Followers

Tuesday 29 September 2020

மீண்டும் வரும் நோர்வே மாரீசன்


இரண்டாயிரமாம் ஆண்டு முதல் நோர்வேயின் இலங்கைக்கான அமைதித் தூதுவர் எனவும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அனுசரணையாளர் எனவும் அழைக்கப்படும் எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் சிங்கள தமிழ் பிரச்சனை தொடர்பாக தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிருகின்றார். கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளிதழுக்கு எரிக் சொஹெய்ம் வழங்கிய செவ்வியும் தமிழ் ஆய்வு பயிலகம் நடத்திய வலையரங்கத்தில் அவர் வழங்கிய கருத்துக்களும் நாம் உற்று நோக்கப் பட வேண்டியன.

2001 செப்டம்பர் 11-ம் திகதி நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் உலகில் எந்த ஓர் அரசற்ற அமைப்பும் தமக்கு என படைக்கலன்களையோ படையணிகளையோ வைத்திருக்கக் கூடாது என அமெரிக்கா முடிவெடுத்த பின்னர் இலங்கைக்கான அமைதித் தூதுவராக எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வந்தார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகிய நாடுகளைக் கொண்ட இணைத் தலைமை நாடுகள் என ஒரு குழுவும் இலங்கையின் அமைதி முயற்ச்சிக்காக உருவாக்கப் பட்டது.

எரிக் சொல்ஹெய்ம் 2020 செப்டம்பரில் டெய்லி மிரருக்கு வழங்கிய செவ்வியில் தமிழர் தரப்பிலும் சிங்களத்தரப்பிலும் உள்ள தீவிரப்போக்குடையோர் தன்னைக்  கடுமையாக தாக்குவதாக நொந்து கொண்டார். மேலும் அவர் கூறிய முக்கிய கருத்துக்கள்:

  • ·         இரண்டு தரப்பிலும் இருந்த போரை நாடுபவர்களால் தனது சமாதான முயற்ச்சி தோல்வியடைந்தது.
  • ·         விடுதலைப் புலிகள் ஒரு வலிமையான நிலையில் இருந்து கொண்டே அமைதிப் பேச்சு வார்த்தைக்கு உடன்பட்ட்னர்.
  • ·         அமைதிப் பேச்சு வார்த்தையின் போது விடுதலைப் புலிகள் தம்மை வலிமைப் படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இலங்கை அரசு தன்னை வலிமைப்படுத்திக் கொண்டது.
  • ·         பாலசிங்கத்தின் ஆலோசனையைக் கேட்கும் வரை பிரபாகரனின் செயற்பாடுகள் ஒழுங்காகவிருந்தன. அவரின் ஆலோசனையைக் கேட்டிருந்தால் தமிழர்களின் தற்போதைய நிலை வேறுவிதமாகவிருக்கும்.
  • ·         சரணடைய வந்தவர்களைக் கொன்றது போர்க்குற்றம்
  • ·         கண்மூடித்தனமான தாக்குதலால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்
  • ·         ஆனையிறவை விடுதலைப் புலிகள் கைப்பற்றிய பின்னர் பாக்கிஸ்த்தான் இலங்கைக்கு உதவியது.
  • ·         போரின் இறுதிக் கட்டத்தில் இந்தியா இலங்கைக்கு உதவி செய்தது.
  • ·         இந்தியாவில் இணைப்பாட்சி உள்ளது. அங்கு பல்லின மக்கள் அமைதியாக வன்முறையின்றி வாழ்கின்றார்கள்.
  • ·         இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக பணியாற்றும்படி அழைக்கப்பட்டால் நான் மீண்டும் வருவேன்.

தற்போதைய புவிசார் அரசியல் இயங்கசைவியலில் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் (Future of Eelam Tamils in the current geo-political dynamics) என்னும் தலைப்பில் தமிழ் ஆராய்ச்சி பயிலகம் என்னும் அமைப்பு 2020 செப்டம்பர் 26-ம் திகதி ஒரு வலையரங்க கலந்துரையாடலை நடத்தியது. அதில் பயிலகத்தைச் சார்ந்த அருண்குமார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் அவருடன் எரிக் சொல்ஹெய்ம், வி உருத்திரகுமார், அய்யாநாதன், கிருஷ்ணா ஆகியோரும் கலந்து கொண்டனர். மே-17 இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அருண்குமார் தற்போது அமெரிக்காவில் வசிக்கின்றார். ஈழத்தமிழர்களின் வரலாற்றை சுருக்கமாக விபரித்த அருண்குமார் தலைப்பில் உள்ள தற்போதைய புவிசார் அரசியல் நிலை பற்றியோ அல்லது அதன் இயங்கசைவியல் பற்றியோ எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. கலந்துரையாடலில் கலந்து கொண்ட மற்றவர்களும் அதைப்பற்றி விளக்கம் கொடுக்கவில்லை. இலங்கையில் எரிக் சொல்ஹெயம் செய்த அமைதி முயற்ச்சி பற்றியும் அதன் தோல்வி பற்றியும் கலந்துரையாடினார்கள்.

எரிக் சொஹெய்ம் வழமைக்கு மாறாக விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் அவர்களை வெகுவாகப் புகழ்ந்து புலிகளின் தலைவர் திரு பிரபாகரன் அவரகள் மீது சேறு பூசுவதில் அதிக நேரம் செலவிட்டார். லக்ஸ்மன் கதிர்காமர் மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் கொலை தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிப்பதில் எல்லோரும் அதிக கவனம் செலுத்தினார்கள்.

எரிக் சொல்ஹெய்ம் சொல்லிய முக்கிய கருத்துக்கள்:

  • ·         திரு பிரபாகரன் அவரகளுக்கு உலக அரசுறவியல் பற்றிய சரியான அறிவு இல்லை.
  • ·         திரு பாலசிங்கத்தின் ஆலோசனைகளை திரு பிரபாகரன் கேட்காத படியால் அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
  • ·         ராஜீவ் காந்தியை புலிகளே கொன்றதாக திரு பாலசிங்கம் சொல்ஹெய்மிடம் கூறினார்.
  • ·         உலக அரசுகளைப் பற்றி திரு பிரபாகரன் புரிந்து கொள்ளாத படியில் புலிகளின் படைக்கலன் கொள்வனவு தடுக்கப்பட்டது.
  • ·         "முழுமையாக வேண்டும் அல்லது ஒன்றுமே வேண்டாம்" என்ற திரு பிரபாகரனின் பிழையை தமிழர்கள் விடக்கூடாது.
  • ·         தமிழர்கள் இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
  • ·         தமிழர்கள் கூட்டாட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • ·         தமிழர்கள் எல்லோர் மீதுக் குற்றம் சுமத்துவதால் எதையும் பெறப்போவதில்லை
  • ·         திரு பிரபாகரன் விட்ட தவறான பன்னாட்டு சமூகத்தின் சொற்களை கேளாமல் விட்டமையை தமிழர்கள் இனிச் செய்யக் கூடாது.
  • ·         தமிழர்கள் ஒற்றுமையாக நின்று காந்திய வழியில் போராட வேண்டும்.
  • நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் உருத்திரகுமார் சொன்னவை:
  • ·         ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்தனர்.
  • ·         அமைதிப் பேச்சு வார்த்தைக் காலத்தில் இலங்கை அரசு தனது படைக்கலன்களை அதிகரிக்க அனுமதித்த பன்னாட்டு சமூகம் விடுதலைப் புலிகளின் படைக்கலன் கொள்வனவைத் தடை செய்தது.
  • ·         தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு
  • ·         இலங்கை அரசு தமிழர்களுக்கு எந்த உரிமையையும் கொடுக்க மாட்டாது.
  • ·         அன்னை தெரெசாவே இலங்கை அதிபராக வந்தாலும் தமிழர்களுக்கு இணைப்பாட்சி கொடுக்க மாட்டார்.
  • ·         தமிழர்கள் மத்தியில் பிரிந்து செல்வது பற்றி ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப் படவேண்டும்.

அய்யாநாதன் சிங்களவர்களைப் பொறுத்தவரை இணைப்பாட்சி என்பது ஒரு கெட்ட வார்த்தை என்றார். அய்யாநாதன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டும் கோபம் கொண்டவராகவும் உரையாற்றினார். தமிழர்கள் மற்றவரகள் மீது குற்றம் சாட்டக் கூடாது எனச் சொல்லும் சொல்ஹெய்ம் தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளையும் தமிழர்களையும் குற்றம் சாட்டுவதை கிருஷ்ணா சுட்டிக் காட்டினார்.

அமைதியை விரும்பாத அமைதித்தூதுவர்

இலங்கையில் அமைதிக்கான நோர்வேயின் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் எந்த ஒரு கட்டத்திலும் இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை.  மாறாக ஈழத் தமிழர்களை இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார். சிங்கள தமிழ் முரண்பாட்டை அமைதித் தூதுவர் விரும்புகின்றாரா? அத்துடன் இணைப்பாட்சியை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.  சிங்கள அமைச்சர் ஒருவர் நாம் தமிழர்களுக்கு இணைப்பாட்சி கொடுத்தாலும் அதை இந்தியா அனுமதிக்காது என இலங்கைப் பாராளமன்றத்திலேயே வைத்து திரு சம்பந்தரைப் பார்த்து சொன்னார். தமிழர்கள் காந்தீய வழியில் போராட வேண்டும் என காந்தீய வழியில் போராடிய திலீபனை இந்தியா உதாசீனம் செய்தமையால் இறந்ததை நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கையிலும் அந்த நினைவு கூரலை சிங்களம் தடை செய்யும் வேளையிலும் எரிக் சொல்ஹெய்ம் எமக்கு காந்தீய வழியில் போராடச் சொல்கின்றார். தந்தை செல்வா காந்தீய வழியில் போராடிய போது சிங்களம் தமிழர்கள் மேல் கடைத்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டதை நாம் மறக்க மாட்டோம். சொல்ஹெய்ம் அமைதியைத் தேடி எம்மிடம் 2000-ம் ஆண்டு வரவில்லை எம்மைத் திசை திருப்பும் மாயமானாகவே வந்தார். 2009 மே மாதம் புலிகள் தமது படைக்கலன்களை மௌனித்த பின்னர் அவர் தன் அமைதி முயற்ச்சியைக் கைவிட்டார். அதன் பின்னர் இணைத் தலைமை நாடுகள் எந்தக் கூட்டத்தையும் நடத்தவில்லை. அவரது MISSION ACCOMPLISHED. ராஜீவ் கொலைபற்றி அழுத்தமாக குறிப்பிட்ட சொல்ஹெய்ம் அவரது அமைதிப்படை செய்த இனக்கொலை பற்றி ஏதும் சொல்லவில்லை. மஹிந்த அரசு ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை மீறி போரை ஆரம்பித்த போது சொல்ஹெய்ம் கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை. அவரும் அதற்கு உடந்தையாக இருந்தாரா? சிங்களைப் படையினரின் ஆனையிறவு முகாமை அமெரிக்கப் படைத்துறையினர் எதிர்பாராதவிதமாக கைப்பற்றிய விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கா விமானநிலையத்திலும் தாக்குதல் நடத்தினர். அதனால் இலங்கை படையினரால் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என உணர்ந்த நாடுகள் சதிமூலம் தோற்கடிக்க அனுப்பிய மாயமான் எரிக் சொல்ஹெய்ம். திரு அண்டன் பாலசிங்கம் அது சொன்னார் இது சொன்னார் என அவர் உயிரோடு இருக்கும் போது சொல்லாதவற்றை இப்போது சொல்கின்றார். நான் சொல்கின்றேன்: என்னிடம் திரு பாலசிங்கம் சொன்னார் எரிக் எனக்கு ஐந்து மில்லியன் டொலர் இலஞ்சம் கொடுத்து தன்னை விடுதலைப்புலிகளுக்கு எதிராக திரும்பும்படி கோரினார் என்று. என்னிடம் தமிழ்ச்செல்வன் சொன்னார் எரிக் சொல்ஹெய்ம் எம்மை அழிக்க வந்திருக்கும் சதிகாரன் என்று.

எரிக் சொல்ஹெய்ம்மின் அமைதி முயற்ச்சி படுதோல்வியடைந்தமைக்கு முக்கிய காரணம்:

1. அவருக்கு தமிழர்கள் தொடர்பான சிங்களவர்களின் மனப்பாங்கு பற்றி ஏதும் அறியாமை

2. இலங்கையைச் சூழவுள்ள புவிசார் அரசியல் நிலைமைகள் பற்றி அவருக்கு புரிதல் இல்லாமை

3. தமிழரகள் மீது இந்தியத் தென்மண்டலத்தில் உள்ள சில பூனூல்கலும் சில மாலியாளிகளும் எந்த அளவிற்கு வஞ்சம் வைத்திருக்கின்றனர் என்பது பற்றி அவருக்கு தெரியாது.

தமிழர்களைச் சூழவுள்ள தற்போதைய புவிசார் அரசியல் இயங்கசைவியல் பற்றி வலையரங்கத்தில் சொல்லாமல் விட்டவை:

  • ·         சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போர் உருவாகியுள்ளது
  • ·         சீனா தைவானைக் கைப்பற்ற முயன்றால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு போர் உருவாகும்.
  • ·         இந்தியா தனது எனச் சொல்லும் நிலப்பரப்புக்களை சீனா கைப்பற்ற முயல்கின்றது.
  • ·         இலங்கையை தனது கேந்திரோபாய நலன்களுக்கு உகந்ததாக மாற்ற அமெரிக்காவும் இந்தியாவும் முயல்கின்றன.
  • ·         தற்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் அமெரிக்காவிற்கோ இந்தியாவிற்கோ உகந்தவர்களாக இருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
  • ·         இலங்கை தமது நலன்களுக்கு எதிராக சீனாவுடன் உறவை வளர்த்துக் கொள்ளக் கூடாது என அமெரிக்காவும் இந்தியாவும் கருதுகின்றன.
  • ·         இந்தியப் பேரினவாதம் தனது பிடியை மற்ற மாநில மொழிகளைப் பேசுபவர்கள் மீது இறுக்க தீவிரமாக முயல்கின்றது.

·         ஈழத்தமிழர்கள் முழுமையாக தமது நிகழ்ச்சி நிரலின் கீழ் இருக்க வேண்டும் என அமெரிக்காவும் இந்தியாவும் எதிர்பார்க்கின்றன. அதற்கான முயற்ச்சிகளைத் தீவிரமாக முடுக்கி விட்டுள்ளன என்பதன் அடையாளமே நோர்வேயின் மாயமான் ஆகிய எரிக் சொஹெய்ம் மீளவும் வந்துள்ளார்.

மிகவும் சிக்கலான நிலையில் இருக்கும் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கின்றது.  அதை மேம்படுத்துவதற்கான அனுசரணை என்னும் பெயரில் எரிக் சொல்ஹ்ய்ம் இலங்கையில் நுழைய திட்டமிட்டுள்ளார். இலங்கையின் மீன்வளத்தின் மீது நோர்வேயிற்கு எப்போதும் ஒரு கண் உள்ளது. அதற்காக சிங்களவர்களுக்கு நோர்வே மீது இருக்கும் வெறுப்பை இல்லாமல் செய்ய சொல்ஹெய்ம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் மீது தொடர்ந்து சேறு பூசிக்கொண்டே இருப்பார்.

Wednesday 23 September 2020

தமிழீழக் கட்சிகளும் இந்தியாவும்

ழ் 

அதிமுகவை பாஜக ஆட்டுவிப்பது போல் இந்திய ஈழத் தமிழ் கட்சிகளை ஆட்டுவிக்கப் போகின்றது. அண்ணா திமுகாவை கட்டுப்பாட்டுக்குள் பாரதிய ஜனதாக் கட்சி எடுத்தது போல் ஈழத் தமிழ் கட்சிகளை இந்திய மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க  முயல்கின்றது

தற்போது பாஜகவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் அண்ணா திமுக இருக்கின்றது. நடுவண் அரசின் எல்லாத் திட்டங்களுக்கும் ஆதரவு கொடுக்கின்றது. அன்று ஜிஎஸ்ரி வரி முதல் இன்று வேளாண் சட்டங்கள் வரை தமிழ்நட்டுக்கான நன்மைகளைக் கருத்தில் கொள்ளாமல் அண்ணா திமுக பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றது.  

செல்வி ஜெயலலிதா பிழைக்க மாட்டார் எனத் தெரிந்தவுடன் பாஜக அரசு அண்ணா திமுகாவிற்குள் பிளவைக் கொண்டு வருகின்றது. திருமதி சசிகலா நடராஜ சிறையில் அடைக்கப்படுகின்றார். அநாதை போல் நின்ற பன்னீர்செல்வதிற்க்கு பாஜக கை கொடுக்கின்றது. எடப்பாடி பழனிச்சாமியா பன்னீர்செல்வமா என்ற பிரச்சனை வந்தபோது இருவருக்கும் இடையில் அவர்களே உடன்பாட்டை செய்து வைக்கின்றனர். உடன்பாடு செய்த பாஜாக அண்ணா திமுகவின் சட்டாம் பிள்ளையாகிவிட்டது.

ஒன்றை ஒன்று முட்டிக்கொள்ளும் இரண்டு மாடுகளான பன்னீரையும் எடப்பாடியையும் தமிழக ஆட்சி என்னும் வண்டியை இழுக்கும் இரு மாடுகளாக்கிவிட்டு வண்டி ஓட்டியாக பாஜக தன்னை ஆக்கிக் கொண்டது. இரண்டு மாடுகளுக்கும் மூக்கணாங்கயிறு தேவைப்படவில்லை ஆடிட்டரின் பூநூலே போதுமானதாக இருக்கின்றது. வண்டி ஓட்டியில் கையில் சாட்டைகளாக சிபிஐ என்னும் நடுவண் அரசின் புலனாய்வுத்துறை மற்றும் வருமான வரித்துறை இருக்கின்றன. பாஜகவுடனான நிர்ப்பந்தக் கூட்டணியால் 2019 மே மாதம் நடந்த இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் அண்ணா திமுக தோல்வியைச் சந்தித்து ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

பாஜகவின் தந்திரம்: நானே பிளவு படுத்தி பின் நானே ஒன்று படுத்தி சட்டாம் பிள்ளையாவது.

ஈழத்திலும் பிளவு,

2020இல் நடந்த இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழர்கள் தரப்பில் போட்டியிட்டன. யாரும் எதிர்பாராத வகையில் திரு விக்கினேஸ்வரன், திருமதிஅனந்தி சசிதரன் போன்றோர் கட்சிகளை தொடக்கினர். சுரேஸ் பிரேமச்சந்திரன் புது டில்லி போய் வந்தவுடன் ஒரு கூட்டணி ஒன்று உருவானது. பல கட்சிகள், மதப் பிளவு, சாதிப் பிளவு பிராந்தியப் பிளவுகள் ஈழத்தமிழ் மக்களிடையே உருவானது. 2020 நாடாளுமன்றத் தேர்தலில் என்றுமே இல்லாத அதிக அளவு கட்சிகள் மற்றும் குழுக்கள் போட்டியிட்டதை பார்த்தோம்.

ரணிலின் கையில் அதிகாரம் இருந்த போது அவரின் கைப்பிள்ளையான சுமந்திரன் எல்லாவற்றையும் கட்டி ஆண்டார். இப்போது ரணில் செல்லக்காசாகிய நிலையில் சுமந்திரனே கட்டிவைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். இப்போது இந்தியா எல்லோரையும் ஒன்று படுத்துவது போல் நாடகமாடி களத்தில் இறங்கியுள்ளது. அதற்கான களமாக தியாகி திலீபனின் நினைவேந்தல் பாவிக்கப்படுகின்றது.

 கொழும்பைக் கையாள மீண்டும் தமிழர்கள் வேண்டும்

இந்தியாவிற்கு உகந்த ஆட்சி கொழும்பில் இல்லை. பல தமிழ் கட்சிகளுக்கு பிரச்சனை கொடுக்கும் ஆட்சியாக ராஜபக்சேக்களின் ஆட்சி இருக்கின்றது. அவர்களின் பல அரசியல் நடவடிக்கைகளுக்கு அரச படையினலும் காவற்றுறையினரும் ஈடுபடலாம். தற்போதைய பாராளமன்றக் காலம் முடிந்த பின்னர் அடுத்த தேர்தலில் மக்கள் முன் போய் தங்கள் சாதனை எனச் சொல்லும் படி எதையும் ஈழத் தமிழ்கட்சிகளால் செய்ய முடியாது. பன்னாட்டு புதிய தாராண்மைவாத ஒழுங்கு இப்போது செயலிழந்துள்ளது. அதனால் பன்னாட்டரங்கிலும் ஈழத் தமிழ் கட்சிகளுக்கு ஆறுதல் இல்லை. அநாதைகளாக அவர்கள் இருக்கின்ரார்கள்.

சீனா சரணம் கச்சாமி நிலையில் இலங்கை

மோசமடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரம் கொவிட்-19 தொற்று நோய் தாக்கத்தின் பின்னர் மேலும் மோசமடைந்துள்ளது. அதற்கு இலகு கடன் சீனாவால் மட்டுமே கொடுக்க முடியும். இந்தியாவே சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள வங்கிகளில் கடன் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய் என்ற வெளிநாட்டுக் கொள்கையுடைய சீனா இலங்கைக்கு கடன் கொடுத்து அதை தன் பொறிக்குள் சிக்க வைத்துக் கொள்ளும்.

சீனாவிடம் கடன் பட்டு இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் இலங்கை சீனாவுடன் இணைந்து செயற்பட்டால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க இந்தியாவிற்கு தமிழர்கள் தேவைப்படும். எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழ்ப் போராளிக் குழுக்களை பல கூறுகளாகப் பிரித்து கையாண்டது. அவ்வப்போது அவர்களை ஒன்றுபடுத்துவது போல் நாடகமும் ஆடியது. பின்னர் அவர்களது படைக்கலன்களைப் பறித்தெடுத்தது. அதன் திருத்திய பதிப்பின் முதலாம் அத்தியாயத்தை இப்போது இந்தியா எழுதத் தொடங்கிவிட்டது. தமிழ்க் கட்சிகளை ஒன்று படுத்துவது போல் இந்தியா களத்தில் இறங்கியுள்ளது.  2021 மே மாதத்திற்கு முன்னர் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமனத்திற்கான தேர்தலில் பாஜக எப்படியாவது கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என துடிக்கின்றது. ஈழத் தமிழர்களுக்கு தான் ஆதரவு போல இனி வரும் மாதங்களில் பாஜக சிலபோலி நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மோடி எனது நண்பர் என்றவரும் மோடி என் பின்னால் இருக்கின்றார் என்பவரும் மோடியைப் புகழ்ந்து கருத்துக்களை இனி வரும் சில மாதங்களில் வெளிவிடுவார்கள். 

Sunday 20 September 2020

வல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்


F-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் போர்விமானத்தை உற்பத்தி செய்துள்ளது. முதலாவது பரீட்சார்த்த பறப்பை 2020 செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் பரீட்சார்த்தமாகப் பறக்கவிட்ட செய்தி செப்டம்பர் 14-ம் திகதி வெளிவந்த போது உலக பாதுகாப்புத்துறைகளின் விற்பன்னர்கள் மட்டுமல்ல அமெரிக்க பாதுகாப்புத் துறை ஆய்வாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். Air Force Association’s Virtual Air, Space & Cyber Conference என்ற மாநாட்டிலேயே அமெரிக்க வான்படையினர் இந்தத் தகவலை முதலில் வெளிவிட்டனர். எந்த நிறுவனம் இந்த விமானத்தை உருவாக்கியது என்ற தகவல் கூட வெளிவிடப்படவில்லை. அடுத்த தலைமுறைப் போர்விமானத்தின் முதலாவது பறப்பைச் செய்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் எடுக்கும் என பலதரப்பினரும் எதிர்பார்த்தனர். புதிய அடுத்த தலைமுறை போர்விமானம் ஓராண்டுக்குள் உருவாக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளனவ்ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உருவாக்க இருபது ஆண்டுகளுக்கு மேல் எடுத்தது. அமெரிக்கா எண்மிய உற்பத்தி தொழில்நுட்பத்தில் (Digital Manufacturing Techniques) மிகவும் முன்னேறியுள்ளது என்பதை 2019 ஜனவரியில் போயிங் நிறுவனம் உற்பத்தி செய்த T-15 போர்விமானம் எடுத்துக் காட்டியது. Next Generation Air Dominance என்னும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விமானம் தொடர்பான எல்லாத் தகவல்களும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் தொழில்நுட்பத்தை சீனா இணைய வெளியூடாக திருடி தனது ஜே-20, ஜே-30 ஆகிய போர்விமானங்களை உருவாக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. அந்த வகையான திருட்டுக்கள் நடக்காமல் இருக்க அமெரிக்காவின் ஆறாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தி மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் உலகில் பாவனைக்கு வரும் போது உலகப் போர்முறைமையில் பல மாற்றங்கள் ஏற்படும்.

புவிசார் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்
வலிமை மிக்க புதிய படைக்கலன்கள் உருவாக்கப் படும் போது படைத்துறை ஆதிக்க சமநிலை மாறி புவிசார் அரசியில் மாற்றங்கள் ஏற்படும். இரசியாவும் சீனாவும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களையே இன்னும் முழுமையாக உருவாக்க முடியாமல் இருக்கும் போது அமெரிக்கா ஒரு படி மேலே சென்று விட்டதா? இரசியாவின் SU -3 5, SU -57 ஆகிய போர்விமானங்களும் சீனாவின் J-20 போவிமானமும் புலப்படாத் தொழில்நுட்பத்தில் பின் தங்கியுள்ளன.  அதிலும் சீனாவின்  J-20 போர்விமானத்தில் Super cruise என்பது இல்லவே இல்லை. 

பிரித்தானியாவின் ஆறாம் தலைமுறை விமானம்

2018-ம் ஆண்டு பிரித்தானியா தனது Tempest(சூறாவளி) என்ற ஆறம்தலைமுறைப் போர் விமானத்தின் மாதிரி அமைப்பைக் காட்சிப்படுத்தியது. இதன் மொத்த உற்பத்திச் செலவு மிக மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இத்தாலியும் சுவீடனும்ம் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. சுவீடனின் விமான உற்பத்தித் துறை சிறந்த இலத்திரனியல் போர்முறைமைகளை ஏற்கனவே உருவாக்கியுள்ளதால் அதன் அனுபவம் சிறந்த பங்களிப்பைச் செய்யக் கூடும். அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35இன் உற்பத்தியில் கணினி முறைமைகளின் குறியீடுகளில் பெரும்பாலானவற்றை பிரித்தானியர்களே எழுதினர். அந்த அனுபவம் மேலும் விருத்திச் செய்யப்பட்டு ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தில் பாவிக்கப்படும். Tempest(சூறாவளி) என்ற ஆறம்தலைமுறைப் போர் விமானத்தின் எந்திரத்தை பிரித்தானியாவின் ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டது. Tempest(சூறாவளி) போர் விமானம் 2030-ம் ஆண்டுதான் முழுமையான பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் அமெரிக்கா தனது ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை பரீட்சார்த்தமாகப் பறக்க விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து தலைமுறைப் போர்முறைமைகள்

முதலாம் தலைமுறைப் போர்முறைமையில் படையினரை வரிசைப் படுத்துதல் அணிவகுப்பு ஆகியவை முக்கியத்துவமானதாக இருந்தது.

இரண்டாம் தலைமுறைப் போர்முறைமையில் ரைபிள் தானியங்கி துப்பாக்கிகள் உள்ளடக்கப்பட்டன.

மூன்றாம் தலைமுறைப் போர் முறைமையில் படை நகர்வு வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எதிரியைப் பல முனைகளில் தாக்குதல் இதில் அடங்கும். இதில் தாங்கிகளும் விமானப்படையின் செயற்பாடுகளும் உள்ளடக்கப்பட்ட்ன.

நான்காம் தலைமுறைப் போர்முறைமையில் பல புதிய தளபாடங்கள் உள்ளடக்கப்பட்டன. அரசற்ற அமைப்புக்களும் போரில் ஈடுபட்டன. போர்த்தாக்குதல்களின் பொதுமக்களும் கொல்லபடுதல் தவிர்க்க முடியாததாகியது. போரில் அரசியலின் ஆதிக்கம் அதிகரித்தது. உளவியல் போர் அறிமுகப்படுத்தப்பட்டது. எதிரி நாட்டு மக்களுக்களுக்கான விநியோகங்களை நிர்மூலமாக்குதலும் போரின் பகுதியானது.

ஐந்தாம் தலைமுறைப் போர்முறைமையில் தகவல் தொழில்நுட்பம், புலப்படா விமானங்களும் தாங்கிகளும் கடற்கலன்களும் உள்ளடக்கப்பட்டன. போலிச் செய்திகளைப் பரப்பி எதிரி நாட்டின் படையினரையும் மக்களையும் பிளவுபடுத்தல் திசை திருப்பல் போன்றவையும் இதில் உள்ளன. தரைப்படை, கடற்படை, கடல்சார்படை, வான்படை ஆகியவனவற்றிற்கு இடையிலான ஒருங்கிணைப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் வலையமிடல் (Networking) முக்கியத்துவம் பெறுவதுடன். இதில் பல்-திரளப்போர் முறை (multi-domain warfare) உள்ளடக்கப்பட்டுள்ளது.

 


பல்-திரளப்போர் முறை (multi-domain warfare)

இனிவரும் காலங்களில் போர்விமானங்கள் பாரிய அளவில் வலையமாக்கம் (networking) உள்ளடக்கப்படும். இதனால் பல போர் விமானங்கள் ஒன்றாக இணைந்து செயற்படமுடியும். தாக்குதல் போர்விமானங்களும் ஆளில்லாப் போர் விமானங்களும் இணையவெளிப்படையினரும் இணைந்து செயற்படுவது பல்-திரளப் போர்முறையாகும். முதலில் எதிரியின் பிரதேசத்தினுள் ஆளில்லாப் போர் விமானங்கள். பறந்து சென்று தாக்குதலில் ஈடுபடும். சில ஆளில்லாப் போர் விமானங்கள் எதிரியின் ரடார்களுக்கு பெரிய போர்விமானம் போல் தோற்றமளிக்கக் கூடிய வகையில் சமிக்ஞைகளை வெளியிடும். எதிரி இந்த விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் போது எதிரியின் விமான எதிர்ப்பு முறைமைகளின் இருப்பிடத்தை கட்டுப்பாட்டகத்திற்கு அறிவித்து விடும். பின்னர் அந்த இடங்களில் புலப்படா போர் விமானங்கள் வந்து தாக்குதல் நடத்தும். எதிரியின் தாக்குதல் நிலைகளில் உள்ள கணினிகளின் செயற்பாடுகளை போர் விமாங்களில் உள்ள கணினிகள் இணையவெளிப் போர் மூலம் செயலிழக்கச் செய்யும். உரையாடல் மூலமும் கையசைவுகள் மூலமும் படையினரால் ஆளில்லா விமானங்களை இயக்கும் முயற்ச்சியில் 2020இன் ஆரம்பத்தில் அமெரிக்கர்கள் வெற்றி கண்டனர். விமானங்களும் ஆளில்லா விமானங்களும் செயற்கை நுண்ணறிவை பாவித்து தாமாகவே மனித தலையீடின்றி தமக்குள் தொடர்பாடலை ஏற்படுத்தி நிலைமைக்கு ஏற்ப தமது பறப்புக்களை மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பமும் பாவனைக்கு வந்து விட்டன.



லேசர் படைக்கலன்கள்

அடுத்த தலைமுறைப் போர்விமானங்களில் லேசர் படைக்கலன்கள் இணைக்கப்படும். 2017-ம் ஆண்டு அமெரிக்கா உலங்கு வானூர்திகளில் இருந்து செயற்படுத்தும் லேசர் படைக்கலன்களை பரிசோதித்தது. ஒளியின் வேகத்தில் செயற்படும் லேசர் படைக்கலன்கள் ஒலியிலும் பார்க்க பலமடங்கு வேகத்தில் பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இலகுவில் அழித்துவிடும். 2020 மே மாதம் அமெரிக்கப் கடற்படையினர் லேசர் படைக்கலன்களைப் பாவித்து விமானங்களை அழிக்கும் பரிசோதையை செய்து முடித்தனர். அதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது எல்லா நாசகாரிக் கப்பல்களிலும் லேசர் படைக்கலன்களைப் பொருத்திக் கொண்டிருக்கின்றது.

முப்பரிமாண அச்சிடல்

எதிர்காலப் போரிலும் படைத்துறை உற்பத்தியிலும் முப்பரிமாண அச்சிடலும் முக்கிய பங்கு வகிக்கவிருக்கின்றது. படையினரின் தலைக்கவசம் முதல் படைக்கலன்களுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் உட்பட நீர்மூழ்கிக்கப்பலின் உடற்பகுதி வரை முப்பரிமாண அச்சிடல் மூலம் உற்பத்தி செய்யப்படும். போரின்போது படையினருக்கு தேவையான வழங்கல்களில் பெரும்பகுதி முப்பரிமாண அச்சிடல் மூலம் துரிதமாக உற்பத்தி செய்யப்படும். தற்போது பல புதிய போர்விமானங்களின் உதிரிப்பாகங்கள் முப்பரிமாண அச்சிடல் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை உற்பத்திச் செலவையும் நேரத்தையும் பெருமளவில் மிச்சப்படுத்துகின்றன. போர் முனைகளில் காயப்படும் வீர்ர்களுக்கு தேவையான புதிய உறுப்புக்களையும் முப்பரிமாண அச்சிடல் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 2011-ம் ஆண்டு முப்பரிமாண அச்சிடல் மூலம் உருவாக்கிய உலகின் முதலாவது ஆளில்லா விமானம் வெற்றீகரமாகப் பறக்கவிடப்பட்டது.

விண்வெளிப்படை

ஒரு நாட்டு செய்மதி மற்ற நாட்டு செய்மதியை அழிப்பதும் செய்மதிகளில் இருந்து ஏவுகணைகளையும் குண்டுகளையும் வீசுவதும் உளவு பார்த்தலும் வேவுபார்த்தலும் இணையவெளிப் போர் செய்வதும் விண்வெளிப் படையின் முக்கிய செயற்பாடுகளாக அமையும். 2018 ஓகஸ்ட் 9-ம்  டிரம்ப் அமெரிக்காவின் ஆறவது படையாக விண்வெளிப்படையை அறிவித்தார். அதற்கான சட்டமும் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது. 1990இல் இருந்தே இரசியா தனது விண்வெளிபடையை ஆரம்பித்து விட்டது.2007-ம் ஆண்டு ஜனவரியில் சீனா செய்மதி அழிப்பு ஏவுகணையை உருவாக்கி விண்வெளியில் உள்ள தனது சொந்த வானிலை ஆய்வுச் செய்மதி ஒன்றின் மீது வீசி அதை அழித்தது.2016-ம் ஆண்டு சீனா விண்வெளிப்படையை உருவாக்கத் தொடங்கியது.

ஆறாம் தலைமுறைப்போர்முறைமை

1991-ம் ஆண்டு ஈராக்கிற்கு எதிராக நடந்த போரை அவதானித்த இரசியாவின் Major-General Vladimir Slipchenko ஆறாம்தலைமுறைப் போர்முறைமை என்ற கோட்பாட்டை உருவாக்கினார். இப்போர் முறைமையில் தொலைவில் இருந்தே துல்லியமாகத் தாக்கக் கூடிய படைக்கலன்களை எதிரியின் மீது ஏவி அழித்தல் பயன்படுத்தப்பட்டன. தாக்குதல்களுக்கு செய்மதிகள் மூலம் தகவல் திரட்டப்பட்டது. Global Positioning System(GSP) முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் மனித இயந்திரங்களான ரொபோக்கள் படையினராகச் செயற்படுவதும் எதிர்காலப் போர்முறைமையில் முக்கியமாக இடம்பெறும்.

 

Monday 14 September 2020

சீனாவால் ஏமாற்றப்பட்ட இந்தியாவின் சினம் எல்லை தாண்டுமா?

2020 செப்டம்பர் 7-ம் திகதி இந்தியா தனது ஒலியிலும் பார்க்க ஆறுமடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளுக்கான செலுத்தியை வெற்றீகரமாகப் பரிசோதித்துள்ளது. அமெரிக்கா, இரசியா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வைத்திருக்கக் கூடிய நாடாக இணைந்துள்ளது. ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கிற்கும் அதிகமாக பாயும் ஏவுகணைகளை (அதாவது மணித்தியாலத்திற்கு 6200கிலோ மீட்டர் வேகத்திலும் அதிகமாக) ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்பர். சீனா இதே பரிசோதனையை 2014-ம் ஆண்டில் செய்துவிட்டது. சீனாவிடம் தற்போது இருக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடியது. சீனா ஒலியிலும் பார்க்க இருபது மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தற்போது உருவாக்கி வருகின்றது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான படைத்துறை தொழில்நுட்ப இடைவெளியை இது சுட்டிக்காட்டுகின்றது.

வட கிழக்கு இந்தியாவின் கோழிக்கழுத்து

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், அசாம், மிசோரம், நாகலாந்து, மணிப்புரி, திரிபுரா ஆகியவற்றை இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்துடன் இணைக்கும் அகலம் குறைந்த பாதை சில்குரி இணைப்புப் பாதை எனப்படும். இப்பாதையை துண்டித்தால் சீனாவால் இந்த இந்திய மாநிலங்களை இலகுவாக கைப்பற்ற முடியும். அதனால் இந்த சில்குரி இணைப்புப்பாதையை இந்தியாவின் கோழிக்கழுத்து என்பர். சீனாவின் சம்பி பள்ளத்தாக்கு இந்தியாவின் கோழிக்கழுத்துக்கு வைக்கப்பட்டுள்ள ஓர் ஆபத்தாக அமைந்துள்ளது. ஆனால் சம்பி பள்ளத்தாக்கினூடாக படையினரை பாரவகைப் படைக்கலன்களுடன நகர்த்துவது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது. பெருந்தெருக்கள் போடுவதில் அண்மைக்காலமாக அனுபவமும் திறனும் பெற்ற சீனா அந்த சம்பி பள்ளத் தாக்கினூடாக ஒரு தெருவை அமைத்து விட்டது அந்தத் தெருவை பூட்டானின் டொலம் அல்லது டொக்லா சமவெளியுடன் தொடுக்கும் வகையில் நீட்ட சீன முயற்ச்சி எடுத்த போது அதற்கு பூட்டான் ஆட்சேபனை தெரிவித்தது. பூட்டானின் வேண்டு கோளின் பேரின் அதனுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட இந்தியா தனது படையினரை அங்கு 2017 ஜூன் 16-ம் திகதி அனுப்பி அதை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்தது. பூட்டானில் இருக்கும் டொலம் சமவெளியில் இருந்து இந்தியாவின் சில்குரி இணைப்பாதை நோக்கி கீழ்முகமாகச் சரியும் நிலப்பரப்பு இருக்கின்றது. அதனால் இஸ்ரேலுக்கு கோலான் குன்றுகள் போலவும் இரசியாவிற்கு உக்ரேன் போலவும் இந்தியாவின் சிலிகுரி இணைப்பாதைக்கு டொலம் சமவெளி இருக்கின்றது. கீழ் நோக்கி சரிந்த நிலப்பரப்பினூடாக பாரவகைப் படைக்கலன்களை நகர்த்துவதும் தாக்குதல் செய்வதும் இலகுவானதாகும். இதனால் சினாவின் சம்பி பள்ளத்தாகில் இருந்து இந்தியாவிற்கு தொல்லை கொடுப்பதை சீனா பெரிதும் விரும்பி இருந்தது. இந்த வழமை மாறி 2020 மார்ச் மாத்தத்தில் இருந்து சீனா இந்தியா வசமுள்ள கஷ்மீரின் லடாக் பிரதேசத்தில் இந்தியாவிற்கு தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளது.

கொவிட்-19 வாய்ப்பாக்கிய சீனா

இந்தியா தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பரிசோதித்த வேளையில் தற்போது கொதிநிலையில் உள்ள லடாக் பிரதேசத்தில் இந்தியாவும் சீனாவும் அச்சுறுத்தும் வகையில் வானை நோக்கி துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்ததாக ஒன்றை ஒன்று குற்றம் சாட்டியுள்ளன. இந்தியா ஆண்டு தோறும் மார்ச் மாதத்தில் சீன எல்லையில் செய்யும் போர்ப்பயிற்ச்சியைக் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக இம்முறை செய்யவில்லை. மார்ச் மாதத்தில் இந்தியாவில் கொவிட்-19 தொற்று நோய் தீவிரமடைந்தும் சீனாவில் பெருமளவு தணிக்கப் பட்டும் இருந்த படியால் சீனா கஷ்மீரின் பௌத்தர்கள் அதிகம் வாழும் லடாக் பிரதேசம் சீனாவுடன் கொண்டுள்ள எல்லையில் பல படை நகர்வுகளை இரகசியமாகச் செய்து வலிமையாக நிலை எடுத்துக் கொண்டது. பின்னர் இரு நாட்டுப்படையினரும் படைக்கலன்களின்றி லடாக் எல்லைப் பிரதேசத்தில் மோதிய போது இந்தியப் படையினர் இருபது பேர் கொல்லப்பட்டனர். சீனா தனது தரப்பு உயிரிழப்பை வெளிவிடாத போதிலும் நாற்பது பேர்வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது.


பொருளாதாரத் தொடர்புச் சிக்கல்.
 

சீனாவின் மூன்றடி முன்னேறி பின் பேச்சு வார்த்தையில் பின்னர் இரண்டடி “பெருமையுடன்” பின்வாங்கும் தந்திரம் இந்தியாவை விரக்தியில் விளிம்பிற்கு தள்ளிவிட்டது. மேலும் இந்திய சீனா இடையிலான் வர்த்தகத்தின் சமநிலை இந்தியாவிற்கு பெரும் பாதகமான நிலையில் இருக்கின்றது. சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகளாவிய ரீதியில் தம் முதலீடுகளை விரிபடுத்த முன்னர் இந்தியாவின் தமது முதலீட்டைச் செய்து பரீட்சித்துப் பார்க்கின்றன. 2019-ம் ஆண்டு சீனத் தொழில்நுப்ட நிறுவனங்கள் இந்தியாவில் 3பில்லியன் டொலருக்கும் அதிகமான முதலீடுகளைச் செய்தன. இந்திய நிறுவனங்களுக்கு சீனாவின் மலிவு விலைத் தொழில்நுட்பங்கள் தேவையான் ஒன்றாகவே இருக்கின்றன. 


எல்லையில் சீனப் படை நடவடிக்கைகளிலும் பார்க்க சீனாவின் பொருளாதார நடவடிக்கைகளே இந்தியாவிற்கு நீண்ட கால அடிப்படையில் ஆபத்து விளைவிக்கக் கூடியவையாக இருக்கினறன. இந்தியாவை ஆளும் கட்சிகளுக்கு நிதி உதவி செய்யும் பெரும் பணக்காரர்கள் இந்திய சீன வர்த்தகத்தால் பெரும் இலாபம் ஈட்டுகின்றார்கள். 2020 ஜுனில் நடந்த லடாக் எல்லைப் பகுதியில் நடந்த இந்திய சீன மோதலின் பின்னர் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களை துறைமுகங்களிலும் விமான நிலையங்களிலும் வைத்து அனுமதிக்கும் செயலில் வேண்டுமென்றே நீண்ட தாமதத்தை செய்தது. அத்துடன் சீனாவின் பல செயலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டன. ஆனால் ஹுவாவே நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை அமெரிக்காவைப் போல இந்தியாவால் தடை செய்ய முடியவில்லை. அந்தத் தொழில்நுட்பங்களைப் பாவிக்கும் இந்தியக் கைப்பேசி நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்திய ஆட்சியாளர்களுக்கு வேண்டப் பட்டவர்களாக இருக்கின்றனர். எல்லையில் தொல்லை கொடுப்பதால இந்தியாவிற்கு பல பொருளாதார நெருக்கடிகளை சீனாவால் ஏற்படுத்த முடியும். ஆனால் உலகெங்கும் தற்போது சீனாவிற்கு எதிரான ஒரு மனப்பாங்கு பல தரப்பிலும் அதிகரிக்கும் நிலையில் சீனா பல பின்னடைவுகளை நீண்ட கால அடிப்படையில் சந்திக்க வேண்டி வரலாம். 


அமெரிக்கா இந்தியாவைத் தூண்டியதா?

சீனா தைவாவானை தன்னுடன் இணைக்கும் படைநகர்வைச் செய்தால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் வெடிக்கும். 2019-ம் ஆண்டில் இருந்து சீனா தைவானைக் கைப்பற்றலாம் என செய்திகள் வந்து கொண்டிருந்த வேளையில் அமெரிக்க சீனப் போர் நடக்கும்போது சீன வலிமையை ஐதாக்குவதற்காக இந்தியா தனது சீன எல்லையில் படைநகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா இந்தியாவை வேண்டியிருந்தது. அதனால் ஊக்கமடைந்த இந்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா 2019 ஓகஸ்ட்டில் இந்தியப் பாராளமன்றத்தில் முழுக் கஷ்மீரையும் (பாக்கிஸ்த்தான் வசமுள்ளதும் சீனா வசமுள்ளதும்) கைப்பற்றுவோம் என சூளுரைத்திருந்தார். இதனால் சீனம் கொண்ட சீனா அன்றில் இருந்து கஷ்மீர் எல்லையில் இந்தியப் படைகளுக்கு தொந்தரவு கொடுப்பதையும் எல்லை தாண்டிச் சென்று படை நிலைகளை அமைப்பதையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. அது மட்டுமல்ல அமெரிக்காவின் வேண்டுகோளின்படி இந்தியா சீனாவிற்கு எதிராக படை நகர்வுகளை மேற்கொண்டால் பாக்கிஸ்த்தானும் இந்திய எல்லையில் தனது இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை செய்யலாம எனவும் நம்பப்படுகின்றது. முன்னர் சீனாவின் பல எல்லைத் தொல்லைகள் அருணாச்சலப் பிரதேசத்தையும் இந்திய வடகிழக்கு மாநிலங்களை நடு இந்தியாவுடன் இணைக்கும் கோழிக்கழுத்து எனப்படும் அகலம் குறைந்த நிலப்பரப்பையும் இலக்கு வைத்தே செய்யப்பட்ட்ன.





சீனப்படையினர் மீது திபெத்தியர் தாக்குதல்

2020 ஓகஸ்ட் 31-ம் திகதி இந்தியாவின் இரண்டாம் காலாண்டிற்கான மொத்தத் தேசிய உற்பத்தி 23.9 விழுக்காட்டால் வீழ்ச்சியடைந்ததுள்ளது என்ற செய்தி வெளிவந்தது. மறுநாள் லடாக் பிரதேசத்தில் பாங்கொங் ஏரியில் வடக்குப்புறமாக உள்ள Spanggur ஏரிக்கு அண்மையாக உள்ள ஒரு சிறிய சமதரையான Spanggur Gap என்ற இடத்தில் சீனப்படையினரும் சீனாவின் மலையேறிகளும்குத்துச் சண்டைக்காரர்களும் நிலைகொண்டனர். இதை ஓரு தாக்குதலுக்குரிய நகர்வாக (offensive deployment) இந்தியா பார்த்தது. திபெத்தியர்களைக் கொண்ட சிறப்பு எல்லைப் படையினரை களத்தில் இறக்கி சீனாவின் Spanggur Gap சுற்றவர உள்ள குன்றுகளின் சிகரங்களைக் இந்தியா கைப்பற்றியது. இதனால் உள்ள சீனப் படையினரைச் சுற்றவர இந்தியப் படைகள் உயரமான இடங்களில் நிலைகொண்டனர். இதனால் Spanggur Gap இல் சீனாவிற்கு மிகவும் பாதகமான நிலை உருவாகியுள்ளது. சிகரங்களைக் கைப்பற்ற செய்த தாக்குதலில் இந்தத் தாக்குதலி நியிமா தென்ஞின் (Nyima Tenzin) என்ற தீபெத்தியப் போராளி கொல்லப்பட்டார். இந்தச் செய்தியை இந்திய ஊடகங்கள் உடனடியாக வெளியிட்டதுடன் தாக்குதல் செய்தவர் இந்தியாவின் உளவுத்துறையான ரோவின் கீழ் மிக இரகசியமாகச் செயற்படும் தீபெத்தியர்களைக் கொண்ட ஒரு சிறப்புப் படையணியைச் சேர்ந்தவர் என்ற தகவலையும் வெளிவிட்டன. வழமைக்கு மாறாக இம்மோதலை உறுதி செய்த சீனா தாம் எந்த ஒரு இந்தியப் படைவீரரையும் கொல்லவில்லை என்றும் சொல்லியது. இந்த உடனடிச் செய்தி வெளியிடல் இந்தியப் பொருளாதாரம் தொடர்பாக ஆளும் கட்சிக்கு பாதகமான செய்தியைத் திசை திருப்பவா அல்லது இந்தியா சீனாவிற்கு ஒரு புதிய செய்தியைத் தெரிவிக்கவா?

இந்திய உளவுத்துறையின் கீழ் திபெத் படையணி

1959-ம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்த பின்னர் பல தீபெத்தியர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். 1962-ம் ஆண்டு சீனா இந்தியா மீது போர் தொடுத்த பின்னர் இந்தியாவில் உள்ள திபெத்தியர்களுக்கு படைப்பயிற்ச்சி அளிக்கப்பட்டு அவர்கள் இந்திய உளவுத்துறையின் கீழ் மிக இரகசியமாகச் செயற்படுகின்றனர். அந்தப் படையணி தொடர்பான எந்தப் பதிவேடுகளும் இந்தியப் படைத்துறையினரிடம் இல்லை. ஆரம்பத்தில் இவர்களுக்கு அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயும் எல்லைதாண்டிச் சென்று தாக்குதல் செய்வது உட்பட பல பயிற்ச்சிகளை வழங்கியது. 

எட்டு விரல்களில் எட்டா விரலாக நாலாம் விரல்

கஷ்மீரின் ஒரு பகுதியான லாடாக்கில் இந்திய சீன எல்லையில் பங்கொங் என்னும் ஏரி உள்ளது. உலகிலேயே கடல் மட்டத்தில் இருந்து மிக உயரனாம இடத்தில் அதாவது பதினான்காயிரம் அடி உயரத்தில்  இருக்கும் இந்த ஏரியின் (மேற்குப் பக்கமாக 45 கிலோ மீட்டர்) மூன்றில் ஒரு பகுதி இந்தியா வசமும் (கிழக்குப் பக்கமாக 135கிலோ மீட்டர்) மூன்றில் இரண்டு பகுதி சீனா வசமும் உள்ளன. லடாக் மொழியில் பங்கொங் என்றால் உள்வளைவு எனப் பொருள்படும். இந்த உப்பு நீர் கொண்ட ஏரிக்கு என ஒரு பொருளாதார முக்கியத்துவமோ அல்லது கேந்திர முக்கியத்துவமோ இல்லை. இந்த ஏரியை நோக்கி சீனா கடந்த பல ஆண்டுகளாக பல படைத்துறை உட்கட்டுமானங்களை தொடர்ந்து செய்து தமது படை நகர்த்தல்களை இலகுவாக்கியுள்ளது. இந்த ஏரியின் வடபுறத்தில் உள்ள மலைகளில் இருந்து ஏரியை நோக்கிச் சரியும் பள்ளத்தாக்குகள் எட்டு உள்ளன. அதன் உச்சியில் படையினர் நிலை கொண்டிருப்பது எதிரியைத் தாக்குதவற்கு இலகுவானதாகும். எட்டு விரல்களில் நான்கு விரல்கள் இந்தியா வசமும் நான்கு விரல்கள் சீனா வசமும் இருக்கின்றன. இந்திய சீன எல்லையை ஒட்டி இருக்கும் நான்காம் விரல் இந்தியாவின் வசம் உள்ளது இதன் உச்சி மற்றவற்றிலும் பார்க்க உயரமானது. 1962இல் நடந்த இந்திய சீனப் போரில் இந்த நான்காம் விரலில் இருந்து ஆயிரக்கணக்கன சீனப் படையினரை சில நூற்றுக் கணக்கான இந்தியப் படையினர் பெரும் இழப்புக்களுடன் விரட்டினர். இந்த நான்காம் விரலை ஜூன் மாதம் சீனா கைப்பற்றியது. அதை திபெத்தியப் படையினரைப் பாவித்து இந்தியா மீளக் கைப்பற்றியுள்ளது. 

மலாக்காவில் மல்லாக்காக வீழ்த்துதல்

இந்தியாவிற்கு கஷ்மீர் எல்லைப் பகுதியில் தொல்லை கொடுத்தால் சீனாவின் சரக்குக்கப்பல்கள் மீது மலாக்கா நீரிணையில் வைத்து இந்தியா தாக்குதல் நடத்தும் எனச் சில செய்திகள் இந்தியாவில் இருந்து வெளிவந்தன அதற்கு சீனா மசியாத நிலையில் திபெத்தியர்களைக் கொண்ட படையணியின் செய்தி கசிய விடப்பட்டுள்ளது. திபெத்தியர்கள் மூலம் சீனாவிற்கு தொல்லை கொடுப்போம் என்ற செய்தியை இந்தியா சீனாவிற்கு சொல்கின்றதா. அமெரிக்க உளவுத்துறையிடம் திபெத் திட்டம் ஒன்று நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது. இந்திய அமெரிக்க உளவுத் துறைகள் திபெத்தில் இணைந்து செயற்படலாம்.

நான்காம் விரலைக் கைப்பற்றுவதற்கு இந்தியா என்ன எதிர்வினையாற்றும் என்பது பற்றி சீனா குறைத்து மதிப்பிட்டு விட்டது. சீனப் படையினர் எல்லை தாண்டிச் சென்றதற்கான செய்மதிப் படங்களைப் பார்த்த இரசியாவும் சீனாமீது விசனமடைந்துள்ளது. அதன் விளைவை இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் ஏற்பாடு செய்த மொஸ்க்கோ பேச்சு வார்த்தையின் போது அது வெளிப்பட்டது. ஆறாயிரம் முதல் ஏழாயிரம் திபெத்தியப்படையினரைக் கொண்ட ஒரு படையணியால் சீனாவிற்கு பெரும் படைத்துறை இழப்பைச் செய்ய முடியாது என்றாலும் சிறு குழுக்களாக இந்திய எல்லையில் செயற்படும் சீனப் படையினருக்கு அவர்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள உடன்பாட்டின்படி எல்லையில் இருதரப்புப் படைகளும் படைக்கலன்கள் இன்றியே நடமாட வேண்டு. அந்த உடன்பாடு திபெத்தியப் படையினரைக் கட்டுப்படுத்தாது. அவர்களைப் பொறுத்தவரை அது இந்திய திபெத்திய எல்லை.

Sunday 6 September 2020

புவிசார் அரசியலில் வான்வலிமையும் பொருளாதாரமும்

 


இரண்டாம் உலக போர் நடக்கும்போதே புவிசார் அரசியல் கோட்பாடுகள் பல மாற்றத்திற்கு உள்ளானது. புவிசார் அரசியல் கோட்பாடுகள் வெறும் பூகோள அமைப்புடன் மட்டும் நின்றுவிடாமல் பொருளாதாரம், வரலாறு, இனப்பரம்பல், மக்கள்தொகைக் கட்டமைப்பு, போரியல் போன்ற பலவற்றுடன் தொடர்புபட்டுள்ளது. வேறும் பல அம்சங்கள் அதில் தொடர்ச்சியாக உள்ளடக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஹல்போர்ட் மக்கிண்டர் புவிசார் அரசியலுக்கு கொடுத்த வரைவிலக்கணம் இப்போது பல மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றது. 

முன்னையிட்ட கோட்பாடுகள்

ஹல்போர்ட் மக்கிண்டர் ஜேர்மனியையும் உள்ளடக்கிய கிழ்க்கு ஐரோப்பாவை உலகின் இதய நிலம் எனபெயரிட்டு அதை ஆள்பவன் உலகில் ஆதிக்கம் செலுத்துவான் என்ற கோட்பாட்டை முன் வைத்தார். நிக்கொலஸ் ஸ்பீக்மன் ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களின் தென் கரை ஓரத்தை ஆள்பவன் உலகில் ஆதிக்கம் செலுத்துவான் என்றார். அல்பிரட் ரி மஹான் கடல்களை ஆள்பவனே உலகில் ஆதிக்கம் செலுத்துவான் என்றார்.

வான்படை வலுக் கோட்பாடு

அலெக்சாண்ட பி டி செவெர்ஸ்கியின் வான்படை வலுக்கோட்பாடு:

1. வான்வலு தரைப்படைப் போர்களை செல்லுபடியற்றதாக்குகின்றது

2. வான்வெளியை ஆதிக்கத்தில் வைத்திருப்பவையே உலக வல்லரசாகும்.

3. நாடுகளின் வான் ஆதிக்கபரப்புக்கள் சந்திக்கும் இடங்கள் ஆதிக்கத்தை முடிவு செய்யும் இடங்களாகும். அந்த சந்திக்கும் பரப்புக்களைக் கட்டுப்படுத்தும் நாடே ஆதிக்க நாடாகும்.

வான்படைக் கோட்பாட்டை முன்வைத்த இரசியாவில் பிறந்த அலெக்சாண்ட பி டி செவெர்ஸ்கி இரசியக் கடற்படையிலும் வான்படையிலும் பணிபுரிந்தவர். பின்னர் அமெரிக்காவிற்கு சென்று விமான உற்பத்தியில் ஈடுபட்டவர். 1942-ம் ஆண்டு தனது வான்படை வலிமை மூலமான வெற்றி என்னும் நூலை வெளியிட்டார்.

1. வான்படைகளது தாக்கு திறனும் தாக்குதல் தூரமும் அதிகரித்துக் கொண்டிருப்பது அமெரிக்காவிற்கு ஆபத்தானது. பிரித்தானியாவை ஜேர்மன் வான்படையினர் 1940-41இல் நிர்மூலம் செய்தமை அமெரிக்காவிற்கும் நடக்கலாம்.

2. இதை மறுப்பவர்கள் பிரான்சின் மகிநொட் கோடு என்ற பாதுகாப்பு அரண் மனப்பாங்குடன் இருப்பவர்களாகும்

3. மாக்கடல்களூடாக நடக்கவிருக்கும் புவிப்பந்தின் இரு பாதிகளுக்கும் இடையிலான போருக்கு அமெரிக்கா உடனடியாக தயாராக வேண்டும்.

4. உலகின் கடல்வலிமை மிக்க நாடாக பிரித்தானிய இருந்தது/இருப்பது போல் அமெரிக்கா உலகின் வான் வலிமை மிக்க நாடாக வேண்டும்.. சுதந்திரமான விமானப்படை அமைக்கப்படவேண்டும். மூவாயிரம் மைல்களுக்கும் மேலாக கண்டம் விட்டுக் கண்டம் செல்லக் கூடிய தொலைதூர குண்டு வீச்சு விமானங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

1941-ம் ஆண்டு அமெரிக்கா ஜப்பான் மீது செய்த பேர்ல் துறைமுகத் தாக்குதலின் பின்னர் செவெர்ஸ்கியின் கருத்துக்கள் பிரபலமாகியதுடன் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இவரது நூல் அப்போது அதிக விற்பனையாகி சாதனையும் படைத்தது. இந்த நூலால் கவரப்பட்ட வால்ட் டிஸ்னி அவரின் கருத்து எல்லோரையும் போய்ச் சேரவேண்டும் என உணர்ந்து 1943-இல் அதை திரைப்படமாக வெளியிட்டார். 

உலக முறைமைக் கோட்பாடு – இம்மானுவேல் வல்லரஸ்ரைன்

மற்றவர்கள் புவியியலையும் போரியலையும் அடிப்படையாக வைத்து புவிசார் அரசியல் கோட்பாடுகளை வகுக்க இம்மானுவேல் வல்லரஸ்ரைன் பொருளாதாரத்தையும் சமூக நிலைமைகளையும் கருத்தில் கொண்டு தனது புவிசார் அரசியல் கோட்பாட்டை முன்வைத்தார். அமெரிக்காவின் யேல் பலகலைக் கழகத்தில் 2000-ம் ஆண்டில் இணைந்து 2019இல் இறக்கும் வரை அங்கு பணியாற்றினார். சமூகவியலாளரான இம்மானுவேல் வல்லரஸ்ரைன் உலக பொருளாதார முறைமை சில நாடுகளுக்கு சாதகமாகவும் பல நாடுகளுக்கு பாதகமாகவும் இருப்பதை அவதானித்தார். அந்த அவதானிப்பை ஆதாரமாக வைத்து அவர் உலக முறைமைக் கோட்பாட்டை முன்வைத்தார். அவரது கோட்பாட்டில் உலக நாடுகளை உள்ளக நாடுகள், அரை-வெளியக நாடுகள், வெளியக நாடுகள் என மூன்று பெரும் பிரிவுகளாக வகுத்தார்.

1. உள்ளக நாடுகள் வெளியக் நாடுகள் மீது முலப்பொருட்களுக்கும் மனித உழைப்பிற்கும் சுரண்டுவதற்காக ஆதிக்கம் செலுத்துகின்றன.

2. வெளியக நாடுகள் தங்கள் மூலதனத்திற்காக உள்ளக நாடுகள் மீது தங்கியிருக்கின்றன.

3. அரை-வெளியக நாடுகள் உள்ளக நாடுகளின் தன்மைகளையும் வெளியக் நாடுகளின் தன்மைகளையும் கொண்டுள்ளன.

4. உலக சமூக கட்டமைப்பில் சமத்துவமின்மை நிலவுகின்றது.

5. உள்ளக நாடுகள் படைவலிமை மிகுந்ததாக இருப்பதுடன் மற்ற நாடுகளில் தங்கியிருப்பதில்லை. அவற்றின் உற்பத்தி முலதனம் மிகுந்ததாகவும் செயற்திறன் நிறைந்ததாகவும் இருக்கின்றது. மற்ற நாடுகளின் மூலப்பொருட்களுக்கும் மனித உழைப்பிற்கும் அவை குறைந்த விலைகளைக் கொடுக்கின்றன. வெளியக நாடுகளுக்கு விற்பனை செய்யும் பொருட்களுக்கு உள்ளக நாடுகள் அதிக விலைகளை விதிக்கின்றன. இந்த சமத்துவமின்மையை உள்ளக நாடுகள் தொடர்ச்சியாக மீளுறுதி செய்து கொண்டிருக்கின்றன.

உள்ளக நாடுகள்: ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், ஜப்பான், கனடா,  ஆகிய நாடுகள்

அரை வெளியக நாடுகள்: ஒஸ்ரேலியா, ஆர்ஜெண்டீனா, சீனா, தென் கொரியா, சவுதி அரேபியா, துருக்கி, இந்தோனேசியா, இரசியா, தைவான், மெக்சிக்கோ, பிரேசில் இந்தியா போன்ற நாடுகள். சீனா அரைவெளியக நாடுகளுக்கும் உள்ளக நாடுகளுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றது எனச் சொல்லலாம். ஜீ-7 நாடுகளின் பட்டியலில் இன்னும் சீனா இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

வெளியக நாடுகள்: மேற்கூறிய உள்ளக மற்றும் அரை உள்ளக நாடுகள் அல்லாத நாடுகள் (ஜி-20 நாடுகளின் பட்டியலில் இல்லாத நாடுகள்)

ஆபிரிக்க கண்டத்தின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்த இம்மானுவேல் வல்லரஸ்ரைன் புதிய உலக முறைமை-1: முதலாளித்துவ விவசாயமும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆரம்பமும் என்ற நூலை  1974இல் எழுதினார். இம்மானுவேல் வல்லரஸ்ரைன் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகள் Geopolitics and Geoculture (புவிசார் அரசியலும் புவிசார் கலாச்சாரமும்) என்னும் பெயரில் மூன்று நூலகளாக வெளியிடப்பட்டன. மற்ற புவிசார் அரசியல் கோட்பாட்டாளர்கள் தமது நாடுகள் எப்படி உலகில் ஆதிக்கம் செலுத்துவது என்பது பற்றிக் கவனம் செலுத்த இம்மானுவேல் வல்லரஸ்ரைன் மட்டும் வளர்ச்சியடைந்த நாடுகள் வளரச்சியடைந்து கொண்டிருக்கும் நாடுகளைச் சுரண்டுவது பற்றிக் கவனம் செலுத்தினார்.

மூன்றாம் அலைக் கோட்பாடு

புவிசார் அரசியலுக்கான மரபுவழிக் கோட்பாடுகளும் அதன் பின்னர் வந்த கோட்பாடுகளையும் தவிர்த்து முன்வைக்கப்பப்பட்டது "மூன்றாம அலைக் கோட்பாடு"

1. நாடுகளின் இறைமையை மதிக்க வேண்டும்

2. தேவை ஏற்படும் போது வலிய நாடுகள் மற்ற நாடுகள் மீது மென்வலு அழுத்தம் பாவிக்கலாம்

3. பன்னாட்டு உறவுகளுக்கான புதிய உலக ஒழுங்கு ஏற்படுத்துதல்

4. நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளைத் தவிர்த்து உலகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் அரபு வசந்தம் எழுச்சி, இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்க படை நடவடிக்கைகள், உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தமை, தென் சீனக் கடலில் சீனா அதிகரித்த ஆதிக்கம் ஆகியவை நிலவிய சூழலில் மூன்றாம் அலைக் கோட்பாடு உருவாக்கப்பட்டது.

கொவிட்-19 தொற்று நோய்த்தாக்கத்தால் உலகப் பொருளாதாரமும் உலக நாடுகளிற்கு இடையிலான உறவுகளும் சீர் குலைந்துள்ள நிலையில் எந்த ஒரு கோட்பாடும் உலகப் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது.

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...