Followers

Monday 31 January 2022

இரசியாவிற்கு எதிரான பொருளாதார தடை பயன் தருமா?

 



உக்ரேன் எல்லையில் இரசியா மொத்தமாக ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட படையினரைக் கொண்ட 56 முதல் 70 வரையிலான உத்திசார் சமரணிகளை (Battalion Tactical Group) நிறுத்தி வைத்துக் கொண்டு தாம் உக்ரேனை ஆக்கிமிக்கப் போவதில்லை எனச் சொல்கின்றது. நேட்டோ அமைப்பில் உக்ரேனை இணைக்கக் கூடாது இரசியாவின் எல்லையில் உள்ள நேட்டோ நாடுகளில் குறுந்தூர மற்றும் நடுத்தர ஏவுகணைகளை நிறுத்தக் கூடாது என்பவை உள்ளிட்ட பல நிபந்தனைகளைக் கொண்ட ஓர் ஒப்பந்த நகலை இரசியா ஒரு தலைப்பட்சமாகத் தயாரித்து அதில் நேட்டோ நாடுகள் கையொப்பமிட வேண்டும் என இரசியா நிர்ப்பந்திக்கின்றது. மொத்தத்தில் உக்ரேனின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு நேட்டோவை இரசியா மிரட்டுகின்றது.

இரசியா வேண்டுவது

உக்ரேனை மட்டுப்படுத்தப் பட்ட இறைமையுள்ள நாடாகவும் இரசியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகவும் இரசியாவிற்கான கவசப் பிரதேசமாக இருக்கக் கூடியதாக மற்றுவதற்காகவே இரசிய அதிபரு புட்டீன் தன் படைநகர்வுகளைச் செய்துள்ளார். 2000-ம் ஆண்டே இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியப் படைத்துறையை ஈடு இணையற்றதாக மேம்படுத்தும் இருபது ஆண்டு திட்டத்தை வகுத்திருந்தார். அத்திட்டம் 2020இல் நிறைவேற்றப்பட்டு சோவியத் ஒன்றியம் போல் மீளவும் ஒரு வலிமை மிக்க நாடுகளின் ஒன்றியத்தை உருவாக்கும் முகமாக 2021 மார்ச் மாதம் உக்ரேனிய எல்லையில் இரசியப்படைகள் குவிப்பது ஆரம்பமானது. அது 2021இன் இறுதியில் ஒரு இலட்சமாக அதிகரிக்கப்பட்டது. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் டொன்பாஸ் பிரந்தியத்தில் 2014-ம் ஆண்டில் இருந்து ஒரு பிரிவினைவாதப் போர் நடக்கின்றது. அதை ஒரு தனிநாடாக இரசியா ஏற்றுக் கொண்டுள்ளது. அதை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்லவில்லை. அங்குள்ள அரசுக்கு ஒரு சிறப்பு நிலை உருவாக்குவதும் இரசியாவின் நோக்கமாக இருக்கின்றது. உக்ரேனை இரசியாவில் இருந்து பாதுகாக்க நேட்டோப் படைகள் களமிறங்க மாட்டாது என நேட்டோ தெரிவித்துள்ளது. இரசியா தனது நிலப்பரப்பில் மட்டுமல்ல தனது நட்பு நாடான பெலரஸிலும் தான் ஆக்கிரமித்து வைத்துள்ள கிறிமியாவிலும் கருங்கடலிலும் அஜோவ் கடலிலும் உக்ரேன் மீது தாக்குதல் நடத்த தன் படையினரைக் குவித்து வைத்துள்ளது.

ஏவுகணைப் பிரச்சனை

பாயும் தூரங்களை அடிப்படையாக வைத்து மரபுவழி ஏவுகணைகளும் அணுக்குண்டு தாங்கிச் செல்லும் ஏவுகணைகளும் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

1. நடுத்தரதூர ஏவுகணைகள் 1000-5500 கிமீ (620-3420மைல்)

2. குறுந்தூர ஏவுகணைகள் 500-1000கிமீ (310-620மைல்)

3.  கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் இவை 5500கிமீ (3400) மைல்களுக்கு மேல் பாயக் கூடியவை.

அமெரிக்காவும் இரசியாவும் இந்த அணுக்குண்டு உற்பத்தியை மட்டுப்படுத்த சீனா அவற்றின் உற்பத்தியை அதிகரித்தது. இதை சாட்டாக வைத்துக் கொண்டு அமெரிக்கா நடுத்தர தூர ஒப்பந்த த்தில் இருந்து வெளியேறியது. அமெரிக்கா இரசியாவின் எல்லை நாடுகளில் நடுத்தர தூர அணுக்குண்டு தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை நிறுத்தக் கூடாது என்பது இரசியாவின் வேண்டுகோள்களில் ஒன்றாக இருக்கின்றது.

பொருளாதாரத் தடைகளுக்கான முன்னேற்பாடுகள்

அமெரிக்கப் நாடாளுமன்றத்தின் மூதவை உறுப்பினரகள் இரசியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பதற்கான சட்ட மூலத்தை தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். சில பொருளாதாரத் தடைகள் உக்ரேன் மீது இரசியா ஆக்கிரமிப்பு நகர்வுகளைச் செய்ய முன்னரே நடைமுறைப்படுத்தப்படும். இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை கத்தியில் நடப்பதைப் போலாகும். இரசியாவின் எரிபொருள் உற்பத்தியையும் ஏறுமதியையும் பாதிக்க்க கூடிய வகையில் பொருளாதாரத் தடை கொண்டு வந்தால் அது அமெரிக்கா உட்பட உலக பொருளாதாரத்தை பாதிக்கும். இரசியாவில் பணவீக்கம், பங்குச் சந்தைச் சரிவு, போன்றவற்றை ஏற்படுத்தக் கூடிய வகையில் பொருளாதாரத் தடை செய்வது பற்றி தீவிர ஆலோசனகள் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் செய்யப்படுகின்றன. இரசியாவின் பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது பொருளாதாரத்தடை கொண்டு வருவதுடன் புட்டீன் உட்பட இரசியாவில் உள்ள பெரும் செல்வந்தர்களின் மீதும் பொருளாதாரத் தடை மற்றும் பயணத்தடை விதிக்கப்படலாம். இரசிய திறைசேரி விற்பனை செய்யும் கடன் முறிகள் மீதான முதலீட்டிற்கும் தடை விதிக்கப்படலாம். பிரித்தானியாவிலும் 2022 பெப்ரவரி முதலாம் திகதி இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத்தடை கொண்டு வருவதற்கான சட்டஙகள் நிறைவேற்றப்படலாம். இரசியப் பொருளாதாரத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் அதற்கான ஏற்றுமதிகள் மீது தடை விதிக்கப்படலாம். கொவிட்-19 தொற்று நோயினால் உருவான பல பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியாமல் இருக்கும் மேற்கு நாடுகளுக்கும் இரசியா மீதான பொருளாதாரத் தடை பாதிப்பை ஏற்படுத்தலாம்.

SWIFT கொடுப்பனவு முறைமையில் இருந்து விலக்கல்

உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் பன்னாட்டு கொடுப்பனவு அமைப்பான Society for Worldwide Financial Telecommunication (SWIFT)இல் இருந்து இரசியா வெளியேற்றப்படலாம். 2014-ம் ஆண்டு அமெரிக்கா இரசியாவை SWIFTஇல் இருந்து வெளியேற்ற முற்பட்ட போது அப்படிச் செய்தால் அமெரிக்காவுடனான எல்லா அரசுறவியல் தொடர்புகளையும் துண்டிப்பேன் என்ற பதில் மிரட்டலை புட்டீன் விடுத்தார். இரு அணுக்குண்டு வல்லரசுகள் தொடர்பாடல் அற்ற நிலையில் இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று என்ற படியால் அமெரிக்கா தனது நடவடிக்கையை நிறுத்தியது. மீண்டும் அதைச் செய்யும் முயற்ச்சியில் அமெரிக்கா இணங்கலாம். இரசியா மீது ஒரு பொருளாதாரப் போர் தொடுக்க அமெரிக்கா முயன்கின்றது. 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனின் கிறிமியாவை ஆக்கிரமித்த போதும் அதற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இரசிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் இரசியா விட்டுக்கொடுக்கவில்லை.

தயார் நிலையில் உள்ள இரசியா

2014இன் பின்னர் இரசியா தனது வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை அதிகரித்துள்ளது. தற்போது அது $639 பில்லியனாக உள்ளது. இரசியாவின் வெளிநாட்டுக்கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 20% மட்டுமே. அமெரிக்காவின் கடன் 133% ஆகும். 2014இன் பின்னர் இரசியா தனது உள்நாட்டு உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியை பெருமளவு அதிகரித்துள்ளது. சீனாவிற்கான இரசிய ஏற்றுமதி ஆண்டுக்கு $100பில்லியனாக உயர்ந்துள்ளது. சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தையும் இரசியா அதிகரித்துள்ளது. கணினிகளின் இதயமான குறைகடத்திகள் (Semi-conductors) உற்பத்தியில் அமெரிக்கா, தைவான், தென் கொரியா ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. அவற்றை இரசியாவிற்கு ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தால் அதில் இருந்து விடுபட இரசியாவும் சீனாவும் இணைந்து செயற்படலாம்.

இரசியர்கள் பல நெருக்கடிகளை தாங்கி நிற்கும் ஆற்றலும் தேசப்பற்றும் உள்ளவர்கள். மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்படும் இரசியர்கள் இரசிய ஆட்சியாளர்கள் மீது வெறுப்புக் கொள்வார்கள் என அமெரிக்கா நினைக்கின்றது. அதேவேளை இரசியர்களுக்கு மேற்கு நாடுகள் மீது உள்ள வெறுப்பை மேலும் அதிகரிக்கச் செய்யலாம்.

Thursday 20 January 2022

சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல் வலிமையற்றதா?

 


அமெரிக்க கடற்படைத் தளபதி ரோய் கிச்சினர் 2022 ஜனவரி 11-ம் திகதி நடந்த கடற்படையினரின் மாநாடு ஒன்றில் வெளியிட்ட தகவல் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வலிமையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. சீனாவிடம் லியோனிங், ஷண்டோங் என்னும் இரு விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. விமானம் தாங்கிக் கப்பலின் வலிமை 1. அது தாங்கிச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 2. அவ்விமானங்களின் வலிமை, 3. படைக்கலன்களின் அளவு 4. கப்பலின் இயங்கு வலிமை 5. அதை சுற்றிவரும் பரிவாரக் கப்பல்கள் போன்றவற்றில் தங்கியுள்ளன.

விமானம் தாங்கி - சிங்கிளாக வராத சிங்கம்

விமானம் தாங்கிக் கப்பல்கள் தனித்துப் பயணிப்பதில்லை. அவற்றை சுற்றி ஒரு பெரும் பரிவாரம் எப்போதும் இருக்கும். அவை விமானம் தாங்கிக் கப்பலுக்கு பல வட்டப் பாதுகாப்பை வழங்கும். விமானந்தாங்கிக் கப்பல்கள் நீருக்குக் கீழ், நீர் மேற்பரப்பு, வான்வெளி ஆகியவற்றில் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இவற்றைத் தடுக்க பல நாசகாரிக் கப்பல்கள் ஈடுபடுத்தப்படும். அத்துடன் குறைந்தது ஒரு frigate கப்பலாவது இருக்கும். மொத்தக் கப்பல்களையும் Carrier Battle Group என அழைப்பர். விமானம் தாங்கிக் கப்பலை எதிரியின் விமானங்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ஒரு Guided Missile Cruiser  என்னும் வழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல் அந்தப் பரிவாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும். Light Airborne Multi-Purpose System என்னும் முறைமை கொண்ட கப்பல் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் கடற்கப்பல்களில் இருந்தும் பாதுகாக்கும். பல உலங்கு வானூர்திகள் விமானந்தாங்கிக் கப்பல்களுக்குச் சுற்றவர உள்ள கடற்பரப்பின் கீழ் உள்ள பகுதிகளை இலத்திரனியல் கருவிகளால் பார்வையிட்டுக் கொண்டே இருக்கும்.

நீலத் தண்ணீர் கடற்படை

1980களின் ஆரம்பத்தில் இருந்து பொருளாதாரத்தில் மிகப்பாரிய வளர்ச்சியை ஆரம்பித்த சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கின்றது. ஏற்றுமதி செய்யவும் ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்யவும் சீனாவும் தனது கடற்போக்குவரத்தின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது. அதற்கு ஏற்ப சீனா தனது கடற்படையை தற்போது எண்ணிக்கை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கடற்படையாக உயர்த்தியுள்ளது. வெறும் எண்ணிக்கை மட்டும் வலிமையை முடிவு செய்ய மாட்டாது. கடற்படையின் தொழில்நுட்ப மேம்பாடும் மிக அவசியமானதாகும். 1990களின் சீனாவின் கடற்படை பழுப்புப் தண்ணீர் கடற்படை என்ற நிலையில் இருந்து நீலத் தண்ணீர் கடற்படை என்ற நிலைக்கு தற்போது உயர்ந்தது. நாட்டின் உட்புறத்தில் உள்ள கடல் மற்றும் ஆறு போன்ற நீர்நிலைகளில் செயற்படும் கடற்படையை பழுப்புப் தண்ணீர் கடற்படை (Brown Water Navy) எனவும் நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாக்கவும் ஆதிக்கம் செலுத்தவும் கூடிய கடற்படையை பசுமைத் தண்ணீர் கடற்படை (Green Water Navy) எனவும் உலகெங்கும் உள்ள ஆழக்கடல்கள் எல்லாவற்றிற்கும் சென்று ஆதிக்கம் செலுத்தக் கூடிய கடற்படையை நீலத் தண்ணீர் கடற்படை (Blue Water Navy) எனவும் அழைப்பர்.

அமெரிக்க சீன விமானம் தாங்கி கப்பல்கள்

சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலான லியோனிங் வெறும் பயிற்ச்சிக் கப்பல் மட்டுமே என கிண்டல் செய்வோரும் உண்டு. லியோனிங் தாங்கிச் செல்லும் Shenjang J-15 போர்விமானங்களால் ஆகக் கூடியது 4000இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களை மட்டுமே தாங்கிச் செல்ல முடியும். ஆனால் அமெரிக்காவின் விமானம் தாங்கிகளில் பாவிக்கப்பட்ட F/A-18 போர்விமானங்களால் 12,000இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களைத் தாங்கிச் செல்ல முடியும். அமெரிக்காவின் நிமிட்ஸ் வகையைச் சேர்ந்த விமானம் தாங்கிக் கப்பலில் 64 F/A-18 விமானங்களைத் தாங்கிச் செல்ல முடியும். லியோனிங்கில் 26 Shenjang J-15 போர்விமானங்களை மட்டுமே தாங்கிச் செல்ல முடியும். சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலான ஷாண்டோங்கால் 44 Shenjang J-15 போர்விமானங்களைத் தாங்கிச் செல்ல முடியும். கடற்போரில் பயிற்ச்சியும் நேரடி அனுபவமும் பெற்ற ஒரு அட்மிரலின் தலைமையில்தான் விமானம் தாங்கிக் கப்பலும் அதன் பரிவாரக் கப்பல்களும் இயங்கும். எந்த ஒரு கடற்போர் அனுபவமும் இல்லாத சீனக் கடற்படையில் எவரையும் அட்மிரல் என அழைக்க முடியாது என சீனாவை சில படைத்துறை ஆய்வாளர்கள் கிண்டலடிப்பதும் உண்டு.

Close Encounter

2021 ஏப்ரல் மாதம் தென்சீனக் கடலில் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலான லியோனிங்கிற்கு கண்ணால் பார்க்கக் கூடிய வகையில் அண்மையாகச் சென்ற அமெரிக்காவின் நாசகாரிக் கப்பலான USS Mustin லியோனிங்கின் செயற்படு திறன் மட்டுப்படுத்தப் பட்ட அளவில் உள்ளது எனக் கண்டறிந்துள்ளதாக அமெரிக்க கடற்படை அறிவித்தது. அமெரிக்க நாசகாரி லியோனிங்கை சாதரண ஒளிபடப் பதிவுக் கருவியால் படம் பிடித்துள்ளது. ஒரு வலிமை மிக்க விமானம் தாங்கியைச் சுற்றியுள்ள நாசகாரிக் கப்பல்கள் எதிரியின் கப்பல்களை விமானம் தாங்கிக்கு அண்மையில் செல்லாமல் தடுத்துவிடும். ஒரு தனி நாசகாரி எதியின் விமானம் தாங்கிக்கு அண்மையில் செல்வது அந்த விமானம் தாங்கியில் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 2021இன் ஆரம்பத்தில் லியோனிங்கை கண்காணிக்கும் பணியில் அமெரிக்க கடற்படையினர் தமது USS Mustin என்னும் பற்பணி நாசகாரிக்கப்பலை ஈடுபடுத்தினர். USS Mustin என்பது Arleigh Burke-Class guided missile destroyer ஆகும். இந்த வகுப்பைச் சேர்ந்த நாசகாரிகள் Aegis Combat System என்னும் வலிமை மிக்க கணினிகளாலும் உயர் உணர் திறன் கொண்ட கதுவிகளாலும் (ரடார்கள்) இயங்கும் ஏவுகணைகளைக் கொண்டவை. அவ் ஏவுகணைகள் எதிரியின் இலக்குகளை துல்லியமாக தாக்கக் கூடியவை.

கப்பல்களில் இருந்து விமானங்களைச் செலுத்தும் முறைமைகள்

இதுவரை மூன்று முறைகள் மூலம் விமானங்களில் இருந்து கப்பல்கள் பறந்து செல்லும். முதலாவது பொதுவாக விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து விமானங்கள் கிளம்பும் போது சிறு தூரம் ஓடிப் பறக்க ஆரம்பித்தல். இரண்டாவது  நீராவிக் கவண் அதாவது steam catapult என்னும் தொழில் நுட்பம். ஆடு மேய்ப்பவர்கள் V வடிவத் தடியில் இறப்பர் கட்டி செய்யும் கவணில் இருந்து கல் வீசுவது போல விமானங்கள் பறக்கச் செய்யப்படும். மூன்றாவது EMALS முறைமை. இதில் விமானம் தாங்கிக் கப்பலில் அணுவலுவால் மின்காந்த தொழில் நுட்பம் மூலம் விமானத்தைப் பறக்கச் செய்யப்படும். இதனால் இரண்டு முதல் நாற்பது தொன் வரையான எடையுள்ள ஒரு விமானம் ஒரு சில நொடிகளில் மணிக்கு இருநூற்றி இருபது கிலோ மிட்டர் வேகத்தைப் பெறும். நீராவிக் கவண் தொழில் நுட்பப்படி ஆகக் கூடியது பதினெட்டுத் தொன் எடையுள்ள விமானங்களை மட்டுமே செலுத்த முடியும். சீனா உருவாக்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலில் EMALS முறைமை இணைக்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனியே வந்த ஒரு நாசகாரிக் கப்பல்களை எதிர் கொள்ள முடியாத சீனாவின் விமானம் தாங்கி கப்பல் Carrier Battle Group என அழைக்கப்படும் பல கப்பல்கள் சூழ ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களுடன் வரும் அமெரிக்கா, பிரித்தானியா போன்றவற்றின் விமானம் தாங்கி கப்பல்களை எப்படி எதிர் கொள்ளப்போகின்றது? சீனா விமானம் தாங்கி உற்பத்தித் துறை இப்போது தவழும் நிலையில்தான் இருக்கின்றதா?

Tuesday 18 January 2022

இலங்கையில் சீனா மறைமுக படைத்தளம் அமைக்குமா?

 


சீனாவின் அரசுறவியல்(Diplomatic) நகர்வுகள் எப்போது தொலைநோக்கமும் உள்நோக்கமும் கொண்டவையாகவும் நீண்ட கால அடிப்படையில் செய்யப்படுபவையாகவும் இருக்கும். இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளாக சீனா செய்யும் நகர்வுகள் ஐயத்திற்கு இடமானவையாக இருக்கின்றன. சிறிது சிறிதாக இலங்கையை தனது முழுமையான பிடிக்குள் சீனா கொண்டுவர முயல்வது போன்ற தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையை இந்தியாவின் பிராந்தியமாக அமெரிக்கா ஏற்றுக் கொண்டது போல் செயற்பட்டாலும் இலங்கையை இந்தியா தனித்து கையாள முடியாது என்பதாலும் இலங்கையை இந்தியாவை தனித்து கையாள்வதை அமெரிக்கா விரும்புவதில்லை என்றபடியாலும் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றுபட்டு இலங்கையை சீனாவின் பிடிக்குள் செல்வதற்கு எதிரான நகர்வுகளைச் செய்கின்றன. இருந்தும் இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றை ஒன்று நம்பும் நிலையில் இன்னும் இல்லை.

இலங்கை சீன உறவு

SWRD பண்டாரநாயக்கவின் ஆட்சியின் போது 1957 பெப்ரவரியில் இலங்கையில் சீனத் தூதுவரகம் திறக்கப்பட்டது. அதில் இருந்து இரு நாடுகளுக்குமிடையில் ஒரு முறைசார் உறவு ஆரம்பமானது. இரு தரப்பு வர்த்தகங்கள் அப்போது முக்கிய பங்கு வகித்தது. சீனாவிற்கு இலங்கையில் இருந்து இரப்பரும் இலங்கைக்கு சீனாவில் இருந்து அரிசியும் விற்பனை செய்யப்பட்டன. இலங்கையில் சீனா தனது பொதுவுடமைவாதத்தை பரப்ப காத்திரமான முயற்ச்சி எடுத்ததில்லை. ரொஹண விஜயவீர தலைமையில் இலங்கையில் செய்த பொதுவுடமைப் புரட்சிக்கு சீனா உதவி செய்யவில்லை. அது உதவி செய்திருந்தால் விஜயவீரா தலைமையில் நடந்த புரட்சியின் முடிவு வேறு விதமாக அமைந்திருந்திருக்கலாம். தோழர் சண்முகதாசனின் சீன சார்பு பொதுவுடமைக் கட்சியில் ஒரு முண்னணி உறுப்பினராக தோழர் விஜயவீர இருந்திருந்தார். சிங்களவர்கள் இலங்கையின் எல்லாச்சூழலில் நட்பாக இருக்கும் நாடாக சீனாவைப் பார்க்கின்றனர். 1983இல் இருந்து 2009வரை இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இலங்கைக்கு சீனா பேருதவி செய்தது. அதன் பின்னர் உலக அரங்கில் குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பாக இலங்கைக்கு ஏற்படும் நெருக்கடிகளை எதிர் கொள்ள சீனாவைப் போல் வேறு எந்த நாடும் நேரடியாக உதவி செய்வதில்லை. 2019-ம் ஆண்டு இலங்கைக்கான சீனத் தூதுவர் இலங்கையை எந்த ஒரு நாடும் மிரட்ட நாம் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

ஆரம்பப்புள்ளியாக அம்பாந்தோட்டை?

சீனா இலங்கை மீது செய்த கேந்திரோபாய நகர்வு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அது செய்த முதலீடு ஆகும். அமெரிக்காவின் கடற்படை வலிமையை தனது நீர்மூழ்கிக் கப்பல் படை மூலம் எதிர் கொள்ளும் சீனாவின் கேந்திரோபாயத்திற்கு அமைய அம்பாந்தோட்டை துறைமுகம் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட்டது. சீனா மியன்மாரின் சிட்வே, பங்களா தேசத்தின் சிட்ட கொங், இலங்கையின் அம்பாந்தோட்டை, பாக்கிஸ்த்தானின் குவாடர் ஆகிய துறைமுகங்களில் சீனா செய்த முதலீடு முத்துமாலைத் திட்டம் என அழைக்கப்படுகின்றது. அவற்றின் பூகோள அமைப்பைப் பார்த்த போது அது இந்தியாவின் கடற்பாதுகாப்பின் கழுத்துக்கான சுருக்குக் கயிறு போல் தோற்றமளித்தது. சீனா அம்பாந்தோட்டை துறைமுகம் இரு தரப்பிற்கும் நன்மையளிக்கக் கூடிய வர்த்தக நோக்கங்களைக் கொண்டது என தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

இந்தியாவிற்கு மிக அருகில் சீனா

கொழும்புத் துறைமுகத்தின் அதிக இலாபகரமான Colombo International Container Terminal (CICT) என்னும் தெற்கு முனையம் சீனாவின் China Merchant Holding நிறுவனத்திற்கு 2011இல் விற்பனை செய்யப்பட்டது. முதலில் சீன நிறுவனத்திற்கு 50%, Aiken Spence நிறுவனத்திற்கு 35% எனவும், கொழும்பு துறைமுக அதிகார சபைக்கு 15% எனவும் பன்னாட்டு முனையத்தின் உரிமை பகிரப்பட்டது. பின்னர் சீன நிறுவனம் Aiken Spence இடமிருந்து 35% உரிமத்தையும் பெற்றுக் கொண்து. சீனா அங்கு இலத்திரனியல் முறைமையிலான கப்பல் மற்றும் கொள்கலன் கையாளலை அறிமுகம் செய்தது. தெற்காசியாவில் உள்ள ஒரே ஓர் ஆழ்கடல் துறைமுகமாக Colombo International Container Terminal இருக்கின்றது. இந்திய வர்த்தக கொள்கலன் போக்குவரத்தில் 70% கொழும்பு துறைமுகத்தினூடாக நடக்கின்றது. சீனா உருவாக்கிய செயற்கைதீவாகிய கொழும்பு துறைமுக நகரமும் அதில் அமைந்துள்ள தாமரைக் கோபுரமும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. அதிலிருந்து உளவு நடவடிக்கைகளையும் மற்றும் உளவு எதிர்ப்பு நடவடிக்கைகளையும் சீனாவால் இந்தியாவிற்கு எதிராக செய்ய முடியும். கூடாங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து புது டில்லி வரை தாமரைக் கோபுரத்தில் உச்சியின் நின்று அவதானிக்க முடியும். சீனாவால் யாழ் குடாநாட்டுக் கரையோரத்திலும் ஒரு சிறிய செயற்கைத் தீவை அமைக்க முடியும். அதிலும் ஒரு உயர்ந்த கோபுரம் அமைக்கப்பட்டால் அது இந்தியாவிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையலாம். அப்படி ஒரு தீவு அமைவதை இந்தியா கடுமையாக எதிர்க்கும்.

இந்தியாவிற்கு தொல்லை கொடுக்க வழி தேடும் சீனா

சீனா தன் அயல் நாடுகளின் வான்பரப்புக்களுள் அடிக்கடி தன் விமானங்களை அனுப்பி அந்த நாடுகளின் வான் பாதுகாப்பு வலிமையையும் பொறுமையையும் சோதிப்பதுண்டு. அதே போல அயல் நாட்டுக் கடற்பரப்புக்குள் தனது கடற்படைக்கலன்களையும் மீன்பிடிப்படகுகளையும் சீனா அடிக்கடி அனுப்புவதுண்டு. இந்தியாவிற்கு அதனுடனான எல்லையில் பல சிறு ஆக்கிரமிப்புக்களை சீனா செய்வதுண்டு, இந்தியாவிற்கு சொந்தமான பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா கைப்பற்றியுள்ளதாக கருதப்படுகின்றது. இந்தியாவிற்கு வான்பரப்பில் சீனா தொல்லை கொடுப்பது குறைவு. இந்திய சீன எல்லை கடல் மட்டத்தில் இருந்து பத்தாயிரம் அடிகளுக்கும் அதிகமான உயரத்தில் இருப்பதால் அங்கு விமானங்களுக்கு இடர்மிகு சூழல் நிலவுவதால் சீனா அங்கு தொல்லை கொடுப்பதை தவிர்க்கலாம். இந்தியாவிற்கு கடல் மூலம் தொல்லை கொடுக்க சீனாவிற்கு சிறந்த இடம் இலங்கை தான். ஆனால் இலங்கையில் சீனா ஒரு பகிரங்க படைத்தளத்தை அமைப்பது ஆபத்தானது. அப்படிப்பட்ட தளங்கள் இருந்தால் அவற்றின் மீது இந்தியாவின் எப்பாகத்தில் இருந்தும் தாக்குதல் நடத்தலாம். கடல், வான், தரை ஆகிய நிலைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தலாம். 2021 டிசம்பரில் சீனா மியன்மாரிற்கு (பர்மா) இரண்டு மிங் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கியிருந்தது. சீனா ஏற்கனவே பாவித்த அந்த நீர்மூழ்கிகள் டீசலில் இயங்குபவை. இந்த வகை நீர்மூழிகளை ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு வழங்கியது அதுவே முதற்தடவை. 2017-ம் ஆண்டு பங்களாதேசம் இரண்டு நீமூழ்கிகளை சீனாவிடமிருந்து $203மில்லியன்களுக்கு வாங்கியது. 2021 நவம்பரில் சீனா PNS Turghril என்னும் இரண்டு உயர்தரப் போர்க்கப்பல்களை பாக்கிஸ்த்தானிற்கு வழங்கியது. ஏற்கனவே சீனாவிடமிருந்து பாக்கிஸ்த்தான் எட்டு நீர்மூழ்கிகளை வாங்கியிருந்தது. பாக்கிஸ்த்தான் எட்டு Frigate கப்பல்கள் ஐந்து Corvette கப்பல்கள் எட்டு நீர்முழ்கிக் கப்பல்களை ஒரு குறுகிய காலப்பகுதியில் தனது கடற்படையை பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையில் வாங்கியமை உலகத்தை வியக்க வைத்தது.

இரகசியப் படைத்தளஙகள்

ஒரு வல்லரசு நாடு இன்னொரு நாட்டில் படைத்தளத்தை பகிரங்கமாக அமைக்கலாம். யாருக்கும் தெரியாமல் இரகசிய படைத்தளங்களையும் அமைக்கலாம். மறைமுகப் படைத்தளங்களை அமைக்கலாம். சீனாவின் வசமுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்புத்துறைமுகம், கொழும்பு துறைமுக நகர் ஆகியவற்றில் இரகசியமாக படைக்கலன்களை சீனாவால் வைத்திருக்க முடியும். பெரிய கொள்கலன்கள் உள்ளே ஏவுகணைச் செலுத்திகளையும் ஆளிலிப் போர் விமானங்களையும் மறைத்து வைத்திருக்கலாம். தேவை ஏற்படின் துரிதமாக பொருத்தக் கூடிய பல பெரிய படைக்கலன்களையும் சீனாவால் இலங்கையில் வைத்திருக்க முடியும். இந்தியாவின் உளவுத்துறை சிறப்பாகச் செயற்பட்டால் மட்டுமே இவற்றை இனம் கண்டு அவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

மறைமுகப் படைத்தளங்கள்

இலங்கையில் சீனா மறைமுகமான படைத்தளத்தை அமைக்க செய்யக் கூடியவை:

1.இலங்கைக்கு பலவிதமான படைக்கலன்களை சீனா விற்பனை செய்தோ அல்லது உதவியாக வழங்கியோ இலங்கையின் பல்வேறு இடங்களில் நிறுத்தலாம். நாசகாரிக் கப்பல்கள், சேமக்கப்பல்கள் (corvette), நீர்முழ்கிக் கப்பல்கள் வேவு மற்றும் கண்காணிப்பு விமானங்கள், இலத்திரனியல் போர் விமானங்கள் போன்றவை இவற்றில் அடக்கப்படலாம்.

2. மேற்படி கப்பல்களையும் விமானங்களையும் இயக்குவதற்கு இலங்கைப் படையினருக்கு பயிற்ச்சி வழங்குவதற்கும் மற்றும் அவற்றைப் பராமரிப்பதற்கும் தேவையான ஆளணிகள் என்னும் போர்வையில் சீனப்படையினர் இலங்கையில் தங்கலாம்.

3. இந்தியாவுடனான போர் என்று வரும் போது மேற்படி கப்பல்களும் விமானங்களும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு எதிராக திடீர்த்தாக்குதல்களை மேற்கொள்ளலாம்.

இலங்கையில் சீனா பகிரங்க படைத்தளங்களை அமைப்பதிலும் பார்க்க இரகசிய மற்றும் மறைமுக படைத்தளங்களை அமைப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம்.

Thursday 13 January 2022

"இந்தியாவே வெளியேறு” இயக்கம் மாலைதீவில் தீவிரமாகின்றது

 

முன்னாள் மாலைதீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் அவர்கள் “இந்தியாவே வெளியேறு” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது அந்த இயக்கத்திற்கு பெரும் வலுவைச் சேர்த்துள்ளது. மாலை தீவு இலங்கை நகர் கொழும்பில் இருந்து தென் மேற்காக 843 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து 914 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கின்ற ஒரு சிறிய தீவுக் கூட்டமாகும். இந்து மாக்கடல் பிரதேசத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தீவிரமாகப் போட்டி போடும் நிலையில் மாலை தீவும் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கின்றது.

மாலைதீவின் வரலாறு

கிமு 300இற்கு முன்பு இருந்தே தமிழர்கள் மாலைதீவில் வாழ்ந்தார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்களால் ஆளப்பட்ட மாலை தீவு 12-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய நாடாக்கப்பட்து. மாலைதீவை 16-ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரும், 17-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரும் கைப்பற்றி ஆட்சி செய்தனர். 1953-ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் கீழ் ஒரு குடியரசாகியது. 1965-இல் மாலைதீவு முழுமையான சுதந்திர நாடாகியது. சிறிய நாடக இருந்த போதிலும் உலக அரங்கில் அது தனது செயற்பாட்டில் அதிக அக்கறை காட்டியது. பொதுநலவாயம், சார்க், கூட்டுச்சேரா அமைப்பு போன்றவற்றில் உறுப்புரிமையும் பெற்றது. 1980இல் இருந்து அது உல்லாசப் பயணிகளைக் கவரும் நாடாக மாறியது. அதன் பொருளாதாரம் மீன்வளத்திலும் உல்லாசப் பயணத்திலும் தங்கியுள்ளது. 150 தீவுகளைக் கொண்ட மாலைதீவின் நிலப்பரப்பு 90,000 சதுர கிலோ மீட்டராகும். அங்கு 540,000 மக்கள் வசிக்கின்றனர். மாலை போன்ற தோற்றம் கொண்ட தீவுக் கூட்டம் என்பதால் மாலை என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்தே அது மாலைதீவு என்ற பெயர் பெற்றது என்றும் சொல்லப்படுகின்றது. அதேவேளை மஹால் என்ற அரபுச் சொல்லில் இருந்து திரிபடைந்து மாலைதீவு என்னும் பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகின்றது. மாலைதீவின் அதிபராக அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் 2013-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை இருந்தார். 2018இல் நடந்த தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

சீன மாலைதீவு நட்புறவுப் பாலம்

மாலைதீவின் அதிபராக அப்துல்லா யாமீன் அப்துல் இருந்த போது மாலைதீவின் இரண்டு முக்கிய தீவுகளான மாலேயையும் ஹுல்ஹூலேயையும் இணைக்கும் நீண்ட நான்வழிச் சாலைகளைக் கொண்ட பாலம் ஒன்று சீனக் கடனில் கட்டப்பட்டது. அந்தப் பாலத்திற்கு சீன-மாலைதீவு நட்புறவுப் பாலம் என்ற பெயர் சூட்டப்பட்டது. இது 1972-ம் ஆண்டு உருவான சீன மாலைதீவு நட்புறவில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. சீனாவின் Belt & Road Initiative திட்டத்தின் கீழ்க் கட்டப்பட்ட இந்தப் பாலம் மாலைதீவு மக்களுக்கு பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. அப்துல்லா யாமீன் அப்துல் சீனாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டியபடியால் அமெரிக்காவும் இந்தியாவும் அவரை ஆட்சியில் இருந்து அகற்றும் முயற்ச்சியில் இறங்கின. மாலைதீவின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய பல நூறு மில்லியன் டொலர் பெறுமதியான் கடனை சீனாவிடமிருந்து அப்துல்லா யாமீன் அப்துல் பெற்றுக் கொண்டார். அவர் மீது பல மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்று கொண்டிருந்த அப்துல்லா யாமீன் அப்துல் 2018 செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பார்த்திருக்காத வகையில் தோல்வியடைந்தார். இந்தியாவிற்கு சார்ப்பான மாலைதீவு மக்களாட்சிக் கட்சியின் இப்ராஹிம் சொலி வெற்றியடைந்து நாட்டின் அதிபரானார்.

சீனக் கடன்

அஹமட் சியாம் என்ற மாலைதீவுத் தொழிலதிபருக்கு மாலைதீவு அரசின் உறுதியின் பேரில் 127.5மில்லியன் டொலர் கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி ஓர் ஆடம்பர உல்லாச விடுதி கட்டுவதற்கு வழங்கியிருந்தது. தனக்கு வேண்டிய ஆட்சியாளர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதால் விசனமடைந்த சீனா 2020இல் கடனை அஹமட் சியாம் அல்லது மாலைதீவு அரசு திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை செய்தது. 2020இல் கொவிட்-19 தொற்று நோயால் மாலைதீவின் உல்லாசப் பயணத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தனியார் கடனுக்கு அரசு உறுதி வழங்குவது எங்கும் எப்போதும் இல்லாத ஒன்றாகும். சீனக் கடன் பொறி என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கடன் வாங்கிய தொழிலதிபர் அஹமட் சியாமின் கட்சியும் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீர் அப்துல்லின் கட்சியும் கூட்டணியாக இயங்கின. இதனால் அரசு வழங்கிய உறுதி ஓர் ஊழலாகக் கருதப்பட்டது. மாலைதீவு அரசுக்கு சீனா வழங்கிய கடன் 1.5 பில்லியன் டொலர். மொத்த தேசிய உற்பத்தியாக 3.9 பில்லியன் டொலரைக் கொண்ட மாலைதீவுக்கு இது ஒரு பாரிய கடன் சுமையாகும். அரசின் உறுதி மொழியில் தனியாருக்கு வழங்கப்பட்ட கடன் எவ்வளவு என்பது பற்றி சரியான தகவல் இல்லை.

இந்தியா முதன்மையானது இந்தியாவே வெளியேறு என மாறியது

2018-ம் ஆண்டு சீன சார்பு அதிபர் யாமீர் அப்துல்லைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த இந்திய மற்றும் அமெரிக்க சார்பு இப்ராஹிம் மொஹமட் சொலியின் முதல் வெளிநாட்டுப்பயணம் இந்தியாவிற்கானதே. அவரது கொள்கையும் “இந்தியா முதன்மையானது” என அழைக்கப்பட்டது. இந்தியா அவருக்கு 1.4 பில்லியன் டொலர் கடனை வழங்கியதுடன் மாலைதீவின் கடற்படைத் துறைமுகத்தை அபிவிருத்து செய்யும் பொறுப்பையும் இந்தியா பெற்றுக் கொண்டது. புதிய இந்திய சார்பு அதிபர் பழைய சீன சார்பு அதிபரை 2018-ம் ஆண்டு பணச்சலவைக் குற்றச்சாட்டில் கைது செய்து சிறையிலடைத்தது. 2021 நவம்பர் மாதம் அந்த சீன சார்பு அதிபர் யாமீர் அப்துல்லாவை மாலைதீவு நீதிமன்றம் விடுதலை செய்தது. 2018-ம் ஆண்டு இந்திய சார்பு அதிபர் மொஹமட் சொலி தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து மாலைதீவில் இந்தியாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கு அவ்வப்போது சீன சார்புக் கட்சியான மாலைதீவு முற்போக்குக் கட்சியின் ஏற்பாட்டில் நடந்து வந்தன. அது பின்னர் “இந்தியாவே வெளியேறு” என்ற இயக்கமாக வளர்ச்சி பெற்றது. மாலைதீவுக் கடற்படைத்தளத்தில் இந்தியக் கடற்படையினர் அபிவிருத்தி என்ற போர்வையில் வந்து நிலை கொண்டிருப்பதாக மாலைதீவில் மக்கள் விசனமடைந்துள்ளனர்.

“இந்தியாவே வெளியேறு” இயக்கத்தை மாலைதீவில் சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் அதிபர் யாமீன் அப்துல் தீவிரப்படுத்தியுள்ளார். அவருக்கு சீனா மறைமுகமாக உதவி செய்தால் அவரால் இதை ஆட்சிக்கவிழ்ப்பு வரைக்கும் இட்டுச் செல்ல முடியுமா?. 2018இல் மாலைதீவில் செய்யப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இந்தியாவிற்கு அமெரிக்காவும் உறுதுணையாக இருந்தது. அந்த ஆட்சி மாற்றத்தை பாதுகாக்கவும் அமெரிக்காவின் உதவி அவசியம். இந்தியாவிடம் அதன் சுற்றவுள்ள நாடுகளைக் கையாளும் திறன் இல்லை.

Monday 10 January 2022

சீனாவிற்கு அச்சுறுத்தலாகும் ஜப்பான் ஒஸ்ரேலிய ஒப்பந்தம்

 

பெல்ஜியம், நெதர்லாந்து, போலாந்து, ஆர்ஜெண்டீனா, கனடா, பிரேசில், மெக்சிக்கோ, ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகளை நடு-வலிமை நாடுகள் எனச் சொல்லலாம். இந்த நாடுகள் தமக்கு இசைவான வல்லரசு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைச் செய்கின்றன. அவ்வப்போது நடு-வலிமை நாடுகள் தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்வதுண்டு. இந்தியாவும் ஒஸ்ரேலியாவும் இருபுற அனுமதி ஒப்பந்தங்களை (Reciprocal Access Agreements) 2020-ம் ஆண்டு செய்தன. அதன் படி இரண்டு நாடுகளும் ஒன்றின் தளங்களை மற்றது தனது படைத்துறையின் வான்கலன்களை, கடற்கலன்களை பழுதுபார்க்கவும், பராமரிக்கவும், மீள்நிரப்பல் செய்யவும் பாவிக்க முடியும். இந்தியா இதே போன்ற ஒப்பந்தங்களை அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் செய்திருந்தது. 2022 ஜனவரி 6-ம் திகதி ஜப்பானும் ஒஸ்ரேலியாவும் இருபுற அனுமதி ஒப்பந்தந்தத்தைச் செய்துள்ளன.

ஒஸ்ரேலிய – ஜப்பானிய உறவு

ஒஸ்ரேலியர்களும் ஜப்பானியர்களும் ஒருவரை ஒருவர் வெறுப்பதில்லை. ஜப்பான் கிழக்கில் உள்ள ஒரு மேற்கு நாடாக கருதப்படுகின்றது. ஒஸ்ரேலியா மேற்கு நாட்டவர் குடியேறி ஆட்சி செய்யும் கிழக்கு நாடு. 2017-ம் ஆண்டில் இருந்தே ஒஸ்ரேலியாவும் ஜப்பானும் இருபுற அனுமதி ஒப்பந்தந்தத்தை செய்யும் பேச்சு வார்த்தையை செய்து வந்தன. ஆனால் 2020-ம் ஆண்டு அந்தப் பேச்சு வார்த்தை ஜப்பானில் உள்ள இறப்புத் தண்டனைச் சட்டத்தால் தேக்க நிலையை அடைந்திருந்தது. ஆனால் அதிகரித்து வரும் சீன அச்சுறுத்தலால் இரு நாடுகளும் நெருங்கி ஒத்துழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஒஸ்ரேலியாவும் ஜப்பானும் தமக்கிடையிலேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில் இன்னும் ஒரு மைல் கல்லைத் தாண்டியுள்ளன.

கேந்திரோபாய பங்காண்மை நிலைக்கு உயற்ச்சி

நாடுகளுக்கிடையிலேயான உறவுகளின் உச்ச நிலையை கூட்டு (Alliance) எனவும் அதற்கு அடுதத நிலையை கேந்திரோபாய பங்காண்மை (Strategic Partnership) எனவும். அதனிலும் கீழான நிலையின் உள்ள உறவை பங்காண்மை எனவும். மிகக் குறைந்த உறவை நட்பு நாடு எனவும் வகைப்படுத்தலாம். கூட்டு நாடுகள் எச்சூழலிலும் ஒரு நாட்டுக்கு மற்ற நாடு உதவும். கூட்டு நாடுகளின் வெளியுறவுக் கொள்கை பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும். எல்லா படைத்துறைத் தொழில்நுட்பத்தையும், உளவுத்தகவல்களையும் அவை தடையின்றிப் பகிர்ந்து கொள்ளும். உதாரணமாக அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் உள்ள உறவு கூட்டு உறவாகும். ஆனால் அமெரிக்கா F-22 போர் விமானத்தை பிரித்தானியாவிற்கு விற்பனை செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கேந்திரோபாய பங்காண்மையில் பல வகையில் இரு நாடுகள் ஒன்றிற்கு ஒன்று உதவியாக இருக்கும். உதாரணம கட்டார் – அமெரிக்க உறவு. அவை பயங்கரவாதத்திற்கு எதிராகவும் பிராந்திய அமைதி தொடர்பாகவும் ஒத்துழைக்கின்றன. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு கேந்திரோபாய பங்காணமையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றது. பங்காண்மையில் இருக்கும் நாடுகள் குறித்த சில வகைகளில் ஒன்றிற்கு ஒன்று உதவியாக இருக்கும். நட்பு நாடுகள் ஒன்றிற்கு ஒன்று உலக அரங்கில் அனுசரணையாக நடந்து கொள்ளும். ஒஸ்ரேலிய ஜப்பானிய உறவு இருபுற அனுமதி ஒப்பந்தம் செய்த பின்னர் கேந்திரோபாய பங்காண்மை நிலைக்கு உயர்ந்துள்ளது.


வலிமை மிக்க கடற்படைகள்

எடை அடிப்படையில் ஒஸ்ரேலியாவின் கடற்படை உலகின் 16வது பெரிய கடற்படையாக இருக்கின்ற போதிலும் புதிய படைக்கலன்கள் உபகரணங்கள் அடிப்படையிலும் கடற்போர் அனுபவத்திலும் ஒஸ்ரேலியக் கடற்படை உலகின் முன்னணிக் கடற்படையாகும். தற்பாதுகாப்பு படையான ஜப்பானின் கடற்படை Kaga, Izumo என்னும் இரண்டு உலங்கு வானுர்திக் கப்பல்களையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு கப்பல்களாலும் பன்னிரண்டுக்கு மேற்பட்ட அமெரிக்காவின் முன்னணி போர்விமானமான F-35-Bகளைக் காவிச் செல்ல முடியும். 114 கடற்கலன்களைக் கொண்டது ஜப்பானியக் கடற்படை. ஜப்பானின் நாசகாரிக் கப்பல்களினதும் தரைசார் கப்பல்களினதும் மொத்த எண்ணிக்கை பிரித்தானியாவினதும் பிரான்ஸினதும் மொத்த எண்ணிக்கையிலும் அதிகமானது. தாக்குதிறனின் ஜப்பானியக் கடற்படை சீனாவை விஞ்சக் கூடியது எனக் கருதப்படுகின்றது. ஜப்பானிடம் சிறந்த கப்பல் கட்டுமான வசதிகள் உண்டு. ஜப்பானின் கடற்போக்குவரத்திற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாத வகையில் காப்பாற்றும் வலிமை ஜப்பானுக்கு உண்டு எனச் சொல்லப்படுகின்றது. 2011-ம் ஆண்டு ஜப்பானில் நடந்த புவி அதிர்ச்சியின் போது ஜப்பானியக் கடற்படையின் துரித செயற்பாடு உலகத்தை வியப்பில் ஆழ்த்தியது. ஜப்பானிய ஒஸ்ரேலியக் கடற்படை ஒத்துழைப்பு கடற்போர் அனுபவமில்லாத சீனாவிற்கு பெரும் சவாலாக அமையும்.

குவாட் படைத்துறை ஒத்துழைப்பை ஆரம்பிக்கவில்லை

2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் திகதி வெள்ளை மாளிகையில் அமெரிக்கா, ஒஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய குவாட் உரையாடல் நாடுகளின் அரச தலைவர்கள் ஒரு கலந்தாலோசனையை நடத்தினர். அந்த ஒன்று கூடலின் முடிவில் அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் படைத்துறை ஒத்துழைப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை. குவாட் உரையாடல் நாடுகளின் அமைச்சர்கள் அரசுறவியலாளர்கள் கலந்துரையாடுவாரக்ள் எனக் குறிப்பிடப்படடிருந்தது. ஆனால் படைத்துறையைச் சேர்ந்தவர்கள் கலந்துரையாடுவார்கள் என்று குறிப்பிடப்படவில்லை. அதனால் குவாட் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக இன்னும் உருவெடுக்கவில்லை என்பது உறுதியாகின்றது. அது மட்டுமல்ல ஒஸ்ரேலியா அமெரிக்காவுடனும் பிரித்தானியாவுடனும் ஓக்கஸ் என்னும் ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை 2021 செப்டம்பரில் செய்துள்ளது. இந்த நிலையில் ஜப்பான் தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஓரு பகுதியாக ஒஸ்ரேலியாவுடன் இருபுற அனுமதி ஒப்பந்தத்தை (Reciprocal Access Agreement) செய்துள்ளது.

கொதிக்குக் கடலில் குதிக்கும் நட்பு

கிழக்குச் சீனக் கடலில் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. 2013 நவம்பரில் கிழக்குச் சீனக் கடலில் சீனா பத்து இலட்சம் சதுர மைல்களைக் கொண்ட கிழக்குச் சீனக் கடலுக்கு மேலான வான் பரப்பை தன்னுடைய வான் பாதுகாப்பு பிராந்தியமாகப் பிரகடனப் படுத்தியது. அதை அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ஏற்க மறுத்ததுடன் தமது போர் விமானங்களை தொடர்ச்சியாக அங்கு பறக்க விட்டு தம் ஆட்சேபனையைத் தெரிவித்தன. சீனாவின் இது போன்ற அச்சுறுத்தலால் ஜப்பான் தற்பாதுகாப்பு படையை மட்டும் வைத்திருக்க முடியும் என்ற அதனது அரசியலமைப்பு யாப்பிற்கு புதிய வியாக்கியானங்களைக் கொடுத்து தன் படைவலிமையைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றது. ஒஸ்ரேலிய ஜப்பானிய நட்பு கிழக்குச் சீனக் கடலில் சீனாவிற்கு பாதகமாக அமையலாம்.

ஆழக் கடல் ஆளப் போகும் ஒஸ்ரேலியா

ஒஸ்ரேலியா அமெரிக்காவிடமிருந்து பெறவுள்ள அணு வலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒஸ்ரேலியாவில் இருந்து புறப்பட்டு பசுபிக்கடல், தென் சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல், ஜப்பானியக் கடல் ஆகியவற்றினூடாக ஆர்க்டிக் வலயம் வரை தொடர்ச்சியா தங்குமிடமின்றிப் பயணிக்கக் கூடியவை. அவற்றால் ஜப்பானிய துறைமுகங்களைப் பாவிக்க முடியும். பல தீவுகளைக் கொண்ட ஜப்பானுடனான ஒப்பந்தம் ஒஸ்ரேலியாவின் கடற்கலன்கள் மேற்கூடிய ஐந்து கடல்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வலிமையை ஏற்படுத்தும்.

மலாக்காவில் சீனா மல்லாக்காக விழுத்தப்படுமா?

சீனாவின் கடற்பாதையில் முக்கிய திருகுப் புள்ளியாகிய மலாக்கா நீரிணைக்கு அண்மையாக உள்ள இந்தியாவிற்கு சொந்தமான அந்தமான் மற்றும் நிக்கோபா தீவுகளை இப்போது இந்தியாவுடன் அமெரிக்கா, ஒஸ்ரேலியா போன்ற நாடுகள் பாவிக்கலாம். அதற்கு அண்மையாக உள்ள ஒஸ்ரேலியாவிற்கு சொந்தமான கொக்கோஸ் மற்றும் கிறிஸ்மஸ் தீவுகளை ஒஸ்ரேலியாவுடன் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் படையினர் பாவிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் சீனாவிற்கு எதிரான போர் என்று வரும்போது இந்த நான்கு நாடுகளும் இணைந்து மலாக்கா நீர்ணையூடாக சீனாவின் போக்கு வரத்தை துண்டிக்கலாம் என்ற அச்சுறுத்தல் சீனாவிற்கு ஏற்பட்டுள்ளது. சீனாவின் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்குமா?

Wednesday 5 January 2022

பல்துருவ ஆதிக்கமும் தமிழர்களும்

 

உலகத்தில் செல்வாக்கும் ஆதிக்கமும் செலுத்துவதற்கு பல நாடுகள் போட்டி போடுதல் பல்துருவ ஆதிக்கம் எனப்படும். இரண்டு நாடுகள் அதில் ஈடுபட்டால் அது இருதுருவ ஆதிக்கம் என்றும் ஒரு நாடுமட்டும் அதில் சிறந்து விளங்கினால் அது ஒரு துருவ ஆதிக்கம் எனவும் அழைக்கப்படுகின்றது. பனிப்போரின் பின்னர் சோவியம் ஒன்றியம் வீழ்ச்சியடைந்துடன் அமெரிக்கா ஒரு துருவ ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது என வாதிடுவோர் உண்டு. அணுக்குண்டு வைத்திருக்கும் வல்லரசு நாடுகள் பல்துருவ ஆதிக்கம் செலுத்துகின்றன என்போரும் உண்டு. அணுக்குண்டு வைத்திருந்தால் மட்டும் போதாது அதனால் மற்ற வல்லரசு நாட்டில் கணிசமான அழிவை ஏற்படுத்தக் கூடிய வகையில் அவற்றை எடுத்துச் சென்று வீசக் கூடிய வலிமையும் இருக்க வேண்டும் எனவும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.

பொருளாதாரமும் துருவ ஆதிக்கமும்

உலகெங்கும் இருந்து மலிவு விலையில் மூலப் பொருள்களைப் பெற்று அதிலிருந்து குறைந்த செலவில் உற்ப்பத்தி செய்யும் பொருள்களை அதிக விலைக்கு உலகெங்கும் விற்பனை செய்வதே உலக ஆதிக்கத்தின் முதன்மை நோக்கம். முதலில் பிரித்தானியா தனது கைத்தொழில் புரட்சி மூலம் இதைச் செய்து உலக ஆதிக்கத்தைச் செய்தது. அதன் கடற்படை வலிமை அதற்கு உறுதுணையாக அமைந்தது. அதேவழியை அமெரிக்கா பின்பற்றி வெற்றிகண்டது. பிரித்தானியாவில் இருந்த கனிம வழங்களிலும் பார்க்க அதிக அளவு கனிம வளம் அமெரிக்காவில் இருக்கின்றது. அதனால் உலகில் பிரித்தானியா செய்த ஆதிக்கத்திலும் பார்க்க அதிக ஆதிக்கத்தை அமெரிக்காவால் செய்யக் கூடியதாக இருக்கின்றது. பிரித்தானியாவின் குடியேற்ற ஆட்சிக் கொள்கை முறியடிக்கப்பட்டதை தனக்கு ஒரு பாடமாக எடுத்த அமெரிக்கா புதிய குடியேற்றவாதம் எனப்படும் தனக்கு உகந்த ஆட்சியாளர்களை கேந்திர முக்கியத்துவம் வாய்த பிரதேசங்களில் ஆட்சியைல் அமர்த்தும் உபாயத்தை நிறைவேற்றியது. பின்னர் அது சவாலை எதிர்கொள்ளும் போது புதிய தாராண்மைவாதம், உலகமயமாதல் என தனது உபாயங்களை மாற்றிக் கொண்டுள்ளது.

ஒரு துருவ ஆதிக்கம் ஒரு போதும் இருந்ததில்லை

உலக வரலாற்றில் ஒரு துருவ ஆதிக்கம் ஒரு போதும் இருந்ததில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. சூரியன் மறையாத வல்லரசு எனச் சொல்லுமளவிற்கு கனடா முதல் நியூசீலாந்து வரை உலகின் பெரும் நிலப்பரப்பை கைப்பற்றி வைத்திருந்த பிரித்தானியாவால் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி, இரசியா, சீனா ஜப்பான், சீனா போன்ற நாடுகளைக் கைப்பற்ற முடியவில்லை. சோவியத் ஒன்றியத்தின் பின்னர் பல நாடுகளில் தனது மறைமுக ஆதிக்கத்தை செய்த அமெரிக்காவால் நடுவண் ஆசிய நாடுகள், இரசியா, கியூபா, சீனா ஆகிய நாடுகளில் ஆதிக்கம் செய்ய முடியவில்லை. 1815இல் இருந்து 1945-ம் ஆண்டு வரை உலகம் பல்துருவ ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் இருந்த வல்லரசு நாடுகளிடையேயான நட்புறவையும் பகைமையையும் பொறுத்து ஆதிக்கச் சமநிலையும் மாறிக் கொண்டே இருந்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியா, இரசியா, பிரசியா, பிரான்ஸ், டென்மார்க்-ஹங்கேரி ஆகியவை உலக வல்லரசுகளாக இருந்தன. கிறிமியாவை துருக்கியிடமிருந்து மீளப் பெற எடுத்த முயற்ச்சி அப்போது இருந்த பல் துருவ உலகச் சமநிலையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர் ஹிட்லர் தலைமையில் ஜேர்மனி மற்ற வல்லரசு நாடுகளை ஆக்கிரமிக்க எடுத்த முயற்ச்சியால் உருவான இரண்டாம் உலகப் போர் பல் துருவ உலக ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன் பின்னர் சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் உலக ஆதிக்கத்திற்கு போட்டி போட்டன.


முத்துருவ ஆதிக்கம் நிச்சயமாக உருவாகிவிட்டது

மேற்கு ஐரோப்பிய நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சனைகளையும் தேசியவாதப் பிரச்சனைகளையும் சமாளித்து எழுச்சியுறும் போது அவை அமெரிக்கா தலைமையில் ஒரு குழுவாக உலக அரங்கில் செயற்படும் போது அவற்றுக்கு சவால் விடக் கூடிய வகையில் இரசியாவோ அல்லது சீனாவோ உருவாகுவதற்கு இரண்டு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டியுள்ளது. ஆனால் இரசியாவும் சீனாவும் அமெரிக்காவை தமது அணுக்குண்டுகள் தாங்கிச் செல்லும் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளால் தாக்கக் கூடிய வலிமையை பெற்றுவிட்டனவோ அப்போது முத்துருவ ஆதிக்கம் தோன்றிவிட்டது. சிரியாவில் பஷார் அசாத் வேதியியல் குண்டுகளைத் தாக்கினால் அது செங்கோட்டைத் தாண்டுவது போலாகும்; அதைத் தண்டிக்கும் முகமாக சிரியாமீது தாக்குதல் செய்யப்படும் என அமெரிக்க அதிபர் சூளுரைத்திருந்தார். ஆனால் அதையும் மீறி சிரியாவில் வேதியியல் குண்டு வீச்சு செய்யப்பட்ட போது அசத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தடுத்துவிட்டார். சீனா தென் சீனக் கடலில் செயற்கை தீவை அமைப்பதை தடுப்போம் என அமெரிக்கா செய்த சூளுரையையும் மீறி சீனா தீவுகளை அமைத்ததுடன் அவற்றைப் படைத்தளங்களாகவும் மாற்றிவிட்டது. அமெரிக்கா, இரசியா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் தற்போது உலக ஆதிக்கத்தில் போட்டி போடுகின்றன. சோவியத் ஒன்றியத்தால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட சவாலிலும் பார்க்க மோசமான சவால் சீனாவால் 2020களில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. சோவியத் ஒன்றியத்திலும் பார்க்க வலுவான பொருளாதாரத்தை சீனா கொண்டுள்ளது. சோவியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடந்த வர்த்தகத்திலும் பார்க்க பல மடங்கு வர்த்தகம் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடக்கின்றது.

இரசிய சீன ஒத்துழைப்பு மட்டுப்படுத்தப் பட்டதாக இருக்கும்

2030இல் மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் வட அமெரிக்க நாடுகளான ஐக்கிய அமெரிக்காவும் கனடாவும் படைத்துறை ரீதியிலும் பொருளாதார ரிதியிலும் தமக்கு இடையிலேயான ஒத்துழைப்பை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு போக வேண்டிய நிர்ப்பந்தந்தத்தை இரசியாவினதும் சீனாவினதும் படைத்துறை வளர்ச்சி ஏற்ப்படுத்தியுள்ளது.. இரசியாவினது படைத்துறை வளர்ச்சியும் சீனாவினுடைய பொருளாதார வளர்ச்சியும் இரண்டு நாடுகளது தொழில்நுட்ப ஒத்துழைப்பும் ஒரு குறித்த அளவிற்கு மேல் போக முடியாது. இரசியாவும் சீனாவும் ஒன்ற்றின் வளர்ச்சியை மற்றது ஐயத்துடன் பார்க்க வேண்டிய நிலை உருவாகும்.

இருதுருவ ஆதிக்கமும் தமிழர்களும்

1980களில் அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையில் நடந்த இருதுருவ ஆதிக்கப் போட்டி தீவிரமடைந்தது. அப்போது சீனா அமெரிக்காவுடன் இணைந்து “அமைதியான எழுச்சி” என்னுக் கொள்கையுடன் செயற்பட்டது. பங்களாதேசம் பிரிக்கப் பட்ட பின்னர் இரசியாவுடன் ஒத்துழைக்கும் இந்தியாவை அடக்குவதற்கு இலங்கையில் தனக்கு என சில படைத்துறை வசதிகளை ஏற்படுத்த அமெரிக்கா முயன்றது. அதைத் தடுக்க இந்தியா தமிழர்களைத் தனது துருப்புச் சீடாக பயன்படுத்தியது. தமிழர்கள் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு மிக அச்சுறுத்தலாக உருவாகினர். 1991இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னரும் அமெரிக்க இந்திய முறுகல் இலஙகையில் தொடர்ந்தது. அமெரிக்க ஆதிக்கம் உலகில் அதிகரித்தும் இரசியா ஆதிக்கம் சரிந்தும் சீன ஆதிக்கம் அதிகரிக்கும் நிலை 1999-ம் ஆண்டு உருவானது. அப்போது அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவிற்கு எதிராக ஒன்றுபட வேண்டிய நிலை உருவானது. 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க வெளியுறவுச் செயலராக இருந்த ஹிலரி கிளிண்டன் இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் புவிசார் உறவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் இந்தியாமீதான பொருளாதாரத் தடை அமெரிக்காவால் நீக்கப்பட்டது. இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு ஈழத் தமிழர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி 2009இல் பேரழிவில் முடிந்தது.

வரவிருக்கும் பல்துருவ ஆதிக்கம்

இந்தியாவின் பொருளாதார மற்றும் படைத்துறை வளர்ச்சி ஒரு சிறந்த தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இது தொடர்ந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவும் உலகில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு நாடாக மாறும். உலகெங்கும் வாழும் இந்தியர்கள் இந்தியாவின் உலக ஆதிக்கத்தில் பெரும் பங்காற்றுவார்கள். ஐரோப்பிய ஒன்றியம் தனது பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியிருக்கும் கொள்கையை மாற்றி தனக்கு என ஒரு படையை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையை வலுவடையும் போது. அது ஒரு உலகப் பெருவல்லரசாக உருவாகும். ஏற்கனவே பிரான்ஸ் என்ற வல்லரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், 2030அளவில் அமெரிக்கா, இரசியா, சீனா, இந்தியா என்ற ஐந்து துருவங்கள் உலகில் உருவாகும் போது தமிழர்கள் தமக்கு என ஒரு நட்பு நாட்டை பெற்றுக் கொள்வது இலகுவாக்கப்படும். தற்போது பல நாடுகளில் இளையோராக இருக்கும் தமிழர்கள் அப்போது சிறப்பாக செயற்பட்டால் ஈழவிடுதலை சாத்தியமாகும். இதனால் தான் 2008 மாவிரர் நாள் உரையில் இனி எமது விடுதலைப் போராட்டத்தை புலம் பெயர் இளையோர் முன்னெடுப்பார்கள் என எதிர்வு கூறப்பட்டது.

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...