Followers

Sunday 30 August 2020

புவிசார் அரசியல் கோட்பாடுகளின் தோற்றமும் மாற்றமும்


புவிசார் அரசியல் எப்போது தோன்றியது என்று சரியாகச் சொல்ல முடியாது. ஆனால் புவிசார் அரசியல் கோட்பாடுகளின் தோற்றத்திற்கு காரணமாயிருந்தவர்களுள் Friedrich Ratzel என்ற ஜேர்மவ்னியர் முதன்மையானவர். இவருக்குப் பின்னர் பிரித்தானியப் புவியியல் நிபுணர் Halford Macinder, அமெரிக்க கடற்படைத்தளபதி Alfred Thayer Mahan, அமெரிக்க அரசறிவியலாளர் Nicholas John Spykman, அமெரிக்க அரசறிவியலாளர் Samuel Huntington முக்கியமான புவிசார் அரசியல் கோட்பாடுகளை முன்வைத்தனர்.

Friedrich Ratzelஇன் அசேதனக் கோட்பாடு

உயிரியல் மற்றும் மக்கள் இன அமைவியல் (ethnography) கற்றுப் பின்னர் புவியியலும் கற்றவரான Friedrich Ratzel  அரசு என்பது ஓர் உயிரினம் போன்றது என்றார். பூமியில் உயிரனங்களின் பரம்பலை மிகவும் உன்னிப்பாக கவனித்து தனது புவிசார் அரசியல் கோட்பாட்டை இவர் வகுத்தார். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தமக்கு என ஓர் அரசின் கீழ் வாழும் மக்களின் தொகை அதிகரிக்கும்போது அவர்களின் மொத்த உற்பத்தியும் அதிகரிக்கும். அதனால் அவர்க்ளுக்கு மேலதிக நிலம் தேவைப்படும் போது அயலில் உள்ள வலிமை குறைந்த மக்களின் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பாளர்கள். இதை அவர் டார்வினின் தக்கன பிழைத்து வாழ்தல் (Survival of the Fittest) என்ற கோட்பாட்டுடன் இணைத்து முன் வைத்தார். உயிரினங்கள் தப்பி வாழ உணவு தேடித்திரிவது போல் அரசுகள் நிலங்களைத் தேடித்திரியும் என்ற இவரது கோட்பாடு சேதன கோட்பாடு (Organic Theory) என  அழைக்கப்படுகின்றது. 1844 முதல் 1904 வரை வாழ்ந்த இவரது கோட்பாடு ஜேர்மன் பல்கலைக்கழகங்களில் போதிக்கப்பட்டது. ஜேர்மனிய அதிபராக இருந்த ஹிட்லர் அயல் நாடுகள் மீது போர் தொடுத்தமைக்கு இவரது கோட்பாடே உந்து வலுவாக இருந்தது.


இதய நிலக் கோட்பாடு

1904-ம் ஆண்டு Sir Halford John என்பவர் முன்வைத்த " The Geographical Pivot of History" (சரித்திரத்தின் புவியல் சுழற்ச்சி மையம்) என்ற கட்டுரையே புவிசார் அரசியலின் முக்கிய புள்ளியாக கருதப்படுகின்றது. புவியியல் நிபுணராகவும் பாராளமன்ற அரசியல்வாதியாவும் இரசியாவிற்கான பிரித்தானியத் தூதுவராகவும் இருந்தவர் இவர்.புவிசார் அரசியலின் தந்தை எனப்படுகின்றார். கால ஓட்டத்திற்கு இணங்க அவரே தனது கருத்துக்களில் மாற்றங்கள் செய்தார். புவிசார் அரசியல் என்பது எப்போதும் மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1861 முதல் 1947 வரை வாழ்ந்த Sir Halford John இரண்டு உலகப் போர்களை அனுபவித்தவர். தற்போது ரெடிங் பல்கலைக் கழகம் என்னும் பெயரில் இயங்குவது University Extension College என்னும் பெயரில் இருக்கும் போது அதன் முதல்வராக இருந்தவர். 1910 ஆண்டு முதல் 1922-ம் ஆண்டு வரை ஐக்கிய இரச்சியப் பாராளமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தவர்.

ஒக்ஸ்போர்ட் பலகலைக்கழத்தின் புவியியல் துறையில் படிப்பாளியாகவும் பணியாற்றியவர். பல்கலைக்கழகங்களில் உலக அளவில் நிபுணராக இருப்பவர்களை படிப்பாளியாக நியமிக்கும் வழமை பிரித்தானியாவில் இருக்கின்றது.  London School of Economicsஐ ஆரம்பித்தவர்களில் ஒருவரான Sir Halford John Mackinder அதில் புவியியல் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.

1902-ம் ஆண்டு பிரித்தானியாவும் பிரித்தானியக் கடலும் என்ற நூலை எழுதியவர். நில உருவாக்கவியலை முதலில் அறிமுகம் செய்தவரும் இவரே. தனது அரசியல் மற்றும் அரசுறவியல் அனுபவங்களையும் தனது உன்னதமான புவியியல் அறிவையும் வைத்து அவர் புவிப்பந்தை மூன்று பெரும் பிரதேசங்களாக வகுத்தார். 1904-ம் ஆண்டு உலகத்தீவும் இதயநிலமும் என்ற கட்டுரையை இவர் சமர்ப்பித்தார். அதில் அவர் புவியை பின்வரும் பிரதேசங்களாக வகுத்தார்.

1. உலகத்தீவு (The World-Island). அவரது உலகத்தீவில் ஆசியா, ஐரோப்பா வட ஆபிரிக்கா ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்தன. இதை அவர் உலகின் பெரிய, மக்கள்தொகை அதிகமுள்ள, செல்வந்தமிக்க பிரதேமாக அடையாளமிட்டார்.

2. கடல்கடந்த தீவுகள் (The offshore islands) இதில் பிரித்தானியா, ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தார்.

3. வெளித்தீவுகள் (The outlying islands) இதில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசுபிக் தீவுக் கூட்டம் (Oceania) ஆகியவற்றை உள்ளடக்கியது.  

4. உலகத்தீவின் இதய நிலம் (Heartland): சீனா, இரசியா ஜேர்மனி உட்பட்ட கிழக்கு ஐரோப்பா.

5. உலகத்தீவின் வளைய நிலம் (Rimland) : உலகத்தீவின் இதய நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வளைய நிலம் ஆகும். இதில் உள்ளவை வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஈரான், இந்தியா, சீனக்கரையோரம், ஜப்பான், இரசியாவின் தூர கிழக்குப்பகுதி.



கிழக்கு ஐரோப்பாவை ஆள்பவன் இதய நிலத்தை ஆள்வான். இதய நிலத்தை ஆள்பவன் உலகத் தீவை ஆள்வான், உலத்தீவை ஆள்பவன் உலகத்தை ஆள்வான் என்பது இவர் முன்வைத்த கோட்பாடு. இது இதய நிலக் கோட்பாடு என்று அழைக்கப்படுகின்றது.  

வளையநிலக் கோட்பாடு


நெதர்லாந்தில் பிறந்த Nicholas Spykman உலகின் பல பகுதிகளில் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர். 1920-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறிய இவர் கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கற்கை நெறியை ஆரம்பித்தவர்களுள் இவரும் ஒருவர். வெளியுறவுக் கொள்கை பற்றி இரண்டு நூல்களை எழுதியவர். Nicholas Spykman (1893-1943) மக்கிண்டரின் இதயநிலக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து தனது கோட்பாட்டை முன்வைத்தார். Nicholas Spykman வளைய நிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். வளையநிலத்தை ஆள்பவன் இதயநிலத்தை ஆள்வான். இதயநிலத்தை ஆள்பவன் உலகத்தை ஆள்வான் என்றார். இவரது கோட்பாடு வளையநிலக் கோட்பாடு எனப்படுகின்றது. 1. புவி என்றுமே மாறாமல் இருப்பதால் ஒரு நாட்டின் வெளியுறாவுக் கொள்கையில் புவியியல் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். 2 அதிகார அரசியலை அடிப்படையாகக் கொண்டும் பன்னாட்டு உறவுகளை அடிப்படையாகக் கொண்டும் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். 3. போருக்கும் அமைதிக்குமான பெரும் கேந்திரோபாயம் புவியியல் நிலமைகளைக் கருத்தில் கொண்டு வகுக்கப்பட வேண்டும். என்பவை இவரது கொள்கைகளாகும். யேல் பல்கலைக் கழகத்தில் தனது மாணவர்கள் புவியியல் தொடர்பான ஆழமான அறிவைக் கொண்டிருக்க வேண்டும் என இவர் வலியுறுத்தினார். அமெரிக்கா உலக அரங்கில் கவனம்(ஆதிக்கம்) செலுத்துவதா அல்லது தனது பாட்டை தான் பார்த்துக் கொள்வதா என்ற விவாதம் அமெரிக்காவில் தீவிரமாக நடந்த போது இவர் அமெரிக்கா உலகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை அமெரிக்கர்களை ஏற்கச் செய்வதில் முக்கிய பங்கு வகித்தார். இரசியாவை அமெரிக்கா அடக்கி வைக்க வேண்டும் என்ற கொள்கையை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக்கினார். இதனால் இவர் "அடக்கலின் ஞானத் தந்தை" எனப்படுகின்றார்.

கடல்வலிமைக் கோட்பாடு


அமெரிக்கரான Alfred Thayer Mahan பட்டப்படிப்பின் பின்னர் அமெரிக்கக் கடற்படையில் இணைந்தவர். பின்னர் அமெரிக்காவின் கடற்போர்க் கல்லூரியில் விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர்.. பிரித்தானியாவிற்கும் டச்சு தேசத்திற்கும் மற்றும் பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையில் நடந்த போர்களில் பிரித்தானியாவின் கடல் வலிமை வெற்றியைத் தீர்மானித்ததை உணர்ந்த இவர் ஒரு தேசத்தின் பெரும் அதன் கடற்படையில் தங்கியுள்ளது என்ற கருத்தை முன் வைத்தார். 1. புதிய கடற்கலன்களில்லும் அதன் பணியாளர்களிலும் முதலீடு செய்ய வேண்டும். 2. எதிரியின் கப்பல்களை குறிவைக்கும் கேந்திரோபாயங்களை உருவாக்க வேண்டும். 3. உலக கடற்போக்குவரத்தின் திருகுப்புள்ளிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். என்பவை இவரது கோட்பாடுகளாகும். இவரது கோட்பாடுகளால்தான் அமெரிக்கா உலகின் வலிமை மிகுந்த கடற்படையை அமெரிக்கா தற்போது வைத்திருக்கின்றது.

நாகரீக கோட்பாடு


அமெரிக்கரானா Samuel Phillips Huntington (1927- 2008) ஹாவார்ட் பல்கலைக்கழக்த்தில் மாணவப் பருவம் முதல் ஐம்பது ஆண்டுகள் கழித்தவர். 1993இல் இவர் வெளியிட்ட நாகரீகங்களின் மோதல் (Clash of Civilizations) என்ற நூலில் வைத்த கோட்பாடு புதிய புவிசார் அரசியல் சிந்தனைக்கு முக்கியமானதாகும். மேற்கு நாடுகள், லத்தின் அமெரிக்க நாடுகள், இஸ்லாமிய நாடுகள், சீனா, இந்து, மரபு வழியினர், ஜப்பான் என எழு கலாச்சாரங்களை இவர் தனது நூலில் அடையாளப்படுத்தியுள்ளார் வருங்காலத்தில் போர் நாடுகளிடையே நடக்காமல் நாகரீகங்களிடையே நடக்கும் என்றார். மேற்கு நாடுகளின் உலக ஆதிக்கத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதம் பெரும் சவாலாக அமையும் என்றார். அமெரிக்க குடிமக்களுக்கும் படையினருக்கும் இடையிலான உறவிற்கு புது வடிவம் கொடுப்பதற்கு இவர் பேருதவியாக இருந்தவர். உலகப் பல்கலைக்கழகங்களின் அரசுறவியல் துறைகளில் அதிகம் பேசப்படும் ஒருவராக Samuel Phillips Huntington இப்போது இருக்கின்றார்.

எல்லா புவிசார் அரசியல் நிபுணர்களும் உலக அமைதியிலும் பார்க்க உலக ஆதிக்கத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.          (தொடரும்)

Friday 28 August 2020

இரசியாவின் மேற்குக் கவசத்தில் குழப்ப நிலை

 


சோவியத் ஒன்றியம் இருக்கும் போது இரசியாவைச் சுற்றவர பல நாடுகள் இரசியாவிற்கு கவசப் பிரதேசங்களாக இருந்தன. தற்போது இரசியாவுடன் பாதுகாப்பு உறவுகளைப் பேணும் நாடுகள் ஆர்மீனியாபெலருஸ்கஜக்ஸ்த்தான்கிரிகிஸ்த்தான்தஜிகிஸ்த்தான் ஆகிய நாடுகளாகும். இவற்றில் இரசியாவின் மேற்கு எல்லையில் உள்ள பெலருஸ் அதன் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதாகும். அந்த பெலருஸில் நடந்த தேர்தலில் இரசிய ஆதரவு ஆட்சியாளர் அலெக்சாண்டர் லுகஷெங்கோ முறைகேடாக வெற்றி பெற்றதாக மக்கள் அவருக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர். 1994-ம் ஆண்டில் இருந்து நடந்த எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற அலெக்சாண்டர் லுகஷெங்கோ 2020 ஓகஸ்ட் 9-ம் திகதி நடந்து முடிந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

யூரியூப்பில் எதிர்ப்புக் காட்டியவர் கைது

காணொலித் துண்டங்கள் மூலம் அலெக்சாண்டர் லுகஷெங்கோவின் ஆட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்திய திகனொவிஸ்காயா கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். இதனால் சினமடைந்த அவரது 37 வயது மனைவி அலெக்சாண்டர் லுகஷெங்கோவிற்கு எதிராக தேர்தலில் களமிறங்கினார். அவரது பரப்புரைக் கூட்டத்திற்கு மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். அவர் எழுபது விழுக்காடு வாக்குகளைப் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றியடைவார் என எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் தேர்தல் முடிவில் அலெக்சாண்டர் லுகஷெங்கோ எண்பது விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகள் தேர்தல் முடிவை ஏற்க மறுத்ததுடன் ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் முடிவை ஏற்காத போதிலும் பெலருஸின் எதிர்க்கட்சிகள் கேட்டதைப் போல ஒரு மறுதேர்தலை இன்னும் வலியுறுத்தவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் தான் ஓர் அமைதியான ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகச் சொல்கின்றது. ஜேர்மனிய அதிபர் எஞ்சலாமேக்கல் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்ட அலெக்சாண்டர் லுகஷெங்கோவுடன் தொலைபேசியில் உரையாட முயன்றபோது அவர் மறுத்துவிட்டார்.

 

பெலருஸின் முக்கியத்துவம்

இரசியாவின் மேற்குப் புறமாக உள்ள போலாந்துலித்துவேனியாலத்வியாஎஸ்த்தோனியா ஆகிய நாடுகள் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்த பின்னர் இரசியாவின் மேற்கு கவசப் பிராந்தியம் மிகவும் வலுவிழந்தது. பனிப்போருக்குப் பின்னர் இரசியா தனது மிகப்பெரிய போர்ப்பயிற்ச்சியை 2017-ம் ஆண்டு செப்டம்பரில் பெலருசுடன் இணைந்து செய்தது. Zapad 2017 என்னும் பெயரிடப்பட்ட இந்தப் போர்ப்பயிற்ச்சி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். இரசியாவின் Zapad 2017 என்னும் போர்ப் பயிற்ச்சி இரசியாவின் மேற்குப் புறத்திலும் லித்துவேனியாலத்வியாஎஸ்தோனியா ஆகிய போல்ரிக் நாடுகளினதும் போலாந்தினதும் எல்லையிலும் உள்ள பெலருஸ் நாட்டிலும் இரசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கலினின்கிராட்  என்ற போல்ரிக்கடற் துறைமுகத்திலும் நடந்ததுஇரசியாவை சுற்றியுள்ள நாடுகளில் இரசிய சார்பு ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இரசியா கடுமையாக நடந்து கொள்ளும். ஜோர்ஜியா, உக்ரேன் ஆகிய இரண்டு நாடுகளிற்கு எதிராக இரசியா படை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பெலருஸில் இரசியக் கூலிப்படைகளா?

2020 ஓகஸ்ட் 9-ம் திகதி நடந்த தேர்தலுக்கு முன்னர் பெலருஸின் 33 இரசியக் கூலிப்படையினரைக் கைது செய்ததாக பெலருஸ் அரசு அறிவித்திருந்தது. இருநூறு இரசியக் கூலிப்படையினர் பெலருஸுக்குள் ஊடுருவியிருப்பதாக கருதப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக இரசியாவிற்கும் பெலருஸின் அதிபர் அலெக்சாண்டர் லுகஷெங்கோவிற்கும் இடையில் உறவு சற்று சீர் குலைந்திருந்தது. இரசியாவில் இருந்து பெலருஸிற்கு வரும் நிதி உதவிகளும் குறைந்திருந்தது. சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் செயற்படும் இரசியத் தனியார் படை அமைபான வக்னர் குழுவைச் சேர்ந்தவர்கள்தான் பெலருஸ் தேர்தலைக் குழப்ப முயன்றனர் என நம்பப்படுகின்றது. இரசியாவிற்கு வேண்டியவரான லுகஷெங்கோ தேர்தலில் தோல்வியடையலாம் என்ற எதிர்பார்ப்பினால் இரசியக் கூலிப்படையினர் தேர்தலை குழப்ப முயன்றனர் எனவும் கருதப்படுகின்றது. அப்படி தேர்தலைக் குழப்புவதிலும் பார்க்க முறைகேடான தேர்தல் மூலம் தான் வெற்றி பெறலாம் என லுகஷெங்கோ நம்பிச் செயற்பட்டதால் தேர்தலின் போது இரசியாவும் லுகஷெங்கோவும் எதிர் எதிராகச் செயற்பட்டிருக்கலாம். முறைகேடான தேர்தலைச் சாட்டாக வைத்துக் கொண்டு மேற்கு நாடுகள் பெலருஸில் தலையிடலாம் என இரசியா கரிசனை கொண்டிருந்திருக்கலாம். ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் அலெக்சாண்டர் லுகஷெங்கோவிற்கு தனது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தார். வாழ்த்துச் செய்தி தெரிவித்த பின்னர் கூலிப்படையினர் எனச் சொல்லி கைது செய்து வைத்திருந்தவர்களை லுகஷெங்கோ விடுதலை செய்தார்.

ஆர்ப்பாட்டம் செய்பவரகள் மீது கடும் தாக்குதல்

அலெக்சாண்டர் லுகஷெங்கோவின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது அவரது கறுப்பு ஆடையணிந்த குண்டர்கள் குடமையாக தாக்குதல் செய்வதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஓசை எழுப்பும் கார்களை அவர்கள் நொருக்குகின்றார்கள். இந்தக் குண்டர்களிடமிருந்து தப்ப பெலருஸ் ஆர்ப்ப்பாட்டக்காரர்கள் சீனாவிற்கு எதிராக ஹொங் கொங் ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்தவற்றைப் பின்பற்றுகின்றார்கள். தாக்குதலுக்கு வரும் குண்டர்களின் நடமாட்டங்களை உன்னிப்பாகக் கவனித்து கைப்பேசிகள் மூலமாக தகவல் பரிமாற்றம் செய்து ஆர்பாட்டம் செய்யும் இடங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அலெக்சாண்டர் லுகஷெங்கோ தனக்கு எதிராகப் போட்டியிட்ட திருமதி திகனொவிஸ்காயாவையும் அவரது பிள்ளைகளையும் மிரட்டி அயல் நாடான எஸ்தோனியாவிற்கு அனுப்பிவிட்டார். அப்படி அனுப்புவதால் ஆர்ப்பாட்டத்தை தணிக்கலாம் என அவர் நம்பினார். ஆனால் அவர் எதிர்பார்த்தமைக்கு மாறாக ஆர்ப்பாட்டம் உக்கிரமாக நடக்கின்றது. பிள்ளைகளை பணயக்கைதிகள் போல் வைத்திருந்து திருமதி திகனொவிஸ்காயாவை மிரட்டியதாகவும் சொல்லப்படுகின்றது. இதற்கு முன்னரும் தன் அரசியல் எதிரிகளின் குடும்பத்தினரை சிறையிலடைத்து மிரட்டினார் என அலெக்சாண்டர் லுகஷெங்கோவிற்கு எதிரனாவர்கள் சொல்கின்றார். திருமதி திகனொவிஸ்காயாவின் கணவர் இப்போதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சீனா கரம் கொடுக்குமா?

அலெக்சாண்டர் லுகஷெங்கோ தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்தவுடன் அவருக்கு முதல் வாழ்த்துச் சொல்லியவர் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகும். சீன அதிபர் தனது வாழ்த்துச் செய்தியில் சீனாவிற்கும் பெலருஸிற்கும் இடையிலான காத்திரமான கேந்திரோபாய பங்காண்மையை இரு தரப்பினருக்கும் பல துறைகளில் நன்மை தரக்கூடிய வகையில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் வாழ்த்து ஐரோப்பிய ஒன்றியத்தை அதிருப்தியடைய வைத்துள்ளது.

புட்டீன் படை அனுப்புவாரா?

தேர்தலுக்கு முன்னர் தேர்தலை இரசியா குழப்ப முயல்வதாக குற்றம் சாட்டிய அலெக்சாண்டர் லுகஷெங்கோ தேர்தலுக்குப் பின்னர் தனது நாட்டில் மேற்கு நாடுகள் குழப்பம் விளைவிக்க முயல்வதாக குற்றம் சாட்டினார். 2020 ஓகஸ்ட் 27-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் அல் ஜசீராவிற்கு வழங்கிய செவ்வியில் இரசியப் படையினர் பெலருஸிற்கு செல்லத் தயாராக இருப்பதாகவும் ஆனால் அனுப்புவதற்கான தேவை இப்போது இல்லை எனவும் கூறியிருந்தார். மேலும் அச் செவ்வியில் பெலருஸின் அதிபர் அலெக்சாண்டர் லுகஷெங்கோ தமது நாட்டில் அமைதியை நிலை நாட்ட இரசிய சட்ட அமூலாக்கப் பிரிவினர் தயாராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகவும் புட்டீன் தெரிவித்தார். பெலருஸில் மக்கள் அரசுக்கு எதிராக செய்யும் ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றால் அதனால் இரசியர்களும் உந்தப்பட்டு புட்டீனிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இறங்கலாம். பெலரஸு மக்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை அளவோடு வைத்திருக்க வேண்டும் அளவிற்கு மிஞ்சினால் இரசியா தலையிடும் என புட்டீன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். வ்

"பெலருஸுக்கான எமது செய்தி தெளிவானது. வன்முறையை ஏற்க முடியாது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும்" என்கின்றார் நெதர்லாந்து தலைமை அமைச்சர் மார்க் ரட்டே. ஆட்சியாளரை மாற்றுவது கடினம் என மேற்கு நாடுகள் கருதும் இடங்களில் அந்த ஆட்சியாளரின் மனதை தமக்கு சாதகமாக மாற்ற முயல்வார்கள். அப்படி நடக்கும் போது மனித உரிமை ஓரம் கட்டப்படும்.

Friday 21 August 2020

சீனா உளவுத்துறை

 


மக்கள் சீனக் குடியரசு 1949-ம் ஆண்டு உருவானதில் இருந்தே படைத் துறைத் தொழில்நுட்பங்களை ஐக்கிய அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் நிகராக உருவாக்குவதற்கு கடும் முயற்ச்சிகளை மேற் கொள்கின்றது. தற்போது சீனா உலகத்தில் தனது நிலை தொடர்பாக அவசரம் கலந்த அக்கறை காட்டுகின்றது. 2021-ம் ஆண்டு சீனப் பொதுவுடமைக் கட்சி தனது நூற்றாண்டை நிறைவு செய்யும் போதும் 2049-ம் ஆண்டு சீன மக்கள் குடியரசு தனது நூற்றாண்டை நிறைவு செய்யும் போதும் சீனா உலக அரங்கில் மேன்மை மிக்க நாடாக கருதப் பட வேண்டும் என சீன ஆட்சியாளர்களும் பொதுவுடமைக் கட்சியினரும் விரும்புகின்றார்கள். சீனாவின் தற்போது இளையோர்களாக இருப்பவர்கள் வயதானவர்களாக மாற முன்னர் சீனாவை உலகின் முதன்மை மிக்க நாடாக உருவாக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செல்லச் செல்ல சீனாவில் இளையோர் தொகை குறைந்தும் வயோதிபர் தொகை அதிகரித்தும் செல்கின்றது.

வரலாற்றுப் பெருமை மிக்க உளவுத் துறை

சீனாவின் கேந்திரோபாய நோக்கங்களுக்கும் அதன் கனவுகளை நிறைவேற்றவும் உளவு அவசியம் என்பதை சீனர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தனர். Sun Tzu என்ற சீனப் போரியியலாளர் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே படையினரின் நகர்வுக்கு முன்னோடியாகவும் முக்கியமாகவும் அமைவது உளவாளிகளே என்றார். அந்தச் சிந்தனைத் தொடர்ச்சி சீனர்களை உலகின் மிகச் சிறந்த இணையவெளி உளவாளிகளாக உருவாக்கியுள்ளது. நவீன சீன உளவுத்துறை கடந்த முப்பது ஆண்டுகளாகவே கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. அதற்குள் அது பல நூற்றாண்டுகளாக உளவுத்துறையை வைத்திருக்கும் நாடுகளின் உளவுத் துறையை விஞ்சி விட்டது. வெளிநாடுகளின் கல்வி பயிலும் சீன மாணவர்களையும் கால்வி போதிக்கும் சீனக் கல்விமான்களையுமே சீன பெரும்பாலும் தமது உளவாளிகளாகப் பாவிக்கின்றது. பல்வேறு சமூகவலைத்தளங்களையும் சுட்டிகைக் கைப்பேசிகளின் செயலிகளையும் (Smartphone Apps) சீனா தனது உளவுத் தளங்களாகப் பாவிக்கின்றது.

சீனா திருடுவதாக பரவலான குற்றச் சாட்டு

சீனாவின் திருட்டு வேலைகளால் ஆண்டு தோறும் தமக்கு இரு நுறூ முதல் முன்னூறு பில்லியன் டொலர் இழப்பீடுகள் ஏற்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. இந்தக் குற்றச் சாட்டை சீனா மறுக்கின்றது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான படைத்துறை தொழில் நுட இடைவெளியை குறக்க அல்லது இல்லாமற் செய்ய சீனா பல நட்ட கெட்ட வழிகளில் முயல்கின்றது. 1. அமெரிக்காவின் உயர் தொழில்நுட்பங்களை களவாக விலை கொடுத்து வாங்குதல். 2. அமெரிக்க படைத்துறைத் தொழில்நுட்பங்களை இணையவெளித் திருட்டு மூலம் அபகரித்தல். அமெரிக்காவின் எஃப்-22 மற்றும் எஃப்-35 ஆகிய போர்விமானங்களின் தொழில்நுட்பங்களை சீனா திருடிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. 3. சீன மாணவர்களை அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி கற்பித்தல். 4. அமெரிக்கர்களை சீன உளவாளிகளாக்கி அவர்கள் மூலம் அமெரிக்கத் தொழில்நுட்பங்களை பெறுதல். 5. அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்குள் சீனா மறைமுகமாக நிதி உதவி வழங்கி ஆராச்சிகளை செய்து தொழில்நுட்பங்களைப் பெறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. உலக ஆதிக்கத்தில் அமெரிக்காவை சீனா முந்துவதற்கு சீனாவிற்கு முதல் தேவைப்படுவது வெட்டு விளிம்பு தொழில்நுட்பமாகும் (Cutting-edge technology) அதைப் பெறுவதற்கு மலிவான வழி அமெரிக்காவின் கண்டுபிடிப்புக்களை திருடுவதாகும் என அமெரிக்காவில் இருந்து குற்றம் சாட்டப்படுகின்றது.

அமெரிக்காவிற்கு பெரும் சவால்

சீனா அமெரிக்க தொழில்நுட்பங்களைத் திருடுவது அமெரிக்காவின் சட்ட நிறைவேற்றுத் துறைக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. சீனாவின் இணையவெளித் திருட்டை தடுக்க முடியாமல் அமெரிக்கா சீனாவை அதை நிறுத்தும் படி வற்புறுத்தியது. அதற்கு சீனா இணங்க மறுத்த படியால் அமெரிக்கா சீனா மீது வர்த்தக்ப் போர் தொடுத்தது. சீனாவின் திருட்டுடன் தொடர்புடைய 24 பேரை 2019-ம் ஆண்டிலும் 2020 முதல் இரண்டு மாதத்தில் 19 பேரையும் அமெரிக்காவின் சட்ட நிறைவேற்றுத் துறையினர் கைஹ்டு செய்தனர். மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட விசாரணைகள் நடக்கின்றன. 2019 ஓகஸ்ட் மாதம் ஒரு பயணப் பை நிறைய கதிர்வீச்சுத்தாக்கங்களால் பாதிப்படையாத மைக்குறோசிப்ஸ்களுடன் ஹொங் கொங் பயணமாகவிருந்த 33 வயது சீனக் குடிமகன் கைது செய்யப்பட்டார். அவர் கடத்த முயன்றவை ஏவுகணைகளிலும் போர் விமானங்களிலும் பாவிக்கப்படும் ஏற்றுமதிக்கு தடை செய்யப் பட்ட இலத்திரனியல் கருவிகளாகும். அமெரிக்காவின் University of Tennessee இன் பொறியியல் துறை அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவுற்காக ஆராய்ச்சிகளைச் செய்கின்றது. அதன் பொறியியற்றுறைப் பேராசிரியல் சீனாவுடன் இணைந்து இரகசிய ஆய்வு செய்வதமைக்காகக் 2020 பெப்ரவரியில் கைது செய்யப்பட்டார். 2019 டிசம்பரில் அமெரிக்கப் படைத்துறைக்கு உபகரணங்களை வழங்கும் அமெரிக்க நிறுவனம் ஒன்று சீனாவில் உற்பத்திய செய்த உபகரணங்களை அமெரிக்காவில் உற்பத்தி செய்தவை எனச் சொல்லி அமெரிக்கப் படைத்துறைக்கு விற்பனை செய்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சீன உபகரணங்களில் உளவு பார்க்கக் கூடிய கருவிகள் இணைக்கப்பட்டிருக்கலாம். அமெரிக்காவின் சட்ட நிறைவேற்றப் பிரிவின் அரைப்பங்கினர் சீனாவின் உளவுத்துறையை கையாள்வதை முழு நேர வேலையாகச் செய்கின்றனர். ஒரு மாதந்தோறும் 72 புதிய சீன உளவு வேலைகள் விசாரணைக்கு உள்ளாகின்றன. Jongjin Tan என்னும் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற சீன விஞ்ஞானி 2019 அமெரிக்காவின் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான அமெரிக்க சொத்துக்களை திருடிய குற்றத்தை நீதி மன்றத்தில் ஒத்துக்கொண்டுள்ளார்.

சீன உளவுத்துறைப் பிரிவுகள்

இணையவெளியில் படைத்துறை இரகசியங்களைத் திருடுவதற்கு சீனப் படைத்துறையின் General Staff Department (GSD) என்னும் பிரிவு பொறுப்பாக இருக்கின்றது. இதை விரிவு படுத்தும் போது 2PLA, 3PLA, 4PLA, என புதிய இணையவெளிஉளவுத்துறைகளும் சீனப் படைத்துறையால் உருவாக்கப்பட்டது. தற்போது உள்ள சீன உளவுத்துறைகள்:

1. Military Intelligence Department

2. General Staff Department (2PLA)

3. Third Department of the Peoples Liberation Army (3PLA)

4. Signals Intelligence (SIGINT)

5. Joint Staff Department

6. Strategic Support Force

சீனாவின் உளவு முறைகள்

சீனா முக்கியமாக ஐந்து வகையான உளவுகளைச் செய்வதாக கருதப்படுகின்றது:

1 தேன் கிண்ணம்: இது ஆண் பெண் உறவை வைத்து திரட்டப்படும் முறையாகும். கள்ளக் காதலை அறிந்து அதை வெளிவிடுவதாக மிரட்டி தகவல்களைப் பெறுவதும் இதில் அடங்கும். 

2. ஆயிரம் மணல்: இதன் மூலம் தேவையற்ற பல தகவல்களைத் திரட்டி பின்னர் அவற்றை ஒன்றாகப் பொருத்திப் பார்த்து இரகசியங்களை அறிவதாகும்.

3. சித்திரவடிவு: இது பல்கலைக்கழகங்களில் இருந்து பல தகவல்களைத் திரட்டி ஒன்று சேர்த்து இரகசியங்களை அறிதல்

4. விதையிடல்: இது பரவலாகப் பாவிக்கப்படும் ஓர் உளவு முறையாகும். தமது ஆட்களை எதிரியின் நிறுவனங்களுக்குள் அமர்த்தி உளவு பார்ப்பதாகும்.

5. குடிமக்கள் உளவு: உலகிலேயே அதிக மக்களைக் கொண்ட சீனாவின் குடிமக்கள் உலகின் பல்வேறு நாடுகளில் வாழுகின்றனர். அவர்களை சீனா தனது உளவாளிகளாகப் பாவிக்கின்றது.

ஹுவாவே

ஹுவாவே நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கியதன் மூலம் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களைப் முந்திக் கொண்டு 5ஜீ அலைக்கற்றைத் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. உலக கைப்பேசி தொடர்பாடலில் ஹுவாவே ஆதிக்கம் செலுத்தினால் அதனால் உலகெங்கும் உளவுத் தகவல்களை திரட்ட முடியும் என அமெரிக்கா அஞ்சுகின்றது. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஒஸ்ரேலியா போன்ற நாடுகள் ஹுவாவேயின் பல சேவைகளையும் உபகரணங்களையும் தடை செய்துள்ளன. பப்புவா நியூகினி அரசின் தேசிய தரவு நிலையத்தை சீனாவின் ஹுவாவே நிறுவனம் 2016-ம் ஆண்டு உருவாக்கியிருந்தது. அந்த நிலையத்தில் சீனா காலாவதியான பாதுகாப்பு தொழில்நுட்பத்தைப் பாவித்ததால் பப்புவா நியூகினியின் தகவல்கள் திருடப்படும் ஆபத்திற்கு உள்ளாகியுள்ளது என அங்கு ஆய்வு செய்த ஒஸ்ரேலிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  


இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...