Followers

Sunday 28 February 2021

மத்திய கிழக்கில் தீவிரமடையும் இணையவெளி போர்

 


உலகில் அதிக அளவு இணையவெளிப்போர் செய்யும் நாடுகள் ஈரானும் இஸ்ரேலும் இருக்கின்றன. 2012-ம் ஆண்டு ஈரானிய யூரேனியம் பதப்படுத்தும் ஆலைகளின் கணினித் தொகுதியில் இஸ்ரேலும் அமெரிகாவும் இணைந்து STUXNET என்னும் கணினி நச்சுக்கிருமி மூலம் நடத்திய இணையவெளித் தாக்குதலின் பின்னர் ஈரானும் தனது இணையவெளிப்படையை மேம்படுத்திக் கொண்டது. 2020-ம் ஆண்டு அமெரிக்க நாடளமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்ட அறிக்கையின் படி 2012-ம் ஆண்டின் பின்னர் ஈரான் அமெரிக்காவிற்கு எதிராக இணையவெளித் தாக்குதல்கள் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் இணையவெளிபோர் STUXNET தாக்குதலின் பின்னர் மோசமடைந்தது. STUXNET தாக்குதலின் பின்னர் உருவான இணையவெளித் தாக்குதல் போட்டியை சோவியத் ஒன்றியம் ஸ்புட்நிக் செய்மதி அனுப்பிய பின்னர் தோன்றிய விண்வெளிப் போட்டிக்கு ஒப்பிடுவர்.

ஈரானின் அடியும் இஸ்ரேலின் பதிலடியும்

2020 ஏப்ரல் மாதம் 23-ம் திகதி இஸ்ரேலின் நீர் வழங்கல் துறையினரின் ஒரு நீர் இறைக்கும் இயந்திரம் நிற்பாட்ட முடியாமல் வேலை செய்து கொண்டிருந்தது. இன்னொரு இயந்திரத்தை வேறு யாரோ கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். அதை இஸ்ரேலிய தொழில்நுட்பவியலாளர்களால் இயக்க முடியவில்லை, அவர்களுடைய தரவுப் பரிமாற்றத்தில் திட்டமிடாத மாற்றங்கள் இணையவெளியூடாக ஊடுருவிச் செய்யப்படிருந்தன. இப்படி இஸ்ரேலின் பல நீர் வழங்கல் நிலையங்களில் நடந்தன. இஸ்ரேலியர்கள் அவசரமாக தங்கள் நீர் வழங்கல் முறைமைகளின் கடவுட்சொற்களை மாற்றினர். அந்த ஊடுருவல் ஈரானில் இருந்து மேற்கொள்ளப்பட்டதை அறிந்த இஸ்ரேலின் பதிலடியும் காத்திரமானதாகவே இருந்தது. அத் தாக்குதல் இஸ்ரேலியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் நீரில் குளோரினின் அளவை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. இஸ்ரேல் நீர் வழங்கலில் தாக்குதல் நடந்த இரண்டு வாரங்கள் கழித்து ஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அபாஸ்ஸில் உள்ள ஷகிட் ரெஜீ முனையம் (Shahid Rajaee terminal) இணையவெளித்தாக்குதலுக்கு உள்ளானது. இது ஹோமஸ் நீரிணையில் உள்ளது. ஈரானிய வர்த்தகத்தில் 60% இத் துறைமுகத்தினூடாக நடக்கின்றது.  இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் உரிமை கோரவில்லை. ஆனால் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அதிகாரி இஸ்ரேல் தனது எதிரிகளுக்கு தனித்துவமான முறையில் பதிலடி கொடுக்கும் என்றார். அமெரிக்க பாதுகாப்புத் துறையினர் ஈரானியத்துறைமுகம் மீதான் தாக்குதல் இஸ்ரேலில் இருந்து செய்யப்பட்டது போலுள்ளது என்றனர். வாஷிங்டன் போஸ்ற் பத்திரிகையும் அதை உறுதிப்படுத்தியது. இணையவெளிப் பாதுகாப்பிலும் தாக்குதலிலும் இஸ்ரேல் உலக வல்லரசு எனக் கருதப்படுகின்றது. அதன் மீது தாக்குதல் செய்வது ஈரானிய நிபுணர்களின் திறமையைப் பறைசாற்றியது. 2020 மே மாதம் இஸ்ரேலின் பல முக்கிய இணையத் தளங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன. அவற்றில் உள்ள தகவல்கள் அழிக்கப்பட்டு மிரட்டல் செய்திகள் பதிவேற்றப்பட்டிருந்தன.

ஈரான் - சவுதி இணையவெளிப் போர்

2020 செப்டம்பரில் சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிலையங்களில் உள்ள கணினித் தொகுதிகள் மீது இணையவெளித் தாக்குதல் செய்யப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. சவுதி அரேபியாவும் ஈரானும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றுடன் ஒன்று போர் செய்யாமல் பல்வேறுவழிகளில் தாக்குதல்கள் செய்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு கிடைத்த அற்புதமான வழி இணையவெளிப் போர். ஈரான் தனது இணையவெளிப் போர்முறைமைகளைத் தானே உருவாக்க சவுதி அந்த முறைமைகளை இஸ்ரேல், அமெரிகா, பிரித்தானியா ஆகிய நாடுகளிடமிருந்து வாங்குகின்றது. தன்மீது பலவழிகளில் இணையவெளித் தாக்குதல்கள் நடப்பதால் ஈரான் தனக்கே என வெளியுலக தொடர்பில்லாத ஒரு இணையவெளியை இரசியாவின் உதவியுடன் உருவாக்கியது. ஈரானும் சவுதியும் தத்தமது மதநெறியைப் பரவுவதற்கு இன்னொரு வகையான இணைவெளித்தாக்குதல் முறைமையான நயத்திருட்டு அல்லது சமூகத்தாக்குதலைப் (Social Engineering) பாவிக்கின்றன.

சவுதியின் இணையவெளி உளவு

அல் ஜசீராவின் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் சவுதி அரேபிய ஆட்சியாளர்கள் கடுமையாக எதிர்க்கின்றார்கள். இதனால் கட்டார் நாட்டுக்கு எதிராக பல பொருளாதார நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டார்கள். அல் ஜசீராவின் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் கண்காணிக்கவும் அவர்களின் தகவல்களைத் திரட்டவும் இஸ்ரேலின் உளவுநிரல்களைப்(Spywares) பாவிக்கின்றது. சவுதி ஆட்சியாளர்கள் தம்மீது அதிருப்தி கொண்டு செயற்படும் தம் நாட்டு மக்களைக் கண்காணிக்கவும் உளவுநிரல்களைப் பெரிதும் பயன்படுத்துகின்றன. சவுதி அரேபியா தனது இணையவெளி போர் முறமையையும் உளவு வலிமையையும் அதிகரிக்க அமெரிகாவின் கலிபோர்ணியா மாநிலத்தில் உள்ள உயர் தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற சிலிக்கன் வலி (Silicon Valley) பிராந்தியத்தில் புதிதாக ஆரம்பிக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்கின்றது. சவுதி அரேபியா இஸ்ரேலிடமிருது வாங்கிய Pegusus Spyware உலகிலேயே கைப்பேசிகளை ஒற்றுக் கேட்டல், கைப்பேசிய்களூடாகப் பரிமாறப்படும் குறுந்தகவல்களையும் மின்னஞ்சல்களையும் படங்களையும் களவாடல் போன்றவற்றிற்கு மிகச்சிறந்த உளவுநிரலாகும்.

 

தனியார்துறையிலும் இணையவெளி ஊடுருவல் அதிகம்

Ponemon Institute, ஐபிஎம் ஆகிய இரு நிறுவனங்களும் செய்த ஆய்வின் படை 2020-ம் ஆண்டு மத்திய கிழக்கில் உள்ள நிறுவனம் ஒன்று சராசரியாக 6.53மில்லியன் டொலர்கள் இழப்பீட்டை தகவல் திருட்டு மூலம் இழக்கின்றன. இது உலக சராசரியான 3.86மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமானதாகும். மத்திய கிழக்கு நாடுகளின் இணையவெளித் தாக்குதல் 2020-ம் ஆண்டு 250 விழுக்காடு அதிகரித்திருந்தன என்றார் ஐக்கிய அமீரகத்தின் இணையவெளிப் பாதுகாப்புத் துறை அதிகாரி.

ஐக்கிய அமீரகத்தின் வழி தனி வழி

ஈரான் உள்நாட்டில் இணையவெளிப் போர் முறமையை உருவாக்குகின்றது. சவுதி அரேபியா அதைக் காசு கொடுத்து வாங்குகின்றது. ஐக்கிய அமீரகம் அமெரிகாவின் இணையவெளிப் போர் முறைமை நிபுணர்களை அவர்களுக்கு அமெரிக்காவில் கொடுக்கப்படும் ஊதியத்திலும் பார்க்க மிக அதிகமாகக் கொடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளது. அத்துடன் அது இஸ்ரேலிடமிருந்தும் பல தொழில்நுட்பங்களை வாங்குகின்றது. அதன் மூலம் இணையவெளித் தாக்குதல், பாதுகாப்பு, உளவாடல் போன்றவற்றில் அமெரிக்காவிற்கு இணையாகும் வகையின் தன் வலிமையைக் கட்டி எழுப்புகின்றது. அமெரிக்கா மற்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் பார்க்க ஐக்கிய அமீரகத்தை அதிகம் நம்புகின்றது. அதனால் அமெரிக்க உயர் தொழில்நுட்பம் அமீரகத்திற்கு செல்வதை அது தடை செய்யவில்லை. 2020 ஓகஸ்ட் மாதம் இஸ்ரேலுடன் ஐக்கிய அமீரகம் அரசுறவுகளை ஏற்படுத்திய பின்னர் அமீரகத்தின் மீதான இணையவெளித்தாகுதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. அமீரகத்தின் இணையவெளிச் செயற்பாடுகள் DarkMatter என்ற நிறுவனத்தின் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. அமீரகத்தின் இணையவெளி வலிமை பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாக அமீரகம் சொன்னாலும் DarkMatter நிறுவனத்தின் ஊழியர்கள் கசியவிட்ட தகவல்களின் படி DarkMatter பல தாக்குதல் நடவடிக்கைகளையும் உளவு நடவடிக்கைகளையும் செய்வதாக அறியப்படுகின்றது.

முன்பு சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் தமது புதிய படைக்கலன்களை மத்திய கிழக்கு நாடுகளிடையே நடக்கும் போர்க்களங்களில் பரீட்சித்துப் பார்த்தது போல தற்போது மத்திய கிழக்கு நாடுகளிடையே நடக்கும் முறுகல்களைப் பாவித்து அமெரிக்கா, இஸ்ரேல், சீனா, இரசியா பிரித்தானியா ஆகிய நாடுகள் தம் இணையப் போர் முறைமையை பரீட்சித்துப் பார்க்கின.

Monday 22 February 2021

ஆசிய படைக்கலப் போட்டியில் சீனா எட்ட முடியாத இடத்திலா?

 


சீனாவின் பொருளாதார சிர்திருத்தத்தை அறிமுகம் செய்து ஒரு விவசாயம் சார் பொருளாதரத்தைக் கொண்டிருந்த சீனாவை உலகின் முன்னணிப் பொருளாதார நாடாக்கியவர் டெங் சியோபிங். 1978இல் இருந்து 1989வரை சீன ஆட்சியாளராக இருந்த டெங் சியோபிங் தனக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்களுக்கு சீனா இனிவரும் காலங்களில் உலக ஆதிக்கம் செய்த்த முயலக் கூடாது என்றார். அவரது பொருளாதாரக் கொள்கையால் பாரிய பொருளாதார வளர்ச்சியை தொடர்சியாக் சீனா கண்டு வருகின்றது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியால் அது உலக அமைதிக்குப் பாதகம் ஏற்படுமா என்ற கேள்வி 2000-ம் ஆண்டளவில் பரவலாக அடிபடத் தொடங்கியது. அந்த கேள்விக்கு பதிலளிக்கு முகமாக சீனா “அமைதியான வளர்ச்சி” என்ற கொள்கையைக் கொண்டது எம 2003-ம் ஆண்டளவில் சீன ஆட்சியாளர்கள் உலக நாடுகளிடம் அடித்துச் சொன்னாரகள். சீனாவின் “அமைதியான எழுச்சி” கொள்கையை நம்பிய அமெரிக்க அதிபர்களான ஜோர்ஜ் புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா ஆகியோர் சீனாவை பொருளாதார வளர்ச்சிப் பங்காளராக ஏற்றுக் கொண்டனர். உலக வர்த்த நிறுவனம் போன்ற உலக அமைப்புக்களில் சீனா இணைவதை ஊக்குவித்தனர்.

சீனாவின் அபரிமிதமான படைத்துறை வளர்ச்சி

சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, பாக்கிஸ்த்தான், தைவான், வட கொரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஒன்றிற்கு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு தமது படை வலிமையை பெருக்குகின்றன. இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் படைத்துறைச் செலவீனம் ஆண்டு தோறும் பத்து விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரிக்கப்படுகின்றது. சீனா படைத்துறைக்கு ஆண்டு தோறும் செய்யும் செலவு இந்தியா, ஜப்பான், வட கொரியா, தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் மொத்த படைத்துறைச் செலவிலும் பார்க்க அதிகமானதாகும்.2020 ஜூனில் சீனா கைத்துப்பாக்கி அளவிற்கு சிறியதாக்கப்பட்ட மின்காந்த துப்பாக்கிகளை உருவாக்கி பார்வைக்கு வைத்தது. பொதுவாக மின்காந்த துப்பாக்கிகளின் இருந்து பாயும் தோட்டாக்கள் ஒரு செக்கண்டில் ஒன்றரை மைல் (இரண்டரை கிலொமீட்டர்) என்னும் வேகத்தில் 400 கிலோமீட்டர் வரை பாயக் கூடியவை. சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களை அழிக்கும் DF-16 ஏவுகணைகள் உள்ளன. சீனாவிடம் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ரடார்களுக்கு புலப்படாத விமானங்களும் இருக்கின்றன. நிலத்துக் கீழ் உள்ள பதுங்கு குழிகளில் இருந்து ஏவக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சீனா வைத்திருக்கின்றது. ஒலியிலும் பார்க்க இருபது மடங்கு வேகமாகப் பாயக் கூடிய ஏவுகணைகள் இருக்கின்றன. தரையில் இருந்து ஏவி செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளையும் சீனா வைத்திருக்கின்றது. இரசியாவிடமிருந்து படைக்கலன்களை வாங்கி வந்த சீனா இப்போது படைக்கல உற்பத்தியில் இரசியாவுடன் போட்டி போடும் நிலையை அடைந்துள்ளது.

அமைதியான எழுச்சி கொள்கையை சீனா கைவிட்டதா?

சீனாவின் படைவலிமைப் பெருக்கம் அதன் “அமைதியான எழுச்சி” என்ற கொள்கையில் இருந்து சீனா விலகிவிட்டது என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. சீனாவின் படைத்துறை வளர்ச்சி தொடர்பான கரிசனை ஆசிய நாடுகளையும் தாண்டி ஒஸ்ரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகளையும் பிடித்துள்ளது. தென் சீனக் கடலை ஆக்கிரமித்து சீனா அங்கு செயற்கைத் தீவுகளை அமைத்தது. அங்கு படை நிலைகள் அமைக்கப்பட மாட்டாது என்று சொல்லிய சீனா பின்னர் அதை முழுமையாக தனது படைக்கலன்களைக் குவித்தது. இந்தியாவின் எல்லையில் சீனாவின் நடவடிக்கைகளும் அது ஓர் அமைதியை விரும்பும் நாடல்ல என்பதை உறுதி செய்கின்றது.

சீனாவுடன் போட்டி போட முடியாத ஆசிய நாடுகள்

சீனாவின் படை வலிமைப் பெருக்கம் என்பது அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் மீதான ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைகின்றது. ஆனால் சீனாவின் படைவலிமைப் பெருக்கம் அதன் அயல் நாடுகளை அதிக கரிசனை கொள்ள வைத்தது. இந்தியா கரிசனை மட்டுமல்ல அச்சமும் கொண்டு தனது படைவலிமையைப் பெருக்கியது. அதனால் பாக்கிஸ்த்தானும் இந்தியாவிற்கு இணையாக தனது படைவலிமையைப் பெருக்கியது. ஆனால் இந்தியாவால் சீனாவிற்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் அது அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா நாடுகளுடன் படைத்துறை ஒத்துழைப்பை அதிகரிக்க முயல்கின்றது. இந்தியாவின் படைவலிமைக்கு ஈடு கொடுக்க முடியாத பாக்கிஸ்த்தான் சீனாவுடன் தனது படைத்துறை ஒத்துழைப்பை அதிகரிக்கின்றது. சீனாவின் அயல் நாடுகளின் சிங்கப்பூர் மட்டுமே தனது மொத்த தேசிய உற்பத்தியில் இருபத்தி நான்கு விழுக்காட்டை படைத்துறைக்கு செலவு செய்கின்றது. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளின் படைத்துறைச் செலவு அவற்றின் மொத்த தேசிய உற்பத்தியில் ஒரு விழுக்காடு மட்டுமே. ஜப்பானின் நிலைமை ஒரு விழுக்காட்டிலும் குறைவானதாக இருக்கின்றது. சீனாவின் அயல் நாடுகள் பல பாதுகாப்பிலும் பார்க்க வழுமை ஒழிப்பு, உட்கட்டுமான, அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி, கல்வித்துறை மேம்பாடு போன்றவற்றிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கின்றன. சில நாடுகள் தம்மை எப்படியும் சீனாவிடமிருந்து அமெரிக்கா பாதுகாக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளன.



படைக்கலப் போட்டியில் மூன்று அணுக்குண்டு நாடுகள்.

சீனா, இந்தியா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் அணுக்குண்டுகளை வைத்திருக்கின்றன. இது ஆசியப் பிராந்தியத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. இந்தியா-சீனா மற்றும் இந்தியா-பாக்கிஸ்த்தான் இடையே அடிக்கடி எல்லை மோதல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த எல்லை மோதல் கட்டுகடங்காமல் போகும் போது ஓர் அணுக்குண்டுப் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது. அணுக்குண்டுகள தாங்கிச் செல்லும் ஏவுகணைகளின் வலிமையை சீனா நாளுக்கு நாள் வேகம், தூரம், புலப்படாத்தன்மை ஆகியவற்றில் மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் எப்பாகத்திலும் அணுக்குண்டு வீசக் கூடிய வலிமை சீனாவிற்கு உண்டு. அமெரிக்காவும் சீனாவும் தற்போது விண்வெளிப் படையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அதில் சீனா முன்னேற்றமடையும் போது அதற்கும் மற்ற ஆசிய நாடுகளுக்கும் இடையிலான வலிமை இடைவெளி இன்னும் அதிகமாகும்.

இணையவெளிப் போர்

இணையவெளித் தாக்குதல், ஊடுருவல் போன்றவற்றில் சீனா அமெர்க்காவையே திணற வைக்கின்றது. அந்த நிலையில் சீனாவின் அயல் நாடுகளின் நிலைமை மிகவும் மோசமானதாகவே இருக்கின்றது. எந்த நாடுகளின் படைத்துறை இரகசியங்கள் சீனா இணையவெளியூடாக திருடி வைத்திருக்கின்றது, எந்த அளவி எனத வகையான இணையவெளி உறங்குநிலைக் கலன்களை (sleeper cells) சீனா வைத்திருக்கின்றது என்பது பற்றி யாருக்குமே தெரியாது.

மொத்தத்தில் சீனாவின் எழுச்சி மற்ற நாடுகளின் மன அமைதியைக் கெடுத்துள்ளது.

Thursday 18 February 2021

விமல் வீரவன்சவின் பின்னால் சீனா

 


இலங்கையின் வெளியுறவுக் கொள்கை பற்றிய ராஜ்பக்சே குடும்பத்தினரின் நிலைப்பாடுகளை தகர்ப்பதற்கு அவர்களின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றின் தலைவரான விமல் வீரவன்ச களமிறங்கியுள்ளார். மஹிந்த ராஜபக்ச அதிபராக இருந்த போது உலக அரங்கில் இலங்கையின் நிலை பற்றி அதிக அக்கறை காட்டியதுடன் தானும் உலக அரங்கில் மதிக்கப்பட வேண்டும் எனவும் நினைத்தார். உலக நிகழ்வுகளில் தான் உரையாற்ற வேண்டும் என்பதற்காக கடுமையான முயற்ச்சிகளையும் மேற்கொண்டிருந்தார். அவரது ஆட்சியின் போது அவரது ஒரு சகோதரரான பசில் ராஜ்பக்சே இந்திய சார்பானவராகவும் இந்தியாவுடன் நெருக்கமான உறவைப் பேணுபவராகவும் இருக்க மற்ற சகோதரரான கோத்தபாய ராஜபக்ச சீன சார்புடையவராக இருந்தார். மஹிந்த ராஜபக்சா எல்லா நாடுகளையும் அனுசரித்து நடப்பவர் போல் தன்னைக் காட்டிக் கொண்டார். இந்த சகோதரர்களிடையேயான வெளியுறவுப் பங்கீடு 2009-ம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ச அதிபராக வந்த பின்னரும் பேணப்படுகின்றது.

போட்டிக்களமான இலங்கை

மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலும் பார்க்க தற்போது வல்லரசு நாடுகளிடையேயான போட்டி இலங்கையில் அதிகமாக உள்ளதுடன் நாளுக்கு நாள் அது அதிகரித்துக் கொண்டே போகின்றது. அந்த போட்டி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய முகாமையை இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் கையளிக்கும் முயற்ச்சி முறியடிக்கப்பட்ட போது வெளிப்பட்டது. கோத்தபாயாவின் ஆட்சிக்காலம் இலங்கையில் சீனா தனது பிடியை இறுக்க உகந்ததாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு சார்பாக சீனா தனது இரத்து அதிகாரத்தை தேவை ஏற்படும்போது பாவிப்பது தற்போது இலங்கைக்கு மிக அவசியமான ஒன்றாகும். அத்துடன் ஜெனீவா மனித உரிமைக்கழகம் போன்ற பிற அமைப்புக்களிலும் சீனாவின் ஆதரவு இலங்கைக்கு தேவைப்படுகின்றது. இலங்கையில் கடன்படு தரம் குறைக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு தேவைப்படும் கடன்களையும் நிதி உதவிகளையும் வழங்க சீனாவால் முடியும்.

சீனாவின் முக்கிய கருவியாக விமல் வீரவன்ச

2008-ம் ஆண்டு ஜேவிபி என்னும் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரிந்து சென்ற விமல் வீரவன்ச மக்கள் சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்தியா மீது கடும் வெறுப்பு கொண்ட விமல் வீரவன்ச ராஜ்பக்சே குடும்பத்துடன் நெருக்கமான உறவையும் கொண்டிருந்தவர் மக்கள் விடுதலை முன்னணியில் கிளர்ச்சியை இந்தியா இலங்கைக்கு படைகளை அனுப்பி கொடூரமாக முறியடித்தமையால் அந்த அமைப்பினர் இந்தியா மீது கடும் வெறுப்பு கொண்டுள்ளனர். இந்த வகையில் சீனாவின் சிறந்த அரசுறவியல் நெம்புகோலாக விமல் வீரவன்ச செயற்படுகின்றார். ராஜபக்சேக்களின் கட்சியான இலங்கை பொதுமக்கள் முன்னணியில் நிர்வாகச் செயலாளரான ரேணுக்கா பெரேரா விமல் விரவன்சவிற்கு நெருக்கமான இருவர் வெளிநாடு ஒன்றின் கொடுப்பனவு பட்டியலில் உள்ளனர் எனக் குற்றம் சாட்டியிருந்தார். அது சீனாவைத் தவிர வேறு ஒன்றாக இருக்க முடியாது. ராஜபக்சேக்களின் கட்சியான இலங்கை பொதுமக்கள் முன்னணியை 2009இல் அதிபர் தேர்தலிலும் 2020 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வைக்க தான் கடுமையாக உழைத்ததாக விமல் சொல்லுகின்றார்.

இந்திய சார்பானவர்களுக்கு எதிராக கிளம்பிய விமல்

ராஜபக்சே குடும்பத்தின் இந்திய சார்பு நிலையாளரான பசிலிற்கும் அரை இந்திய சார்பு நிலையாளரான மஹிந்தவிற்கும் எதிராக விமல் வீரவன்ச பகிரங்கமாக கருத்து வெளிவிட ஆரம்பித்துள்ளார். 2015-ம் ஆண்டு ராஜபக்சேக்களின் ஆட்சி அகற்றப்பட்டமைக்கு பசிலே காரணம் என்பது அவரது முதலாவது தாக்குதல். இரண்டாவது தக்குதலாக ராஜ்பக்சேக்களின் பொது மக்கள் முன்னணிக்கு அதிபரான கோத்தபாயவே தலைவராக இருக்க வேண்டும் அப்போதுதான் ஆளும் கட்சிக் கூட்டணி நாடாளமன்ற உறுப்பினர்கள் அதிபருடன் இணைந்து சிறப்பாக செயற்பட முடியும் என்ற கருத்தை வெளியிட்டார். அதாவது கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து மஹிந்தவை அகற்ற வேண்டும் என்பது அவரது கருத்து. அக்கருத்துக்கு ராஜபக்சே குடும்பத்தினரிடமிருந்தும் அவர்களது கட்சிக்குள் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கைத்தொழில் துறை அமைச்சுப் பதவியில் இருந்து விமலை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முனவைக்கப்பட்டுள்ளது.

விமலுக்கு ஆதரவாக கிளம்பிய பிக்குகள்

பொதுமக்கள் முன்னணிக் கட்சியின் தலைவராக கோத்தபாய வரவேண்டும் என்ற விமனில் கருத்துக்கு அக்கட்சியில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியபோது நாரஹென்பிட்டிய பௌத்த விகாரையின் பீடாதிபதி முரெத்தெட்டுவ ஆனந்த தேரர் களமிறங்கினார். பொதுமக்கள் முன்னணியை ஆட்சியில் அமர்த்திய விமல் அதன் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டாமல் வேறுயாரால் சுட்டிக்காட்ட முடியுமென்று கேள்வி எழுப்பினார் அந்த பீடாதிபதி. மேலும் அவர் விமலுக்கு எதிராக கருத்து வெளியிட்ட பொதுமக்கள் முன்னணி கட்சியின் செயலாளர் காரியவாசகத்திற்கு எதிராக பௌத்த மதத்தின் உச்ச அமைப்பான மகா சங்கம் கிளர்ந்து எழவேண்டும் என்கின்றார். பவிடி கண்ட என்ற மத குருமார்களின் அமைப்பு இலங்கையின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதன் கருத்தை உதாசீனம் செய்ய வேண்டாம் என்கின்றார் நாரஹென்பிட்டிய பீடாதிபதி. ஆனால் கொழும்பு துறைமுகத்தின் மிகப்பெரிய முனையமான தெற்கு முனையத்தை சீனாவிற்கு விற்பனை செய்யும் போது சிங்கள மக்கள் பெரிய அளவில் எதிர்ப்பு காட்டவில்லை.

மஹிந்த ராஜபக்சேயின் நோக்கங்கள்

மஹிந்த ராஜபக்சேயின் வெளிநாட்டு சொத்து விபரங்களை மேற்கு நாடுகளின் உளவுத்துறை திரட்டி வைத்துள்ளது. அவரின் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அந்த உளவுத்துறைகளே உதவி செய்தும் இருக்கலாம். முதலில் அப்படி உதவி செய்து விட்டு பின்னர் அதை வைத்தே அந்த முதலீட்டாளரை மிரட்டி தமக்கு வேண்டியதை வெளிநாட்டு உளவுத்துறை சாதித்துக் கொள்வது வழமையான ஒன்று. அந்த சொத்துக்களை பாதுபாப்பது மஹிந்தவின் முதல் திட்டம். கோத்தபாய தனது பத்தாண்டு அதிபர் காலத்தை முடித்த பின்னர் தனது ஒரு மகனை இலங்கையில் அதிபராகவும் மற்ற மகனை தலைமை அமைச்சராகவும் ஆக்க வேண்டும் என்பது மஹிந்தவின் அடுத்த நோக்கம்.

சீனாவின் நெம்புகோல்கள்

சிங்கள மக்களிடையே இலங்கை சீனாவுடனா அல்லது இந்தியாவுடனா நெருக்கமான உறவைப் பேணவேண்டும் என்ற கருத்து கணிப்பு வாக்கெடுப்பு நடத்தினால் சீனா சார்பு நிலை பெரு வெற்றி பெறும். சிங்கள பௌத்தப் பேரினவாதிகள், இடதுசாரிகள் இந்தியாவை வெறுப்பவர்களாக உள்ளனர். சிங்கள கிறிஸ்த்தவர்களிலும் பெரும்பான்மையானோர் இந்தியாவை வெறுக்கின்றனர். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முகாமையை இந்தியாவிடம் கையளிப்பதை பௌத்த மகா சங்கம், தொழிற்சங்கங்களின் கூட்டணி, ஆளும் கூட்டணியில் உள்ள பதினொரு கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இதன் பின்னணியில் சீனா இருக்கின்றது என்பது உறுதி. பௌத்த மதவாதிகள், இடதுசாரிகள், தொழிற்சங்கங்கள் ஆகிய முன்றும் சீனா இலங்கையில் தனது ஆதிக்கத்தை செலுத்த சிறந்த நெம்பு கோலாக இருக்கும் என்பது உறுதியாவிட்டது.



இந்தியாவை முழுமையாக உதாசீனம் செய்ய முடியாது

இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவை முழுமையாக உதாசீனம் செய்ய முடியாது. கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் ஜெனீவா மனித உரிமைக் கழகத்திற்கு வரும்போது இலங்கைக்கு சார்பாக சீனாவிலும் பார்க்க இந்தியா அதிக நாடுகளைத் திரட்டியது. மஹிந்த ராஜ்பக்சேவை பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவியில் அமர்த்துவதற்கும் இந்தியா கடுமையாக உழைத்திருந்தது. மேற்கு நாடுகள் இலங்கையை கையாளும் பொறுப்பை இந்தியாவிடம் கையளித்துள்ளனர். இந்தியாவிற்கு ஆதரவாக அவர்கள் இலங்கை விவகாரத்தில் செயற்படுவார்கள்.

விமல் தன் கட்சியை வலிமைப்படுத்த முனைகிறாரா?

இலங்கையில் சிறிய கட்சிகள் தனித்துப் போடியிடும் போது படு தோல்வியும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போடியிடும் போது பெரு வெற்றியும் அடைவது வழமை. இது என் எம் பெரேரா, பீட்டர் கெனமன் போன்றவர்களின் தலைமையில் இருந்த கட்சிகளுக்கும் ஏற்பட்டது. இது விமல் வீரவன்சவிற்கு நன்கு தெரியும். விமல் வீரவன்ச தனது கட்சியை வலிமைப் படுத்தவே ராஜபக்சேக்களின் பொதுமக்கள் முன்னணியில் தலைமை மாற்றத்தை வலியுறுத்துகின்றார் என்பது இலங்கையில் அரசியல் வரலாறு அறியாதவர்கள் சொல்லும் வியாக்கியானமாகும். விமலின் பேச்சு அவரது கட்சியை ஆளும் கூட்டணியில் இருந்து விலக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்த – கோத்தபாய பிளவு அவர்களது ஆட்சிக்கும் குடும்பத்திற்கும் எந்த அளவு ஆபத்தானது என்பதை அவர்கள் இருவரும் நன்கு அறிவர். விமலுக்கு பின்னாள் வலிமை மிக்க யாரோ ஒருவர் இல்லாமல் அவர் இப்படித் துணிந்து ஒரு பெரிய கட்சியின் தலைமைக்கு சினம் கொள்ளச் செய்யும் கருத்தை தெரிவித்திருக்க மாட்டார்.

கட்சிப் பிளவைக் காட்டி ஜெனீவாவில் இருந்து தப்பும் தந்திரமா?

இலங்கை ஆட்சியாளர்கள் தமது ஆளும் கட்சிக்குள் பிளவு இருப்பதால் ஜெனீவா மனித உரிமைக் கழகத்தின் வேண்டுகோள்களை நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றது என்று சொல்வதற்காக விமல் வீரவன்சவை வைத்து நாடகமாடுகின்றார் என சில போதிய உலக அரசியல் அறிவற்றவர்கள் போதிக்கின்றார்கள். மனித உரிமைக் கழகத்தின் கூட்டத்தில் தமது கட்சிய்ப் பிரச்சனையை முன்வைப்பது முடியாத காரியம் மட்டுமல்ல நகைப்புக்குரியது.  மற்ற நாடுகளின் மனித உரிமைக் கழக உறுப்பினர்களிடம் இப்பரப்புரையை வெளியில் செய்யலாம். ஆனால் சீனா பக்கம் சாய்ந்து கொண்டிருக்கும் ஓர் ஆட்சியாளர்களின் கட்சிக்குக்குள் பிளவு என்பது மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும். அதனால் கட்சிப் பிளவை வைத்து ஜெனீவானில் இலங்கையால் பிச்சை எடுக்க முடியும் எனச் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சீனா தனது ஆதிக்கத்தை இலங்கையில் அதிகரிக்கின்றது என்பது மட்டுமல்ல இந்தியாவை இலங்கையில் இருந்து அகற்ற முயல்கின்றது என்பதற்கு ஆதாரமாக திருகோணமலை எரிபொருள் குதங்களை இலங்கை இந்தியாவிடமிருந்து மீளப் பெறுவது எடுத்துக் காட்டுகின்றது. தீவிர சிங்கள் பௌத்த தேசியவாதியான ஆற்றல் துறை அமைச்சர் உதய கம்மன்பிலவும் சீனா சார்பானவரே.




Sunday 14 February 2021

சீனாவிற்கு எதிராக அமெரிக்காவின் அடுத்த நகர்வு

 


அமெரிக்காவில் அருமண் மூலகங்கள் (RARE EARTH ELEMENTS) (REE) பதப்படுத்துவதை ஊக்குவிக்க அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் முப்பது மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. அமெரிக்காவின் அருமண் மூலகங்களின் தேவையின் எண்பது விழுக்காட்டிற்கும் அதிகமானவை சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. அமெரிக்க சீன வர்த்தகப் போரின் ஒரு பகுதியாக சீனாவில் இருந்து அருமண் மூலகங்களை இறக்குமதி செய்வதை தவிர்ப்பதறகன பல நடவடிக்கைக்களை அமெரிக்கா எடுத்து வருகின்றது. உலகின் அருமண் மூலகத்திற்கான மொத்த தேவையான 165,000 தொன்கள் 3.4பில்லியன் டொலர்கள் பெறுமதியானதாகும். உலகில் அதிக அளவு அருமண் மூலகத்தை அமெரிக்கா இறக்குமதி செய்கின்றது.

 


அருமண் மூலகங்கள்

உலகில் அருமண் மூலகங்களின் இருப்பு மிகவும் குறைவானது. அருமண் மூலகங்கள் என்பவை 17வகையான பிரித்தெடுப்பதற்கு அரிதான மூலகங்கள் ஆகும். அருமண் மூலகங்களை சுத்தப்படுத்தி பாவனைக்கு ஏற்றவகையில் தயாரிக்கும் போது சூழல் பெருமளவில் மாசுபடும். அருமண் மூலகங்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே போகின்றது. புதிய உலகத் தொழில்நுட்பக் கட்டிடத்தின் செங்கட்டிகளாகத் திகழ்பவை அருமண் கனிமங்கள் ஆகும். 17வகையான கனிமங்கள் அருமண் கனிமங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. கைப்பேசிகள், போர்விமானங்கள், புற்றுநோய் மருந்துகள், காற்று-மின் பிறப்பாக்கிகள், மின்சாரக் கார்கள், லேசர் கருவிகள், இரவில் பார்க்கும் கண்ணாடிகள் கணினிகள், வழிகாட்டல் ஏவுகணைகள் எனப் பலதரப்பட்ட பொருட்கள் அருமண் கனிமங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. ஸ்கண்டியம், யெட்ட்ரியம், லந்தனம், செரியம், பிரசியோடைமியம், நியோடைமியம், புரேமெத்தியம், சமரியம், யூரோப்பியம், கடோலினியம், ரெர்பியம், டைஸ்ப்புரோசியம், ஹொமியும், ஏர்பியம், தூலியம் யெடெர்பியம், லூட்டெட்டியம் ஆகியவை அருமண் மூலகங்களாகும். தங்கத்தை சுரங்கத்தில் அகழ்ந்து எடுப்பது போல் இலகுவானது அல்ல. பாதுகாப்புக் குறைந்த கதிர்வீச்சு நிறைந்த சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட மணலில் இருந்து அமிலங்கள் மூலம் தொடர்ச்சியாக கழுவப்பட்ட்டு அருமண் மூலகங்கள் எடுக்கப்படும். இது சூழலை மிகவும் மோசமாக மாசுபடுத்தும்.

 

உங்களது கைப்பேசியில் அழைப்பு வரும்போது அதை அதிரச் செய்வது Neodymium மற்றும் டைஸ்புரொசியம் என்னும் அருமண் மூலகங்களாகும். அருமண் மூலகங்களில் இருந்து உருவாக்கப்பட்ட நிரந்தரக் காந்தங்கள் கணினிகளைச் சிறியதாக்க ஏதுவாக அமைந்தன. விமானங்களை பாரம் குறைந்தவையாகவும் வலிமையானதாகவும் உருவாக்க அருமண் மூலகங்கள் பயன்படுகின்றன. மருத்துவத்துறையில் எஸ்-ரே, ஒளிவருடி (X-ray and MRI scanning) போன்றவற்றிற்கு அருமண் மூலகங்கள் பாவிக்கப்படுகின்றன. உலகின் முன்ன்ணி போர் விமானங்கள் வழிகாட்டல் ஏவுகணைகள் போன்றவற்றிற்கு அருமண் மூலிகங்கள் இன்றியமையாதவை.

 

                      

சீனாவின் கழுவலும் நழுவலும்

1992-ம் ஆண்டு சீனாவில் அருமண் மூலகங்கள் கண்டறியப்பட்ட போது சீன அதிபர் டெங் மத்திய கிழக்கிற்கு மசகு எண்ணெய் போல சீனாவிற்கு அருமண் மூலகங்கள் அமையும் என்றார். அமெரிக்காவின் கலிபோர்ணியா மாநிலத்தின் MOUNTAIN PASS என்னும் இடத்தில் அருமண் மூலகங்கள் அகழப்பட்டன. கடுமையான ஊழியர் பாதுகாப்பு மற்று சூழல் பாதுகாப்பு விதிகளால் அமெரிக்காவில் உற்பத்திச் செலவு அதிகம். இந்த ஊத்தை வேலையை சீனர்கள் செய்யட்டும் என அங்கிருந்து மணல் எடுத்து சீனாவிற்கு அனுப்பி கழுவப்பட்டது. 1992இல் உலக அருமண் இருப்பில் 80விழுக்காடு சீனாவின் காணப்பட்டது. தற்போது 43%இலும் குறைவு. ஒஸ்ரேலியா, இரசியா, பிரேசில், கிரீன்லாந்து உட்படப் பல நாடுகளில் அருமண் மூலகங்கள் காணப்படுகின்றன. சீனாவின் அருமண் மூலகங்கள் தூய்மைப் படுத்திய இடங்கள் பெருமளவு சூழல் அசுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. அங்கு சிவப்பு நிற கழிவு நீர் கொண்ட பெரும் ஏரிகள் உருவாகியுள்ளன. அதனால் நிலத்துக்கடி நீர் அமில மயப்படுத்தப்பட்டு சுற்றவுள்ள பெருமளவு நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அந்த இடங்களில் பெருமளவு மண்ணரிப்பும் ஏற்பட்டுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சீனா பொருளாதார மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சூழல் மாசுபடுவதை பெரிது படுத்தாமல் இருந்தது. ஒஸ்ரேலியா தனது நாட்டில் கண்டறியப்பட்ட அருமண் மூலகங்களை தனது நாட்டில் தூய்மைப் படுத்தாமல் மலேசியாவில் தூய்மைப் படுத்தியது. பின்னர் அங்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

 

வர்த்தகப் போரும் அருமண் மூலகங்களும்                           சீனாவிற்கு எதிரான வர்த்தகப் போரில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை அதிகரிக்கும் போது அருமண் மூலகங்களுக்கான வரி அதிகரிக்கப்படவில்லை. அந்த அளவிற்கு மலிவான விலையில் அருமண் கிடைக்க வேண்டும் என்ற அவசியம் இருந்தது. அமெரிக்க நிறுவனமான MP Materials சீனாவிற்கு கழுவ அனுப்பும் அருமண் மூலகங்கள் மீதான வரியை சீனா 10%இல் இருந்து 25% ஆக அதிகரித்து விட்டது. அமெரிக்காவின் அடுத்த சுற்று வரி அதிகரிப்பில் அருமண் மூலகங்களும் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீனா அருமண் ஏற்றுமதியைத் தடை செய்வதன் மூலம் அமெரிக்காவிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என சீன ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. உலகத்தின் தங்க இருப்பிலும் பார்க்க 15,000 மடங்கு இருப்பில் உள்ளது. இதனால் சீனா வர்தகப் போரில் தனது படைக்கலனாக கையில் எடுத்துள்ள அருமண் கனிம வள ஏற்றுமதி மிகவும் வலிமை குறைந்ததாகும். 2010-ம் ஆண்டு சீன மீன்பிடிப்படகுகளை கிழக்குச் சீனக் கடலில் ஜப்பான் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அருமண் மூலகங்களை சீனா தடை செய்தது. அதனால் ஜப்பானில் மின்சாரக் கார் உற்பத்தி, காற்றாடி ஆலைகள், வழிகாட்டல் ஏவுகணைகள் ஆகியவற்றின் உற்பத்தி பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டொயோட்டா கார் உற்பத்தி நிறுவனம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலகங்களுக்கு பதிலாக வேறு வழிகளில் தனது உற்பத்தியை செய்பும் வழியைக் கண்டறிந்து கொண்டது.


டெக்ஸஸ் மாநிலம்

 2020-ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் அமெரிக்காவின் டெக்ஸ்ஸ் மாநிலத்தில் உள்ள அல் பசோ என்னும் இடத்தில் 1250 அடி உயரமான ஒரு மலையில் பெருமளவு அருமண் மூலகங்கள் கண்டறியப்பட்டன. அங்குள்ள அருமண் மூலகங்கள் அமெரிக்காவின் முழுத்தேவையையும் 130 ஆண்டுகள் நிறைவு செய்யக் கூடியவை. அங்கு நிலையான காந்தம் தயாரிக்க தேவையான மூலகங்களும் பெருமளவில் இருக்கின்றன. 2019-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு அருமண் மூலகங்கள் ஏற்றுமதிய செய்வதை தடை செய்வேன் என சீன அதிபர் சீ ஜின்பிங் மறைமுக மிரட்டலை விடுத்திருந்தார். 2019-ம் ஆண்டு சீனர்களின் அருமண் மூலக உற்பத்தி ஒரு பில்லியன் டொலர் பெறுமதியானதாகும்.

பதப்படுத்துவதில் புதிய தொழில்நுட்பம்

2017-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா சீனாவில் அருமண் மூலகங்களுக்கு தங்கியிருப்பதை தடுக்க தனது அவசர ஆணையை வெளிவிட்டார். அதன் படி அமெரிக்காவின் அருமண் மூலங்களின் பல ஆண்டுகளுக்கு தேவையான கையிருப்பை உருவாக்கும் திட்டம் தீட்டப்பட்டது. தற்போது அமெரிக்காவில் அதிக அருமண் இருப்பு கண்டறியப் பட்டுள்ளபடியால் அதை தூய்மையாக்குவதுதான் சவாலாக உள்ளது. சூழல் மாசுபடாமல் அருமண் மூலகங்களை தூய்மைப் படுத்துவதற்கு உரிய வகைகளை கண்டறிய அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் முப்பது மில்லியன் டொலர்களை ஒதுக்கி தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்படுகின்றது. இதன் மூலம் அமெரிக்காவின் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமெரிக்காவிலேயே மூலகங்கள் பிரித்தெடுக்கப்பட்டு தூயமைப்படுத்தப் படும்.

 

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...