்ளது. அக்குழுவின் இணைத்தலைவரான அமெரிக்காவின் முன்னாள் துணை வெளியுறவுத் துறைச் செயலர் வெஸ் மிசேல் இந்துஸ்த்தான் ரைம்ஸ் பத்திரிகையில் இந்திய – நேட்டோ ஒத்துழைப்பைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அது நேட்டோ இந்தியாவை பங்காளியாக இணையும் அழைப்பை விடுக்க வேண்டும், அதை தன் தயக்கத்தை எறிந்துவிட்டு இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற வாசகத்துடன் அவர் தனது கட்டுரையை ஆரம்பித்துள்ளார். நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிற்கு ஆப்கானிஸ்த்தான், ஒஸ்ரேலியா, ஈராக், பாக்கிஸ்த்தான், கொலம்பியா, ஜப்பான், நியூசீலாந்து, மொங்கோலியா, தென் கொரியா ஆகிய ஒன்பது பங்காண்மை நாடுகள் உள்ளன. பங்காண்மை நாடுகளுக்கு உறுப்புரிமையுள்ள நாடுகளுக்கு இருப்பது போன்ற கூட்டு பாதுகாப்பு பொறுப்பு இல்லை. நேட்டோவின் அமைப்பு விதிகளின் ஐந்தாவது பிரிவின் படி ஒரு உறுப்பு நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மற்ற நாடுகள் அந்த அச்சுறுத்தல் தமக்கு வந்தது போல் கருதிச் செயற்பட வேண்டும். நேட்டோவின் பங்காண்மை நாடுகளுடன் இணையவெளிப் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு போன்றவற்றில் பெருமளவில் ஒத்துழைக்கும்.

தயக்கத்தை கைவிட்ட இந்தியா

சீனாவை அடக்கும் அமெரிக்கக் கொள்கையை ஒட்டிய செயற்பாட்டில் இந்தியாவையும் இணைக்க அமெரிக்கா விரும்புகின்றது என்கின்றது சீனா. மேலும் சீனா இந்தியாவும் தனது வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவுக்கு சார்பாக மாற்றி வருகின்றது எனக் கருதுகின்றது. சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்று மடங்காகும். சீனாவிற்கு எதிராக இந்தியா அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்வதில் தயக்கம் காட்டி வந்தது. சீனாவுடன் நல்ல உறவில் இருந்தால் மட்டுமே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற முடியும் என இந்தியா கருதி இருந்தது. 2017-ம் ஆண்டு இந்திய சீன எல்லையை ஒட்டியுள்ள டோக்லம் பிரதேசத்தில் இந்தியப் படைகளுக்கும் சீனப் படைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட பின்னர் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடிவு செய்தது. ஜப்பான் முன்வைத்த குவாட் அமைப்பில் இணைய இந்தியா காட்டிய தயக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

ஜேர்மனி என்னும் அமெரிக்கா வளர்த்த கடா

இரண்டாம் போரில் இரு கூறுகளாக்கப் பட்ட ஜேர்மனியின் மேற்குப் பகுதியை பொதுவுடமை சோவியத் ஒன்றியத்திடமிருந்து பாதுகாப்பதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. அமெரிக்கவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் நடந்த பனிப்போரில் ஜேமனியின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றதுடன். பனிப்போரின் முடிவில் கிழக்கு ஜேர்மனியையும் மேற்கு ஜேர்மனியையும் ஒன்றிணைக்கப்பட்டது. மேற்கு ஐரோப்பாவில் பொருளாதார வலிமை மிக்க நாடாக உருவெடுத்தமைக்கு ஜேர்மனை அமெரிக்காவிற்கு செய்த ஏற்றுமதியும் ஒரு காரணமாகவும். ஆனால் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஜேர்மனி தற்போது நோட்ஸ்ரீம்-2 என்னும் குழாய்த்திட்டத்தின் மூலம் இரசியாவிடமிருந்து பெருமளவு எரிவாயுவை இறக்குமதி செய்ய முனைகின்றது. இரசியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து அதன் விரிவாக்க முயற்ச்சிக்கு தடை போட நினைக்கும் அமெரிக்காவிற்கு ஜேர்மன் – இரசிய வர்த்தகம் தடையாக அமைகின்றது.

இன்றைய சீனாவின் நிலையை நாளை இந்தியா எடுக்குமா?

இன்று சீனாவிடமிருந்து அமெரிக்கா எதிர் கொள்ளும் சவால்களை இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியாவிடமிருந்தும் அமெரிக்கா எதிர் கொள்ள வேண்டியிருக்கும். சீனா தனது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய வசதிகளை அமெரிக்கா 1980களில் சீனாவிற்கு செய்து கொடுத்தது. சீனாவில் சந்தைப் பொருளாதாரத்தை வளர்த்தால் அதுவும் ஒரு முதலாளித்துவ நாடாக மாறிவிடும் என அமெரிக்கா நம்பியது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து தக்க வைக்க அது அமெரிக்காவைப் போல் ஒரு முதளாளித்துவ நாடாக மாறியே ஆக வேண்டும் என அமெரிக்கா நம்பியிருந்தது. ஆனால் அந்த மாற்றங்கள் ஏதும் நடக்கவில்லை. சீனப் பொதுவுடமைக் கட்சியின் பிடி நாட்டில் தளரவில்லை. மாறாக மேலும் இறுக்கமடைந்துள்ளது. ஜி ஜின்பிங்கின் பிடி சீனப் பொதுவுடமைக் கட்சியிலும் சீனப் படைத்துறையிலும் கடுமையாக இறுக்கமடைந்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி போலச் செயற்படுகின்றார்.

பொறுப்பு ஏற்க விரும்பாத அமெரிக்கா

இரண்டாம் உலகப் போரின் பின்னர் மேற்கு ஐரோப்பாவின் பாதுகாப்பில் தாம் தேவைக்கு அதிகமான பங்கு வகித்ததாக அமெரிக்கர்கள் கருதுகின்றனர். அமெரிக்கா தம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது பாதுகாப்பிற்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை எனவும் அமெரிக்கர்கள் கருதுகின்றனர். மேற்கு ஐரோப்பாவில் விட்ட தவறை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் விட அமெரிக்கா விரும்பவில்லை. அதனால்தான் 2021 ஜனவரியில் குவாட் என்னும் ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட அமைப்பில் அமெரிக்கா பாதுகாப்பு பொறுப்பை ஏற்க மாட்டாது என அறிவித்துள்ளது.

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அமெரிக்கா பெரிதும் விரும்புகின்றது. ஆனால் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள மாட்டாது. அதே வேளை இந்தியாவை சீனா போரில் தோற்கடிக்கும் நிலை ஏற்பட்டால் சீன வெற்றியைத் தவிர்க்க அமெரிக்கா பல வகையிலும் இந்தியாவுடன் ஒத்துழைக்கும். அப்படி ஒரு நிலை இருக்கும் போது சீனா இந்தியா மீது போர் தொடுப்பதை தவிர்க்கும். 


Tuesday 20 April 2021

அமெரிக்காவிற்கு எதிராக இரசியாவும் சீனாவும் போரில் குதிக்குமா?



இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தனது செல்வாக்கை இரசியர்கள் மத்தியில் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதற்கு அவ்வப்போது சில தீரச் செயல்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். தனது வாழ்நாள் முழுக்க ஆட்சியில் இருக்க விரும்பும் புட்டீனை அறுபது விழுக்காட்டிற்கும் அதிகமான இரசியர்கள் விரும்புகின்றார்கள். உலகின் வேறு எந்த அரசு தலைவர் மீதும் அவர்கள் ஆளும் மக்கள் இந்தளவு மதிப்பு வைத்திருக்கவில்லை. 2012-ம் ஆண்டு சீனாவில் ஆட்சிக்கு வந்த அதிபர் ஜி ஜின்பிங் ஆட்சியில் தனது பிடியை வலியதாக்கிக் கொண்டுள்ளார் சீன அதிபர் பதவி, கட்சியின் தலைமப் பதவி, படைத்துறை உச்சத் தளபதிப் பதவி ஆகிய மூன்றிலும் உறுதியான ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளார். தனது வாழ் நாள் முழுவதும் ஆட்சியில் இருக்க அவரும் சீனாவில் பல சாகசச் செயல்களைச் செய்ய வேண்டும்.

இரசியாவிற்கு உக்ரேன் அவசியம்

இரசியாவின் பாதுகாப்பிற்கு உக்ரேன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளுடன் இணைந்தால் இரசியா தனது வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டியிருக்கும் என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்து. சோவியத் ஒன்றியத்தின் விவசாய உற்பத்தியும் படைத்துறை உற்பத்தியும் உக்ரேனிலேயே பெருமளவு செய்யப்பட்டது. சோவியத்தின் கடற்படையின் முதுகெலும்பாக உக்ரேனின் கிறிமியா பிராந்தியம் இருந்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் தனி நாடாக உருவாகிய உக்ரேன் தொடர்ந்தும் இரசியாவுடன் பொருளாதார மற்றும் படைத்துறை ஒத்துழைப்பில் இருப்பதா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் இணைவதா என்ற விவாதம் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது. இரசியா ஒரு புறமும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் மறுபுறமும் என உக்ரேனில் ஒரு ஆதிக்கப் போட்டி உருவானது. அது 2010களில் பெரும் குழப்பத்தை உருவாக்கியது. அது இரசியா உக்ரேனின் ஒரு பகுதியாக இருந்த கிறிமியாவை ஆக்கிரமித்து தன்னுடன் இணைப்பதிலும் இரசியர்கள் பெரும்பான்மையினராக வாழும் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் தனிநாட்டு போராட்டத்தையும் உருவாக்கியது.

சீனாவிற்கு அவசரமாக தைவான் தேவை

2030-ம் ஆண்டின் பின்னர் சீனாவின் மக்கள் தொகைக் கட்டமைப்பில் இளையோர் தொகை வெகுவாகக் குறைந்தும் முதியோர் தொகை வெகுவாக அதிகரித்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவின் பொருளாதாரத்திலும் படைவலிமையிலும் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு முன்னர் சீன அதிபர் சீனாவை உலகின் உயர்ந்த இடத்திற்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் எனக் கருதுகின்றார். அதற்கு தைவானை சீனாவுடன் இணைத்தல் சிறந்த நகர்வாக அமையும். உலகெங்கும் உள்ள துறைமுகங்களைத் தேடித் தேடி அபிவிருத்து செய்யும் சீனாவிற்கு 15 துறைமுகங்களைக் கொண்ட தைவான் பெரும் வாய்ப்பாகும். அவற்றில் பல ஆழ்கடல் துறைமுகங்களாகும். தைவானை சீனா கைப்பற்றினால் பசுபிக் பிராந்தியத்தில் அதன் ஆதிக்க வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும். 2019 ஜனவரியில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் தைவான் சீனாவினது ஒரு பகுதி என்றும் தேவை ஏற்படின் படைகளைப் பாவித்தாவது அதை சீனாவின் ஒரு பகுதியாக்குவோம் என முழங்கினார். ஆனால் தைவானின் தனித்துவத்தை காப்பாற்றுவோம் என அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக அறிவித்தது. அது தைவானியர்களின் சுதந்திரத்தில் கொண்ட அக்கறையால் அல்ல பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவே. சீனாவின் தொழில்நுட்ப வலுவின்மையான புள்ளிகளில் semiconductors உற்பத்தியும் ஒன்று. தகவல் தொழில்நுட்பத்தின் உயிர்நாடியான அந்தத் துறையில் அமெரிக்கா, தென் கொரியா, தைவான் ஆகியவை உலகில் முன்னணியில் திகழ்கின்றன. தைவானை சீனாவின் ஒரு பகுதியாக்குதல் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும்.  

உக்ரேனும் தென் சீனக் கடலும்

தென் சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்துவதை பாராக் ஒபாமா அதிபராக இருந்த போது கடுமையாக எதிர்த்தார். அதற்காக அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையம் என்ற கொள்கையையும் வகுத்தார். ஆனால் 2011இல் உருவான சிரியப் பிரச்சனையும் 2014 இரசியா செய்த கிறிமியா ஆக்கிரமிப்பும் அவரது கவனத்தை திசை திருப்பியது. அதைச் சாதகமாகப் பயன்படுத்தி சீனா தென் சீனக் கடலில் துரிதமாக செயற்கை தீவுகளை உருவாக்கி அங்கு தனது படை நிலைகளையும் நிறுத்திக் கொண்டது. அதை பல நாடுகள் எதிர்த்த போதும் சீனா அசையவில்லை. ஒரு போர் மூலம் மட்டுமே சீனா தென்சீனக் கடலின் பன்னாட்டுக் கடற்பிரந்தியத்தில் உருவாக்கிய தீவுகளில் இருந்து வெளியேற்ற முடியும். இரு வல்லரசுகள் ஒன்றுடன் ஒன்று போர் செய்ய முடியாது என்பதை சீனா நன்கு உணர்ந்து கொண்டது. அமெரிக்கா உட்பட பல நாடுகளின் ஆட்சேபனைகளுக்கு நடுவிலும் ஹொங் கொங் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளை மீறி சீனா அங்குள்ள ஆட்சி முறைமைய மாற்றிக் கொண்டது.

அடுத்தது உக்ரேனும் தைவானுமா?

உக்ரேனை அதன் போக்கில் விட்டால் அது நாளடைவில் சுமூக நிலைக்கு திரும்பி அது ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் இணைந்துவிடும் என இரசிய அதிபர் புட்டீன் அறிவார். அதனால் 2021 ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இரசியா பதினான்காயிரம் படையினரைக் கொண்ட பதினாறு படையணிகளை உக்ரேனுடனான எல்லையை நோக்கி நகர்த்தியுள்ளது. ஏற்கனவே உக்ரேன் எல்லையில் இருபத்தாறாயிரத்திற்கு மேற்பட்ட இரசியப் படையினரும் கிறீமியாவில் நாற்பதினாயிரம் இரசியப் படையினரும் நிலை கொண்டுள்ளனர். உக்ரேனை இரசியா ஆக்கிரமிக்கலாம என்ற அச்சம் உருவாகியுள்ளது. 2021 மார்ச் நடுப்பகுதியில் அமெரிக்க சீன அரசுறவியலாளர்களுக்கு இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சீனா தைவானை சீனாவுடம் இணைப்பது தமது புனித பணி என சூளுரைத்துள்ளது. உக்ரேன் மீது இரசியாவும் தைவான் மீது சீனாவும் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்பு போர் தொடுக்கும் போது ஒரேயடியாக இரு போர் முனைகளை அமெரிக்கா எதிர் கொள்ள வேண்டியிருக்கும். அது சீனாவினதும் இரசியாவினதும் படை நகர்வுகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தலாம். அதை அமெரிக்கா மூன்று விதமாக எதிர் கொள்ளலாம். ஒன்று முழுவலிமையுடன் இரண்டு ஆக்கிரமிப்புக்களையும் முறியடித்தல், இரண்டு ஒன்றில் விட்டுக் கொடுத்து மற்றதில் அதிக கவனம் செலுத்துதல், மூன்று நேட்டோ நாடுகளின் உதவியுடன் இரசியாவையும் ஜப்பான், தென் கொரியா, ஒஸ்ரேலியா, இந்தியா, வியட்னாம் ஆகிய ஆசிய நாடுகளுன் இJணைந்து சீனாவையும் எதிர் கொள்ளலாம். இந்த மூன்றாம் தெரிவு ஒரு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும்.

போர் என்று வந்தால் அது பெரும் அழிவில் முடியும் என்பதை எல்லா நாடுகளும் அறியும். தைவான் மீது வான் மற்றும் கடல் எல்லைகளில் தொடர்ந்து அத்து மீறல்களைச் சீனா செய்து கொண்டிருத்தலும் ஒரு போரால் தைவானை ஆக்கிரமிக்க முடியும் என்ற படை வலிமையை சீனா பெறுவதாலும் மற்ற நாடுகளிடமிருந்து சீனாவைத் தனிமைப் படுத்துவதாலும் தைவானை அடிபணிய வைக்க சீனா முயற்ச்சி செய்யும். தைவானை ஆக்கிரமித்தால் சீனா பெரும் ஆளணி இழப்புக்களைச் சந்திக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கினால் சீனா தைவான் மீது படை எடுக்கத் துணியாது என தைவான் கருதுகின்றது. தைவான் மீது படை எடுத்தால் அமெரிக்கா, ஜப்பான், வியட்னாம், தென் கொரியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகள் சீனாவைத் தடுக்கும் என சீனாவை உணரவைக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்ச்சிக்கும். உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் தொடர்ந்து பிரச்சனை கொடுத்துக் கொண்டிருத்தால் ஒரு நாள் உக்ரேனில் இரசிய ஆதரவு ஆட்சியை நிரந்தரமாக அமைக்க முடியும் என இரசியா நம்புகின்றது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் இரசியரக்ள் ஓரு போர்ச்சூழலில் வாழ விரும்பாமல் ஒரு நாள் தமது கிளர்ச்சியைக் கைவிடுவார்கள் என உக்ரேன் நம்புகின்றது. போர் என்பது வலிமை மிக்க நாடுகள் கடைசித் தெரிவு மட்டுமே.

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...