Followers

Thursday 31 December 2020

2020 ஒரு மீள் பார்வை


சீனா மீது சினம் கொள்ள வைத்த ஆண்டு

சோதிடர்களை சோதித்த ஆண்டு

System சரியில்லை என நிரூபித்த ஆண்டு

அயோக்கிய ஆட்சியாளர்களை அம்பலப்படுத்திய ஆண்டு

பலரது வாழ்க்கை முறைமையை மாற்றிய ஆண்டு

ZOOM ஆண்டு

மாநிலங்களின் உரிமையை இந்தியா பறித்த ஆண்டு

இலங்கை கடனில் மூழ்கிய ஆண்டு


சீனா மீது சினம் ஏற்படுத்திய ஆண்டு

2020-ம் ஆண்டை திரும்பிப் பார்க்கையில் தெரிவதெல்லாம் கொரொனா நச்சுக்கிருமியும் அதனால் பரப்பப்பட்ட கொவிட்-19 தொற்று நோயும்தான். சீனாவில் இருந்து அந்த தொற்று நோய்க் கிருமிகள் பரவியதாக பலரும் நம்பியதால் சீனா மீது உலகெங்கும் வாழ் மக்களில் பலர் சினம் கொண்டுள்ளனர். நோய் உருவாகியதாகக் கருதப்படும் வுஹான் நகரில் இருந்து மற்ற சீனப் பிரதேசஙக்ளுக்கு பயணிப்பதை கடுமையான தடுத்த சீனா வுஹானில் இருந்து மற்ற நாடுகளுக்கு விமானங்கள் செல்வதைத் தடுக்கவில்லை. அதனால் சீனா அதிக முதலீடு செய்துள்ல இத்தாலிக்கும் வுஹானில் இருந்து அதிக விமானப் பறப்புக்கள் செய்யப்படும் நியூயோர்க் நகருக்கும் தொற்று நோய் பெருமளவில் பரவியது. புதிய வகைக் கிருமி ஒன்று பரவுகின்றது என எச்சரித்த சீன மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரும் கொவிட்-19 ஆல் கொல்லப்பட்டார். இதெல்லாம் சீனாவில் சாதாரணமப்பா என்பது போல் சீனா நடந்து கொண்டது.

சோதிடர்களை சோதித்த ஆண்டு

2020-ம் ஆண்டு அமோகமாக இருக்கப் போகின்றது, பிரம்மாண்டமாக இருக்கப் போகின்றது, சுபீட்சமாக இருக்கப் போகின்றது, இது ஒரு ஒளிமயமான ஆண்டு, மன்னர்களும் மக்களும் நேர்மையாக இருக்கப் போகின்ற ஆண்டு, பஞ்சம் என்பதே இருக்காது, ஐந்து கிரகங்கள் சாதகமாகவும் குரு ஆட்சி பெற்றும் இருக்கையில் பிறங்கும் அற்புதமான ஆண்டு என சோதிடர்கள் சொன்னார்கள். ஆனால் 2020 உலகையே கலங்கடித்த ஆண்டு. மக்களின் செயற்பாடுகளை மாற்றியமைத்த ஆண்டு.

System சரியில்லை என நிரூபித்த ஆண்டு

கொவிட்-19 நோய் பரவத் தொடங்கியவுடன் பல நாடுகளின் மருத்துவத் துறையும் சுகாதாரத்துறையும் சரிவர செயற்படவில்லை. தைவான் அரசு ஒரு கொடிய தொற்று நோய் வந்தால் எப்படிச் எதிர் கொள்வது என்ற தயாரிப்பு வேலைகளை முன் கூட்டியே செய்து வைத்து வருமுன் தன் மக்களைக் காப்பாற்றியது. வியட்னாம் நோய் வந்தவுடன் துரிதமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஒருவர் கூட நோயால் இறக்காமல் பார்த்துக் கொண்டது. இத்தாலி, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் நோயை எதிர் கொள்ளக் கூடிய வகையில் தயார் நிலையில் இருக்கவும் இல்லை வந்தவுடன் துரித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது ஒரு சாதாரண நச்சுக் கிருமிக் காய்ச்சல் என்றார். மக்கள் ஒன்றுகூடுவதை தடை செய்யும் படி மருத்துவ நிபுணர்கள் சொன்ன போது பிரித்தானிய தலைமை அமைச்சர் பப்பிற்கு போய் தண்ணியடிக்காமல் இருப்பதும் ஒரு வாழ்க்கையா என்றார். பொதுவாக பல நாடுகளின் ஆட்சி முறைமை மோசமான நிலையில் இருக்கின்றது என்பதை கொவிட்-19 நோய் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

அயோக்கிய ஆட்சியாளர்களை அம்பலப்படுத்திய ஆண்டு

இந்தியாவில் மலேரியாக் காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்து கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துகின்றது என்ற பிழையான தகவல் வெளிவிடப்பட்டது. அதை பல நாடுகளும் வாங்க முயற்ச்சித்த போது இந்தியா அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. அமெரிக்க அதிபர் இந்தியா தமக்கு அந்த மருந்தைக் கொடுக்க வேண்டும் அல்லது இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப் படும் என மிரட்டினார். பின்னர் அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்டது ஆனால் அது கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த மாட்டாது என்ற உணமை அறியப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனம் உரிய நேரத்தில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டது. தொற்று நோயைப்பரவ விட்டமைக்காக சீனா மீது உலக அளவில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஒஸ்ரேலியா தெரிவித்த படியால் அதற்கு எதிராக சீனா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்தியாவும் சீனாவும் தமது எல்லையில் நடந்த மோதல்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை வெளிவிட்டனர். உலகெங்கும் கொவிட்-19 தொற்று நோய்க்கான தடுப்பூசியைக் கண்டு பிடிக்கா ஆய்வு செய்யும் உள்ள பல்கலைக்கழங்களிலும் ஆய்வு கூடகங்களிலும் உள்ள கணினிகளில் இருந்து தகவல்களை திருட பல நாடுகளில் இருந்து ஊடுருவல் முயற்ச்சிகள் நடந்தன. யார் முதலில் தடுப்பூசி மருந்தைக் கண்டு பிடிப்பது என்பதில் கடும் போட்டி நடந்தது ஆனால் ஒத்துழைப்புகள் நடக்கவில்லை. போதிய முன்னறிவித்தல் இன்றியும் உரிய வசதிகள் அமைத்துக் கொடுக்காமலும் ஊரடங்கு சட்டம் அறிவித்தமையால் இந்தியாவில் பலர் பாதிக்கப்பட்டனர். பல நூறு மைல்களை பல இலட்சம் பேர் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. குழந்தைகள் அதின்போது இறக்க நேரிட்டச்ச்து. தன் நாட்டு மக்களை சிறப்பாக காப்பாற்றிய சிங்கப்பூர் அரசு வெளிநாட்டில் இருந்து வந்து தொழில் செய்வோரை உதாசீனம் செய்தது.

பலரது வாழ்க்கை முறைமையை மாற்றிய ஆண்டு

போக்கு வரத்துக் கட்டுப்பாடு ஒன்று கூடல் தடை போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டனர். உணவகங்கள், உல்லாச விடுதிகள் போக்குவரத்துத் துறையில் பணி புரிவோர் வருமான இழப்பால் பாதிக்கப்பட்டனர். வீட்டில் இருந்து பணிபுரியும் முறைமை பெருமளவில் அறிமுகப் படுத்தப் பட்டது. மாணவர்கள் கல்விக் கூடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே இணைய வெளி மூலம் கல்வி கற்கும் ஏற்பாடு பரவலாக அறிமுகமானது. ஏழை மாணவர்கள் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது

 

ZOOM ஆண்டு

அமெரிக்காவில் வாழும் சீனர் ஒருவர் உருவாக்கிய ZOOM என்ற செயலி உலகெங்கும் பாவிக்கப் பட்டது. காணொலி மூலமான தொடர்பாடல் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும் கலவி கற்பவர்களுக்கும் பெரிதும் உதவி செய்தது. உலக முடக்கத்தின் போது ZOOM மூலமான தொடர்பாடல் உலக இயக்கத்திற்கு உதவியது.

மாநிலங்களின் உரிமையை இந்தியா பறித்த ஆண்டு

பல தேசங்களின் ஒன்றியமாக உருவாக்கப்பட்ட இந்தியாவில் மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப் பட்டு வருகின்றன. மாநிலக் கட்சிகளை சிதைப்பதில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி பகிரங்கமாக செயற்படுகின்ற ஆண்டாக 2020 அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தின் மம்தா பனர்ஜீ தலைமையிலான திரினாமுல் காங்கிரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவினர். பாஜகவின் அமித் ஷா பனர்ஜீயைப் பார்த்து நீ தனித்து நிற்கப் போகின்றாய் என்றார். மக்களாட்சிக்கு பல கட்சிகள் வலிமையாக இருப்பது அவசியம் ஆனால் காங்கிரசுக் கட்சி தலைமையின்றி தடுமாறுகின்றது. ராகுல் காந்தியைத் தவிர மற்ற எல்லோரும் ராகுல் தான் கட்சிக்கு தலைமை ஏற்கவேண்டும் என்கின்றனர். காங்கிரசு கட்சியினர் ராகுல் திறன்படச் செயற்பட வேன்டும் என்கின்றனர். ஆனால் கட்சிக்கு ஒரு திறமை மிக்க தலைவரை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் காங்கிரசுக்கு தலைமை தாங்க கூடாது என்பது எழுதாத சட்டமாக உள்ளது.

இலங்கை கடனில் மூழ்கிய ஆண்டு

கடந்த பல பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வரவிலும் பார்க்க அதிக செலவு செய்து வந்த இலங்கை அரசுக்கு கொவிட்-19 கடைசி வைக்கோலாக அமைந்துள்ளது. இலங்கையின் கடன்படு திறனை மூன்று நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலைக்கு தாழ்த்தியுள்ளன. அத்துடன் இலங்கையில் வங்கிகள் ஆபத்தான சூழலில் செயற்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அதிக அளவில் நிதி உதவு தேவைப்படுகின்றது. 2020இல் இலங்கை சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலரை வெறும் கையுடன் திரும்பி அனுப்பியது இலங்கை அரசு. அவர் மிலேனியம் சவால் ஒத்துழைப்பின் மூலம் இலங்கைக்கு 480மில்லியன் டொலர் உதவியை வழங்க தயாராக இருந்தார். அதற்கு பதிலாக இலங்கையை அமெரிக்கப் படைத்துறையினர் கட்டுப்பாடின்றி பாவிக்கும் உரிமையைக் கோரியிருந்தார். சீனாவை அதிருப்திப் படுத்தும் நடவடிக்கையை இலங்கை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.

மேற்காசிய அரசுறவியலை மாற்றிய ஆண்டு

இஸ்ரேலுடன் சில அரபு நாடுகள் அரசுறவியல் தொடர்புகளை 2020இல் ஏற்படுத்திக் கொண்டன. ஆனாலும் இஸ்ரேலில் உறுதியான ஆட்சி இல்லை. இரண்டு ஆண்டுகளில் நான்கு தேர்தல்களை இஸ்ரேல் சந்திக்க வேண்டிய சூழல். சவுதி அரேபியா அனுபவமற்ற இளவரசரின் ஆட்சியில் ஆட்டம் காண்கின்றது. ஈரான் படைத்தளபதியினையும் அணு விஞ்ஞானியையும் பாதுகாக்க முடியாமலும் அந்த இழப்பீட்டிற்கு பதிலடி கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றது. துடுக்குடன் செயற்படும் துருக்கியை அடக்க யாரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

இரசியா

வரலாற்றில் மிகப்பெரிய இணைய வெளி ஊடுருவலை இரசியா அமெரிக்கா மீது செய்து மிகப்பெரிய தகவல் அபகரிப்பைச் செய்தது என்ற குற்றச் சாட்டு இரசியாமீது 2020இல் வைக்கப்பட்டது. அதற்கான அறுவடையை இரசியா 2021இல் செய்யலாம். லிபியாவில் துருக்கியும் இரசியாவும் குட்டையைக் குழப்பின. இரசியா அஜர்பைஜான் – ஆர்மேனிய மோதலில் இரசியா அப்பம் பகிரும் வேலையை வெற்றிகரமாக செய்தது. அங்கு துருக்கியையும் பிரான்ஸையும் இரசியா ஓரம் கட்டியது.

அமெரிக்கா

சீனாவிற்கு எதிரான வர்த்தகப் போரையும் தொழில்நுட்பப் போரையும் 2020இல் அமெரிக்கா தீவிரப்படுத்தியது. சண்டை என்றால் சட்டை கிழியத்தான் செய்யும். அது போல் போர் என்றால் பொருளாதாரம் கிழியும். அடி வாங்கிய சீனாவிலும் பார்க்க அடித்த அமெரிக்காவிற்கு அதிக காயம். 2020இல் ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை வெற்றிகரமாகவும் துரிதமாகவும் உருவாக்கிய அமெரிக்கா அடுத்த தலைமுறை பெரு-விமானம் தாங்கிக்கப்பல்களையும் ஆழக்கடல்களில் பாவிக்கத் தொடங்கியது. 2020இல் சீனா தைவானைக் கைப்பற்றாமல் தடுப்பதில் அமெரிக்கா பார்த்துக் கொண்டது.

சீனா

பையப் பையத் தின்றால் பனையையும் தின்னலாம் என்பதை தென் சீனக் கடலில் நிரூபித்த சீனா அதே பாணியை இமய மலைச்சாரலிலும் 2020இல் செய்தது. அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் 2020இல் இரகசியமாக இமையமலைச் சாரலில் இந்தியாவிற்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். மேற்காசியாவில் குர்திஷ் மக்களைப் பலி கொடுத்தது போல இமய மலைச்சாரலில் தீபெத்திய இளையோர் பலியிடப்படுள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பல ஆசிய நாடுகளுடனும் சீனா செய்துள்ள வர்த்தக் ஒப்பந்தங்கள் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் பாதிப்பை ஈடு செய்யலாம். சீனாவில் பெருமுதலாளிகள் உருவெடுப்பதை இட்டு 2020இல் சீனப் பொதுவுடமைக் கட்சி கரிச்னை கொள்ளத் தொடங்கியுள்ளது.

FANG நிறுவனங்க்களின் ஆண்டு

FANG என சுருக்கமாக அழைக்கப்படும் Facebook, Amazon, Netfliz, Google ஆகிய நாற்பெரும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது வருமாந்த்தை பெருமளவில் 2020இல் பெருக்கிக் கொண்டன. இந்த நிறுவனங்களின் தனியாதிக்கத்தை அமெரிக்க ஆட்சியாளர்கள் தணிக்க வேண்டும் என நினைக்கின்றனர். எண்மியக் கொடுப்பனவுகள் 2020இல் மிகவும் அதிகரிதிருந்தன. நுண்மிய நாணயங்களின் பெறுமதியும் பாவனையும் 2020இல் அதிகரித்திருந்தன. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடைந்துள்ளது.

உலகமயமாதல் நிறுத்தப்பட்டு தேசியவாதம் தலை தூக்கியது. சில்லறை வர்த்தகத் துறை பாதிக்கப்பட்டு இணையவெளி வர்த்தகம் வளர்ச்சியடைந்துள்ளது. நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பு சோதனைக்கு உள்ளாகிய வேளையில் குவாட் என்னும் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கான எண்ணக் கரு 2020இல் உருவானது.

சோதனைகள் நிறைந்த ஆண்டான 2020இல் ஆட்சியாளர்கள் படிப்பினை பெறவில்லை.

Sunday 27 December 2020

அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்?

பன்னாட்டு நியமங்களுக்கு உட்படாமலும் பன்னாட்டு அமைப்புக்களில் விவாதிக்க முடியாமலும் ஒரு நாட்டுக்கு பாதகம் விளைவிக்க் கூடிய வகையில் இன்னொரு நாடு செயற்படுதல் சாம்பல் வெளித் (Gray Area) தாக்குதல் எனப்படும். சாம்பல் வெளி நடவடிக்கைகளை போர்ச் செயல் (Act of War) எனக் கருதப்பட முடியாது. சாம்பல் வெளித் தாக்குதல் செய்யும் போது அதற்கு உடனடியான பதிலடி கொடுக்க முடியாத வகையில் செய்யப்படும். தென்சீனக் கடற்பிரதேசத்தில் கணிசமான பகுதியை சீனா தன் வசமாக்கியதும் உக்ரேனின் கிறிமியாவை இரசியா தனதாக்கிக் கொண்டதும் ஈரான் நாடானது ஈராக், சிரியா, லெபனான் ஆகிய நாடுகள் மீது தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியதும் சாம்பல் வெளி தாக்குதல் மூலமாகவே. அமெரிக்காவில் பிரபல்யவாதத்தை இரசியா சாம்பல் வெளி நடவடிக்கைகள் மூலம் வளர்த்தது. ஒரு கணினியில் அல்லது கணினித் தொகுதியில் இருந்து இன்னொரு கணினி அல்லது கணினித் தொகுதிகளுக்குள் இலத்திரனியல் மூலமாக நுழைந்து தகவல்களைத் திருடுதல், தகவல்களை அழித்தல் இணையவெளி ஊடுருவல் என அழைக்கப்படுகின்றது. அப்படிப்பட்ட ஊடுருவல் மூலம் ஒரு கணினியை அல்லது கணினித் தொகுதியை செயற்படாமல் செய்வது இணையவெளித் தாக்குதல் எனப்படும். இணையவெளி ஊடுருவல் மற்றும் தாக்குதல் போன்றவை சாம்பல் வெளித் தாக்குதல் ஆகும்.

அமெரிக்க கணினித் தொகுதிகள் மீது பரவலான தாக்குதல்

அமெரிக்க திறைசேரி, அமெரிக்க வர்த்தக அமைச்சு, அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சு ஆகிய முக்கிய அரசத்துறை, அமெரிக்காவின் முன்னணி உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு முகவரகம் (National Security Agency), அமெரிக்க அணு முகவரகம் போன்ற முன்னணி அரச அமைப்புக்கள், முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் உட்பட பத்தாயிரக் கணக்கான அமைப்புக்களின் கணினித் தொகுதிகள் மீது 2020 டிசம்பர் மாதம் 8-ம் திகதி இணையவெளித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் இரசிய ஆதரவுடன் செய்யப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. கடந்த பல ஆண்டுகளாக இந்தக் குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்ட போதிலும் அமெரிக்காமீதும் அதன் நட்பு நாடுகள் மீதும் செய்யப்படும் இணைய வெளித் தாக்குதலை நிறுத்த முடியாமல் இருக்கின்றது. இரசியாவில் இருந்துதான் இணையவெளித்தாக்குதல் செய்யப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் உறுதிபட செய்திகள் வெளியிட்டன. அரச நிறுவனங்கள் ஒவ்வொன்றினதும் தனியார் நிறுவங்கள் ஒவ்வொன்றினதும் கணினித் தொகுதிகளை தனித்தனி ஊடுருவுவதிலும் பார்க்க அவற்றிற்கெல்லாம் சேவை வழங்கும் நிறுவனத்தின் கணினித் தொகுதிகளை ஊடுருவி பின்னர் எல்லாக் கணினித் தொகுதிகளையும் ஊடுருவும் முறை பாவிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது. எட்டு மாதங்களாக செய்யப்பட்ட ஊடுருவலை தடுக்க முடியாமல் போனது அதிலும் அதிக ஆச்சரியம் கொடுத்துள்ளது.

டிரம்ப் இரசிய நண்பரா?

2020 டிசம்பரில் செய்யப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போது இணையவெளி ஊடுருவலுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையை புதிய அதிபர் பார்த்துக் கொள்ளட்டும் என்றார். ஈரான் தொடர்பான விவகாரங்களில் உடனுக்குடன் பதிலடி நடவடிக்கை எடுக்கும் டிரம்ப் இதில் தயக்கம் காட்டுகின்றார். புதிதாகப் பதவியேற்கவிருக்கும் அதிபர் ஜோன் பைடன் டிரம்ப் ஊடுருவிகள் யார் என இனம் காணவேண்டும் என்றதுடன் வழமையான முறைப்படி ஊடுருவல் தொடர்பான தகவல்களை டிரம்ப் தன்னுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்ற குற்றச் சாட்டையும் முன்வைத்தார். டிரம்பினுடைய சட்டமா அதிபர் வில்லியம் பார் இரசியாதான் சாத்தியமான ஊடுருவல் குற்றவாளி என்றார். அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் (அமைச்சர்) மைக் பொம்பியோ இத்தகைய பொறுப்பற்ற, பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய தாக்குதலை இரசியாவால் மட்டுமே செய்ய முடியும் என்றார். டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் எல்லாவற்றிற்கும் இரசியா, இரசியா, இரசியா எனக் குற்றம் சாட்ட முடியாது சீனாவும் செய்திருக்கலாம் என்றார்.

தாக்குதல் நடந்த விதம்

அமெரிக்காவின் Solar Winds என்ற கணினிச் சேவை நிறுவனம் பல அமெரிக்க அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் கணினிகளுக்கான மென்பொருள் மற்றும் பராமரிப்பு சேவைகளைச் செய்கின்றது. அதன் கணினிகளை ஊடுருவி அது சேவை வழங்கும் நிறுவனங்களின் கணினிகள் ஊடுருவப்பட்டுள்ளன. Solar Winds கணினிச் சேவை நிறுவனம் தனது மென்பொருள்களை புதுப்பிக்கும் (updating) பணியைச் செய்த போது அதன் மென்பொருளில் ஊடுருவிகள் தங்களது தீங்குநிரலியை (Malware) இணைத்து விட்டனர். அதனால் Solar Winds கணினிச் சேவை நிறுவனத்தின் மென்பொருட்களைப் பாவிக்கும் எல்லா கணினிகளையும் அந்த தீங்குநிரலி சென்றடைந்து தனது ஊடுருவல் பணியைச் செய்யத் தொடங்கியது. இதனால் Solar Windsஇன் முதன்மை நிறைவேற்று அதிகாரி பதவி விலகியுள்ளார். Solar Windsஇன் கணினிகள் ஊடுருவப்பட்ட செய்தி வெளிவர முன்னரே அதனது சில பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்து விட்டதும் அறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் Solar Winds மீதான ஊடுருவல் நீண்ட காலம் நடந்த தாக்குதல் மட்டுமல்ல அமெரிக்காவின் தகவல்களின் தங்கச் சுரங்கம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட தகவல், மின்னஞ்சல்கள் மிக அதிக அளவினதாகும். இந்த ஊடுருவலின் போது தகவல் திருடப் பட்டது மட்டுமே நடந்துள்ளது. மென்பொருள்களைச் சிதைத்தல் கணினித் தொகுதிகளை செயற்பட முடியாமல் செய்தல் போன்ற அழிப்பு நடவடிக்கைகள் செய்யப் படவில்லை.

ஒரு வலிமை மிக்க நாடுதான் செய்திருக்க வேண்டும்

Solar Winds கணினிச் சேவை நிறுவனத்தின் அதிகாரிகளின் கருத்துப்படி தங்களது கணினித் தொகுதிகளில் இணைக்கப்பட்டுள்ல மென்பொருளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறியடித்து ஊடுருவுவதற்கு உயர் தொழில்நுட்பம், அதிக அளவிலான நிபுணர்கள், சிறந்த அனுபவம் தேவை என்பதால் அதை ஒரு வெளிநாடு ஒன்றுதான் செய்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் இத்தகைய ஊடுருவலை இரசியா அல்லது சீனாவால் மட்டுமே செய்ய முடியும் என்கின்றனர். தாக்குதலுக்கு பாவிக்கப் பட்ட மென்பொருள் FireEye எனவும் அறியப்பட்டுள்ளது. வெளிநாடு ஒன்றில் இருந்து அமெரிக்காவில் உள்ள ஓர் இடத்தில் உள்ள கணினிகளை இயக்குவதன் மூலம் ஊடுருவல் நடந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.

இரசிய உளவுத்துறையின் நூற்றாண்டுக் கொண்டாட்டம்

இரசியாவில் FSB என்ற உள்நாட்டு உளவுத்துறையும் SVR என்ற வெளிநாடு உளவுத்துறையும் உள்ளன. இரசிய SVR உளவுத்துறையின் 100வது ஆண்டு விழா 2020 டிசம்பர் 20-ம் திகதி கொண்டாடப் பட்டது. இரசிய உளவுத்துறையின் தலைமையகத்தில் உரையாற்றிய முன்னாள் உளவாளியும் தற்போதைய இரசிய அதிபருமான விளடிமீர் புட்டீன் இரசியாவையும் அதன் மக்களையும் பாதுகாப்பதில் இரசிய உளவுத்துறையின் பங்களிப்பை மிகவும் பாராட்டினார். 100வது ஆண்டு நிறைவு நாளில் இரசிய உளவுத்துறைக்கு ஓர் ஊக்கம் கொடுக்கும் வகையில் இரசியா அமெரிக்காவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் ஓர் இணையவெளி ஊடுருவலைச் செய்ததா எனக் கருத இடமுண்டு. இரசிய SVR உளவுத்துறை சில மாதங்கள் உறங்கு நிலையில் இருந்து விட்டு பின் திடீரென அமெரிக்க இணையவெளியில் ஊடுருவலைச் செய்துள்ளது என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் பதிலடி

இரசியாவில் இருந்து செய்ததாக கருதப் படும் ஊடுருவல் பல தடவைகள் நடந்துள்ளன. இதற்கு எப்போது, எங்கே, எப்படி அமெரிக்கா பதிலடி கொடுக்கப் போகின்றதுச் என்ற கேள்விக்கான பதிலை சரியாக அறிவது கடினம். பதில் ஊடுருவல் அமெரிக்கா மீதான ஊடுருவல்களை இன்னும் தீவிரமடையச் செய்யும். அதனால் இரசிய அதிபர் புட்டீனின் உத்தரவின் பேரில் இந்த ஊடுருவல் நடந்தது என்பதற்கான ஆதாரங்களுக்கு அமெரிக்கா காத்திருக்கலாம். பின்னர் புட்டீனின் சொத்துக்களை முடக்குதல் போன்ற நிதித்துறை தாக்குதல்களை அமெரிக்கா செய்து அவருக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பீடுகளை ஏற்படுத்த்லாம்.

கணினித்துறை நிபுணர்கள் இரசியாதான் செய்திருக்க வேண்டும் எனச் சொன்னாலும் தங்களால் அதை உறுதி செய்ய முடியாது என்கின்றனர். ஆனால் அமெரிக்காவின் இணையவெளிப்பாதுகாப்பு (Cyber Security) பாதுகாப்பற்றது என்பதை தம்மால் உறுதியாகக் கூற முடியும் என்கின்றனர்.

Monday 21 December 2020

சீனாவிற்கு தன்னம்பிக்கை இல்லையா?


சீனப் பொதுவுடமைக் கட்சியின் 19வது நடுவண் குழு 2020 ஒக்டோபர் 26 – 29 திகதிகளில் கூடி 14வது ஐந்தாண்டுத் திட்டத்தின் வரைபை உருவாக்கியது. அதன் முழு விபரமும் 2021 மார்ச் மாதத்தில் நடக்கும் தேசிய மக்கள் பேராயம் (National People’s Congress) என்னும் 2980 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள சீன நாடளுமன்றக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும். 1953-ம் ஆண்டில் இருந்து சீனா ஐந்தாண்டு திட்டங்களை வரைந்து அவற்றை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. சீனா அடைந்துள்ள தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்றாகும். சீனா தொடர்ச்சியாக பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கின்றது என அதன் புள்ளி விபரங்கள் சொன்னாலும் அதன் ஆட்சியாளர்களோ பொருளாதார திட்டமிடுபவர்களோ சீனா தொடர் பெருதார வளர்ச்சியடைவது போல் செயற்படுவதில்லை. சீனப் பொருளாதாரத்தையிட்டு அவர்கள் தொடர்ச்சியாக கரிசனை கொண்டவர்களாகவே செயற்படுகின்றனர்.

பெருமையடைந்த சீனர்கள்

சீனாவின் 14வது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய அம்சங்கள் 1) 2035இல் சீனாவின் சமூகவுடமையை நவீனமயமாக்கல். 2) உயர் கதி உயர் தரப் பொருளாதார வளர்ச்சி, 3) விநியோகப் பக்க சீர்திருத்தம், 4) தொழில்நுட்ப மேம்பாடு, 5) தேச வலிமை, 6) முலதன நகர்வுகளை அனுமதித்தல், 7) உற்பத்தித் துறையை பசுமயாக்குதல்,. சீனா கொவிட்-19 தொற்று நோயைக் கையாண்ட விதத்தையிட்டு சீனாவின் எல்லாத் தரப்பினரும் பெருமையடைந்துள்ளனர். உலகின் முன்னணி நாடுகளில் சீனா மட்டுமே 2020இல் பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதனால் கிடைத்த நம்பிக்கை சீனாவின் புதிய ஐந்தாண்டு திட்டத்தில் பிரதிபலிக்கின்றது.



நிதிச் சந்தையை திறந்தவிட்ட சீனா

சீனா தனது 15ரில்லியன் டொலர் பெறுமதியான நிதிச் சந்தையில் வெளிநாட்டவர்களும் பங்கு பற்றலாம் என 2020 நவம்பரில் அறிவித்தது. அதனால் சீர அரச நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் வெளிநாட்டவர்களிடம் கடன் வாங்கலாம். அதாவது சீனக் கடன்முறிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய சீன அரசு அனுமதித்துள்ளது. இது சீனாவின் 14-வது ஐந்தாண்டுத் திட்டம்-2021-25இன் ஓர் அம்சமாகும். அத்திட்டத்தின் படி சீனர்களும் வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம். அதாவது இதுவரை ஐ-போன்களை வாங்கி வந்த சீனர்கள் இனி அப்பிள் நிறுவனத்தின் பங்குகளையும் வாங்கலாம். சீனாவின் பல உள்ளூராட்சி அமைப்புக்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் முதலீட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறியப் படுகின்றது. இதனால் சீனா வெளிநாடுகளில் இருந்து முதலீட்டை ஊக்குவிக்க தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக பொருளாதார வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் சீனாவில் ஏன் முதலீட்டு தட்டுப்பாடு?

சீனப் பொருளாதாரத்தின் வலுவற்ற புள்ளி

பொருளாதாரத்தில் விநியோகப் பக்கம், கேள்விப்பக்கம் என இரு பக்கங்கள் உள்ளன. கேள்விப் பக்கத்தில் பொருளாதாரத்தில் செய்யப்படும் முதலீடு, நாட்டு மக்களின் மொத்தக் கொள்வனவு, நாட்டில் இருந்து செய்யப்படும் ஏற்றுமதி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. விநியோகப் பக்கத்தில் நாட்டின் மக்களின் உழைப்பு, நாட்டில் செயற்படும் மூலதனம், தொழில்நுட்பம், அரசின் செயற்பாடுகள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. சீனாவின் கேள்விப் பக்கத்திலும் பார்க்க விநியோகப் பக்கம் அதிகமாக உள்ளது. அதனால் சீனப் பொருளாதாரம் ஏற்றுமதியில் அதிகம் தங்கியுள்ளது. தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வரும் சீன மக்களின் கைகளில் அதிக நிதி இருக்க வேண்டும். அதனால் அவர்கள் அதிக கொள்வனவைச் செய்ய வேண்டும். பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளில் அதன் மொத்த தேசிய உற்பத்தி அதன் மக்களின் கொள்வனவிலேயே பெரிதும் தங்கி இருக்கின்றது. சீன மக்கள் ஏன் இன்னும் பொருளாதாரத்திற்கு தேவையான கொள்வனவைச் செய்யவில்லை?

ஆன்மீக அமைப்பிற்கே அஞ்சுகின்றதா சீனா?

சீனாவின் ஃபலுங் கொங் (Falun Gong) என்ற ஆன்மிக அமைப்பின் வலைத்தளங்களை சீன அரசு தடை செய்தது. அதன் வலைத்தளங்கள் மீது சீன அரசும் பொதுவுடமைக் கட்சியினரும் பல இணையவெளித் தாக்குதல்களை மேற்கொண்டனர். பிரித்தானியாவின் உள்ள வொடாஃபோன் நிறுவனத்தின் கைப்பேசிகளிலும் அவை தடை செய்யப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் தியானம் செய்வதை முக்கிய செயற்பாடாக் கொண்ட இந்த அமைப்பை சீனா ஏன் தடை செய்ய வேண்டும் என்பது முதற் கேள்வி. இரண்டாவது கேள்வி சீன அரசு ஹுவாவே நிறுவனம் மூலம் ஹுவாவேயின் கருவிகளைப் பாவிக்கும் வெடாஃபோன் நிறுவனத்தின் கணினிகளை ஊடுருவி ஃபலுங் கொங் நிறுவனத்தின் இணையவெளித் தளத்தை தடை செய்ததா? இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்க வொடாஃபோன் நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகின்றது. இது தொடர்பான உண்மைகள் வெளிவந்தால் வொடாஃபோன் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என அது அஞ்சுகின்றதா என்பதும் ஒரு கேள்வியாக உருவெடுக்கின்றது. தொடர்ச்சியாக பொருளாதார வெற்றியைக் கண்டு வரும் சீனப் பொதுவுடமைக் கட்சியினர் ஏன் ஒரு தியான அமைப்பிற்கு அஞ்சுகின்றார்கள்?

ஏன் இந்த இறக்குமதிக் கட்டுப்பாடு?

தொடர்ச்சியாகப் பொருளாதார வெற்றியை அடைந்த நாடுகள் தங்கள் நாட்டுக்குள் வரும் பொருட்கள் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளையோ இறக்குமதி வரிகளையோ விதிக்க வேண்டியதில்லை. தமது நாட்டு மக்கள் தரமான பொருட்களை வாங்கி அனுபவிக்கட்டும் என அரசு அனுமதியளிக்கும். ஆனால் சீனா அப்படிச் செய்வதில்லை. பல சந்தர்ப்பங்களில் வேண்டு மென்று சில குற்றச் சாட்டுகளை முன் வைத்து வெளிநாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு பொருட்கள் வருவதை சீனா தடை செய்கின்றது. 2020 டிசம்பர் முதல் வாரத்தில் ஒஸ்ரேலியாவில் இருந்து சீனாவிற்கு இறக்குமதியாகும் ஆட்டு இறைச்சியை சீனா தடை செய்துள்ளது. ஒஸ்ரேலியாவில் இருந்து வரும் ஆட்டு இறைச்சி மூலம் சீனாவில் கோவிட்-19 தொற்று நோய் பரவும் என சீன அரசு விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் சீனா ஒஸ்ரேலியாவிற்கு பல மிரட்டல்களையும் விடுத்துள்ளது. சீனாவைப் பகைத்தால் சீனா ஒஸ்ரேலியாவிற்கு மோசமான எதிரியாகும் என சீனா தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடு மற்ற நாடுகளுடன் எப்படி பொருளாதார ஒத்துழைப்புக்களை மேற்கொள்வது என்பதில்தான் அதிக கவனம் செலுத்தும். மற்ற நாடுகளை மிரட்டுவது ஒரு பொருளாதார வளர்ச்சியடைந்த நாட்டுக்கு உரியதல்ல.

வெளிப்படைத் தன்மைக்கு ஏன் அஞ்ச வேண்டும்?

சீன அதிபர் ஜீ ஜின்பிங் சீன ஊடகங்கள் எப்போதும் அரசுக்கும் பொதுவுடமைக் கட்சிக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து நிர்ப்பந்திக்கின்றார். சீன ஊடகர்களின் மனதில் ஜீ ஜின்பிங்கின் சிந்தனைகள்தான் படைக்கலன்களாக இருக்க வேண்டும் என்பது பொதுவுடமைக் கட்சியின் கொள்கையாக இருக்கின்றது. தொடர் பொருளாதார வளர்ச்சியை அடையும் நாட்டு மக்களுக்கு ஊடக சுதந்திரம் சிறந்த தகவல் வழங்கலாம். ஆனால் சீன ஆட்சியாளர்களும் பொதுவுடமைக் கட்சியினரும் ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதில்லை. வெளிநாட்டு ஊடகர்கள் மீதும் சீனாவில் அடக்கு முறைகள் பிரயோகிக்கப் படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

சீனா தன் உண்மை முகத்தை உலகிற்கு காட்ட வேண்டும்.

Friday 18 December 2020

ரஃபேல் விமானத்தில் குழப்ப முடியாத GPS

 


2018-ம் ஆண்டு நேட்டோ படையினரும் பின்லாந்தும் இணைந்து செய்த Trident போர்ப்பயிற்ச்சியின் போது. நோர்வேயினதும் பின்லாந்தினதும் பூகோள நிலையறி முறைமையை (GPS) இரசியா குழப்பியதாக செய்திகள் வெளிவந்திருந்தன. சிரியப் போரிலும் இது நடந்தது எனக் கருதப்படுகின்றது. இரசிய அதிபர் விளடிமீர் பயணிக்கும் இடங்களில் பூகோள நிலையறி முறைமையை (GPS) குழப்பி அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இரசியா முதலில் குழப்பி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. பின்னர் அது போர்முனைகளில் பாவிக்கக் கூடிய அளவிற்கு மேம்படுத்தப்பட்டது. இதைச் சமாளிக்க ரஃபேல் விமானத்தில் புதிய தொழில்நுட்பம் இணைக்கப்படவுள்ளது. 

இலத்திரனியல் போரில் வல்ல இரசியா

பூகோள நிலையறி முறைமையை (GPS) குழப்புதல் என்பது இலத்திரனியப் போரியலின் ஒரு பகுதியாகும். 2014-ம் ஆண்டு அமெரிக்காவின் USS Donald Cook போர்க்கப்பலுக்கு அண்மையாக இரசியாவின் SU-24 போர் விமானம் பறைந்தவுடன் அந்தப் போர்க்கப்பலில் உள்ள எல்லா இலத்திரனியல் கருவிகளும் செயலிழந்து போயின. அந்த அளவிற்கு இரசியாவின் இலத்திரனியல் போர் முறைமை மேம்பட்டதாக இருக்கின்றது. இரசியாவின் SU-24 இருந்து வீசிய வானலை இலத்திரன் அலைகள் மூலமாக அமெரிக்கப் போர்க்கப்பலின் இலத்திரனியல் செயற்பாடுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. அமெரிக்காவின் மிகப்பாரிய பெறுமதி மிக்க கப்பல்களை மிகமலிவான இலத்திரனியல் கருவிகள் மூலம் செயலிழக்கச் செய்யும் இரசியாவின் தொடர்ச்சியான ஆராய்ச்சி வெற்றியளித்துள்ளது. 

துல்லிய தாக்குதலுக்கு GPS அவசியம்

தரையில் இருந்து 20,000கிமீ (12,000மைல்) உயரத்தில் மிதக்கும் முப்பதிற்கு மேற்பட்ட செய்மதிகளில் இருந்து வரும் தொடர்பாடல்கள் மூலம் பூகோள நிலையறி முறைமை (GPS) செயற்படுகின்றது. பூகோள நிலையறி முறைமை செய்மதிகளின் உதவிகளுடன் செயற்படுகின்றது. செய்மதிகளில் இருந்து ஒளியின் வேகத்தில் வரும் சமிக்ஞைகளை குழப்புவதன் மூலம் பூகோள நிலையறி முறைமையைக் குழப்பலாம். 1990/91 ஆண்டுகளில் நடந்த வளைகுடாப் போரின் போது அமெரிக்கப் படையினர் தரை, வான், கடல் ஆகிய மூன்று நிலைகளில் இருந்தும் ஈராக் மீது ஏவுகணைகளை வீசி இலக்குகளை துல்லியமாக தாக்கியமைக்கு பூகோள நிலையறி முறைமை (GPS) காரணமாக அமைந்தது. அதைப் பார்த்து வியந்த ஒரு இரசியப் படைத்துறை நிபுணர் இது போரியலில் அடுத்த தலைமுறை வகையைச் சேர்ந்தது. என்றார்.

What is a GPS jammer?

A GPS jammer is a typically small, self-contained, transmitter device used to conceal one’s location by sending radio signals with the same frequency as a GPS device. When this occurs, the GPS device is unable to determine its position due to interference.

பரவலாகப் பயன்படும் GPS

இலண்டன் பங்குச் சந்தை உலகின் பல் வேறு பாகங்களில் இருந்து தொடர்பு கொள்ளும் முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கு பாவிக்கும் பூகோள நிலையறி முறைமையும் பல தடவை குழப்பப்பட்டன. பெரு நகரங்களில் நடந்து செல்லும் சாதாரண பயணிகள், படையினர், விமானங்கள், கடற்கப்பல்கள் என எல்லாப் போக்கு வரத்துக்களுக்கும் பூகோள நிலையறி முறைமை (GPS) பெரிதும் ங்கள், ஆளில்லா கப்பல்கள், ஆளில்லா நீர்மூழ்கிகள், தானாக இயபயன்படுத்தப்படுகின்றன. ஆளில்லா விமானங்கும் மகிழூர்ந்துகள், ஊபர் போன்ற வாடகைப் போக்குவரத்து நிறுவனங்கள் தமது செயற்பாடுகளுக்கு பூகோள நிலையறி முறைமையில் (GPS) பெரிதும் தங்கியிருக்கின்றன. 

குவய தொழில்நுட்பம் (Quantum Technology)


2018-ம் ஆண்டு நேட்டோவின் போர் ஒத்திகையின் போது பூகோள நிலையறி முறைமையை (GPS) குழப்பியதைத் தொடர்ந்து இனி வரும் காலத்தில் இதை எப்படி எதிர் கொள்வது என பல நாடுகளும் ஆய்வில் இறங்கின. பிரான்ஸ் குவய தொழில்நுட்பத்தை (Quantum Technology) பாவித்து குழப்ப முடியாத பூகோள நிலையறி முறைமையை உருவாக்கியுள்ளது. அணுவின் உட்பிரிவுகளான இலத்திரன் புரோட்டன் போன்றவற்றையும் அவற்றின் அலை இயக்கத்தையும் பாவிப்பது குவய தொழில்நுட்பமாகும். Extremely High-Performance quantum accelerometers மூலம் Gyroscopes எனப்படும் தொலை நோக்கிகளை இயக்குவதால் குழப்ப முடியாத பூகோள நிலையறி முறைமையை பிரான்ஸ் உருவாக்கியுள்ளது.  Gyroscopes துரிதமாகச் சுழலும் சில்லுகளைக் கொண்டது. இதன் இலத்திரனியல் வடிவம் தானாக இயங்கும் விமானங்களிலும் ஏவுகணை வழிகாட்டி ஏவுகணைகளிலும் பயன்படுத்தப் படும். இவற்றை Quantum Technology மூலம் பிரான்ஸ் மேம்படுத்தியுள்ளது.



பிரான்ஸின் குழப்ப முடியாத பூகோள நிலையறி முறைமை ரஃபேல் விமானங்களில் இணைக்கப்படவுள்ளன. இந்தியா பிரான்ஸின் ரஃபேல் விமானங்களை வாங்கியதைத் தொடர்ந்து கிரேக்கமும் துருக்கியின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள ரஃபேல் விமானங்களை வாங்கியது. இப்போது இந்தோனேசியாவும் ரஃபேலைக் கொள்வனவு செய்ய முடிவு செய்துள்ளது. தனது போர்ப்படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதை பிரான்ஸ் எப்போது தவிர்க்கின்றது. தனது படைக்கலன்களை தானே உற்பத்தி செய்வதால் தனது தனித்துவத்தைப் பேண முடியும் எனக் கருதும் பிரான்ஸ் தனது போர் விமானங்களை தொடர்ச்சியாக புதியதாக்கிக் கொண்டே இருக்கின்றது.

இணைய வெளிப் போர் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்(Click): அமெரிக்க இணையவெளிப் போர்

Monday 14 December 2020

அமெரிக்க சீன மும்முனைப் போர்

அமெரிக்க தரைப்படைத் தளபதி (ஜெனரல்) மார்க் மில்லே 2020 டிசம்பர் 8-ம் திகதி அமெரிக்க ஊடகமான Wall Street Journal இற்கு பேட்டியளிக்கும் போது சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஈடாக தன் படைத்துறையை வளர்ச்சியடையச் செய்து 2035-ம் ஆண்டளவில் அமெரிக்காவிற்கு இணையான ஒரு படைத்துறையை உருவாக்கி 2050-ம் ஆண்டளவில் அமெரிக்காவைத் தோற்கடிக்கக் கூடிய நிலையை எய்தவிருக்கின்றது என்றார். சீனாவைச் சமாளிக்கக் கூடிய வகையில் அமெரிக்கா தனது பொருளாதாரத்தையும் படைத்துறையையும் கட்டி எழுப்ப வேண்டும் என்றார் ஜெனரல் மார்க் மில்லே. மேலும் அவர் இரு பெருவல்லரசுகளின் போட்டி பெரும் போராக உருவெடுக்காமல் இருக்க அமெரிக்கா விண்வெளியிலும் இணையவெளியிலும் தாக்குதல் மற்றும் பாதுகாப்பு நகர்வுகளைச் செய்யத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.



சீனக் கனவும் சீன விரிவாக்கமும்

இரு பெரும் சீனக் கனவுகள்

1. சீனப் பொதுவுடமைக் கட்சியின் நூற்றாண்டு விழாவை 2021-ம் ஆண்டு நிறைவு செய்யும் போது சீனா எல்லாவகையிலும் மிதமான செழிப்பு மிக்க நாடாக்கப் பட வேண்டும் என்ற நோக்கம்

2. 2049—ம் ஆண்டு சீனக் குடியரசு உருவாகிய நூற்றாண்டு நிறைவடையும் போது சீனா 1. செழுமைமிக்க 2. வலிமையான 3. கலாச்சாரத்தில் வளர்ச்சியடைந்த 3. இசைவிணக்கமான (HARMONIOUS) புதிய சமூகவுடமைக் குடியரசு நாடாக சீனா கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற நோக்கம்.

சீன விரிவாக்கத்தின் இலக்குகள்:

1.  தென் சீனக் கடலை முழுமையாக தனதாக்கல்

2. தைவானைக் கைப்பற்றல்

3. அருணாச்சல பிரதேசம் – தெற்கு தீபெத்

4. கிழக்குச் சீனக் கடல்

5. மங்கோலியாவை சீனாவுடன் இணைத்தல்

6. இரசியா ஆதிக்கத்தை மத்திய ஆசியாவில் இல்லாமற் செய்தல்

7. மத்திய ஆசிய நாடுகளிலும் பாக்கிஸ்த்தானிலும் சீனப் படைத்தளங்கள்.



இரசிய சீன ஒத்துழைப்பு

சீனாவும் இரசியாவும் ஒன்றை ஒன்று ஐயத்துடன் நோக்கினாலும் பொது எதிரியான அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை எதிர் கொள்ள பல முனைகளின் ஒத்துழைக்கின்றன. 2012இல் இருந்து இரசியாவும் சீனாவும் இணைந்து கடற்போர்ப்பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியா சீனாவிற்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் தொழில்நுட்ப உருவாக்கலில் உதவி செய்து வருகின்றது என்றார். சீனா அமெரிக்காவுடன் படைத்துறைத் தொழில்நுட்பத்தில் போட்டியிடும் திறனை வளர்க்க இரசிய சீன நட்பு உதவியாக அமைகின்றது. 2014இல் உக்ரேனில் இரசியா தலையிட்டதன் பின்னர் அதிகரித்த அமெரிக்க இரசிய முறுகல் சீன இரசிய ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. 2020 நவம்பரில் சூடான் துறைமுகத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இரசியாவின் நான்கு கடற்படைக் கப்பல்களும் 300 படையினரும் நிலைகொள்வதற்கான உடன்படிக்கையை இரசியா சூடான் அரசுடன் செய்துள்ளது. அமெரிக்கா, ஆபிரிக்கா, ஒஸ்ரேலியா ஆகிய கண்டங்கள் பெரும் கடல்களால் தனியாக பிரிக்கப்பட்டிருக்க ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. அதில் இரசியா இரண்டு கண்டத்திலும் அகன்றுள்ளது. ஐரோப்பிய-ஆசியப் பெரு நிலப்பரப்பில் இரசியா, இந்தியா, சீனா ஆகியவை மக்கள் தொகை அடிப்படையில் பெரிய நாடுகள். இரசிய சீன ஒத்துழைப்பு இந்த பெரு நிலப்பரப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

சீனப் பொருளாதாரமும் படைத்துறையையும்

முத்துமாலைத் திட்டம் இந்தியாவைச் சுற்றி வளைக்கும் திட்டம் என நாம் பேசிக் கொண்டிருக்கும் போதே உலகின் பெரும் பகுதியை துறைமுக அபிவிருத்தி என்னும் பெயரில் சீனா சுற்றி வளைத்து விட்டது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான விநியோகத் தொடரிக்கு என்ன மாற்றீடு என்று சிந்திக்கும் போது பட்டியும் பாதையும் முன்னெடுப்பு (Belt & Road Initiative) திட்டத்தை செயற்படுத்தி உலகின் பெரும் பகுதியை சீனா தன்னுடன் ஒரு விநியோகத்தொடரி மூலம் இணைக்கின்றது. விண்வெளிப் போர்த்திறன், ஹைப்பர் சோனிக் வேகப் படைக்கலனகள், விமானம் தாங்கிக் கப்பல்கள் என பலவகையில் தன்னைப் வலிமைப்படுத்தும் சீனா 2017-ம் ஆண்டு சீனா தனது நாட்டுக்கு வெளியே முதலாவது தனது படைத்தளத்தை ஆபிரிக்காவின் கொம்பில் உள்ள ஜிபுக்தி நாட்டில் அமைத்தது. உலகின் முன்னணிப் பொருளாதாரங்களில் சீனா மட்டுமே 2020-ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. அமெரிக்க தரைப்படைத் தளபதி (ஜெனரல்) மார்க் மில்லே சொல்லியது போல் அமெரிக்கா சீனாவிற்கு எதிரான நகர்வுகளை செய்வது இரு நாடுகளுக்கும் இடையிலான போரை நடக்காமல் தடுக்கும். அவரது உட் கருத்து அமெரிக்கா சீனாவிலும் பார்க்க படைத்துறையிலும் பொருளாதாரத் துறையிலும் பெருமளவு முன்னணியில் இருக்க வேண்டும் என்பதே. அதனால் அமெரிக்கா வர்த்தகப் போர், தொழில்நுட்பப் போர், நாணயப் போர் ஆகிய மும் முனைப் போரை செய்ய வேண்டியுள்ளது.



வர்த்தகப் போர்

சீனாவிற்கு எதிரான வர்த்தகப் போர் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. வர்த்தக்ப் போர் என்பது, சுருங்கச் சொல்லின், இரண்டு நாடுகள் தமக்கிடையே ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப் படும் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை ஒன்றிற்கு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்தலாகும். டொனால்ட் டிரம்ப் ஆரம்பித்து வைத்த இப்போரை அவருக்குப் பின் பதவிக்கு வரும் ஜோன் பைடனும் தொடரவிருக்கின்றார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளைப் பிரித்தலை இணைபிரித்தல் (decopuling) என அழைக்கின்றனர். சீனாவில் இருந்து அமெரிக்கா பெருமளவு பொருட்களை இறக்குமதி செய்தல், அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தமது உற்பத்திகளை செய்தல், அமெரிக்காவின் திறைசேரி விற்பனை செய்யும் கடன்முறிகளை சீனா வாங்குதல் (சீனாவிடம் அமெரிக்கா கடன் படுதலை இப்படிக் கௌரவமாக அழைப்பர்), சீனா மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்றல் என இரு நாடுகளும் பல துறைகளின் இணைந்துள்ளன. இந்த இணைப்பை இலகுவில் பிரிக்க முடியாது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் உலக விநியோகத் தொடரி (Supply chain) பெரிதும் தங்கியுள்ளது. இதைப் பிரிக்க நீண்ட காலம் எடுக்கும்,

க்ஷ்

தொழில்நுட்பப் போர்

தொழில்நுட்ப போர் என்பது ஒரு நாட்டின் தொழில்நுட்பம் வளராமல் தடுக்க இன்னொரு நாடு எடுக்கும் நடவடிக்கைகளாகும். குறைகடத்தி (Semiconductor) உற்பத்தியில் 2019-ம் ஆண்டுக்குரிய தகவல்களின் படி அமெரிக்கா 47%, தென் கொரியா 19%, ஜப்பான் 10% ஐரோப்பா 10%, தைவான் 6%, சீனா 5% என இருந்தது. அமெரிக்காவுடனும் தைவானுடனும் ஒப்பிடுகையில் சீனா குறைகடத்தி தொழில்நுட்பத்தில் நான்கு ஆண்டுகள் பிந்தங்கியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  இதை சீனாவின் வலுவின்மைப் புள்ளியாகப் பார்த்த அமெரிக்கா சீனாவிற்கான குறைகடத்தி ஏற்றுமதி மீது தடைகளை விதித்ததுடன் மற்ற நாடுகளையும் தடை செய்ய வற்புறுத்தியது. குறைகடத்திகள் சீனா உற்பத்தி செய்யும் பெருமளவு இலத்திரனியல் பொருள்களிற்கு அவசியமானவையாகும். அதிலும் சீனாவின் 5ஜீ தொழில்நுட்பத்தை உலகெங்கும் ஏற்றுமதி செய்வதற்கும் அவசியமானவையாகும். அதைச் சமாளிக்க சீனா குறைகடத்தி உற்பத்தித் துறையில் 29பில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீட்டைச் செய்தது, அதற்கு போட்டியாக அமெரிக்கா 37பில்லியன் டொலர்களை அதே துறையில் முதலீடு செய்ய முடிவெடுத்தது. 2014-ம் ஆண்டும் சீனா 22பில்லியன் டொலர்களை முதலீடு செய்திருந்தது. சீனா தான் முன்னணியில் இருக்கும் முக இனங்காணல் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு அரச அனுமதி பெற வேண்டும் என அறிவித்தது.

ஹுவாவே நிறுவனத்திற்கு தேவையான Semiconductorsஐ தைவானில் இருந்தே பெறப்பட்டு வந்தன. அமெரிக்கா ஹூவாவேயிற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளால் தைவான் சீனாவிற்கு Semiconductorsஐ ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது. அத்துடன் Semiconductorsஐ உருவாக்கும் Chip designing software ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டது. HiSilicon Kirin 9000 என்ற Semiconductorsஐ உருவாக்கும் சீனாவின் முயற்ச்சி இதுவரை வெற்றியளிக்கவில்லை. மென்பொருட்களை சீனாவிற்கு விற்பனை செய்வதை அமெரிக்கா தடை செய்தமை சீனாவின் பல Semiconductors உற்பத்தி நிறுவனங்களை நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

சீனாவின் என்ற நிறுவனத்தின் Semiconductor Manufacturing International Corporation மீதும் அமெரிக்கா ஏற்றுமதி தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் சீனாவின் ஷென்ஜெயின் பிராந்திய அரசு ஹூவாவே நிறுவனத்திற்கு Semiconductors உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை விலைக்கு வாங்க நிதி உதவி வழங்கியுள்ளது.  உலகில் அதிக கைப்பேசிகளை விற்பனை செய்யும் ஹூவாவே நிறுவனத்திடம் போதிய அளவு நிதி இருக்கவில்லை.

வூஹரின் உள்ள Semiconductors உற்பத்தி நிறுவனம் ஒன்று நிதித் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

Yangtze என்ற Memory Chip உற்பத்தி நிறுவனமும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. 

நாணயப் போர்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு தமது சொந்த நாணயத்தின் பெறுமதியை தாமாகவே குறைத்தல் நாணய்ப் போர் ஆகும். ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி குறையும் போது அந்த நாட்டின் ஏற்றுமதி அதிகரிப்பதுடன் இறக்குமதி குறையும். 2020இல் அமெரிக்க டொலரின் பெறுமதி எட்டு விழுக்காட்டிற்கு மேல் வீழ்ச்சியடையும் என்றும் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு டொலரின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது. டொலரின் பெறுமதி வீழ்ச்சியை அமெரிக்காவால் தடுக்கவும் முடியாது. தடுப்பதை அமெரிக்கா விரும்பவும் செய்யாது. சீன நாணயத்திற்கு எதிராக டொலரின் பெறுமதி குறையும் போது சீனாவின் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி குறையும். அதைத் தடுக்க சீனா தனது நாணயத்தின் பெறுமதியைக் குறைக்கும். டொலரின் பெறுமதி குறையும் போது அமெரிக்காவில் உள்ள சீன முதலீடுகளின் பெறுமதியும் குறையும்.

வர்த்தகப் போரால் சீனாவிற்கு மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளும், தொழில்நுட்பப் போரால் தைவான், தென் கொரியா போன்ற நாடுகளும் நாணயப் போரால் எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் உட்பட ஏற்றுமதியில் தங்கியிருக்கும் நாடுகளும் பாதிப்படையும்.

Wednesday 9 December 2020

ஜப்பானுக்கு எதிராக புட்டீனின் குங்ஃபூ நகர்வு



வட மேற்கு பசுபிக் கடலில் இரசியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் பிராந்தியம் என்கின்றனர். இத்தீவுகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பிணக்கு நூறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்கின்றது. 2020 டிசம்பர் முதலாம் திகதி அத்தீவுகளில் இரசியா தனது எஸ்-300 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை நிறுத்தியது பிணக்கை தீவிரப்படுத்தியுள்ளது.


இரண்டு போர்களும் பல ஒப்பந்தங்களும்

1786-ம் ஆண்டு இரசியப் பேரரசி கதரீன் கியூரில் தீவுக் கூட்டம் தனது நாட்டின் ஒரு பகுதி எனப் பிரகடனம் செய்திருந்தார். 1855-ம் ஆண்டு இரசியாவும் ஜப்பானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி கியூரில் தீவுக் கூட்டங்களின் நான்கு தீவுகள் ஜப்பானுக்கு உரியவை என்றும் ஏனைய வட பகுதி தீவுகள் இரசியாவிற்கு உரியவை என்றும் ஒத்துக் கொள்ளப்பட்டது. 1905-1906 இல் நடந்த ஜப்பானுக்கும் இரசியாவிற்கும் இடையிலான போரில் இரசியா தோல்வியடைந்ததால் கியூரில் தீவுக் கூட்டத்தின் சக்லின் தீவின் தென் பகுதி ஜப்பானுக்கு சொந்தமானது என ஒத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் இரண்டாம் உலக போரின் முடிவில் இரசியா (சோவியத் ஒன்றியம்) முழு கியூரில் தீவுக் கூட்டத்தையும் தனதாக்கிக் கொண்டது. அங்கிருந்த ஜப்பானிய மொழி பேசும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலக அமைதியை நிலைநாட்ட 1951-ம் ஆண்டு நடந்த சன் ஃபிரான்சிஸ்க்கோ மாநாட்டில் ஜப்பான் கியூரில் தீவுகள் மீதான எல்லா உரிமைகளையும் கைவிட வேண்டும் என்று முடிவு செய்ததுடன் கியூரில் தீவுகளின் மீதான இரசியாவின் (சோவியத் ஒன்றியத்தின்) இறையாண்மையையும் அங்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதில் சக்கலின் தீவு தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படவில்லை. அது இரு நாடுகளுக்கும் சொந்தமானவை எனக்கருதப்பட்டது.



பனிப்போர்க்காலம்

1956-ம் ஆண்டு சோவியத் ஒன்றியமும் ஜப்பானும் மீண்டும் ஓர் உடன்படிக்கையை செய்து கொண்டன. அதன் படி கியூரில் தீவுக் கூட்டத்தின் சிறுபகுதியான சிக்கோட்டன், ஹபோமாய் ஆகிய தீவுகள் ஜப்பானிற்கு வழங்கப்பட்டன. 1960-ம் ஆண்டு ஜப்பானும் அமெரிக்காவும் பாதுகாப்பு உடன்படிக்கையை செய்து கொண்டதை விரும்பாத சோவியத் ஒன்றியம் ஜப்பானின் அந்நியப் படைகள் இருக்கும் வரை கியூரில் தீவில் ஜப்பானுக்கு இடமில்லை எனவும் 1956-ம் ஆண்டு செய்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாகவும் அறிவித்தது. கியூரில் தீவுக் கூட்டங்களில் அமெரிக்கப் படைகள் நிலை கொள்ளலாம் என சோவியத் கரிசனை கொண்டிருந்தது.

சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர்

1991 சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவும் ஜப்பானும் கியூரில் தீவுக் கூட்டங்கள் தொடர்பாக தொடர் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டன.

இதுருப், குணசீர், சிக்கோட்டன், ஹபோமை ஆகிய நான்கு தீவுகள் தொடர்பாக 2000-ம் ஆண்டில் விளடிமீர் புட்டீன் ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். 2013-ம் ஆண்டு ஒரு தீவிர பேச்சு  வார்த்தையை இரு நாடுகளும் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கையில் இரசியா உக்ரேனுக்கு எதிராக செய்த நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முகமாக ஜப்பான் பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டது.

ஜப்பானின் புதிய தலைமை அமைச்சர்

ஜப்பானின் புதிய தலைமை அமைச்சர் யோசிகிடே சுகா பதவிக்கு வந்த பின்னர் 2020 செப்டம்பரில் இரசிய அதிபர் புட்டீனுடன் தொடர்பு கொண்டு கியூரில் தீவுப் பிரச்சனையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்தார். அத்துடன் இரசிய ஜப்பானிய வர்த்தகத்தை விரிவு படுத்தும் விருப்பத்தைத் தெரிவித்தார். அவரின் எண்ணத்தை விளடிமீட் புட்டீன் தனது கவனத்தில் எடுத்துக் கொண்டார்.

 

இரசியாவின் பசுபிக் வாசலில் அந்நியரா?

இரசியாவில் இருந்து பசுபிக் நாடுகளுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் வர்த்தகம் நடை பெறுவதற்கு இரசியாவின் கிழக்கெல்லையில் உள்ள கியூரில் தீவுக் கூட்டம் முக்கியமான ஒன்றாகும். நடுவண் ஆசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை இரசியா எதிர் கொள்வதற்கும் கியூரில் தீவுக் கூட்டம் இரசியாவிற்கு அவசியமானதாகும்.

புட்டீனின் குங்குஃபூ அடி

சிரியா, உக்ரேன் ஆகிய நாடுகளில் செய்தது போல் தனது திடீர் படை நகர்வுகள் மூலம் பிராந்திய நலன்களை தூக்கி நிறுத்துவதில் மீண்டும் ஒரு முறை புட்டீன் வெற்றி கண்டுள்ளார். கியூரில் தீவில் தனது படை நிலைகளை வலுப்படுத்தியதன் மூலம் புட்டீன் ஜப்பானுடன் செய்யும் பேச்சு வார்த்தைகளில் தனது நிலையை வலிமையாக்க செய்த நகர்வுதான் கியூரில் தீவுகளில் எஸ்-300 ஏவுகணை ஏதிர்ப்பு முறைமைகளை நிறுத்தியது. இரசியாவுடன் இதுவரை மட்டுப்படுத்தப் பட்ட வர்த்தகத்தை செய்யும் ஜப்பான் தனது பொருளாதாரத்தை மேம்படுத்த இரசியாவுடன் அதிக வர்த்தகம் செய்ய விரும்புகின்றது என்பதை புட்டீன் ஜப்பானிய தலைமை அமைச்சருடனான பேச்சு வார்த்தையின் போது உணர்ந்து கொண்டுள்ளார். குங்குஃபு சண்டை வீரரான புட்டீன் எதிரியின் வலுவற்ற புள்ளியை அறிந்து தாக்குதல் செய்கின்றார்.


Sunday 6 December 2020

நுண்மிய நாணயத்தில் புகலிடம் தேடும் அமெரிக்கா

 


பெரும் செல்வந்தர்கள் தமது மிகை நிதிக் கையிருப்பை பங்குச் சந்தை, அரசுகளின் கடன் முறிகள், புதிய முயற்ச்சிகள், தனியார் நிறுவனங்களின் கடன் முறிகள், தங்கம் போன்ற உயர் பெறுமதி உலோகங்கள், விளைபொருள் எதிர் நோக்கு ஒப்பந்தம், வங்கிக் கணக்குகள் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள். பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப தமது நிதியைப் பெருக்குவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு தங்கள் முதலீடுகளை அவர்கள் அடிக்கடி மாற்றிக் கொள்வர். வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் ஊழியர் நலன் நிதியம், ஊழியர் ஓய்வூதிய நிதியம் போன்றவை தமது நிதியைப் பெருக்கவும் பாதுகாக்கவும் என்றும் விழிப்புடன் இருந்து பல துறைகளின் முதலீடு செய்கின்றன.

உறுதியான பொருளாதாரமும் முதலீடும்

பல நாடுகள் தங்களின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை தங்கம், பன்னாட்டு நாணய நிதியம், அமெரிக்க திறைசேரி கடன் முறிகள் போன்றவற்றில் முதலீடு செய்கின்றன. அமெரிக்க டொலர், ஜப்பானிய யென், ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ ஆகிய நாணயங்கள் பன்னாட்டு நாணயங்கள் எனப்படுகின்றன. வலுவான பொருளாதாரம், உறுதியான ஆட்சி, வெளிப்படைத்தன்மையுள்ள நிதிக் கொள்கை, நம்பிக்கையான நடுவண் வங்கி ஆகியவற்றைக் கொண்டுள்ள நாடுகளின் நாணயங்களிலும் கடன் முறிகளிலும் மற்ற நாடுகள் தங்கள் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை முதலீடு செய்வர். உலகில் ஓர் உறுதியற்ற பொருளாதார நிலவும் போது நம்பிக்கையான நாடுகளின் நாணயங்களில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் முதலீடு செய்வர். பல அரசுகளும் முதலீட்டாளர்களும் அமெரிக்க திறைசேரியின் கடன்முறிகளில் முதலீடு செய்வதை வழமையாகக் கொண்டுள்ளனர். அவர்கள் வாங்கும் கடன் முறிகளின் கிடைக்கும் விலை அதிகரிப்பும் வட்டியும் அவர்களுக்கான வருவாயாக அமையும். அமெரிக்காவின் பணவீக்க விழுக்காட்டிலும் பார்கக வட்டி விழுக்காடு குறைவாக இருப்பதால் டொலரின் பெறுமதி குறையும். அமெரிக்காவால் வட்டி விழுக்காட்டை கூட்ட முடியாத நிலை தற்போது உள்ளது.



வலுவிழந்து நிற்கும் அமெரிக்க டொலர்

ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி அந்த நாட்டின் பொருளாதார நிலை, வட்டி விழுக்காடு, அரசியல் உறுதிப்பாடு, பாதீட்டு குறை, ஏற்றுமதி/இறக்குமதி இடையிலான வித்தியாசம் போன்றவற்றில் தங்கியுள்ளது. 2020இன் பிற்பகுதியில் உள்ள பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 2023 டொலர் 15% வீழ்ச்சியடையலாம் என கோல்ட்மன் சாக்ஸ் எதிர்வு கூறியுள்ளது. Standard Chartered வங்கியின் சிங்கப்பூரில் உள்ள ஓர் ஆய்வாளரான Eric Robertsen அதை உறுதி செய்துள்ளார். தற்போது டொலரின் பெறுமதி உண்மையான பெறுமதியிலும் பார்க்க அதிகமாக உள்ளது என்பது கோல்ட்மன் சாக்ஸின் கருத்து. அதற்கான காரணம் கொவிட்-19 தொற்று நோயால் ஏற்பட்ட உலகப் பொருளாதார உறுதியற்ற தன்மையால் பல முதலீட்டாளர்கள் டொலரில் தங்கள் முதலீடுகளைச் செய்தமையே. உலக பொருளாதாரம் சீரடையும் போது அவர்கள் டொலரை விற்பனை செய்து வேறு இடங்களில் முதலீடு செய்யும் போது டொலரின் பெறுமதி வீழ்ச்சியடையும்.

புகலிடம் தேடும் முதலீட்டாளர்கள்

கொவிட்-19 தொற்று நோயின் பின்னர் அமெரிக்காவின் வட்டி விழுக்காட்டை அதிகரிக்க முடியாத அளவிற்கு அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பல முதலீட்டாளரகளும் அரசுகளும் தங்கள் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை அமெரிக்காவில் இருந்து எடுத்து வேறு நாடுகளில் முதலீடு செய்கின்றார்கள். தற்போது பெறுமதி குறைந்திருக்கும் இந்திய ரூபாயில் பலர் முதலீடு செய்கின்றார்கள். அமெரிக்க – சீன வர்த்தகப் போர், தொழில்நுட்பப் போர், நாணயப் போர் ஆகியவை தீவிரமடையும் போது சீனா அமெரிக்க திறைசேரியின் கடன் முறிகளை வாங்குவதைக் குறைக்கும் போது அல்லது நிறுத்தும் போது அமெரிக்க டொலரின் பெறுமதி பெருமளவு வீழ்ச்சியடையலாம்.



நுண்மிய நாணயங்கள்

அமெரிக்க டொலரின் பெறுமதி கேள்விக்குறியான நிலையில் நுண்மியமிய நாணயங்களில் (Cryptocurrency) பெருமளவு முதலீடு செய்யப்படுகின்றது. உலகெங்கும் பல நுண்மியமிய நாணயங்கள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானதும் அதிகம் பேசப்படுவதும் பிட்கொயின்(Bitcoin) ஆகும். 2020-ம் ஆண்டு பின்கொயினின் பெறுமதி 13%இற்கு மேல் அதிகரித்துள்ளது. அதேவேளை அமெரிக்க டொலர் சுட்டி டொலரின் மதிப்பு 9% வீழ்ச்சியடைந்துள்ளது. பிட்கொயினின் பெறுமதி அதிகரிப்பு தங்கத்தின் பெறுமதி அதிகரிப்பிலும் மற்றும் பல நாடுகளின் பங்குச் சுட்டிகளின் அதிகரிப்பிலும் அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் நுண்மியமிய நாணயங்கள் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்க அற்றவர்களாக இருந்தனர். அவற்றின் தொடர்ச்சியான் பெறுமதி வளர்ச்சியால் பல நாடுகளின் அரசுகள் நுண்மியமிய நாணயங்களை உருவாக்கியுள்ளன. சமூக வலைத்தளமான முகநூலும் 2021-ம் ஆண்டு லிப்ரா என்னும் நுண்மியமிய நாணயத்தை உருவாக்கவுள்ளது.

அமெரிக்க டொலருக்கு போட்டியாக மற்ற நாட்டு நாணயங்களின் பெறுமதி அதிகரிப்பைத் தடுக்கவும். உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் நுண்மியமிய நாணயங்களில் முதலீடு செய்வதைத் தடுக்கவும் அமெரிக்காவின் நடுவண் வங்கி (Federal Reserve) தானும் ஒரு நுண்மியமிய நாணயத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.

எண்மிய நாணயன்களும் நுண்மிய நாணயங்களும் (Digital Currencies and Cryptocurrencies)

இணையவெளியில் பலநாட்டு நாணயங்கள் பரிமாறப்படுகின்றதுடன் கொள்வனவுகளுக்கான கொடுப்பனவுகளாகவும் இருக்கின்றன. அவை எண்மிய நாணயங்கள் (Digital Currencies) எனப்படுகின்றன. ஆனால் நாடுகளின் நடுவண் வங்கிகள் உருவாக்கும் நாணயங்கள் போல இணையவெளியில் உருவாக்கப்பட்ட நாணயங்கள் நுண்மிய நாணயங்கள் (Cryptocurrencies) என அழைக்கப்படுகின்றன. எண்மிய நாணயங்களிற்கு என பெறுமதி இல்லை எந்த நாட்டு நாணயம் இணையவெளியில் பரிமாறப்படுகின்றதோ அந்த நாணயத்தின் பெறுமதிதான் அதற்கு உண்டு. தனாக பெறுமதி அதிகரிப்பதுமில்லை குறவதுமில்லை. ஆனால் நுண்மிய நாணயங்கள் தமக்கென ஒரு பெறுமதியைக் கொண்டுள்ளன. அவற்றில் செய்யப்படும் முதலீடுகளுக்கு ஏற்பவும் அவற்றின் மீதுள்ள நம்பிக்கைக்கு ஏற்பவும் அவற்றின் பெறுமதி ஏறி இறங்கும். மரபு வழி நாணயங்களின் பின்னால் ஓர் அரசு, அதன் நடுவண் வங்கி ஆகியவை இருக்கும். நாணயத் தாள்களில் அவற்றின் நாடுகளின் நடுவண் வங்கி சார்பில் கையொப்பமிட்டிருக்கும். பிட்கொயின் போன்ற நுண்மியநாணயங்களுக்கு அந்த மாதிரி இல்லை. இணையவெளியிலும் ஊழல்கள் நடக்க வாய்ப்புண்டு எனது பெயரில் இருக்கும் நுண்மிய நாணயம் எனக்குத் தெரியாமல் இன்னொருவர் பெயருக்கு மாற்றப்படலாம்.



அரச நணயத்தாள்கள் (Fiat Currencies): தங்கம் போன்றவற்றின் ஆதாரப் பின்னணியின்றி நாட்டில் அரசு புழக்கத்தில் விட்டுள்ள நாணயங்கள்

தொகுப்புச் சங்கிலிப் பேரேடு: இது ஒரு வகையான இணையவழி பேரேடு. இது வெளிப்படைத்தன்மையும் பாதுகாப்பும் மிகுந்தது. இதன் பாவனையாளர்கள் வெளி உதவியின்றி தாமாகவே தமது நாணய இருப்பைக் கையாளலாம். எண்மிய நாணயங்கள், நுண்மிய நாணயங்கள் போன்றவற்றின் செயற்பாடுகளுக்கு தொகுப்புச் சங்கிலிப் பேரேடு தொழில்நுட்பம் அவசியமானதாகும்.

எண்மிய நாணயங்கள் (Digital currencies): இவை வங்கிகளால் எண்மிய வடிவத்தில் பாவனைக்கு விடப்பட்ட நாணயங்களாகும்.

நுண்மிய நாணயங்கள் (Cryptocurrency): இவை பாதுகாப்பான நுண்மிய நாணயங்களாகும். தகவல்மறைப்பியல் அல்லது கமுக்கவியல் (Cryptography) என்ற தொழில்நுட்பத்தைப் பாவிப்பதால் இவை அந்தப் பெயரைப் பெற்றன. அத்தொழில்நுட்பம் பாவிக்கப்படுவதால் போலி நாணயங்களை உருவாக்க முடியாது. ஒரு நாணயக்கையிருப்பின் மூலம் இரட்டைக் கொடுப்பனவு செய்யும் ஏமாற்று வேலைகள் செய்ய முடியாது. பொதுவாக இவை எந்த ஓர் அரசினாலோ நடுவண் வங்கியாலோ கட்டுப்படுத்தப்படுத்தப் படாதவை. அதனால் இவை பரவலாக்கப்பட்ட நாணயங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

நடுவண் வங்கி எண்மியநாணயங்கள் (Central Bank Digital Currency)

எண்மிய நாணயங்களும் நுண்மிய நாணயங்களும் அதிகமாகப் பாவிக்கப்படுவதால் பல அரசுகளும் அவற்றின் நடுவண் வங்கிகளும் அவற்றில் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளன. நடுவண் வங்கிகளின் நுண்மியநாணயங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளன. அவை நடுவண் வங்கி எண்மியநாணயங்கள் (Central Bank Digital Currency) என அழைக்கப்படுகின்றன. உலகெங்கும் 200பில்லியன் டொலர் பெறுமதியிலும் அதிகமான 5400இற்கும் மேற்பட்ட நுண்மிய நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. முதல் எண்மிய நாணயமான e-Gold என்பது கடன் அட்டை மோசடி செய்யும் சட்ட விரோதக் கும்பல்களால் நடத்தப்பட்டது. பிரேசில், இரசியா, இந்தியா, சீனா தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டொலரின் உலக ஆதிக்கத்தை எண்மிய நாண்யத்தின் மூலம் ஒழிக்க முடியும் என்ற கருத்தையும் முன் வைத்திருந்தன.

எக்குவேடர், சீனா, சிங்கப்பூர், செனகல், தூனீசியா ஆகிய நாடுகள் நுண்மிய நாணயங்களை புழக்கத்தில் விட்டுள்ளன.

கொவிட்-19 தொற்று நோய்களுக்கான கொரோனா கிருமிகள் நாணயத்தாள்கள் மூலமும் பரவும் என்ற அச்சமும் எண்மிய நாணயங்களின் புழக்கத்தை அதிகரித்துள்ளன. எண்மிய நாணயங்களும் நுண்மிய நாணயங்களும் கொடுப்பனவுகளையும் பணப்பரிமாற்றத்தையும் செய்ய இலகுவானவையாகவும் மலிவானவையாகவும் இருக்கின்றன. எண்மிய நாணய கொடுப்பனவுகள் அமெரிக்க டொலரின் உலகளாவிய பாவனையைக் குறைக்கும் என நம்பப்படுகின்றது. அந்த இடைவெளியை அமெரிக்க நடுவண் வங்கி தனது சொந்த நுண்மிய நாணயத்தால் நிரப்ப முயல்கின்றது. நுண்மிய நாணயங்களை நடுவண் வங்கிகளும் அறிமுகம் செய்வதால் இணையவெளியில் நடக்கும் கொடுப்பனவகளைப் பற்றியும் நாணயப் புழக்கத்தையும் நடுவண் வங்கிகளால் அறிந்து கொள்ளவும் கட்டுப்படுத்தவும் முடியும். வரி எய்ப்பு மற்றும் பணச்சலவை போன்றவற்றை தடுக்க முடியும்.

சீனாவும் எண்மிய நாணயமும்

சீனாவில் பெருமளவு கொடுப்பனவுகள் எண்மிய நாணயத்தால் செய்யப்படுகின்றது. சீனர்கள் அதிக அளவு கைப்பேசிகளைப் பாவிப்பதால் அது நடக்கின்றது. சீனாவில் பிச்சைக்காரர்களுக்கு கூட எண்மியக் கொடுப்பனவுகள் செய்யப்படுகின்றன. 2020 ஜூன் மாதத்தில் சீன நடுவண் வங்கி தனது நுண்மியநாணயத்தை பரீட்சார்த்த அடிப்படையில் ஆரம்பித்தது. சீனாவில் 2020-ம் ஆண்டு நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் வருபவர்கள் பாவிக்கக் கூடியவகையில் சீனா செயற்படுகின்றது. அதன் மூலம் சீனாவின் நுண்மியநாணயத்தின் பாவனையை உலகெங்கும் பரப்பலாம் என்பது சீனாவின் இலக்கு. பிட்கொயின் தனது நாட்டில் பாவிக்கப்படுவதை இல்லாமல் செய்வதற்கும் அமெரிக்க டொலர் மீது சீன அரசும் மக்களும் தங்கியிருப்பதைத் தடுப்பதற்கும் சீனா தனது நுண்மியநாணயத்தை அறிமுகம் செய்துள்ளது.

2020 செப்டம்பரில் அமெரிக்கா நுண்மியநாணய உருவாக்கத்தை திவிரப்படுத்தியமைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. உலகில் மற்ற நாடுகள் தமது நாட்டு நாணயத்தில் நம்பிக்கை குறையும் போது அமெரிக்க டொலருக்கு தம் கையிருப்பை மாற்றுவர். இப்போது அமெரிக்க டொலர் மீது நம்பிக்கை குறைந்த நிலையில் வேறு நாடுகளின் நாணயத்திற்கு டொலர் மாற்றப்படாமல் இருக்க அமெரிக்கா தனது நுண்மிய நாணயத்தை உருவாக்குகின்றது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் சீனா முதலிடம் பெறாமல் இருப்பதில் அமெரிக்கா தற்போது அதிக கரிசனை காட்டுகின்றது. நுண்மிய நாணயத்தில் சீனாவிற்கு இணையாக அல்லது முன்னதாக நுண்மிய நாணயத்தை அமெரிக்க மக்கள் மத்தியில் மிகவும் பரவலாக பாவிக்கப்பண்ண அமெரிக்கா முயல்கின்றது.

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...