Followers

Sunday 31 May 2020

புவிசார் அரசியலும் ஈழத்தமிழர்களும்


புவிசார் அரசியல் என்பது பரவலாகப் பாவிக்ப்படும் சொற்பதமாகும். இதற்கான வரைவிலக்கணத்தை அறிய கடந்த ஐந்து ஆண்டுகளாக முயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றேன். அது தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கின்றது. சிலர் இது ஒரு நாட்டின் பூகோள அமைவால் உருவாகும் அரசியல் என மிகவும் குறுகலான வரைவிலக்கணத்தைக் கொடுக்கின்றனர். அண்மைக்காலங்களாக நாம் கண்ணுக்குத் தெரியாத நச்சுக்கிருமி உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அதனால் நச்சுக்கிருமிகள் புவிசார் அரசியலில் ஒரு காரணி எனச் சொல்வதை விட முடியாது. பெருந்தொற்று நோய்கள் பரவுவது அதிகரித்து வரும் சிலையில் நாடுகளுக்கிடையில் உள்ள மருத்துவ மற்றும் சுகாதார ஒத்துழைப்பு புவிசார் அரசியலில் பங்கு வகிக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

மாறிக்கொண்டே இருக்கும் புவிசார் அரசியல்

21-ம் நூற்றாண்டில் புவிசார் அரசியலில் நீர்ப்பங்கீடு பெரும் பங்கு வகிக்கவிருக்கின்றது. பல நாடுகள் ஒரு நதியைப் பங்கிடுவதிலும் ஒரு நாட்டில் உள்ள வெவ்வேறு இனக்குழுமங்கள் நீர் வளங்களை இட்டும் நீர் வழங்கலையும் இட்டும் மோதிக்கொள்ளும். ஏற்கனவே சூழல் பாதுகாப்பு புவிசார் அரசியலில் பங்கு வகிக்கத் தொடங்கிவிட்டது. சீனா தனது ஏற்றுமதி – இறக்குமதிக்கான பாதையில் அதிக கவனம் செலுத்துவது பெரிய புவிசார் அரசியல் பிரச்சனையை உருவாக்கி விட்டது. தென் அமெரிக்காவின் புவிசார் அரசியலில் பெரும் பிரச்சனையாக இருப்பது போதைப் பொருள் உற்பத்தி. இன்று தாமாகவே நாடுகள் கடந்து செல்லும் வெட்டுக்கிளிகள் நாளை ஒரு புவிசார் அரசியல் கருவியாகப் பாவிக்கப்பட்டு செயற்கையாவெ பரவச் செய்யப்படலாம்.

புவிசார் அரசியலைப் பாதிக்கும் காரணிகள்:

1. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம்

2. அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மற்றும் மூல வளங்கள் ச்மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்ற போட்டி.

3. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசு அல்லது அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை.

4. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசில்லாத அமைப்புக்களும் படைக்கலன் ஏந்திய குழுக்கள்.

5, அந்த நிலப்பரப்பில் செயற்படும் குடிசார் சமூகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.

6. அந்த நிலப்பரப்பில் உள்ள தலைவர்களின் தலைமைத்துவப் பண்பு

7. அந்த நிலப்பரப்பில் உள்ள மக்களின் மொழி, கலாச்சாரம், மதம், மக்கள் தொகைக்கட்டமைப்பு.

இதையே சுருக்கமாகச் சொல்வதானால்:

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்கள், மதம், கலாச்சாரம், வளம் தொடர்பான அங்குள்ள அதிகார மையங்களின் கொள்கைகளையும் தலைமைத்துவ ஆளுமைகளையும் அரசற்ற அமைப்புக்களையும் அவற்றிற்கு இடையேயான உறவுகளையும் புவிசார் அரசியல் என அழைக்கப்படும்.

தமிழ் அரசியல் அறிஞர்களும் கையாள்தலும்

எமது அரசியல் அறிஞர்களுக்கு தெரிந்த புவிசார் அரசியல் என்பது பாக்கிஸ்த்தான் வந்தால் இந்தியா வரும், இந்தியா வந்தால் சீனா வரும், சீனா வந்தால் அமெரிக்கா வரும், அமெரிக்கா வந்தால் இரசியா வரும் என்பதாகும். அத்துடன் அவர்கள் திருகோணமலைத் துறைமுகத்தையும் இந்து மாக்கடலின் வர்த்தகப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தையும் சொல்லுவாரகள். இந்த அரசியல் அறிஞர்களின் கருத்துக்கள் நிலையானதாகவோ அல்லது உறுதியானதாகவோ இல்லை. அவர்களின் கருத்துக்கள் இப்படி மாறிக் கொண்டு போகின்றது:

·         இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு தனிநாடு பெற்றுத்தரும்.

·         இந்தியா தமிழர்களுக்கு இணைப்பாட்சி பெற்றுத்தரும்

·         இந்தியா தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் பெற்றுத் தரும்

·         இந்தியா தமிழர்களைக் கைவிடாது.

·         இந்தியாவை எதிர்த்து ஒன்றும் பயனில்லை.

ஆனால் இந்தியா தொடர்ச்சியாக பாக்கு நீரிணைக்கு இரு புறமும் உள்ள தமிழர்களுக்கு விரோதமான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில் இவர்களால் இந்தியாவிற்கு சார்பாக அறிவு சார்ந்த விவாதங்களை முன்வைக்க முடியாத நிலையில் ஒரு புதிய விவாதத்தை முன் வைக்கின்றனர். அதுதான் நாம் “இந்தியாவை கையாள வேண்டும்”. தமிழர்களை இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்திருக்க இந்தியாவிற்கு சார்பானவர்கள் முன் வைக்கும் விவாதம்தான் இந்த கையாள்தல் என்ற வாசகம்.

உலக அரங்கில் கையாள்தல் கொள்கை

முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில் கிளிண்டனும் பராக் ஒபாமாவும் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்சியாளர்களுடன் மோதலை தவிர்த்து அவர்களை கையாளுதல் என்ற எண்ணத்தை தமது வெளியுறவுக் கொள்கையில் பாவித்தனர். அமெரிக்காவிற்கு ஒவ்வாத சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் முரண்படாமல் “கையாள்தல்” செய்ய வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது. அமெரிக்காவிற்கு ஒவ்வாத அரசுகளை அயோக்கிய அரசுகள் எனச் சொல்லி முன்னாள் அமெரிக்க அதிபர்களான இரண்டு ஜோர்ஜ் புஷ்களும்  ஒதுக்கியது போல் ஒதுக்காமல் அவர்களுடன் இருதரப்புக்கும் நலன் தரக்கூடிய வகையில் செயற்படுவதை கையாளும் கொள்கை எனப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை கையாள்தல் என்பது இறுதி இலக்கல்ல, இலக்கை நோக்கிய நகர்வு. மியன்மார் படைத்துறையினரை அவர் கையாண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூக்கியை ஆட்சிப் பதவியில் அமர வழிவகுத்தார். கியூபா, சீனா, வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளுடன் செயற்படுத்திய கையாள்தல் கொள்கை போதிய பயனளிக்கவில்லை. பில் கிளிண்டனின் வெளியுறவுத்துறையில் பணி புரிந்த ரொபேர்ட் சூட்டிங்கர் கையாளுதல் என்ற சொல் மோசமாக வரையறைச் செய்யப்பட்டு அளவிற்கு அதிகமாகப் பாவிக்கப்படுகின்றது என்றார். மிக உயர்ந்த பேரம் பேசல் வலுவில் உள்ள அமெரிக்காவிலேயே கையாளுதல் சரியாகப் பயன்படுத்தப் படவில்லை என்றால் தமிழர்கள் கையாள்தல் கொள்கையைப் பாவித்து தமது நிலையை உயர்த்துவது எப்படி?

பரந்த அறிவற்ற அரசியலறிஞர்கள்

ஈழத் தமிழர்களைச் சூழவுள்ள புவிசார் அரசியலைப் பார்த்தோம் என்றால் சீனா இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்க முயற்ச்சிக்கின்றது என்பது முதன்மையான உண்மை. அதை எதிர்க்க ஈழத் தமிழர்களை இந்தியாவும் அமெரிக்காவும் தனித்தனியாகவோ இனைந்தோ பாவித்து இலங்கைமீது அழுத்தம் கொடுக்கும். அதை தமிழர்கள் வாய்ப்பாகப் பயன் படுத்தி இலங்கை அரசு தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க அழுத்தம் கொடுக்கச் சொல்லி இலங்கை வாழ் தமிழர்கள் இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் பேரம் பேசலாம் என சில அரசியல் அறிஞர்கள் சொல்கின்றார்கள். அவர்கள் வெறும் அரசியல் அறிஞர்கள் மட்டுமே. புவிசார அரசியல் அறிஞர்கள் அல்லர். இலங்கையின் ஏற்றுமதியில் 60%இற்கு மேலானவை வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்கு செல்கின்றது. இவற்றைத்தான் மேற்கு நாடுகள் எனச் சொல்கின்றனர். இலங்கை மேற்கு நாடுகளுக்குப் பாதகம் ஏற்படும் வகையில் சீனாவுடன் இணைய முடியாது. பொருளாதாரத் தடை கொண்டு வருவோம் என மேற்கு நாடுகள் அறிவித்தால் இலங்கை தனது கொள்கையை மேற்கு நாடுகளுக்கு இசைவாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. சீனாவிற்கு இலங்கை செய்யும் ஏற்றுமதி சிங்கப்பூருக்குச் செய்யும் ஏற்றுமதியிலும் குறைவானது. இலங்கை தொடர்பான பொருளாதார அறிவுள்ள அரசியல் ஆய்வாளர்கள் மட்டுமே இலங்கையில் மேற்கு நாடுகளும் சீனாவும் இடையிலான போட்டியில் மேற்கு நாடுகளின் வலிமையை உணர்ந்து கருத்துச் சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இலங்கையில் சீனப் படைத்தளப் பூச்சாண்டி

இலங்கையில் சீனா படைத்தளம் அமைக்கலாம் அல்லது அமைக்க முயற்ச்சிக்கின்றது என படைத்துறை அறிவில்லாதவரகள் மட்டுமே ஆணித்தரமாக முன்வைக்கின்றனர். இந்தியாவின் ஏவுகணை வீச்சு எல்லைக்குள் இந்தியாவிற்கு எதிரான நாடு படைத்தளம் அமைக்க மாட்டாது  என்பதை உணர்ந்து கருத்துச் சொல்வதற்கு உலகெங்கும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய படைக்கலன்களைப் பற்றிய அறிவு தேவை. B-21, C-5 எனப்படுபவை நெடுஞ்சாலைகளா எனக் கேட்பவர்களால் புவிசார் அரசியலை உணர்ந்து கருத்துச் சொல்ல முடியாது. அண்மையில் ஒரு காணொலிச் செய்தியில் அமெரிக்காவின் லேசர் படைக்கலன்களுக்கு சீனா அஞ்சி நடுங்குகின்றது என செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் சீனாவிடமும் லேசர் படைக்கலன்கள் உள்ளன என்பதை அந்த காணொலித் தயாரிப்பாளர்கள் அறிந்திருக்கவில்லை. இப்படிப்பட்ட அறிவாளிகள் நடுவில் தொலைநோக்கம் ஏதுமே இல்லாத தலைவகளின் வழிகாட்டுதலுடன் தமிழர்கள் தங்கள் அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

பிரித்தலும் புகுத்தலும்

தமிழர்களின் எதிரி நாடுகள் தமிழர்களின் படைக்கலன் ஏந்திய போராட்டத்தை அழிக்க அதனுள் இருந்து சிலரை வெளியே எடுத்து கொழும்பிற்கு கொண்டு சென்றன. இப்போது அதே நாடுகள் ஒருவர் பின் ஒருவராக தமிழர்களின் அரசியல் கட்சிகளிடையே சில கொழும்பு அறிவாளிகளைப் புகுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழர்கள் இலங்கையை சூழவுள்ள பிரதேசத்தின் புவிசார் அரசியலில் எந்த பாகமும் வகிக்க முடியாத வகையில் அவர்களிடையே பல கட்சிகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் உலக தாராண்மைவாதிகளில் மீது அளவிற்கு அதிகமான நம்பிக்கையை 2009இன் பின்னர் வைத்தனர். பின்னர் அத் தாராண்மைவாதிகள் பல நாடுகளில் பின்னடைவுகளைச் சந்தித்து அவர்களது ஆட்சி அரியணையில் பழமைவாதிகளும் தேசியவாதிகளும் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் தமிழர்கள் கையறு நிலையில் இப்போது இருக்கின்றனர்.

Sunday 24 May 2020

பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரை இந்தியா கைப்பற்றுமா?

 2020 பெப்ரவரி 23-ம் திகதி இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் இந்தியா பாக்கிஸ்த்தான் ஆக்கிரமித்திருக்கும் கஷ்மீரை “மீளக் கைப்பற்றுவது” செய்யக் கூடிய ஒன்று ஆனால் இலகுவானதல்ல என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் இந்தியா செய்ய வேண்டி படை நடவடிக்கைக2019 ஓகஸ்ட் மாதம் 6-ம் திகதி இந்திய அரசியலமைப்பில் கஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கும் இன்ஹ்டிய அரசியலமைப்பின் 370வது பிரிவை இரத்துச் செய்யும் சட்டத்தை இந்தியப் பாராளமன்றத்தில் சமர்ப்பித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீர் பிரதேசமும் சீன வசமுள்ள கஷ்மீர் பிரதேசமும் இந்தியாவின் ஒருமித்த பகுதிகள் என்றார். 2020 ஜனவரியில் இந்திய படைத் தளபதி மனோஜ் நரவானே இந்தியப் பாராளமன்றம் அனுமதித்தால் தாமது படையினர் பாக்கிஸ்த்தான் கைப்பற்றி வைத்திருக்கும் கஷ்மீரைக் கைப்பற்றத்தயார் என்றார். 

இந்தியன்எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் இந்தியா கஷ்மீரைக் கைப்பற்ற செய்ய வேண்டி படை நடவடிக்கைகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன:

1. இந்தியாவின் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் தனது அமெரிக்கத் தயாரிப்பு F/A-18 Super Hornet விமானங்களுடனும் மற்ற போர்க்கப்பல்களுடனும் அரபிக்கடலில் செயற்பட்டு பாக்கிஸ்த்தான் மீது ஒரு கடல் முற்றுகை செய்ய வேண்டும்.

2. F/A-18இல் இரசிய இந்திய கூட்டுத்தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணைளைத் தாங்கி நிற்கும்.

3. ஐம்பதாயிரம் இந்தியப் படையினர் T-90, T-72 ஆகிய போர்த்தாங்கிகளுடன் தானாகவே செலுத்தும் தென் கொரியாவின் கே-9 வஜ்ரா எறிகணைகளுடனும் பிரெஞ்சு ரஃபேல் விமானங்களின் ஆதரவுடனும் எல்லை தாண்டிச் செல்ல வேண்டும்

4. ரஃபேல் விமானங்கள் இஸ்ரேலியத் தயாரிப்பு லேசர்-வழிகாட்டி குண்டுகளை பாக்கிஸ்த்தானின் படைக்கலக் கிடங்குகள் மீது வீச வேண்டும்.

5. இரசியவின் எஸ்யூ-30எம்கேஐ விமானங்கள் பிரம்மோஸ் ஏவுகணைகளை எதிரி இலக்குகள் மீது வீச வேண்டும்.

இந்தியப் படை நடவடிக்கைகளுக்கான பாக்கிஸ்த்தானின் எதிர்வினையையும் இண்டியன் எக்ஸ்பிரஸ் வரிசைப்படுத்தியது:

1. பாக்கிஸ்த்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதலை இந்திய எதிர்கொள்ளவேண்டும்.

2. பாக்கிஸ்த்தானுடன் எல்லாக்காலமும் நண்பனாக இருக்கு சீனா இந்தியப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்க இந்தியப் படைகள் மீது தாக்குதல் செய்யும்.

வளரும் இந்தியாவால் தேயும் பாக்கிஸ்த்தான்

கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையிலான படைவலிமை இடைவெளி மட்டுமல்ல பொருளாதார வலு இடைவெளியும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. உலகிலேயே அதிக அளவு செலவில் படைக்கலன்களை இறக்குமதி செய்யும் நாடாக கடந்த சில ஆண்டுகளாக இந்தியா இருந்து வருகின்றது. பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரினூடாக சீனா-பாக் பொருளாதாரப் பாதை செல்கின்றது.
அதனால் அதை இந்தியா கைப்பற்றுவதை சீனா விரும்பாது.

பாஜகவின் பெரிய கஷ்மீர் கனவு

நேருவின் தலையில் சுதந்திரப் போராட்ட வீர்ர் என்ற மகுடமும் இந்திரா கந்தியின் தலையில் பங்களாதேச விடுதலை என்ற மகுடமும் இருப்பது போல் நரேந்திர மோடியின் தலையில் கஷ்மீரை முழுமையாக மீட்ட வீரர் என்ற மகுடம் சூட்ட பாரதிய ஜனதாக் கட்சி விரும்பலாம். அவர்களின் திட்டம் பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரும் அதனுடன் இணைந்த கில்ஜிட்-பலிஸ்த்தான் பிரதேசமும் இந்தியாவிற்கு சொந்தமாக வேண்டும் என்பதே. பாக்கிஸ்த்தானிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க 2020 மே 16-ம் திகதி பாக்கிஸ்த்தானிய அதிபர் கில்ஜிட் பலிஸ்டானில் தேர்தல் நடத்துவதற்கான அரச ஆணையைப் பிறப்பித்தார். அதன்படி 24-06-2020 அங்கு தேர்தல் நடத்தப்படும். அது இந்தியாவின் இறைமைக்கு உட்பட்ட பிரதேசம் எனச் சொல்லி தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. கில்ஜிட்-பலிஸ்த்தான் பிரதேசத்தில் சீனாவின் உதவியுடன் ஐந்து அணைக்கட்டுக்கள் கட்டப்படுவதையும் இந்தியா ஆட்சேபித்துள்ளது. மோடியின் அரசு இந்தியத் தொலைக்காட்சிகள் இந்தியாவிற்கான கால நிலை அறிக்கை ஒளிபரப்பும் போது பாக்கிஸ்த்தான் கைப்பற்றியுள்ள கஷ்மீரையும் உள்ளடக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளது. அதில் காட்டப்படும் வரைபடத்தில் இந்தியாவுடன் முழுக் கஷ்மீரும் இருக்க வேண்டும் என இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கஷ்மீரின் வரலாறு: ஆக்கிரமிப்பும் விலை போதலும்

கி.மு. 3ம் நூற்றாண்டில் அசோக சக்ரவர்த்தியால் ஸ்ரீநகர் உருவாக்கப்பட்டது. அசோகருக்கு பின்னர் ஜலோகா எனும் மன்னன் ஆண்டான். இக்காலத்தில் புத்தமதம் பரவலாக பின்பற்றப்பட்டது. கி.பி.210 வரை இருந்த குஷாணர்கள் ஆட்சி காலத்தில் புத்த மதம் மேலும் வேரூன்றியது. 6வது நூற்றாண்டில் ஹீனர்கள் காஷ்மீரை தமது பிடிக்குள் கொண்டுவந்தனர். கி.பி. 627ல் துர்பலா வர்தனா எனும் மன்னன் இப்பகுதியை தனது திருமண சீதனமாக பெற்றான். இந்த மன்னன் காலத்தில் பல இந்து கோவில்கள் கட்டப்பட்டன. 8ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் காஷ்மீருக்கு இந்து மதத்தை பரவலாக்கிட வருகை புரிந்தார்.கி.பி. 1546ல் அக்பர் பேரரசர் காஷ்மீரை முகலாய சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தார். ஜஹாங்கீர் மற்றும் ஷாஜஹான் ஆட்சியின் பொழுது இசுலாம் வலுவாக காஷ்மீரில் காலூன்றியது. 1751ல் ஆஃப்கன் அரசர்களின் பிடியில் காஷ்மீர் சென்றது. பின்னர் 1789ல் சீக்கியர்கள் காஷ்மீரை கைப்பற்றினர். 1846 போரில் சீக்கியர்களை பிரிட்டஷ் படை வென்றது. போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் பொழுது பிரிட்டஷார் 75 இலட்சம் ரூபாயை கோரினர். இந்த பெரும் தொகையை தர இயலாத சீக்கிய மன்னன் காஷ்மீரை பிரிட்டஷாருக்கு கொடுத்தான். காஷ்மீரை நிர்வகிப்பதில் பல இன்னல்கள் ஏற்பட்டதால் பிரிட்டஷார் இப்பகுதியை டோக்ரா வம்சத்தை சேர்ந்த குலாப்சிங் எனும் மன்னனிடம் 100 இலட்சம் ரூபாய்க்கு விற்றனர். அப்பொழுது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி குலாப்சிங் பிரிட்டஷாருக்கு வரிகளை கட்டிவிட்டு காஷ்மீருக்கு மன்னனாக தொடர்ந்தான். குலாப்சிங் வழியில் இரண்பீர்சிங் (1857-85) , பிரதாப்சிங் (1885-1925) மற்றும் ஹரிசிங் (1925-47) ஆகியோர் காஷ்மீரை ஆண்டனர்.

கஷ்மீர் பிரிவும் ஆக்கிரமிப்பும்

இந்திய உபகண்டத்தை பிரித்தானியர் ஆண்டபோது இருவகையாக அதைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஒன்று நேரடி ஆட்சி மற்றது சிற்றரசர்கள் மூலமான ஆட்சி. சிற்றரசர்கள் மூலம் ஆளப்பட்ட பிரதேசங்கள் Princley States (சமஸ்த்தானங்கள்) என அழைக்கப்பட்டன. இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் சுதந்திரமடைந்த போது 565 சிற்றரசுகள் இருந்தன. பாக்கிஸ்த்தானும் இந்தியாவும் பிரிந்த போது இந்த சிற்றரசுகள் இந்தியாவுடன் இணைவதா அல்லது பாக்கிஸ்த்தானுடன் இணைவதா என்பதை அந்த சிற்றரசர்கள் முடிவு செய்யலாம் என பிரித்தானியா அறிவித்தது. பிரித்தானியாவின் நேரடி ஆட்சியில் உள்ள பிரதேசங்களில் இந்துக்களைப் பெரும்பான்மையாக கொண்ட பிரதேசங்கள் இந்தியாவுடனும் இஸ்லாமியர்களைப் பெரும்பானமையினராகக் கொண்ட பிரதேசங்கள் பாக்கிஸ்த்தானுடனும் இணைவதாக ஒத்துக் கொள்ளப்பட்டது. இஸ்லாமியர்களைப் பெரும்பன்மையினராகக் கொண்ட ஜம்மு-கஷ்மீரை அப்போது ஹரி சிங் என்னும் இந்து சிற்றரசர் ஆண்டு கொண்டிருந்தார். மற்ற இந்தியர்களிலும் பாக்கிஸ்த்தானியர்களிலும் வேறுபட்ட தனித்துவமான கலச்சாரத்தையும் மொழியையும் கஷ்மீரியர்கள் கொண்டிருந்தனர். பிரித்தானியா இந்திய உபகண்டத்தில் இருந்து வெளியேறியபோது கஷ்மீரை ஆண்டு கொண்டிருந்த ஹரி சிங் அதை ஒரு தனிநாடாக வைத்திருக்க முடிவு செய்தார். அதை பிரித்தானியா விருப்பமில்லாமல் ஏற்றுக் கொண்டது. பின்னர் பாக்கிஸ்த்தான் கஷ்மீர் மீது படையெடுக்க பிரித்தானியா தூண்டியது. பாக்கிஸ்த்தானியப் படையெடுப்பை சமாளிக்க முடியாத ஹரி சிங் இந்திய தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேருவிடம் உதவி கோரினார். கஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தால் மட்டுமே உதவி செய்ய முடியும் என நேரு சொல்ல ஹரி சிங் அதை ஒத்துக் கொண்டார். மற்ற இந்திய மாநிலங்களிலும் பார்க்க அதிக அதிகாரம் கொண்ட மாநிலமாக கஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் கஷ்மீரைக் கைப்பற்ற போர் புரிந்தன. ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டால் போர் நிறுத்தப்பட்டது. ஐகிய நாடுகளின் பொதுச்சபை கஷ்மீர் தொடர்பாக 1948 ஏப்ரலில் நிறைவேற்றிய தீர்மானம் 47இன் படி பாக்கிஸ்த்தானையப் படையினர் கஷ்மீரில் இருந்து வெளியேவேண்டும், இந்தியா மட்டுப்படுத்தப் பட்டபடையினரை மட்டும் வைத்திருக்கலாம், இந்தியா கஷ்மீரில் அதன் எதிர்காலம் தொடர்பாக ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

 

மூன்று நாடுகளின் கட்டுப்பாட்டில் கஷ்மீர்

கஷ்மீரின் ஜில்ஜிட்-பலிஸ்த்தான், அஜாத் கஷ்மீர் ஆகிய பிரதேசங்கள் பாக்கிஸ்த்தான் கட்டுப்பாட்டில் உள்ளன. ஜம்மு, லதக், கஷ்மீர் பள்ளத்தாக்கு ஆகிய பிரதேசங்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. அக்சாய் சின், ரான்ஸ்-கரக்கொரம் ஆகிய பிரதேசங்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.இதில் அக்சாய் சிங் இந்திய-சீனப் போரின்போது சீனாவால் கைப்பற்றப்பட்டது. ரான்ஸ்-கரகொரம் பாக்கிஸ்த்தானால் சீனாவிடம் கையளிக்கப்பட்டது.

 

சூழலை இந்தியா சாதமாக நினைக்கின்றதா?

2020 ஏப்ரில் மாதம் ஏசியா ரைம்ஸில் சீனா தைவானை ஆக்கிரமிக்க காலம் கனிந்துள்ளது என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அமெரிக்கா கோவிட்-19 தொற்றுநோயால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் சூழலை சீனா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தைவானைக் கைப்பற்ற வேண்டும் என சீனாவில் சிலர் கருதுகின்றனர். முதன்மை நாடு ஒன்று சிக்கலில் இருக்கும் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி இன்னொரு முதன்மை நாடு மூன்றாம் நாடு ஒன்றை ஆக்கிரமிக்க முடியுமா என்பதற்கு 1962-ம் ஆண்டு சீனா இந்தியா மீது போர் தொடுத்ததை உதாரணமாகப் பார்க்கலாம். 1962-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16-ம் திகதி முதல் 28-ம் திகதிகவரி கியூப ஏவுகணை நெருக்கடி உருவானது. 1962 ஒக்டோபர் மாதம் 20-ம் திகதி சீனா இந்தியா மீது படையெடுத்தது. அமெரிக்கா கியூபாவில் இரசியா நிறுத்தி வைத்துள்ள அணுக்குண்டுகளை காவிச்செலும் ஏவுகணை அகற்றும் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டுள்ள வேளையில் அமெரிக்க இரசிய அணுப்படைக்களப் போர் உருவாகும் என்ற சூழலில் இந்தியாவைப் பாதுகாக்க யாரும் வரமாட்டாரகள் என்ற எண்ணத்துடன் சீனா இந்தியாவை ஆக்கிரமித்தது. ஆனால் அமெரிக்க அதிபர் ஜோன் எஃப் கெனடி இந்தியத் தலைமை அமைச்சர் நேருவுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைத் தான் செய்வதாக வாக்குறுதியளித்தார். பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தில் இருந்து இந்தியப் படைகளுக்கு தேவையான படைக்கலன்களும் குளிர்கால ஆடைகளும் அவசரமாக இந்தியாவில் கொண்டு வந்து இறக்கப்பட்டன. நேரு 350 அமெரிக்கப் போர்விமானங்கள் இந்தியாவிற்கு வந்து சீனர்களுக்கு எதிராக தாக்குதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். அமெரிக்கா இரசியா தலைமையிலான வார்சோ ஒப்பந்த நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பின் ஊடாக சீனாவிற்கு தொடர்ச்சியாக பல அழுத்தங்களைப் பிரயோகித்த போது சீனா ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்து கஷ்மீரில் ஒரு சிறு உயர் மலைப்பிரதேசத்தை தவிர தான் கைப்பற்றிய ஏனைய இடங்களில் இருந்து வெளியேறியது. 1962இல் இந்தியாவைக் காப்பாற்றியது போல் அமெரிக்கா தைவானைக் காப்பாற்றும் என எதிர்பார்க்கலம். அதிலும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தைவான் மீது அதிக அக்கறை காட்டுபவராக உள்ளார். சீனா தைவான் மீது போர் தொடுத்தால் அந்த சூழலைப் பயன்படுத்தி இந்தியா கஷ்மீரைக் கைப்பற்ற முயற்ச்சிக்கலாம். தைவானில் அமெரிக்காவுடன் மோதிக் கொண்டிருக்கும் சீனாவால் பாக்கிஸ்த்தானைக் காப்பாற்ற முடியாமல் போகலாம்.

இந்தியாவிற்கான காலம் கனிகின்றதா?

இந்தியாவிலும் பார்க்க அதிகஅளவு அணுக்குண்டுகளை வைத்திருக்கும் பாக்கிஸ்த்தானிடமிருந்து இந்தியா தன்னை இரசியாவிடமிருந்து வாங்கி வைத்திருக்கும் எஸ்-400-ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் பாதுகாக்கலாம். அத்துடன் பாக்கிஸ்த்தான் அணுக்குண்டு வீசினால் தானும் பாக்கிஸ்த்தான் மீது அணுக்குண்டு வீசுவேன் என மிரட்டலாம். ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் அமெரிக்கா செய்யும் சமாதான முயற்ச்சி வெற்றியளித்தால் அமெரிக்காவிற்கு பாக்கித்தான் அவசியமற்ற ஒரு நாடாக மாற வாய்ப்புண்டு. பாக்கிஸ்த்தான் மீது இந்தியா போர் தொடுப்பது என்பது செய்தியாக அடிபட முன்னரே சீனா தனது படையை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தியிருந்தது.

இந்தியா குவாட் என்ற நான்கு நாடுகளின் கூட்டமைப்பில் தீவிர ஈடுபாடு காட்ட வேண்டும் என்ற குரல் இந்தியாவில் மீண்டும் உரத்து ஒலிக்கின்றது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஒஸ்ரேலியா ஆகிய நான்கு நாடுகள் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஒன்றகாச் செயற்படவேண்டும் என்பதே குவாட் அமைப்பின் நோக்கம். குவாட்டில் இப்போது தென் கொரியா, வியட்னாம், நியூசீலாந்து என்பவையும் இணையும் முயற்ச்சிக்கப்படுவதால் குவாட்+ என அது பெயரிடப்பட்டுள்ளது. இந்த நாடுகளிடையே ஒரு படைத்துறை ஒத்துழைப்பு ஒப்பந்த அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டால் அது இந்தியாவிற்கு சீனாவின் சவாலை சமாளிக்க முடியும். இந்தியா தனித்து பாக்கிஸ்த்தானிற்கும் சீனாவிற்கும் எதிராகப் போர் புரிந்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், நாகலாந்து ஆகியவற்றை சீனா கைப்பற்றலாம். இந்தியா கஷ்மீரை ஆட்சி செய்வதிலும் பார்க்க இலகுவாக சீனாவால் அந்த மாநிலங்களை ஆள முடியும். அவர்கள் சீனர்களைப் போல் தோற்றமுடையவர்கள். அங்கு வாழும் பல இனக்குழுமங்கள் ஒலிம்பிக் போட்டியின் போது சீனா வெற்றி பெறுவதை பெரிதும் விரும்பி ஆராவரிப்பார்கள். அதனால் பாக்கிஸ்த்தான் மீது போர் தொடுக்க முன்னர் ஒரு வலுவான பன்னாட்டு படைத்துறைக் கூட்டமைப்பில் இந்தியா இணைந்திருப்ப்பது அவசியம்.

Wednesday 20 May 2020

உருகும் ஆர்க்டிக்கில் பெருகும் அமெரிக்க இரசியப் போட்டி

Add caption
அமெரிக்கக் கடற்படையின் ஆறாவது பிரிவைச் சேர்ந்த கப்பல்களும் பிரித்தானியாவின் கடற்படையினரும் இணைந்து 2020 மே மாதம் முதலாம் திகதியில் இருந்து ஆர்க்டிக் பனிக்கடல் பிரதேசத்தில் உள்ள பரன்சுக் கடலில் (Arctic Barents Sea) போர் பயிற்ச்சியை மேற்கொண்டன. இரு நாடுகளும் நீர்மூழ்கி எதிர்ப்பு, படைத்துறை வளவழங்கல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு பயிற்ச்சியை மேற்கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து மே மாதம் 7-ம் திகதி அதே இடத்தில் இரசியா உண்மையான சுடுகலன்களை பாவித்து ஒரு கடற்போர் பயிற்ச்சியை அங்கு மேற்கொண்டது. பின்னர் அமெரிக்க மற்றும் பிரித்தானியக் கடற்படையினர் தமது பயிற்ச்சியை முடித்துக் கொண்டு திரும்பினர். உலகம் வெப்பமாகிக் கொண்டே போவதால் ஆர்ட்டிக் பிராந்தியத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகிக் கொண்டே போக அது கப்பற் போக்குவரத்துச் செய்யக் கூடிய பிரதேசமாகவும், கடலுணவு பெறக்கூடிய பிரதேசமாகவும், எரிபொருள் மற்றும் கனிம வளங்கள் அகழ்ந்தெடுக்கக் கூடிய பிரதேசமாகவும் உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது இதனால் அங்கு ஆதிக்கம் செலுத்த பல நாடுகள் போட்டி போடுகின்றன.

வட துருவத்தில் உள்ள ஆர்க்டிக்

பூமிப்பந்தின் ஆர்க்டிக் வளையம் என்னும் கற்பனைக் கோட்டுக்கு வடக்கே இருக்கும் 1.1 மில்லியன் சதுரமைல் பிரதேசம் ஆர்க்டிக் கண்டம் எனப்படும். பனிப்போரின் பின்னர் தற்போது அமெரிக்கப் படையினர் அதிக அளவில் ஆர்க்டிக் பிராந்தியத்தில் நடமாடுகின்றனர். நோர்டிக் நாடுகள் என அழைக்கபடும் டென்மார், ஃபின்லாந்து, ஐஃச்லாந்து, நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளும் இரசியாவும், கனடாவும் ஐக்கிய அமெரிக்க்காவும் இந்த ஆர்க்டிக் கண்டத்தில் ஆதிக்கம் செய்யப் போட்டி போடுகின்றன. பசுபிக் மாக்கடற் பிராந்தியத்தையும் இணைக்கும் மிகக் குறுகிய கடற்பாதையாக உருகிய ஆர்க்டிக் கடல் உருவெடுத்துள்ளது. அந்தக் கடற்பாதை Northern Sea Route (NSR) என அழைக்கப்படுகின்றது. முன்பு சூயஸ் கால்வாய் ஆசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்குமான கடல் பயண நேரத்தைக் குறைத்தது போல Northern Sea Route (NSR)  வட ஆசியாவிற்கும் வட ஐரோப்பாவிற்கும் இடையிலான கடற்பயண் நேரத்தைக் குறைத்துள்ளது. சூயஸ் கால்வாயை ஒட்டிய புவிசார் அரசியல் போட்டி போல் Northern Sea Route (NSR) இலும் ஒரு புவிசார் அரசியல் போட்டி உருவாகியுள்ளது.  2013-ம் ஆண்டில் இருந்து இரசியா பல பில்லியன் டொலர்கள் செலவில் ஏழு படைநிலைகளை உருவாக்கியுள்ளது. சுழியத்திற்கு கீழ் 40பாகை (-40 C) குளிரான கால நிலையுள்ள, அடிக்கடி பனிப்புயல் வீசும் ஆர்க்டிக் பிரதேசத்துக்கு செல்ல எந்த ஒரு கடற்படை வீரனும் விரும்புவதில்லை. 1980இல் இருந்து அமெரிக்க கடற்படையினர் அங்கு தமது நடமாட்டைத்தைக் குறைத்திருந்த தற்போது அங்கு தமது படை நிலைகளை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். 2018-ம் ஆண்டு நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பு சுவீடனுடனும் பின்லாந்துடனும் இணைந்து Trident Juncture என்னும் பெயரில் பெரும் போர்ப்பயிற்ச்சியை மேற்கொண்டிருந்தனர்.

இரசியாவின் கோடிகுவிக்கும் கோடி

பரன்சுக் கடல் இரசியாவின் பின்புறம் போன்றது. அதில் பெரும்பகுதி இரசியாவின் பொருளாதார வலயத்தினுள் வருகின்றது. இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நாளான மே 7-ம் திகதி அந்த வெற்றியை ஒன்றிணைந்து பெற்ற அமெரிக்கா, இரசியா, பிரித்தானியா ஆகிய நாடுகள் முறுகல் நிலையில் கொவிட்-19 தொற்று நோய் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மேற்கொண்ட போர்ப்பயிற்ச்சி ஆர்க்டிக் கடலின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. கொவிட்-19 தொற்று நோயின் தாக்கத்தால் அமெரிக்காவினது விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றும் பிரான்சின் விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றும் செயற்பட முடியாமல் உள்ளன. ஆர்க்டிக் கரையோரத்தில் 53% இரசியாவிற்கு சொந்தமானது அங்கு இரசியா எரிபொருள் மற்றும் கனிம அகழ்வுகள் மூலம் பெரும் வருவாயை ஈட்டுகின்றது. அங்கு எரிபொருள் ஆய்வு  செய்யும் நிறுவனங்களுக்கு இரசியா நாற்பது பில்லியன் டொலர் பெறுமதியான வரிவிலக்கை வழங்கியுள்ளது.

கடலுரிமை

ஒரு நாட்டின் கரையில் இருந்து 200கடல் மைல்கள் அல்லது 370 கிலோ மீற்றர் தொலைவிலான கடற்பிரதேசம் அந்த நாட்டின் பொருளாதார வலயமாகும். ஒரு நாட்டின் கரையில் இருந்து 12 கடல் மைல்கள் அந்த நாட்டின் இறைமைப் பிராந்தியமாகும். அதற்குள் அந்த நாட்டின் அனுமதி இன்றி கடற்பயணத்தையோ அல்லது வான்பறப்பையோ மற்ற நாடுகள் செய்ய முடியாது. இந்த 12 கடல் மைல்களுக்கு அப்பால் ஒரு நாட்டில் பொருளாதார வலயக் கடற்பரப்பில் மற்ற நாட்டு கடற்கலன்கள் சுதந்திரமாக பயணிக்க முடியும். பொருளாதார வலயத்தில் உள்ள வளங்கள் அந்த நாட்டுக்கு மட்டுமே சொந்தமானதாகும். 200 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடற் பிரதேசம் பன்னாட்டுக் கடற்பிரதேசமாகும்.

உல்லாசப் பயணமும் நன்னீர் வளமும்

சிறந்த வான்வெளி அவதானிப்பு நிலையம், அரிய உயிரின வகை, வித்தியாசமான கால நிலை, வித்தியாசமான உணவுகள் கொண்ட ஆர்க்டிக் வலயம் சிறந்த சுற்றுலா நிலையமுமாகும். இருபத்தி ஓராம் நூற்றாண்டு நன்நீருக்கான புவிசார் அரசியல் போட்டியை திவிரப்படுத்தும் காலமாகக் கருதப்படுகின்ற வேளையில் உருகும் ஆர்க்டிக் எனப்படும் வட துருவப் பிராந்தியம் சிறந்த நன்னீர் வளமிக்க பெரு நீர் நிலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. தெற்கு ஆபிரிக்காவில் உள்ள நாடுகள் தமது நாட்டின் நீர்த்தேவையை நிறைவு செய்ய தென் துருவ அண்டார்டிக் பிராந்தியத்தில் இருந்து பனிப்பாறைகளை இழுத்துக் கொண்டு வரத் திட்டமிடுகின்றன. அதே மாதிரி வட துருவத்திலும் செய்ய பல நாடுகள் முயற்ச்சிக்கலாம்.

ஆர்க்டிக் தொடர்பாடலுக்கு இரண்டு அமெரிக்க செய்மதிகள்

ஆர்க்டிக் பிரதேசத்தில் அமெரிக்காவின் படையினருக்கான் தொடர்பாடல் குறைபாடு ஒன்று உள்ளது. 2018 நேட்டோ அங்கு செய்த போர்ப்பயிற்ச்சியின் போது நோர்வேயினதும் சுவீடனினதும் ஜிபிஏஸ் என்னும் வழிகாட்டல் முறைமையை இரசியா செயற்படாமல் குழப்பியது. அமெரிக்காவின் விண்வெளிப்படை 2020இன் இறுதியில் ஆர்க்டிக் வலயத்தில் அமெரிக்காவின் தொடர்பாடல் தேவைகளை நிறைவு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென அமெரிக்கா இரண்டு செய்மதிகளை தனியாக சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. ஒரு நடுநிலையாக இருக்கும் நாடுகளான ஃபின்லாந்தும் சுவீடனும் ஆர்க்டிக் பிரதேசத்தையும் போல்ரிக் கடலையும் தரைவழியாக இணைக்கும் நாடுகளாகும். இதனால் வட ஐரோப்பாவில் நேட்டோவினதும் இரசியாவினதும் போட்டிக்களமாக இந்த இரண்டு நாடுகளும் இருக்கின்றன.

சீனாவின் பனிப்பட்டுப்பாதை

எங்கெல்லாம் கடற்பாதை உள்ளதோ அங்கெல்லாம் துறைமுக அபிவிருத்தி என்னும் பெயரில் தனது ஆதிக்கத்திற்கு அடிக்கல் நாட்டும் சீனாவும் ஆர்க்டிக் கண்டத்தில் அதிக அக்கறை காட்டி வருகின்றது. ஆர்க்டிக் சபையில் 2007-ம் ஆண்டில் இருந்து ஒரு பார்வையாளராக இருக்கின்றது. 2013-ம் ஆண்டு ஐஸ்லாந்துடன் சீனா ஒரு வர்த்தக உடன்படிக்கையை செய்து கொண்டு. ஐஸ்லாந்தின் வடபகுதியில் உள்ள ஆர்க்டிக் பிராந்தியத்தில் பனி உடைக்கும் கப்பல்களைச் சேவையில் ஈடுபடுத்தியது. அத்துடன் நோர்வேயின் Spitsbergen தீவில் ஒரு ஆய்வு மையத்தையும் உருவாக்கியுள்ளது. தரைவழிப் பட்டுப்பாதை கடல்வழிப்பட்டுப்பாதை என தனது கொள்வனவுகளுக்கும் விநியோகங்களிற்க்குமான பாதையில் அதிக அக்கறை காட்டும் சீனாவிற்கு ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் குறுகிய ஒரு தூர வழி மிகவும் கவர்ச்சிகரமானதாகும். ஆர்க்டிக்கின் ஊடான பாதையின் நீளம் தற்போது பாவிக்கும் பாதையிலும் பார்க்க 30 விழுக்காடு குறைவானதாகும். ஆர்க்டிக் பிராந்திய ஆய்வுகளிற்காக சீனா அறுபது மில்லியன் டொலர்கள் செலவு செய்கின்றது. இது அமெரிக்கா செய்யும் செலவீனத்திலும் பார்க்க அதிகமானதாகும். பன்னாட்டு நியமங்களின் படி ஆர்க்டிக் வலயத்தில் விஞ்ஞான ஆய்வு, கடற்பயணச் சுதந்திரம், வான்பறப்புச் சுதந்திரம், மீன்பிடிச் சுதந்திரம், குழாய்த்தொடர்புச் சுதந்திரம், வள அபிவிருத்தி உரிமம் ஆகியவை தனக்கு வேண்டும் என்கின்றது சீனா.

 

இரசியாவுடன் அமெரிக்கா எல்லையைக் கொண்டுள்ளது என்றால் அது அலாஸ்க்கா பிரதேசத்தில்தான்.  கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்ததன் பின்னர் இரசியாமீது அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடையால் இரசியர்கள் மத்தியில் அமெரிக்காவிற்கு எதிரான குரோதம் வளரத் தொடங்கியது. “கிறிமியா எங்களுடையது. அலஸ்க்கா அடுத்தது” என்ற குரல் இரசியாவில் ஒலிக்கத் தொடங்கியது. அலாஸ்க்காவை மீளக் கையளிக்கும் கோரிக்கை 37,000 பேர்களால் கையொப்பம் இடப்பட்டு வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டது. “கிறிமியா எங்களுடையது. அலஸ்க்கா அடுத்தது” என்ற பதாகையுடன் பென்குவின் பறவைகள்  பல ஊர்வலம் போவது போல ஒரு படம் கணனியில் இரசியர்களால் உருவாக்கப்பட்டு பரவ விடப்பட்டது. ஆனால் பென்குவின் பறவைகள் ஆர்க்டிக் கண்டத்திலோ அல்லது அலாஸ்க்காவிலோ வாழ்வதில்லை இரசியர்களின் மொக்கை இது என அமெரிக்கர்கள் நையாண்டி செய்தனர். ஆனால் கிறிமியாவை இணைத்ததன் மூலம் ஒரு பெரும் வரலாற்றுத் தவறைச் சீர் செய்த விளடிமீர் புட்டீன் அடுத்த வரலாற்றுத் தவறான அலாஸ்கா விற்பனையையும் சீர் செய்ய வேண்டும் என பல இரசியர்கள் கருதுகின்றார்கள். அலாஸ்க்காவின் முப்பது இரசிய மரபுவழிக் கிறிஸ்த்தவ தேவாலயங்கள் உள்ளன. அலாஸ்க்காவின் ஸ்புரூஸ் தீவு இரசியத் திருச்சபைக்குச் சொந்தமானது என்றும் அதை விற்கவோ அல்லது வாங்கவோ யாராலும் முடியாது என்றும் ஒரு இரசிய சரித்திர அறிஞர் வாதிடுகின்றார். இரசியாவின்  மிக் – 31, ரியூ- 95 ஆகிய போர்விமானங்கள் அலாஸ்க்காவை ஒட்டிய வான்பரப்பில் பறப்பது அண்மைக்காலங்களாக அதிகரித்து வருகின்றது. 2014-ம் ஆண்டு பத்துக்கு மேற்பட்ட தடவைகள் அமெரிக்காவின் F-22 போர்விமானங்கள் இரசிய விமானங்களின் அலைவரிசைகளை குழப்பி திருப்பி அனுப்பியுள்ளன. இரசியா தனது போர்விமானங்களை அலாஸ்க்கா எல்லையை ஒட்டிய வான்பரப்பில் பறப்பதன் மூலம் ஆர்க்டிக் மீதான தனது ஆளுமையை உறுதி செய்ய முயல்வதுடன் கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளையும் செய்கின்றது.வ்

Monday 11 May 2020

புட்டீனின் செல்வாக்கு ஆட்டம் காண்கின்றதா?


வான்வெளியில் இருக்கும் தனது செய்மதி ஒன்றை தரையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றால் அழிக்கும் சோதனையை இரசியா 2020 ஏப்ரல் மாத நடுப்பகுதியில் வெற்றிகரமாகச் செய்து முடித்தது. இரசியாவின் இந்த நடவடிக்கை தமது விண்வெளிச் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலானது என அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தப் பரிசோதனைக்கு முன்னர் இரசியாCOSMOS 2542 and COSMOS 2543 என்னும் இரண்டு செய்மதிகளை விண்வெளிக்கு அனுப்பியது. அவை இரண்டும் அமெரிக்காவின் உளவு செய்மதி ஒன்றை நிழலாகத் தொடர்ந்தன. அமெரிக்கா, இரசியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் விண்வெளியில் உள்ள செய்மதிகளை அழிக்கக் கூடியவையாக இருக்கின்றன. உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பையும் மூன்றாவது பெரிய மக்கள் தொகையையும் கொண்ட இரசியாவை ஆக்கிரமித்துக் கைப்பற்றக் கூடிய படை வலிமை எந்த ஒரு நாட்டிடமும் இல்லை ஆனால் இரசியாவின் பாதுகாப்பையிட்டு அதிபர் விளடிமீர் புட்டீன் அதிக கவனம் செலுத்துகின்றார். இரசியாவை உல்க ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு நாடாக வைத்திருப்பதால் இரசிய மக்கள் அவரை விரும்புகின்றனர்.

புட்டீனின் எதிரியைத் திணறடிக்கும் நகர்வுகள்
1998-ம் ஆண்டு இரசியா பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. இதன்பின்னர் இரசியாவை மேற்கு நாடுகள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என விளடிமீர் புட்டீன் கருதினார். இரசியா கிறிமியாவைத் தன்னுடன் இணைத்த பின்னர் 2015-ம் ஆண்டு இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் உலகிலேயே தமது நாட்டு மக்களிடையே செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார். 89 விழுக்காடு இரசியர்கள் அவரது தலைமையில் நம்பிக்கை கொண்டவராக இருந்தனர். 2020 ஜனவரியில் 69% பெப்ரவரியில் 69% என்று இருந்த புட்டீனின் செல்வாக்கு இறங்கி ஏப்ரலில் 59% ஆக வீழ்ச்சியடைந்தது. பொருளாதாரம் படித்து குங்ஃபு சண்டையில் தேர்ச்சி பெற்று சதுரங்க விளையாட்டில் திறமை கொண்ட புட்டீன் சோவியத் ஒன்றியத்தின் உளவுத் துறை அதிகாரியாக இருந்தவர் புட்டீன். அவர் புவிசார் அரசியல் நகர்வுகளால் எதிரிகளைத் திணறடிக்க் கூடியவர் என்பதை சிரியாவில் நிரூபித்தார்.

ஒத்திப் போடப்பட்ட அரசியலமைப்பு திருத்த கருத்துக்கணிப்பு
இரண்டு தடவை மட்டுமே இரசியாவில் ஒருவர் அதிபர் பதவியில் இருக்கலாம் என்ற இரசிய அரசியல் அமைப்பின் பிரிவுகளை மாற்றி தன் ஆயுள் நிறைவு வரை அதிபராக இருக்க புட்டீன் எடுத்த முன்னெடுப்புக்கு ஏதுவாக இரசிய மக்கள் மத்தியில் ஒரு கருத்துக் கணிப்பை 2020 ஏப்ரலில் நட்தத் திட்டமிட்டிருந்தார். இரசியாவின் தனது பிடியை இறுக்கும் திட்த்துடன் புட்டீன இந்த நகர்வை மேற்கொண்டிருந்தார். ஆனால் கொவிட்-19 தொற்று நோய்ப்பரம்பல் காரணமாக அதை புட்டீன் பிற்போட்டுள்ளார். புட்டீன் முன்மொழிந்த அரசியலமைப்புத் திருத்தத்தில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரித்தல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் போன்றவையும் உள்ளடக்கப் பட்டிருந்தன.  

மீறப்பட்ட வாக்குறுதி
மேற்கு நாட்டுக் கலாச்சாரத்தைக் கொண்ட இரசியர்கள் மேற்கு நாடுகளின் பாணியிலான மக்களாட்சி முறைமைய விரும்பி ஏற்பார் என சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மேற்கு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் நம்பியிருந்தனர். உலகை ஆள முயன்ற ஜேர்மனியர்கள் போரில் தோற்ற பின்னர் மற்ற மேற்கு நாடுகளுடன் இணைந்து இப்போது உலகின் முன்னணிப் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருப்பது போல் பனிப்போரில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஏன் இரசியாவால் அப்படி ஒரு நிலையை எடுக்க முடியாது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் கிழக்கு ஜேர்மனை தவிர்ந்த முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை தம்முடன் இணைக்க மாட்டோம் என சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபர் மிக்காயில் கோர்பச்சோவிற்கு வழங்கிய உறுதி மொழி வழங்கியிருந்தனர். பின்னர் அதை மீறி பல நாடுகள் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்கப்பட்டன. இது தொடர்ந்து விளடிமீர் புட்டீன கடும் சினத்துக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கின்றது.

புயலோடு சேர்ந்த மழை
இரசியா கிறிமியாவைத் தன்னுடன் இணைத்த பின்னர் மேற்கு நாடுகள் இரசியாமீது பொருளாதாரத் தடையை விதித்தனர். புட்டீன் அதை ஒருவாறு சமாளித்துக் கொண்டிருக்கையில் சவுதி அரேபியாவும் இரசியாவும் எரிபொருள் உற்பத்தியை எவ்வாறு குறைப்பது என்பது தொடர்பான உடன்பாட்டை 2020 மார்ச் மாதம் எட்ட முடியாமல் போனது. ஆத்திரமடைந்த சவுதி அரேபியா தான் எரிபொருள் உற்பத்தியை அதிகரித்து உலகச் சந்தையில் எரிபொருள் விலையைக் குறைத்து இரசியப் பொருளாதாரத்தை சிதறடிக்க முற்பட்டது. இரசியாவின் தேசிய வருமானத்தில் 60%இற்கு மேல் எரிபொருள் ஏற்றுமதியால் கிடைக்கின்றது. இரசியாவின் எரிபொருள் உற்பத்திச் செலவு ஏறக்குறைய பீப்பாய் ஒன்றிற்கு ஏறக்குறைய நாற்பது டொலர்களாகும் உலக எரிபொருள் விலையை அதிலும் குறைத்து இரசியாவை பழிவாங்குவதே சவுதியின் நோக்கம். இந்தப் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கையில் 2020 மார்ச் மாதம் உலகெங்கும் கொரொனா நச்சுக் கிருமி பரவி உலகெங்கும் போக்குவரத்த்தும் தொழிற்றுறை உற்பத்திகளும் பெரும் வீழ்ச்சியைக் கண்டதால் உலகெங்கும் எரிபொருள் பாவனையும் பெரு வீழ்ச்சியடைந்தது. இதனால் எரிபொருள் விலை மேலும் வீழ்ச்சியடைந்தது. எரிபொருள் விலை வீழ்ச்சி இரசியப் பொருளாதாரத்தை புயலாகத் தாக்க கொரொனா நச்சுக் கிருமிப்பரமல் மழையாகத் தாக்கிக் கொண்டிருக்கின்றது. அதனால் இரசியப் பொருளாதாரம் 2020-ம் ஆண்டு ஐந்தரை விழுக்காடு தேய்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இரசியாவில் வேலை வாய்ப்பின்மை இரண்டு மடங்காக அதிகரிக்கும். கொரோனா நச்சுக்கிருமியால் வரும் கொவிட்-19 நோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக புட்டீனால் நியமிக்கப்பட்ட இரசியத் தலைமை அமைச்சரையே அந்த நோய் தொற்றிக் கொண்டது.

போர் வெற்றி நாளும் இல்லை
2020 மே மாதம் 8-ம் திகதி இரசியா இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற 75-ம் ஆண்டு நிறைவு நாளை பெரும் கொண்டாட்டமாக செய்து தன்னை மக்கள் முன் ஒரு நாயகனாக நிறுத்தும் புட்டீனின் முயற்ச்சியும் கொவிட்-19 தொற்று நோயால் முடியாமல் போயுள்ளது. கொவிட்-19 நோய் எதிர்பார்ப்பதிலும் அதிக நாள் நீடித்தால் எரிபொருள் விலை பத்து டொலரிலும் குறையும். அதனால் இரசியப் பொருளாதாரம் 15விழுக்காடு தேய்வடையும். ஏற்கனவே இரசிய நாணயமான ரூபிள் உலகில் மோசமான மதிப்பிறக்கத்தைச் சந்தித்துள்ளது. பொருளாதாரப் பிரச்சனையை சமாளிக்க புட்டீன இரசியாவின் அரசிறை செல்வ நிதியை எடுத்துப் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்படலாம். புட்டீன் திட்டமிட்டிருந்த பல உட்கட்டுமானத் திட்டங்கள் கிடப்பில் போடப்படலாம்.

கடந்த இருபது ஆண்டுகளாக அதிபராகவும் தலைமை அமைச்சராகவும் தன் பிடியில் வைத்திருக்கும் புட்டீனின் செல்வாக்கு இரசியர்களிடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக 80 விழுக்காட்டில் இருந்து 59 விழுக்காடாக குறைந்துள்ளது. இந்த நிலை நீடித்து மேலும் சரிவைச் சந்தித்தால் புட்டீனின் ஆட்சி ஆட்டம் காணும் என சில மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பல செல்வாக்கு மிக்க இரசியர்கள் அவரை வெறுப்பதும் அதிகரித்துக் கொண்டே போகின்றது எனவும் அவர்கள் கருதுகின்றனர். ஆனால் தொற்று நோயால் பொருளாதாரம் பாதிக்கப்படுவது உலகில் எல்லா நாடுகளிலும் நடப்பதால் புட்டீனைக் குற்றம் சாட்ட முடியாது என புட்டீன் ஆதரவு ஊடகங்கள் இரசியர்களிடையே செய்யும் பரப்புரையின் வெற்றி அவரை தொடர்ந்து ஆட்சியில் வைத்திருக்கும்.

Tuesday 5 May 2020

கொரோனா தடுப்பு மருந்துக்கான போட்டி


மனித உடல் தன்னை நோயில் இருந்து பாதுகாக்கும் முறைமையைக் கொண்டுள்ளது. நமது காயங்களில் இருந்து வரும் சீழ் அல்லது சிதல் எமக்காகப் போராடி மடிந்த மாவீரர்களின் வித்துடல்களாகும். இரத்தத்தின் வெண்ணணுக்கள், புரதம், எலும்பு மச்சை போன்ற பலவற்றைக் கொண்டது மனிதனின் நோய் எதிர்ப்பு முறைமை புதிதாக தாக்க வரும் நோய்க்கிருமியை இனம் கண்டு அழிப்பதற்கு மனிதனின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு முறைமைக்கு பயிற்ச்சி கொடுப்பதே தடுப்பு மருந்தின் நோக்கம். மனித உடலுக்குள் செலுத்தப்படும் தடுப்பு மருந்து அம்மனிதனின் நோய் எதிர்ப்பு முறைமைக்கு புதிய கிருமியின் மூலக்கூறுகளை முதலில் அறிமுகம் செய்யும். பின்பு அதை தாக்கி அழிக்கும் பயிற்ச்சியையும் அது கொடுக்கும். நோய் எதிர்ப்பு முறைமை நோய்க்கிருமையை இனம் காணுதல் மற்றும் அழித்தல் பற்றிய தகவல்களை நினைவில் வைத்துக் கொண்டு உண்மையான நோய்க்கிருமி தாக்க வரும் போது அதற்கான “சிறப்புப் படையணியை” நோய் எதிர்ப்பு முறைமை உருவாக்கி ஆக்கிரமிக்கும் கிருமியுடன் போர் புரிந்து அழிக்கும். உலகெங்கும் பரவியுள்ள கொவிட்-19 தொற்று நோய்க்குக் காரணமான கொரொனா நச்சுக் கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்து மிகவும் இலாபகரமான ஒன்று என்பதால் அந்த தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதற்கான போட்டி 2020 ஜனவரியில் ஆரம்பித்து விட்டது.


பல படி முறைகள்

புதிய ஒரு நோய்க்கான தடுப்பு மருந்தை உருவாக்குவது பல படிமுறைகளைக் கொண்டது:

1. நோய்க்கிருமியை இனம் காணுதல்

2. அதன் ஆக்கக்கூறுகளை ஆய்வு செய்தல்

3. அதை அழிப்பதற்கான மருந்தைத் திட்டமிடல்

4. மருந்தை உருவாக்குதல்

5. விலங்குகளிற்கு மருந்தைக் கொடுத்து ஆய்வு செய்தல்

6. சிறிய எண்ணிக்கையிலான மனிதர்களுக்கு மருந்தைக் கொடுத்து ஆய்வு செய்தல்

7. உலகெங்கும் உள்ள பல எண்ணிக்கையிலான மனிதர்களில் ஆய்வு செய்தல்

8. மருந்தைப் பாவிப்பதற்கான அனுமதிப் பத்திரம் பெறுதல்


அவசரமாகச் செய்ய வேண்டும்

மேலுள்ள படிமுறைகளைச் செய்து முடிக்க பல ஆண்டுகள் எடுப்பதுண்டு. ஆனால் 185 நாடுகளில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களைப் பலி எடுத்துக் கொண்டிருக்கும் கொரொனா நச்சுக் கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்து அவசரமாக தேவைப்படுகின்றது. நோய்ப்பரம்பலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளால் ஐக்கிய அமெரிக்காவிற்கு மட்டும் ஒரு மாதத்தில் ஒரு பில்லியன் டொலர் இழப்பீடும் 26மில்லியன் வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு மூன்று வாரத்தில் எட்டு இலட்சம் கோடி ரூபா இழப்பீடு ஏற்பட்டுள்ளது. உலக வங்கி உலகப் பொருளாதாரம் கொரொனா நச்சுக் கிருமியின் தாக்கத்தால் 2020இலும் 2021இலும் மொத்தம் ஒன்பது ரில்லியன் டொலர் இழப்பீட்டைச் சந்திக்கும் என எதிர்வு கூறியுள்ளது. உலக வரலாற்றில் ஒரு நிதியமைச்சர் தொற்றுநோயால் ஏற்படப்போகும் பொருளாதார வீழ்ச்சியை நினைத்து மன முடைந்து தற்கொலை செய்தது ஜேர்மனியில் நடந்தது. இரசியாவில் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்ததம் காரணமாக 3 மருத்துவமனை ஊழியர்கள் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்தனர். இதனால் உலகப் பொருளாதாரச் சரிவை நிறுத்த அவசரமாக தடுப்பு மருந்தை கண்டு பிடித்து அதை உலகெங்கும் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 


முந்தித் தாவிய ஒக்ஸ்போர்ட்

ஒஸ்ரேலியாவின் மேரிலாண்ட்டில் உள்ள நோவாவக்ஸ் என்ற நிறுவனம், இன்னொரு ஒஸ்ரேலிய நிறுவனமான மெசொபிலாஸ்ற், அமெரிக்காவின் மசாச்சுசெற் மாநிலத்தில் உள்ள மொடேனா நிறுவனம், அமெரிக்க பிஸ்பேர்க் பல்கலைக்கழகம், பேலர் மருத்துவக் கல்லூரி என 115இற்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரச அமைப்புக்கள் கொரோனா நச்சுக்கிருமிக்கு எதிரான மருந்தைக் கண்டு பிடித்து அறிமுகம் செய்யும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முன்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிலையம் ஓராண்டுக்கு முன்னரே கொவிட்-19 நோய்க்கான கொரோன நச்சுக் கிருமியின் முதற் தலைமுறைக் கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தது. மனிதர்களுக்கு அதைக் கொடுத்து ஆய்வு செய்தும் இருந்தது. அதனால் 2020 மே மாதம் ஆறாயிரம் பேருக்கு தடுப்பு மருந்தைக் கொடுத்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. 


மனிதனின் நெருங்கிய உறவினரில் ஆய்வு

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அரசுகள் அனுமதித்தால் 2020 செப்டம்பர் மாதம் சில மில்லியன் பேர்களுக்கு தடுப்பு மருந்து கொடுக்கலாம் எனச் சொல்கின்றார்கள். இந்த நிலைக்கு மற்ற மருந்து கண்டு பிடிப்பு போட்டியாளர்கள் வர பல மாதங்கள் எடுக்கும். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தை அமெரிக்காவின் ரொக்கி மலை ஆய்வுகூடத்தில் உடல் அமைப்பில் மனிதர்களை ஒத்துள்ள ஆறு rhesus macaque குரங்குகளுக்கு கொடுத்து பின்னர் அவற்றின் உடம்பில் பெருமளவு கொரொனா நச்சுக் கிருமிகள் அந்த ஆறு குரங்குகளுக்கும் வேறு குரங்குகளுக்கும் செலுத்தப்பட்டன. 28 நாட்கள் கழித்து அந்த ஆறு குரங்குகளும் நலமுடனிருக்க தடுப்பு மருந்து கொடுக்காத குரங்குகள் கொவிட்-19 நோக்கு உள்ளாகின. 2020 மே மாதம் முதல் வாரத்தில் ஒக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் தங்கள் மருந்தை வேறு பல விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து அவர்களின் அபிப்பிராயத்தைக் கோரவுள்ளனர்.


நோய் தொடர்ந்தால்தான் மருந்தை ஆய்வு செய்யலாம்

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஒருவர் கொவிட்-19 நோய் தொடர்ந்து பரவுவதை விரும்பவர்களாக நாம் இருக்கின்றோம் என நகைப்பாகக் கூறினார். நோய் வரமுன் ஒருவருக்கு தடுப்பு மருந்தைக் கொடுக்க வேண்டும் பின்னர் அவருக்கு நோய் வரும்வரை காத்திருக்க வேண்டும். அவருக்கு செயற்கையாக கொரோனா நச்சுக் கிருமிகளை ஆறு குரங்குகளுக்கு கொடுத்தது போல் கொடுப்பதை மருத்துவ ஒழுக்க நெறி அனுமதிக்காது. அதனால் நோய் வேகமாகப் பரவிவரும் பகுதியில் வாழும் மக்களிடையேதான் மருந்தைக் கொடுத்து ஆய்வு செய்ய முடியும். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலையத்தை உலகின் மிகப் பெரிய ஆய்வு நிறுவனமாகவும் இலாப நோக்கற்றதாகவும் கட்டி எழுப்பியவர் பேராசிரியர் ஹில் என்பவர் ஆகும். சீனாவில் ஒரு புதிய நச்ச்சுக்கிருமி தாக்கத் தொடங்கி விட்டது என்றவுடன் ஒக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் மற்ற நச்சுக்கிருமிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு முழுமையாக புதிய கொரொனா நச்சுக் கிருமிக்கான மருந்தைக் கண்டு பிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர். சீனாவின் கான்சீனா என்ற நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கும் மருந்தை சீனாவில் பெருமளவில் ஆய்வு செய்ய முடியாத அளவிற்கு கொவிட்-19 தொற்று நோய் அங்கு குறையத் தொடங்கிவிட்டது.


அமெரிக்கா என்றால் இலாபம், இலாபம்

ஒக்ஸ்போர்ட் பலகலைக்கழகம் அமெரிக்காவில் உள்ள மருந்தாங்கல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவில்லை. பெரும்பாலான அமெரிக்க மருந்தாக்கல் நிறுவனங்கள் தாம் ஆய்வில் பங்கேற்பதாயில் முழு உலகிற்குமான விநியோக உரிமை தமக்கு வேண்டும் என அடம் பிடிப்பார்கள். அதன் மூலம் அவர்களால் பெரும் இலாபம் ஈட்ட முடியும். கொவிட்-19 நோய் வருமுன்னர் அதைத் தடுக்கும் மருந்தை கண்டு பிடிப்பதில் உலக நிறுவனங்கள், அரசுகள், பல்கலைக்கழகங்கள் காட்டும் அக்கறை நோயால் பீடிக்கப்பட்ட நோயாளியைக் காப்பதற்கான மருந்தைக் கண்டு பிடிப்பதில் காட்டவில்லை. கொவிட்-19 நோயாளிகள் என்பது 4 மில்லியன் மக்களைக் கொண்ட சந்தை ஆனால் தடுப்பு மருந்து உலக மக்கள் எல்லோருக்கும் கொடுக்க வேண்டியதாக இருக்கின்றது. உலக மக்கள் தொகை ஏழரை பில்லியன் ஆக தற்போது இருக்கின்றது. அது மிகவும் இலாபம் தரக்கூடிய சந்தை. 


இந்தியா என்றால் இலகு

உலகில் இந்தியா குறைந்த செலவில் மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடாக இருக்கின்றது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய நோய் தடுப்பு மருந்தாக்கல் நிறுவனமான சேரம் நிறுவனத்துடன் (Serum Institute of India) இணைந்து தடுப்பு மருந்த உற்பத்தி செய்ய முடிவு செய்தது. இந்தியாவின் சேரம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரில் ஒருவரான அதர் பூர்ணவாலா ஒக்ஸ்போர்ட் கண்டு பிடித்த மருந்தை உடனடியாகவே உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டார். பொதுவாக ஒரு புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டால் அதற்கான அரச அனுமதிகள் பெற்ற பின்னரே பெருமளவில் அந்த மருந்து உற்பத்தி செய்யப்படும். இதற்காக அவர் முப்பது மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளார். அரச அனுமதி கிடைக்காவிடில் அவ்வளவு பணத்தையும் இழக்க வேண்டி வரும் எனதையும் பொருட்படுத்தாமல் அவர் உற்பத்தி செய்துள்ளார். சேரம் நிறுவனம் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் சொந்தமான நிறுவனமாகும். அதனால் அங்கு முடிவுகளை எடுப்பது இலகுவானதாக இருந்தது. இந்தியாவில் இன்னும் பரவல் நிலை அதிகரித்துக் கொண்டிருப்பதால் அங்கு ஆய்வுகளும் இலகுவாக இருக்கும். மருந்து கொடுத்தவர்களுக்கு ஏதாவது பக்க விளைவு வந்தால் அதற்கு கொடுக்கும் இழப்பீடும் மலிவானதாக இருக்கும்.


இணையவெளித் திருட்டு முயற்ச்சி

பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் செய்யும் ஆய்வுகளை இணையவெளியூடாக திருடும் முயற்ச்சிகள் செய்யப்படுவதாக செய்திகள் வெளிவந்தன. குற்றம் சாட்டு விரல்கள் இரசியா, ஈரான், சீனா ஆகிய நாடுகளை நோக்கி நீள்கின்றன. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பிரித்தானிய உளவுத்துறையுடன் இணைந்து இணையவெளித் திருட்டு முயற்ச்சிகளை முறியடிக்கின்றது.


ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹில் அவர்கள் தனது ஜேன்னர் நிறுவனம் உருவாக்கிய தடுப்பு மருந்து உலகெல்லாம் துரிதமாக உற்பத்தி செய்து பாவிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றார்.  ஆனாலும் ஆகக் குறைந்தது 2020 செப்டம்பர் வரை உலகம் காத்திருக்க வேண்டும்.

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...