Followers

Showing posts with label ஈரான். Show all posts
Showing posts with label ஈரான். Show all posts

Thursday, 4 January 2024

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் மறைமுகப்போர்?

ஈரான் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராக நிகராளிப் போர் (Proxy war - அதாவது மூன்றாம் தரப்பினர் மூலமாகச் செய்யும் தாக்க்குதல்) செய்வதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம் சாட்டி வருகின்றன. லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பு, யேமனில் செயற்படும் அன்சர் அல்லா அமிப்பு உட்பட பல இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு பணம், பயிற்ச்சி படைக்கலன் போன்றவற்றை ஈரான் வழங்குகின்றது எனவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம் சாட்டுகின்றன. இந்த அமைப்புக்களின் உருவாக்கத்தில் இருந்து வளர்ச்சி வரை கடுமையாக உழைத்தவர் ஈரானின் முன்னாள் தளபதி காசிம் சுலைமான்.

சுலைமானி நினைவுநாளில் படுகொலை

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிரான இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்களை ஈரானியப் படைத்தளபதி காசிம் சுலைமானி நெறிப்படுத்துகின்றார் என்பதால் ஈராக்கிற்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்த வேளை அங்கு வைத்து அமெரிக்க ஆளிலி விமானம் மூலமாக குண்டுகளை விச்சி அவர் 2020 ஜனவரியில் கொல்லப்பட்டார். 2024 ஜனவரி மூன்றாம் திகதி அவரின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்வு பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருக்கும் வேளையில் இரண்டு குண்டுகள் வெடித்து நூற்றிற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் பல நூறு மக்கள் காயப்பட்டனர்.

ஹிஸ்புல்லா தளபதி படுகொலை

2023-ம் ஆண்டின் இறுதியில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமாக காசா நிலப்பரப்பில் குண்டுகளை வீசுவதை நிறுத்திவிட்டு தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீது துல்லியத் தாக்குதல்களைச் செய்யும்படி அறிவுறுத்தியிருந்தது. அதன் பின்னர் பெருமளவு இஸ்ரேலியப் படையினர் காசா நிலப்பரப்பில் இருந்து வெளியேறினர். அத்துடன் லெபனானில் இருந்து செயற்படும் ஈரானியா ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் பலஸ்த்தீன மேற்குக் கரைக்குப் பொறுப்பான தளபதியும் ஹிஸ்புல்லாவிற்கும் ஈரானுக்குமான தொடர்பாளராக கடமையாற்றுபவருமான சலே அல் அரூரி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து இஸ்ரேலிய ஆளிலி மூலம் குண்டு வீசிக் கொல்லப்பட்டார்.

ஈரானிற்கு எதிராக பலுச் இனமக்களா?

2023 டிசம்பர் 17-ம் திகதி ஈரானின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள ராஸ்க் நகரத்தின் காவல் துறையின் தலமையகம் மீது பலூச் இன போராளிகள் தாக்குதல் நடத்தினர். பலுச் இன மக்கள் பாக்கிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான், ஈரான் ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் வாழும் நிலப்பரப்பு பிரிக்கப்பட்டு அந்த மூன்று நாடுகளிலும் இருக்கின்றது. பலுச் மக்கள் வாழும் பாக்கிஸ்த்தானிய நிலப்பரப்பில் சீனா-பாக்கிஸ்த்தான் பொருளாதாரப் பதையின் முக்கிய பகுதி அமைந்துள்ளது. சீனாவின் முத்துமாலைத் திட்ட துறைமுகமான குவாடர் பலுச் மக்கள் வாழும் பலுஸ்சிஸ்த்தான் மாகணத்தில் உள்ளது. உலக அரசியல் போட்டியில் பலுச் மக்கள் வாழும் பகுதி முக்கியமானதாகும்.

2023 ஒக்டோபர் 7-ம் திகதி ஈரானிய ஆதரவு பெற்ற கமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபின்னர் பலுச் விடுதலைப் போராளிகளின் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது. ஈரானுக்கு எதிராக பலுச் போராளிகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் தனித்தோ அல்லது இணைந்தோ பாவிக்கத் தொடங்கிவிட்டார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது.  ஏற்கனவே இஸ்ரேல் ஈரானின் அணு விஞ்ஞானிகளைக் கொல்லுதல் யூரேனியம் பதப்படுத்தும் நிலைகளில் தாக்குதல் செய்தல், இணையவெளித்தாக்குதல் எனப் பல பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்துள்ளது. அது ஈரானுக்கு எதிராகச் செய்யும் முதலாவது நிகராளிப் போர் இதுவா?


சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் பற்றி அறிய கீழே சொடுக்கவும்:


Monday, 30 January 2023

ஈரானின் ஏவுகணை உற்பத்தி நிலைமீது தாக்குதல்

 


ஈரானின் Isfahan நகரில் உள்ள ஏவுகணை உற்பத்தி நிலையம் மீது ஆளிலிகள் மூலம் 2023 ஜனவரி 28-ம் திகதி தாக்குதல் செய்யப்பட்டுள்ளது. ஈரானி ஷஹாப் நடுத்தர தூர ஏவுகணைகள் அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றால் இஸ்ரேல் மீது தாக்குதல் செய்ய முடியும். இத்தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அமெரிக்கா இரசியா ஈரானிடமிருந்து பல ஆளிலிகளை வாங்குவதாகவும் பல ஏவுகணைகளை வாங்கவிருப்பதாகவும் அறிவித்திருந்தது.   அமெரிக்க அதிகாரிகள் ஈரானின் ஏவுகணை உற்பத்தி நிலையம் மீதான தாக்குதல் இஸ்ரேலின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. ஆனால் இத்தாக்குதலுக்கும் ஈரான் இரசியாவிற்கு ஏவுகணைகள் வழங்குவதற்கும் தொடர்பில்லை என அமெரிக்கா சொல்கின்றது.

Juniper Oak 23 போர்ப்பயிற்ச்சி

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து Juniper Oak 23 என்னும் போர்ப்பயிற்ச்சியை 2023 ஜனவரி 23-ம் திகதி செய்திருந்தன. இப் போர்ப்பயிற்ச்சி ஒர் இணைந்த எல்லாத்தள (Combined Joint All-Domain) போர்ப்பயிற்ச்சி என அமெரிக்க நடுவண் கட்டளையகம் அறிவித்திருந்தது. தரை, வான், கடல், விண்வெளி, இணையவெளி ஆகியவற்றில் படையினரின் செயற்பாட்டை ஒருங்கிணைத்துச் செய்வதே எல்லாத்தள (All-Domain) நடவடிக்கயாகும். இப்பயிற்ச்சி மேற்காசியாவில் அமெரிக்காவினது ஈடுபாட்டை கோடிட்டுக் காட்டுகின்றது என்றது அமெரிக்க அரசு. இப்போர்ப்பயிற்ச்சி எந்த ஒரு தனிப்பட்ட நாட்டை இலக்கு வைத்துச் செய்யப்படவில்லை என்றும் அதேவேளை ஈரான் போன்ற எதிரி நாடுகளைக் கருத்தில் கொண்டு செய்யப்படுவதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. 6,400 அமெரிக்கப்படையினரும் 1,100 இஸ்ரேலியப்படையினரும் 100 அமெரிக்க விமானங்களுடனும் 42 இஸ்ரேலிய விமானங்களுடனும் இப்போர்ப்பயிற்ச்சி நடந்தது. அமெரிக்காவின் நான்கு B-52 குண்டு வீச்சு விமானங்கள், நான்கு F35 போர் விமானங்கள், பதினெட்டு F/A-18 விமானங்கள், இரண்டு MQ1-9 Reaper ஆளிலிகள் ஒரு விமானம் தாங்கி கப்பல் உட்பட ஆறு அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் என ஒரு வலிமை மிக்க படையணி இஸ்ரேலுடன் இணைந்து செய்திருந்தது. இஸ்ரேலின் F-35-I, F-15, F-16 ஆகிய போர் விமானங்களும்  G550 கண்காணிப்பு வானூர்திகளும் B770 என்னும் வானில் எரிபொருள் மீள் நிரப்பு விமானங்களும் பங்கு பற்றி Juniper Oak 23 போர்ப்பயிற்ச்சி செய்திருந்தன. ஒரு சில மாதங்களுக்குள் பாரிய போர்ப்பயிற்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்கப் படைத்துறையினர் மார்தட்டிக் கொள்கின்றனர். இஸ்ரேலின் ஆறு கடற்படைக் கப்பல்களும் ஈடுபட்டிருந்தன.

ஈரானுக்கு Juniper Oak 23 போர்ப்பயிற்ச்சி மூலம் ஒரு மிரட்டல் விடுத்த பின்னர்தான் ஈரானின் Isfahan நகரில் உள்ள ஏவுகணை உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் செய்யப்பட்டதா என எண்னத் தோன்றுகின்றது.

ஈரான் சொல்வது வேறு

Isfahan நகர் மீது செய்யப்பட்ட தாக்குதலை ஈரான் ஒரு வேலைநிலையம் (Workshop) மீது சில ஆளிலிகள் செய்த தாக்குதல் என்றும் அதில் ஈடுபட்ட ஒரு ஆளிலியை தமது வான்பாதுகாப்பு முறைமை அழித்து விட்டதாகவும் மற்ற இரண்டு தமது பாதுகாப்புப் பொறிக்கு சிக்குண்டு வெடித்துச் சிதறியாதகவும் அறிவித்துள்ளது. வேலைநிலையத்தின் (Workshop) கூரை மீது சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் சொல்கின்றது.

சுலைமானியின் கொலைக்கு பழிவாங்க முடியாத ஈரான்

ஈரானைப் பொறுத்தவரை ஒரு பெரும் படைத்துறைச் சொத்தாக கருதப்பட்ட அதன் படைத்தளபதியை காசெம் சுலேமானியை அமெரிக்கா 2020 ஜனவரியில் குண்டு வீசிக் கொன்றிருந்தது. இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்புப் படையான குட்ஸ் படையின் கட்டளைத்தளபதி சுலேமானீ 600 அமெரிக்கர்கள் ஈராக்கில் கொல்லப்பட்டமைக்கு காரணமானவர்; லெபனானில் ஹிஸ்புல்லாவை வளர்த்தவர். ஈரானால் Isfahan நகர் தாக்குதலுக்கு பழிவாங்க முடியுமா?

Wednesday, 19 October 2022

உக்ரேனைக் கலங்கடிக்கும் ஈரானிய ஆளிலிகள் (Drones)

 


உலகெங்கும் படைக்கலன்களை விற்பனை செய்யும் இரசியா உக்ரேனுக்கு எதிரான போருக்கு ஈரானிடமிருந்து ஆளிலி விமானங்களை (Drones) வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரானியர்கள் கிறிமியா சென்று ஆளிலிகளை இயக்கும் பயிற்ச்சியை இரசியர்களுக்கு வழங்குகின்றனர். 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானிய ஆளிலிகளைப் பாவித்து உக்ரேனிடமுள்ள இரண்டு 122-mm self-propelled Howitzers ஏவுகணைச் செலுத்திகளையும் இரண்டு 152mm Howitzers ஏவுகணைச் செலுத்திகளையும் சில காலாட்படை வண்டிகளையும் இரசியா அழித்தது. இது ஈரானின் ஆளிலிகளை இரசியா தேர்வுக்கு உட்படுத்திய நிகழ்வாகும். ஈரானிய ஆளிலிகளி சிறப்பாக தாக்குதல்கள் செய்தமையைத் தொடர்ந்து இரசியா ஈரானிடமிருந்து 2400 Shaheds-136 (Kamikaze) ஆளிலிகளை வாங்குவதாக 2022 ஒக்டோபர் 11-ம் திகதி செய்திகள் வெளிவந்தன. Shaheds ஆளிலிகள் உக்ரேனிற்கு பல இழப்புக்களை 2022 ஒக்டோபர் மாதம் 17-ம் திகதி ஏற்படுத்தின. இரசியா ஏவிய 43 ஆளிலிகளில் 37 சுட்டு வீழ்த்தப்பட்ட்ன. ஆறு பல குடிசார் நிலைகள் மீது தாக்குதல் செய்தன. உக்ரேன் போரில் தமது ஆளிலிகள் பாவிக்கப்படுவதை ஈரான் மறுத்துள்ளது.

ஆளிலிகள் இலக்கைத் தாக்கி தம்மையும் அழித்துக் கொள்வதால் அவை தற்கொலை ஆளிலிகள் என அழைக்கப்படுகின்றன. இரண்டாம் உலகப் போரின் போது இது போன்ற வானூர்திகளை Kamikaze என அழைத்தனர்.

பறக்கும் புல் வெட்டிகள் – Flying Lawn Mowers

ஈரான் உற்பத்தி செய்த பதினொரு அடி நீளமான Shaheds-136 ஆளிலிகள் அதன் இரைச்சல் காரணமாக பறக்கும் புல்வெட்டிகள் (Lawn Mowers) என அழைக்கப்படுகின்றன.  இரசியர்கள் அவற்றை Mopeds என அழைக்கின்றனர். இவற்றின் இயந்திரம் double stroke engine என்பதால் இரைச்சல் அதிகம். இவை தன் இலக்கை நோக்கி புவியீர்ப்பு விசையுடன் தன் உந்து விசையையும் சேர்த்து அதிக வேகத்தில் மோதி தன்னையும் அழித்து இலக்கையும் அழிக்க வல்லது. இது 88 இறாத்தல் வரையிலான குண்டுகளைத் தாங்கி சென்று வெடிக்க வைக்கும். இதன் இரைச்சலும் குறைந்த வேகத்தில் பறப்பதும் அதை இலகுவாக அழிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் இருபதினாயிரம் டொலர்கள் பெறுமதியான Shaheds ஆளிலிகள் இரசியாவைப் பொறுத்த வரை மலிவானவையாகும். அதனால் இரசியா அளவில் அதிகமான Shaheds ஆளிலிகளை இரசியா உக்ரேன் இலக்குகள் மீது ஏவுகின்றது. அதில் 85% உக்ரேனியர்களால் அழிக்கப்படுகின்றன. ஏனையவை தப்பிச் சென்று தம் இலக்குகளை அழிக்கின்றன. ஈரானின் Shaheds ஆளிலிகளின் இயந்திரம் double stroke engine என்பதால் சிறிய அளவு வெப்பத்தை மட்டும் உமிழ்கின்றது. அத்துடன் மிகக் குறைந்த உயரத்தில் அவை பறக்கின்றன. அதனால் ரடார்களுக்கு புலப்படாமல் அவை பறக்கின்றன. இரசியா Shahedஇன் ஆகப் பிந்திய வகையான Shahed-136ஐ பாவிக்கின்றது. இவற்றை இரசியா ஆக்கிரமித்த உக்ரேனிய நிலப்பரப்பில் இருந்து ஈரானியர்களே இயக்குகின்றனர் எனச் சொல்லப்படுகின்றது. ஈரானிய ஆளிலிகள் பொதுமக்கள் பவிக்கும் பூகோள இடமறி முறைமையை (Global Positioning System – GPS) பாவிக்கின்றன. அதனால் அவற்றின் செயற்பாட்டை குழப்புவது (Jamming) இலகுவானதாகும்.



உக்ரேனுக்கு பின்னடைவு

அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கிய M-31 HIMARS M-142 HIMARS என்ற High Mobility Artillery Rocket System மிகவும் நகரக் கூடிய தொலைதூர பல் குழல் ஏவுகணைச் செலுத்திகள் ஆகும். இவற்றை உக்ரேன் பாவித்து உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் உள்ள கார்க்கீவ் பகுதியிலும் தென் பகுதியில் உள்ள கேர்சன் பகுதியிலும் இரசியப் படைகள் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உக்ரேனியப் படைகள் 8500 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பை மீளக் கைப்பற்றிக் கொண்டன. இரசியப் படைகள் இவ் ஏவுகணைச் செலுத்திகள் மீது ஈரானிய உற்பத்தி ஆளிலிகள் மூலம் தாக்குதல் செய்யத் தொடங்கியதில் இருந்து உக்ரேனியப் படைகளின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டது. உக்ரேனியத் தலைநகர் கீவ்வில் அப்பாவிப் பொதுமக்களின் இலக்குகள் மீதும் உட்-கட்டுமானங்கள் மீதும் பெரும் சேதம் ஏற்படுத்தின என உக்ரேன் குற்றம் சாட்டுகின்றது. குளிர் காலத்திற்கு முன்னர் உக்ரேனின் எரிபொருள் சேமிப்பு நிலைகள் மீது ஈரானிய ஆளிலிகளால் தாக்குதல் செய்து உக்ரேனியர்களுக்கு பெரும் பாதிப்பை இரசியா ஏற்படுத்தலாம்.

உக்ரேனின் எப்பாகத்தையும் தாக்கலாம்.

அண்மைக் காலங்களின் போர் முனையில் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் ஆளிலிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2020-ம் ஆண்டு நடந்த அஜர்பையான் – ஆர்மீனியப் போரிலும் உக்ரேன் போரின் ஆரம்பத்திலும் துருக்கிய தயாரிப்பு ஆளிலிகள் எதிரிக்கு கடும் சேதத்தை விளைவித்தன. ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்ட உக்ரேனை ஈரானிய ஆளிலிகளிடமிருந்து பாதுகாப்பது மிகவும் கடினமானதாக அமையும் என படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். ஈரானின் Shahed-136 ஆளிலிகள் தாழமாகப் பறப்பதாலும் அவற்றை ரடார்களால் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கின்றது. இரசியாவின் மொஸ்க்கோ நகரத்தில் இருந்து கொண்டே உக்ரேனின் எப்பாகத்தையும் Shahed-136 ஆலிலிகளால் தாக்க முடியும். தற்போது உக்ரேன் பாவிக்கும் சோவியத் ஒன்றியகால தயாரிப்பான S-300 வான் பாதுகாப்பு முறைமையால் தாழப்பறக்கும் ஆளிலிகளை இனம் கண்டு அழிக்க முடியாது.

உக்ரேனுக்கு உதவிகள் கிடைக்கும்

உக்ரேனில் ஈரானிய ஆளிலிகளும் இரசிய ஏவுகணைகளும் பெரும் சேதம் விளைவிப்பதால் அவற்றில் இருந்து தம்மைப் பாதுகாக்க SAMP-T System புதிய வான்பாதுகாப்பு முறைமைகளை அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வழங்க வேண்டும் என உக்ரேன் அதிபர் செலென்ஸ்கி அறிவித்திருந்தார். SAMP-T System பிரான்சும் இத்தாலியும் இணைந்து உற்பத்தி செய்த வான் பாதுகாப்பு முறைமையாகும். பிரான்ஸ் தனது வான்படைத் தளங்களை எதிரிகளின் பல்வேறு ஏவுகணைகள், விமானங்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதற்கு SAMP-T Systemகளைப் பாவிக்கின்றது. SAMP-T System தரையில் இருந்து பார ஊர்தி மூலம் நகர்த்தப்படும் 30 ஏவுகணைக் கொண்ட முறைமையாகும். அந்த ஏவுகணைகள் இரண்டரை செக்கண்ட்களில் ஒலியிலும் பார்க்க 4.5மடங்கு வேகத்தைப் பெறக் கூடியது. பிரான்சும் இத்தாலியும் இவற்றை உக்ரேனுக்கு வழங்கவிருக்கின்றன.  அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிகாவின் Phalanx Weapon Systemஐ உக்ரேனுக்கு வழங்குவதைத் துரிதப்படுத்தும் படி அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

இரசியாவிடம் துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அது ஈரானிடமிருந்து படைக்கலன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் உக்ரேன் போரில் அதிகம் தலையிடுவதும் அதன் படைக்கலன்கள் சிறப்பாகச் செயற்படுவதையும் இஸ்ரேல் கவனித்துக் கொண்டிருக்கின்றது.

Tuesday, 30 November 2021

அப்பாவிகள் பாதிக்கப்படும் ஈரான் – இஸ்ரேல் இணையவெளிப் போர்

 


போர் என்றால் அப்பாவிகள் கொல்லப்படத்தான் செய்வார்கள் எனச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கின்றோம். Rt Rev Dr Rowan Williams என்னும் திருநாமம் கொண்ட ஆர்ச் பிஷப் ஒஃப் கண்டபரி (Archbishop of Canterbury) இங்கிலாந்து தேவாலயத்தின்(Church of England) அதி உயர் ஆண்டகையாக இருந்தவர். 2007ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த Archbishop of Canterbury Rt Rev Dr Rowan Williams அவர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரன சிங்களப் படை நவடிக்கைகளைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்:

  • "It is undoubtedly inevitable that what you might call surgical military action against terrorism should take place",

Archbishop Williams said in reports filed by TamilNet and the BBC Sinhala service on May 11, 2007. அவரது கருத்துப்படி சிங்களவர்களின் படை நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான ஒன்று. அது சந்தேகத்திற்கு இடமின்றி தவிர்க்க முடியாத ஒரு சத்திர சிகிச்சை. இதைக் கடுமையாக எதிர்த்து ஒரு சிங்கள ஆங்கிலிக்கன் கிருத்தவர் Rt Rev Dr Rowan Williamsஅவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் முக்கியமான அம்சம்:

What your irresponsible comments have done are to :-

1. Encourage even greater violation of the human rights of the Tamil civilian population by the Sri Lankan Armed Forces.

2. Give invaluable support to Sinhalese ethno-religious chauvinists who are determined to make multi-ethnic, multireligious, multilingual and multicultural Sri Lanka into a Sinhala-Buddhist nation. Today, these extremist elements in Colombo are celebrating your comment – an indication of the damage that has been done by a flippant remark.

3. Strengthen the stance of President Rajapakse and his brothers to establish a fascist dictatorship and embark on a genocidal massacre of the Tamils in the North-East. The photograph of Rajapakse greeting you has been circulated all over the world, enhancing his flagging international image and decreasing yours.

4. Make Tamil civilians in the North-East, who are being brutalised by the current murderous regime, feel that their suffering is of no concern to you, and that what is being done to them is inevitable ‘surgical military action” which “should take place”.

இது இங்கிலாந்து திருச்சபையும் தமிழர்களின் முதுகில் குத்தியது என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு.

பலவகைப் போர்கள்

விடுதலைப் போர், சுதர்ந்திரப் போர், அறப்போர், ஆக்கிரமிப்பு போர், பயணப் போர், தாக்குதல் போர், தற்பாதுகாப்புப் போர், கரந்தடிப் போர், விடுவிப்புப் போர், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், ஈடற்ற போர், தரைப்போர், வான் போர், கடற்போர், விண்வெளிப்போர், நிலகீழ்ப்போர், சாம்பல் வலயப் போர், மதப்போர், நிகராளிப்போர், இணையவெளிப்போர் எனப் போரில் பல வகைகளுண்டு.

ஆனால் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடக்கும் போரில் நிகராளிப் போரும் இணையவெளிப்போரும் முக்கியமானவை. ஒரு தரப்பு மற்றத் தரப்பிற்கு எதிராக முன்றாம் தரப்புகளுடாக தாக்குதல் செய்வது நிகராளிப் போராகும். ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு, ஹிஸ்புல்லா அமைப்பு ஆகியவற்றினூடாக தாக்குதல் செய்வது நிகராளிப் போராகும்.

ஒரு கணினியில் அல்லது கணினித் தொகுதியில் இருந்து இன்னொரு கணினி அல்லது கணினித் தொகுதிகளுக்குள் இலத்திரனியல் மூலமாக நுழைந்து தகவல்களைத் திருடுதல், தகவல்களை அழித்தல் இணையவெளி ஊடுருவல் என அழைக்கப்படுகின்றது. அப்படிப்பட்ட ஊடுருவல் மூலம் ஒரு கணினியை அல்லது கணினித் தொகுதியை செயற்படாமல் செய்வது இணையவெளித் தாக்குதல் எனப்படும். இவையிரண்டையும் இணையவெளிப் போருக்குள் அடங்கும்.

ஈரான் மீது பலவகையான இணையவெளித் தாக்குதல்களை இஸ்ரேல் செய்து வருகின்றது. அவற்றில் மிகவும் பிரபலமானது Stuxnet என்னும் வைரஸ் மூலம் ஈரானிய யூரேனியம் பதப்படுத்தல் மீது அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் செய்த தாக்குதலாகும். அது பற்றிய விபரங்களை இந்த இணைப்பில் காணலாம்.

https://www.veltharma.com/2012/06/blog-post_05.html

கமெய்னி எரிபொருள் எங்கே?

2021 ஒக்டோபர் மாத இறுதியில் ஈரானின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள கொடுப்பனவு முறைமைகள் (payment systems) மீது இஸ்ரேல் செய்ததாகக் கருதப்படும் இணையவெளித் தாக்குதலில் மூலம் சேதப்படுத்தப் பட்டது என்ற செய்தியை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் நவம்பர் 27-ம் திகதி அம்பலப்படுத்தினர்.. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது மட்டுமல்ல ஈரானில் உள்ள இலத்திரனியல் அறிவிப்புப் பதாகைகளில் கமெய்னி எரிபொருள் எங்கே எனக் கேட்கும் வாசகங்கள் இலத்திரனியல் ஊடுருவல் மூலம் பதிவு செய்யப்பட்டும் உள்ளது. பாதிக்கப்பட்ட 4,300 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கொடுப்பனவு முறைமையை மீளச் செயற்பட வைக்க 12 நாட்கள் எடுத்தன. இந்தத் தாக்குதல் ஈரானில் உள்ளவர்களின் உதவியின்றி நடந்திருக்க முடியாது என பெயர் குறிப்பிட விரும்பாத ஈரானிய கணினித்துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் ஈரானின் ஒரு தாக்குதலுக்கு பதிலடியாகச் செய்யப்பட்டது. ஈரானில் இருந்து இஸ்ரேலின் தன்னினச் சேர்க்கையாளர்களின் இணையத்தை ஊடுருவி பெற்ற தகவல்களை சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்தப்பட்டது. பலரது பாலியல் தொடர்புகள் அதில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பல இஸ்ரேலியப் பிரபலங்கள் சங்கடத்திற்கு உள்ளாகினர்.

இஸ்ரேலின் தாக்குதலால் விரக்தியடைந்த ஈரானியர்கள் சிரியாவின் Homs மாகாணத்தில் உள்ள Al Tanf இல் இருக்கும் 200 படையினரைக் கொண்ட அமெரிக்கப் படைத்தளத்தின் மீது ஆளில்லா விமானங்களால் தாக்குதல் நடத்தினர் என அமெரிக்கா அறிவித்தது

2021 ஏப்ரல் மாதம் ஈரானின் தொடருந்து சேவை நிலையங்களில் தொடருந்துகள் வரும் நேரம் அறிவிக்கும் இலத்திரனியல் பதாகைகளில் தாமதம், இரத்து, போன்ற வாசகங்களை பதிவேற்றி பயணிகளையும் தொடருந்து சேவைகளையும் குழப்பி ஈரானிய மக்களுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. சில அறிவிப்புக்களில் கமெய்னிக்கு அழைப்பு விடுக்கவும் எனவும் பதிவுகள் மாற்றப்பட்டன.

2021-ம் ஆண்டு ஈரானிய யூரேனியப் பதப்படுத்தலில் மின்வெட்டு, ஏவுகணை உற்பத்தி நிலையத்தில் தீவிபத்து எனவும் இணைய வெளித்தாக்குதல் மூலம் நடந்தன.

இஸ்ரேலிலி இருந்து செய்யப்படுவதாக கருதப்படும் இணையவெளித் தாக்குதல்கள் ஈரானிய சிறைச்சாலைகளையும் விட்டு வைக்கவில்லை. அங்குள்ள கணினித் தொகுதிகளில் செய்யப் பட்ட ஊடுருவல்களால் பல சிறைக்கைதிகளின் தகவல்கள் மாற்றப்பட்டதால் கைதிகள் மீது அட்டூழியங்கள் நடந்தன.

2019-ம் ஆண்டு ஈரானில் இருந்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் கணினித் தொகுதிகளில் செய்யப்பட்ட தாக்குதல்களால் பல நூறு மில்லியன் டொலர்கள் இழப்பீடு ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்தக் கூடிய இணைய வெளித்தாக்குதல்கள் தாற்போது அதிகரித்துச் செல்கின்றன என்பதை இஸ்ரேலும் ஈரானும் ஒன்றின் மீது ஒன்று செய்யும் தாக்குதல்கள் உறுதி செய்கின்றன.

Monday, 8 November 2021

ஈரானின் அணுக்குண்டு உற்பத்தியை இஸ்ரேல் அழிக்குமா?



அமெரிக்கா உருவாக்கிய GBU-72/B என்னும் 5000இறாத்தல் எடையுள்ள காப்பரண் தகர்ப்பு குண்டுகளை வாங்கும் தன் விருப்பத்தை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் நிலக்கீழ் சுரங்கங்களை தகர்ப்பதற்கே தாம் அவற்றைப் பெறவிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. GBU-72/B குண்டுகள் கடினமான பாறைகளைத் துளைத்துச் சென்று வெடித்து உள்ளிருக்கும் படைக்கலன்களை அழிக்க வல்லது. வட கொரியா கடினமான கிறனைட் பாறைகளுக்குள் தனது ஏவுகணைச் செலுத்திகளையும் எறிகணைச் செலுத்திகளையும் மறைத்து வைத்துள்ளது அவற்றை அழிப்பதற்கு காப்பரண் அழிக்கும் குண்டுகள் பயன்படுத்தப்படலாம்.


எதிரிகளின் அணுக்குண்டு உற்பத்தியை அழிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேலிய வான் படையினர் 1981இல் ஈராக்கின் ஒசிராக்கில் உள்ள அணுக்குண்டு ஆராய்ச்சி நிலையத்தை தாக்கி அழித்தது. பின்னர் சிரியாவில் உள்ள அணுக்குண்டு ஆராய்ச்சி நிலையத்தை 2007இல் தாக்கி அழித்தது. இந்த இரண்டு நாடுகளும் ஈரானுடன் ஒப்பிடுகையில் இஸ்ரேலுக்கு அண்மையாக இருக்கின்றன. அத்துடன் அந்த அணு ஆராய்ச்சி நிலையங்கள் ஓரிடத்தில் மட்டும் இருந்தன. ஆனால் ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தும் நிலையங்களை பல இடங்களிலும் பாறைகளுக்கு கீழ் அறுபது அடி ஆழத்தில் அமைத்துள்ளன. அதனால் ஈரானின் அணுக்குண்டு உற்பத்தி முயற்ச்சியை இஸ்ரேல் அதில் சம்பத்தப் பட்டுள்ள விஞ்ஞானிகளைக் கொலை செய்வதாலும் அந்த நிலையங்கள் மீது இணையவெளித் தாக்குதல் செய்வதாலும் ஈரானிய அணுக்குண்டு உற்பத்தியைத் தாமதப் படுத்துகின்றது.


அமெரிக்காவும் ஈரானும்

ஈரான் அமெரிக்காவுடன் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதால் இப்போது நேரடியான குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்த வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தனது பலவிதமான படைக்கலன்களை இஸ்ரேலுக்கு சலுகை அடிப்படையில் வழங்குவதுண்டு. தனது தொழில்நுட்ப இரகசியங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இஸ்ரேலுக்கு பல படைக்கலன்களை விற்பனை செய்யாதிருப்பதும் உண்டு. குறிப்பாக அமெரிக்காவின் F-22 Raptor என்ற ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை அமெரிக்கா எந்த ஒரு நாட்டுக்கும் விற்பனை செய்வதில்லை. F-22 Raptor விமானங்களை வாங்க ஜப்பான் கடும் முயற்ச்சி செய்தும் அது கைகூடவில்லை. அமெரிக்காவின் படைக்கலன்களைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு இஸ்ரேல் சிறந்த களமாகும். இஸ்ரேல் அவற்றைப் போர்க்களத்தில் பாவிப்பதில் உள்ள அனுபவங்களை அமெரிக்காவிடம் தெரிவிக்கும். அதற்கு ஏற்ப அமெரிக்கா தனது அடுத்த உற்பத்தியை மேம்படுத்திக் கொள்ளும். அமெரிக்காவின் GBU-32 என்னும் காப்பரண் தகர்ப்பு குண்டுகளை இஸ்ரேல் காசா நிலப்பரப்பில் பாவித்து அதன் அனுபவங்களை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டது. அவற்றை அடிப்படையாக வைத்து அமெரிக்கா GBU-72/B குண்டுகளை உருவாக்கியுள்ளது. ஈரானின் அணுக்குண்டு உற்பத்திக்கான யூரேனிய பதப்படுத்தலைத் தடுக்க இஸ்ரேலுக்கு தேவைப்படுவன தொலைதூர குண்டு வீச்சு விமானங்களும் நிலத்திற்கு கீழ் அறுபது அடிவரை துளைத்து அழிக்கக் கூடிய குண்டுகளுமே.


இஸ்ரேலின் வான் வலிமை

இதுவரை காலமும் இஸ்ரேலுக்கு தேவைப்படும் விமானங்கள் வானதிக்கம் செலுத்தக் கூடிய சிறந்த குண்டு வீச்சு விமானங்களாக இருந்தன. அவற்றால் அது தனது அயல் நாடுகளுக்கு எதிராக நடந்த போர்களை வென்றது. தற்போது இஸ்ரேலுக்கு ஈரானிடமிருந்து எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அரபு நாடுகளைப் போல் ஈரான் இஸ்ரேலுக்கு அண்மையில் இல்லை. இஸ்ரேலில் இருந்து ஈரான்1789கிமீ தொலைவில் உள்ளது. இஸ்ரேலின் வான்படையின் முதுகெலும்பாக இருப்பவை அதனிடமிருக்கும் 362 அமெரிக்கத் தயாரிப்பு F-16 போர்விமானங்களாகும். அவற்றின் பறப்புத் தூரம் 212கிமீ. அவற்றை வானில் வைத்தே இஸ்ரேலால் எரிபொருள் மீள் நிரப்பல் செய்ய முடியும். எதிரியின் வான் பரப்பில் வைத்து மீள் நிரப்பல் மிகவும் ஆபத்தானதாகும். இரசியா ஈரான்க்கு வழங்கிய எஸ்-300 ஏவுகணை மற்றும் விமான எதிர்ப்பு முறைமைகள் ஈரானின் யூரேனியம் பதப்படுத்தல் நிலைகளைப் பாதுகாக்கின்றன. 2015-ம் ஆண்டு கிரேக்கமும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய INIOXOS-2015 போர் ஒத்திகையின் போது இஸ்ரேலிய வான் படையினர் தமது F-16 போர்விமானங்களை கிரேக்கத்திடமிருந்த இரசியத் தயாரிப்பு எஸ்-300 ஏவுகணை மற்றும் விமான எதிர்ப்பு முறைமைகளுக்கு எதிராக பயன்படுத்தி உரிய பயிற்ச்சிகளைப் பெற்றுக் கொண்டனர். இருந்தும் இஸ்ரேல் F-16 போர்விமானங்களை இதுவரை களமிறக்கி ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை என்பதால் அதில் சிக்கல்கள் உள்ளன என ஊகிக்கலாம். இஸ்ரேலிடம் இருக்கும் F-35 இற்கு மேலதிக எரிபொருள் தாங்கி இணைக்கப்பாட்டு அவற்றின் பறப்புத் தூரம் 2200கிமீ ஆக அதிகரிக்கப்பட்டாலும். அது இஸ்ரேலில் இருந்து பறந்து சென்று ஈரானில் தாக்குதல் நடத்திவிட்டு திரும்ப முடியுமா என்பது கேள்விக் குறி. ஆனால் ஜூலை 2018இல் ஒரு குவைத் செய்திதாள் இஸ்ரேல் தனது மூன்று F-35 விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்பி சோதனை செய்தது என்று செய்தி வெளியிட்டது.

வலிமையடையும் ஈரான்

ஈரான் தனது ஏவுகணைகளின் வீச்செல்லையை அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஈரானின் யூரேனியப் பதப்படுத்தல் நிலையங்களை அழிக்க முன்னர் ஈரானின் ஏவுகணைகளையும் இஸ்ரேல் அழிக்க வேண்டும். அந்தப் பணியை இஸ்ரேல் நிறைவேற்றுவதில் உள்ள கடினம் நாளடவைவில் அதிகரித்துக் கொண்டே போகின்றது. தற்போது இஸ்ரேலால் ஈரான் வரை நேரடியாகச் சென்று தாக்குதல் செய்யக்கூடிய விமானங்கள் உள்ளன. என்று சில செய்திகள் தெரிவித்தாலும் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியே. ஈரான் வட கொரியா, இரசியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து தனக்கு தேவையான படைத்துறைத் தொழில்நுட்பங்களை வாங்கி தனக்கு தேவையான படைக்கலன்களைத் தானே உற்பத்தி செய்கின்றது. அவற்றை காசாவில் செயற்படும் கமாஸ் அமைப்பின் மூலமாக பரீட்சிக்கின்றது.

ஒரு சாத்தியமான வழி

அமெரிக்காவின் B-21 போர்விமானங்கள் 2022-ம் ஆண்டு பாவனைக்கு வரவிருக்கின்றன. இன்னும் பத்து ஆண்டுகளில் எந்த ஒரு நாடும் B-21 விமானங்களை இனம் கண்டு அழிக்கக் கூடிய எதிர்ப்பு முறைமையை உருவாக்க முடியாத அளவிற்கு B-21இன் புலப்படாத் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. அதன் இன்னும் ஓரு சிறப்பு அம்சம் அது அமெரிக்காவில் இருந்து கிளம்பி உலகின் எந்தப் பாகத்திலும் தாக்குதல் நடத்திவிட்டு திரும்ப வரவல்லது. அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு B-21 தேவையில்லை ஈரானச் சுற்றிவர உள்ள படைத்தளங்களில் இருந்தோ அல்லது விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்தோ நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தோ அமெரிக்கா ஈரான் குண்டுகளை வீச முடியும். அதன் பின்னர் ஈரானியர்கள் பல தீவிரவாதிகளாக மாறும் போது அது அமெரிக்காவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு B-21 போர் விமான ங்களை விற்பனை செய்தால் இஸ்ரேலுக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்துவது இலகுவாக அமையும்.

அமெரிக்கா B-21 ஐ ஈரானுக்கு வழங்குமா?

Wednesday, 19 May 2021

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமா?

 


ஹமாஸ் அமைப்பு இருந்து செயற்படும் காசா நிலப்பரப்பின் மீது இஸ்ரேல் செய்யும் உக்கிரமான தாக்குதல் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் செய்வதற்கான முன்னேற்பாடாகவும் பார்க்கப்படுகின்றது. 2021 ஏப்ரல் இறுதியில் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறையான மொசாட்டின் அதிபர், இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையின் உளவுத்துறை தலைமை அதிகாரி, இஸ்ரேலின் ஈரானிய கேந்திரோபாய வகுப்பாளரான விமானப் படைத் தளபதி ஆகியோர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் சென்று அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறைச் செயலர், அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயின் இயக்குனர் உட்பட பல அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் தனித்தனியாகவும் கூட்டாகவும் பல பேச்சு வார்த்தைகளை நடத்ததினர்.



ஈரானின் யூரேனிய உற்பத்தி

இஸ்ரேலியக் குழுவினரின் முக்கிய நோக்கம் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் நடக்கும் பேச்சு வர்த்தையில் ஈரானின் யூரேனியப்  கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் சில ஆண்டுகளுக்கு மட்டுமே நடை முறையில் இருக்குமா என்பதை அறிந்து கொள்வதுதான். ஜோ பைடனின் அமெரிக்க நிர்வாகம் ஈரானின் தொலைதூர ஏவுகணை உற்பத்தியை 2023வரைக்கும் ஈரானின் யூரேனியப் பதப்படுத்தல் குழாய்களை 2025வரைக்கும் கட்டுப்படுத்தும் எண்ணத்தைக் கொண்டுள்ளது. ஜோ பைடனின் அதிகாரிகள் ஈரானால் இஸ்ரேலுக்கு ஆபத்து என்பதை நம்பாதவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை எடுத்து விட்டு பின்னர் தேவை ஏற்படும் போது மீண்டும் பொருளாதாரத் தடையை விதிப்போம் என மிரட்டுவது அமெரிக்காவின் அரசுறவியல் நகர்வுகளுக்கு ஏற்புடையதாக இருக்கும் என நம்புகின்றார்கள். ஆனால் அந்த நம்பிக்கை இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு இல்லை.

இஸ்ரேல் அழிக அமெரிக்கா ஒழிக.

இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹு “எமது நெருங்கிய நண்பர்களுக்கு ஒன்றை தெளிவாக கூற விரும்புகின்றோம். எம்மை அழித்தொழிக்க நினைக்கும் ஈரானுடன் செய்யப்படும் எந்த உடன்படிக்கையும் எம்மைக் கட்டுப்படுத்தாது. எம்மை அழிக்க விரும்புபவர்களின் திட்டங்களை செயற்படுத்தாமல் தடுக்கும் தடுக்கும் ஒப்பந்தங்கள் மட்டுமே எம்மைக் கட்டுப்ப்படுத்தும்.” இஸ்ரேலில் இருந்து எழுந்த இந்த வீர வசனங்களுடன் யூதர்கள் கிழக்கு ஜெருசேலத்தில் அராபியர்கள் அழிக என்ற் கோசத்துடன் ஊர்வலம் போனார்கள். அவர்கள் மீது அரேபியர்களான பலஸ்த்தீனியர்கள் தாக்குதல் நடத்த அங்கு பெரும் கலவரம் மூண்டது. இதனால் பலஸ்த்தீனியப் பிரதேசமான காச நிலப்பரப்பில் இருந்து செயற்படும் ஹமாஸ் அமைப்பினர் ஈரானிடமிருந்து பெற்ற ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நத்தினர். இஸ்ரேலின் பதிலடி வழமை போல் காத்திரமாக இருந்தது. இஸ்ரேலிய விமானங்களின் குண்டு வீச்சில் பல ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் அழிக அமெரிக்கா ஒழிக என்பது ஈரானின் மதவாத ஆட்சியாளர்கள் அடிக்கடி பாவிக்கும் வாசகமாகும். அமெரிக்காவை ஒழிக்க ஈரானால் முடியாது. ஆனால் ஈரான் தனது ஏவுகணைகளை மேம்படுத்திக் கொண்டிருப்பதும் அணுக்குண்டை உருவாக்க முயலவதும் இஸ்ரேலின் இருப்புக்கு ஆபத்தானதாகும். ஈரானின் அணுக்குண்டு உற்பத்தியுடன் தொடர்புபட்ட விஞ்ஞானிகளைக் கொல்வதையும் ஈரானின் யூரேனிய பதப்படுத்தல் நிலையங்களை சேதப்படுத்துவதையும் இஸ்ரேல் வழமையாகக் கொண்டுள்ளது.

விலகிய டிரம்ப் இணைய முயலும் பைடன்

ஈரான் தற்போது வலுக்குறைந்த நிலையில் உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஈரானுடன் ஒப்பந்தம் செய்து அதன் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கினால் ஈரானின் வலிமை அதிகரிக்கும். பராக் ஒபாமா ஈரானுடன் ஒப்பந்தம் செய்து பொருளாதார தடைகளை நீக்கினால் ஈரானில் மிதவாதிகள் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றுவார்கள் என நம்பினார். அவர் நினைத்தது நடக்கவில்லை. இஸ்ரேலிற்கு பல வகையிலும் சார்பாக நடந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் செய்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்தார். அத்துடன் ஈராக்கில் வைத்து ஈரானின் படைத்தளபதி சுலைமானியையும் கொன்றார். ஈரானினர் அதற்குப் பழிவாங்காமல் நல்ல பிள்ளை போல் நடந்து அமெரிக்க ஆட்சி மாற்றம் வரும் வரை காத்திருந்தனர். அவர்கள் நம்பிய படி 2021 ஜனவரியின் ஆட்சிக்கு வந்த அதிபர் ஜோ பைடன் ஈரானுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தார்.

அமெரிக்கவும் இஸ்ரேலும் இணைந்து சதி?

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றுடன் ஒன்று ஈரான் தொடர்பாக முரண்படுவது போல் பாசாங்கு செய்வதும் அவர்களின் கேந்திரோபாயமாகவும் இருக்கலாம். அமெரிக்காவும் ஈரானும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கையில் இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுத்து அதன் யூரேனிய உற்பத்தி நிலையத்தை முற்றாக அழிக்கலாம். ஈரானுக்கு சினம் வரும் போது முதலில் அது செய்வது சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதும் ஹோமஸ் நீரிணையை மூட முயல்வதுமாகும். சவுதி அரேபியா ஈரானுடன் அமைதிப் பேச்சு வார்த்தை  நடத்த தொடங்கி விட்டது. அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு ஹோமஸ் நீரிணையை பாதுகாக்கும் அமெரிக்காவுடன் அங்கு ஈரானால் முரண்பட முடியாது. பாக்கிஸ்த்தானிய தலைமை அமைச்சர் இம்ரான் கான் 2021 மே மாதம் 7-ம் திகதி சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்தார். அவருக்கு முன்னர் பாக்கிஸ்த்தானிய படைத்துறை உயர் அதிகாரிகள் அங்கு சென்றிருந்தனர். பாக்கிஸ்த்தான் ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் உறவை வளர்க்க பாவிக்கப்படுகின்றார். 2016-ம் ஆண்டில் யேமனில் உள்ள ஈரானுக்கு ஆதரவான தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சவுதி அரேபியாவுடன் இணைய பாக்கிஸ்த்தான் மறுத்த பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. பல பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொள்ளும் பாக்கிஸ்த்தான் இப்போது சவுதி அரேபியாவுடன் உறவைச் சீர் செய்ய விரும்புகின்றது

அரசுறவுகளில் வலிமையடைந்த இஸ்ரேல்

இஸ்ரேல் ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன் போன்ற அரபு நாடுகளுடன் புதிதாக அரசுறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. சிரியா நீண்ட உள்நாட்டுப் போரில் களைப்பும் சலிப்பும் அடைந்துள்ளது. அது ஈரானுக்கு பெரும் உதவிகளைச் செய்ய முடியாது. இரசியா அதிபர் புட்டீன் இஸ்ரேலுக்கு எதிராக ஈரானுக்கு உதவி செய்தால் அவர் தனது நாட்டில் மரபுவழி கிருத்தவர்களின் எதிர்ப்பை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இவற்றால் புவிசார் அரசியல் நிலைமை ஈரானுக்கு சாதகமாக உள்ளது. இந்த நிலையில் ஈரான் மீது ஒரு போரை இஸ்ரேல் தொடுக்கலாம்.



வலிமையடையும் இஸ்ரேலிய வான்படை

இஸ்ரேல் தனது வான்படையின் வலிமையை அதிகரிக்க ஈரான் தனது வான்பாதுகாப்பை அதிகரித்தது. ஈரான் இரசியாவிடமிருந்து எஸ்-300 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்கியது. இதனால் இஸ்ரேலிடமுள்ள F-15 மற்றும் F-16 போர் விமான ங்கள் மூலம் ஈரானில் தாக்குதல் செய்ய முடியாத நிலை உருவாகியது. அதனால் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக F-35 புலப்படா போர் விமானங்களை பாவிக்க வேண்டும். ஆனால் F-3ன் ஆகக்கூடிய பறப்புத் தூரம் 650மைல்களாகும். இஸ்ரேலில் இருந்து ஈரானின் தூரம் ஆயிரம் மைல்களுக்கும் அதிகமானது. 2021 ஏப்ரலின் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான தப்பான உடன்படிக்கை மேற்காசியாவில் ஒரு மோசமான போரை உருவாக்கும் என்றார். மேலும் அவர் தமது போர் விமானங்களால் ஈரான் வரை சென்று தாக்குதல் நடத்த முடியும் என்றார். 2019-ம் ஆண்டு இஸ்ரேலின் அமெரிக்கத் தயாரிப்பு F-35 புலப்படாப் போர் விமானங்கள் ஈரானின் வான் எதிர்ப்பு முறைமைகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு ஈரானுக்கு மேலாகப் பறந்து சென்று வேவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. ஈராக் அணுக்குண்டு உற்பத்தி செய்வதை தடுக்க இஸ்ரேல் 1981-ம் ஆண்டு அதன் ஆய்வு நிலையங்கள் மீது வான் தாக்குதல் நடத்தி அழித்தது. F-35 விமானங்களின் எரிபொருள் கொள்கலன்களின் அளவைக் கூட்ட இஸ்ரேல் பலவழிகளில் முயற்ச்சி செய்தது. அத்துடன் வானில் வைத்து எரிபொருள் நிரப்பும் முயற்ச்சியிலும் ஈடுபட்டது. மூன்றாவது தெரிவு சவுதி அரேபியாவில் எங்காவது எரிபொருளை நிரப்புவதாகும். இஸ்ரேல் இந்த மூன்று வகைகளையும் பாவிக்கும் நிலையில் உள்ளது என்ற படியால்தான் F-35 ஈரான் வரை பறந்து சென்று வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து வாங்கும் போர் விமானங்களை தனக்கு ஏற்றவாறு மேம்படுத்துவதில் கைதேர்ந்தது என்பதை பல தடவை நிரூபித்துள்ளது. பராக் ஒபாமா பதவில் இருந்த போது இஸ்ரேலுக்கு நிலத்துக்குக் கீழ் துளைத்துச் சென்று அழிக்கக் கூடிய ஐம்பத்தி ஐந்து காப்பரண் அழி குண்டுகள் (GBU 28 Bunker buster) வழங்கியிருந்தார். அவை ஈரானின் பாறைகளுக்கு கீழ் இருக்கும் யுரேனியப் பதப்படுத்தும் நிலைகளை அழிக்கக் கூடியவை.

ஈரான் அணுக்குண்டு தயாரிக்கக் கூடிய நிலையை அடைய முன்னரே அதை அழிக்க இஸ்ரேல் உறுதி பூண்டுள்ளது. ஈரானைத் தாக்கும் போது லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பை இஸ்ரேல் அழிக்க வேண்டும். ஈரான் மீதான தாக்குதலும் அது அடுத்த சில பத்தாண்டுகள் தலைஎடுக்காத படி அமைய வேண்டும். அதற்கு இஸ்ரேலுக்கு அவசியம் தேவைப்படும் அரபு நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்குமா?

Monday, 30 November 2020

இஸ்ரேல் சவுதி கள்ளக் காதலும் ஈரானிய விஞ்ஞானி கொலையும்



இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாகூ சவுதி அரேபியாவிற்கு சென்று சவுதியின் பட்டத்துக்குரிய இளவரசரைச் சந்தித்தார் என்பதை சவுதியின் வெளியுறவுத் துரை அமைச்சர் ஃபசல் பின் ஃபார்ஹல் அல் சவுத் மறுத்துள்ளார். இஸ்ரேலின் பெஞ்சமின் நெத்தன்யாகூ, சவுதியின் மொகமட் பின் சல்மன், துருக்கியின் ரெசெப் எர்டோகான், ஹங்கேரியின் விக்டர் ஓபன், பிரித்தானியாவின் பொறிஸ் ஜோன்சன், பிரேசிலின் ஜெர் பொல்சொனாரோ, இரசியாவின் விளடிமீர் புட்டீன், இந்தியாவின் நரேந்திர மோடி, மெக்சிக்கோவின் மானுவேல் ஓப்ரடோர் ஆகியோர் டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் அவருக்கு வேண்டப்பட்டவர்களாக இருந்தவர்கள் ஆகும். ஆனால் அமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றத்தால் கலக்கமடைந்தவர்களாக இஸ்ரேலின் பெஞ்சமின் நெத்தன்யாகூ, சவுதியின் மொகமட் பின் சல்மன் ஆகிய இருவரும் இருக்கின்றார்கள். புதிய அமெரிக்க அதிபர் ஜோன் பைடனை எப்படிக் கையாள்வது என்பது பற்றி இருவரும் நிச்சயமாக கலந்துரையாடி இருப்பார்கள்.

எந்த ஆண்டி பெருவல்லரசு?

இஸ்ரேல் அமெரிக்க உறவு உறுதியானதாகவே கடந்த பல பத்தாண்டுகளாக இருக்கின்றது. சில வேளைகளில் இஸ்ரேல் தன்னை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பதுமுண்டு. 1996-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும் இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாகூவும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய போது நெத்தன்யாகூ அரபு இஸ்ரேலிய மோதல்களின் வரலாறு பற்றி கிளிண்டனுக்கு பாடம் எடுப்பது போல் நடந்து கொண்டார். சினமடைந்த கிளிண்டன் பேச்சு வார்த்தையின் பின்னர் “எந்த ---- ஆண்டி இங்கு பெருவல்லரசு (Who is the f—king superpower here?) என தனது உதவியாளர்களிடம் கேள்வி எழுப்பினாராம். பொதுவாக அமெரிக்காவின் குடியரசுக் கட்சி அதிபர்கள் மக்களாட்சிக் கட்சியின் அதிபர்களுடன் ஒப்பிடுகையில் இஸ்ரேலுக்கு அதிக சாதகமாக நடந்து கொள்வார்கள். ஆனாலும் டிரம்பைப் போல் இஸ்ரேலுடன் தாராளமாக எந்த ஓர் அமெரிக்க அதிபரும் நடந்து கொண்டதில்லை. டிரம்பின் வெளியுறவுத் துறையினரும் அவரது யூத மருமகனும் ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், சூடான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் அரசுறவை ஏற்படுத்த வழிவகுத்தனர். இஸ்ரேல் ஜோர்டானிடமிருந்து அபகரித்த கிழக்கு ஜெருசேலத்தை இஸ்ரேலுடன் இணைத்து ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார். இஸ்ரேல் சிரியாவிடமிருந்து அபகரித்த கோலான் குன்று பகுதிகளை இஸ்ரேலுடன் பன்னாட்டு நியமங்களுக்கு முரணாக இணைத்ததை டிரம்ப் ஏற்றுக் கொண்டார். இஸ்ரேலின் ஜேருசேலம் இணைப்பு நடவடிக்கையை பலஸ்த்தீனியர்கள் எதிர்த்த போது டிரம்ப் அவகளுக்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்தினார். பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தின் வாஷிங்டன் பணிமனையை மூட உத்தரவிட்டார். அத்துடன் பலஸ்த்தீனியர்களின் மேற்கு கரையில் இருந்த அமெரிக்க துணைத் தூதுவரகத்தையும் மூட உத்தரவிட்டார். இஸ்ரேலுக்கு அச்சம் கொடுப்பவராக இருந்த ஈரானியப் படைத் தளபதி காசிம் சுலேமானியைக் ஈராக்கில் வைத்து ட்ரம்பின் படையினர் குண்டு வீசிக் கொலை செய்தனர். புதிய அமெரிக்க அதிபர் ஜோன் பைடன் பலஸ்த்தீனியர்கள் விவகாரத்தில் சற்று அவர்களுக்கு சார்பான நிலைப்பாட்டை எடுப்பார். அவர் இஸ்ரேலுக்கு எதிராகச் செய்யும் நகர்வுகள் அறுதிப் பெரும்பானமையில்லாமல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் நெத்தன்யாகூவின் ஆட்சி கவிழ்க்கப்படுவதில் போய் முடியலாம்.

அரபு மக்களுக்கு உதவாத சவுதி அரச குடும்பம்.

2019-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சவுதி அரேபியாவின் உளவுத்துறையின் தலைவராக இருந்த சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த அல் ஃபைசல் சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன் ஆகிய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உள்ள இரகசிய அரசியல், பொருளாதார மற்றும் படைத்துறை உறவுகளை அம்பலப்படுத்தினார். வஹாபிசமும் சியோனிசமும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது புவிசார் அரசியல் நலன்களுக்காக வளர்த்து விட்டவை எனக் குற்றம் சாட்டுவோரும் உண்டு. சவுதி அரச குடும்பமே பிரித்தானியாவால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூட குற்றச்சாட்டு உள்ளது என்பது மட்டுமல்ல சவுதி அரச குடும்பம் உண்மையில் யூதர்கள் என்ற ஐயம் தெரிவிப்போரும் உள்ளனர். பதினொரு நூல்களுக்கு மேல் எழுதிய செயட் அபூரிஸ் என்ற பலஸ்த்தீனிய ஊடகவியலாளர் அரபு நாட்டு ஆட்சியாளர்களை மேற்கு நாடுகளின் அடிவருடிகள் என்றே விபரித்தார். அவர்கள் தங்கள் குடிமக்களின் நலன்களில் அக்கறை இல்லாதவர்கள் என்பதும் அவரது குற்றச் சாட்டு. 2005-ம் ஆண்டு இறந்த சவுதி அரசர் பஹ்ட்டை சோம்பேறி, ஊழல்காரர், அறிவற்றவர், குடிகாரர், காணொலி விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் என விபரித்திருந்தார். அரபு நாடுகளில் இருக்கும் ஆட்சியாளர்கள் சட்டபூர்வமானவர்கள் அல்லர் என்பது அவரது ஆணித்தரமான கருத்து. அரபு நாட்டு ஆட்சியாளர்களை மேற்கத்தைய நாடுகளினதும் எரிபொருள் நிறுவனங்களினதும் மாவட்ட அலுவலகர்கள் என அவர் தனது நூல்களில் விபரித்திருந்தார். சவுதி அரேபியா இஸ்ரேலுடன் இரகசிய உறவுகளை பேணுவதன் மூலம் சவுதியில் தமக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்களின் விபரங்களை இஸ்ரேலிய உளவுத்துறையிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றது. சவுதியில் இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க சவுதியில் செயற்படும் இஸ்ரேலிய உளவுப் படையினர் தீவிரமாகச் செயற்படுகின்றனர். இஸ்ரேல் கைப்பற்றிய அரபு நிலங்களைவிட்டு வெளியேறும் வரை அதனுடன் உறவு இல்லை என சவுதி அரேபியா சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

சவுதியும் டிரம்பும்

சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொகமட் பின் சல்மான் ஆட்சியில் தனது பிடியை இறுக்குவதற்கு டிரம்ப் உதவியாக இருந்தார். ட்ரம்பின் மருமகனுடனும் அவர் நல்ல உறவை வைத்திருந்தார். யேமனில் சவுதி அரேபியா செய்த தாக்குதல்களுக்கும் டிரம்ப் படைக்கல உதவிகளையும் நேரடி நிபுணத்துவ உதவிகளையும் செய்தார். சவுதியில் இருந்து வெளியேறி துருக்கியில் வசித்த ஊடகரான ஜமால் கஷோக்ஜியின் உண்மையான கொலையாளிகளை தண்டிப்பதில் டிரம்ப் அதிக அக்கறை காட்டவில்லை. ஆனால் ஜோன் பைடன் நிச்சயம் அக்கறை காட்டுவார்.

நால்வரின் இரகசிய சந்திப்பு

2020 நவம்பர் 22-ம் திகதி பெஞ்சமின் நெத்தன்யாகூ அமைச்சரவைக் கூட்டத்தை திடீரென இரத்துச் செய்து விட்டு தனிப்பட்ட விமானம் ஒன்றில் ஏறிப் பறந்ததாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிப்பது நெத்தன்யாகூ – சல்மான் சந்திப்பை உறுதி செய்கின்றது. நெத்தன்யாகூ, சவுதி இளவரசர் சல்மான், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோ இஸ்ரேலின் உளவுத் துறையான மொசாட்டின் தலைமை இயக்குனர் யொஸ்ஸி கொஹென் ஆகியார் சவுதி அரேபியாவின் செங்கடல் கரையோர நகரமான நியோமில் சந்தித்து ஐந்து மணி நேரம் உரையாடியுள்ளார்கள். இவர்களின் சந்திப்பின் முக்கிய நோக்கம் ஈரானை இனி எப்படிக் கையாள்வது என்பது பற்றியே இருந்திருக்கும் என மேற்காசியாவின் புவிசார் அரசியலை புரிந்தவர் எவரும் அடித்துச் சொல்வர். ஆனால் 2021 ஜனவரி 20-ம் திகதி டிரம்பின் ஆட்சி முடியுமுன்னர் ஈரான் மீதான ஒரு தாக்குதல் செய்வது என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்குமா என அறுதியிட்டு சொல்ல முடியாது.  

ஈரான் அணு விஞ்ஞானி கொலை

ஒரு புறம் ஈரானுக்கு எதிராக சில அரபு நாடுகளும் இஸ்ரேலும் கள்ள உறவுகளையும் பகிரங்க உறவுகளையும் வளர்க்கும் போது மறுபுறம் ஈரானின் நான்காவது அணு விஞ்ஞானி மோஷேன் ஃபக்ரிஸாதேவை கொல்லப்பட்டார். இது ஈரானில் கொல்லப்பட்ட நான்காவது விஞ்ஞானியாகும். இது வரை கொல்லப்பட்டவர்களில் உயர் தரமான விஞ்ஞானியும் ஆவார். எல்லாக் கொலைகளிற்கும் இஸ்ரேல் காரணம் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. 2021-ம் ஆண்டு ஜூன் 18-ம் திகதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் ஒரு படைத்தளபதிதான் அதிபராக வரவேண்டும் என ஈரானில் தீவிரப் போக்குடையவர்கள் முனைப்புடன் செயற்படுகின்றார்கள். 2019இல் நடந்த தளபதி சுலேமானி கொலையும் இந்த அணு விஞ்ஞானி கொலையும் ஈரானில் ஒரு அதிதீவிரவாதப் போக்குடையவர் ஒருவரே அதிபராக வருவதை நிச்சயப் படுத்தியுள்ளது. அதை இஸ்ரேலும் விரும்புகின்றது. ஏனென்றால் ஈரானில் திவிரவாதப் போக்குடையவர்களின் கை ஓங்கும் போது ஈரானுக்கும் அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோன் பைடனுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை சுமூகமாக நடக்காது. ஈரானின் இரண்டு பெறுமதிமிக்க குடிமக்கள் கொல்லப் பட்டமை ஈரானால் அவர்களைப் பாதுகாக்க இயலாத நிலையைக் காட்டுவதாக மேற்கு நாட்டு ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஈரானிய ஆட்சியாளர்கள் மீது கரி பூசுவது அந்த ஊடகங்களின் நோக்கங்கள். அந்த ஊடகங்கள் இஸ்ரேலுக்கு தொடர்பு இருக்கலாம் என ஐயம் வெளியிட்டுள்ளன. ஆனால் இஸ்ரேலைக் கண்டிக்கும் வாக்கியங்களை அவை எழுதவோ பேசவோ இல்லை. ஈரான் இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் உளவுத்துறைகளை விஞ்சக் கூடியவகையில் தனது உளவுத்துறையை வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம். 

மருமகன் குஷ்ணர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளின் கணவரும் யூதருமான ஜெரார்ட் குஷ்ணர் வெள்ளை மாளிகையின் உயர் பதவியான அதிபரின் மூத்த ஆலோசகர் பதவியில் இருக்கின்றார். டிரம்ப் 2017 ஜனவரியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து குஷ்ணர் சவுதியின் முடிக்குரிய இளவரசர் பின் சல்மானுடன் நெருங்கிய நடபை வளர்த்துள்ளார். குஷ்ணர் 2020 டிசம்பர் முதல்வாரம் இஸ்ரேலுக்கும் சவுதிக்குமான பயணம் ஒன்றை மேற்கொள்கின்றார். இவரது பயணத்தின் முக்கிய நோக்கம்: 1. சவுதி – இஸ்ரேல் உறவை மேலும் நெருக்கமாக்குவது 2. கட்டார்(கத்தார்) நாட்டின் மீது சவுதி அரேபியா, எகிப்த்து, ஐக்கிய அமீரகம் ஆகியவை மேற்கொண்டுள்ள பொருளாதாரத் தடையையும் மற்றும் நெருகுவாரஙக்ளை நீக்குவதாகும். அதன் மூலம் கட்டார்(கத்தார்) ஈரான் மீது தங்கியிருப்பதை இல்லாமல் செய்யலாம்.

 

 

http://www.veltharma.com/2020/11/blog-post_24.html

http://www.veltharma.com/2013/01/blog-post_28.html

Monday, 23 November 2020

ஈரான் மீது டொனால்ட் டிரம்ப் தாக்குதல் செய்வாரா?

ஈரானை சுற்றி அமெரிக்கப்படைகள்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் “நொருக்கும் பதிலடி” கொடுப்போம் என ஈரான் 2020-11-17 செவ்வாய்க்கிழமை சூளுரைத்தது. இஸ்ரேலுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்யாதது ஒன்று உண்டென்றால் அது ஈரான் மீது தாக்குதல் நடத்தாததுதான். டிரம்ப் பதவியில் இன்னும் இரண்டு மாதங்களே இருக்க முடியும் என்ற நிலையில் அதையும் செய்ய முயல்கின்றார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. குறைந்தது ஈரானின் நடான்ஸ் நகரத்தில் உள்ள யூரேனியம் பதப்படுத்தும் நிலையிலாவது தாக்குதல் நடத்த வேண்டும் என டிரம்ப் தனது அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துள்ளார். ஈரான் மீது தாக்குதல் செய்வதை துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோ, பாதுகாப்புத் துறைப் பதில் செயலர் கிறிஸ்டோபர் மில்லர் உட்பட பலர் ஒத்துக் கொள்ளவில்லை. 2020 நவம்பர் 21-ம் திகதி அமெரிக்காவின் பி-52 (B-52H “Stratofortress) குண்டு வீச்சு விமானங்கள் ஈரானைச் சுற்றவுள்ள அமெரிக்க படைத்தளங்களுக்கு அனுப்பப்பட்டன. 

ஈரான் அசையாது

2020 நவம்பர் 20-ம் திகதி ஈரானிய அரசு தனது நட்பு அமைப்புக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ஈரானின் சிறப்புப் படையணியின் தளபதி இஸ்மயில் கானி ஈராக்கில் உள்ள ஈரான் சார்பு தீவிரவாதக் குழுக்களுடன் அமெரிக்கத் தாக்குதல் தொடர்பாக கலந்துரையாட ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார். இஸ்ரேல் ஒழிக, அமெரிக்கா அழிக என்ற கொள்கையில் உறுதியாக நிற்கும் ஈரானின் மதவாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பாரிய தாக்குதல் செய்ய வேண்டும் என இஸ்ரேல் கடந்த இருபது ஆண்டுகளாக முயன்று வருகின்றது. ஈரானுடைய மலைகளும் பாறைகளும் நிறைந்த பூகோள அமைப்பு அதை இலகுவில் தாக்கி அழிக்க முடியாத ஒரு நாடாக வைத்திருக்கின்றது.

டொனால்ட் டிரம்பும் இஸ்ரேலும்

டொனால்ட் டிரம்பின் மகளின் கணவர் ஜரார்ட் குஷ்ணர் ஒரு யூதராவார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் உயர் ஆலோசகராக பதவி வகிக்கும் குஷ்ணர் அங்கு செல்வாக்கு மிக்கவராக இருக்கின்றார். அவரும் சவுதி அரேபிய பட்டத்துக்குரிய இளவரசரும் நெருங்கிய நண்பர்கள். அதனால் டிரம்பின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரேலுக்கு சாதகமான பல நகர்வுகள் மேற்காசியாவில் நடந்தன. பலஸ்த்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் தமது தலைநகரம் எனக் கொண்டாடிய கிழக்கு ஜெருசேலம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது. அத்துடன் ஜெருசேலம் இஸ்ரேலின் தலைநகர் என இஸ்ரேல் அறிவிக்க அதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. சிரியாவிடமிருந்து இஸ்ரேல் 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேல் போரில் இஸ்ரேல் சிரியாவிடமிருந்த அபகரித்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோலான் குன்றுகள் இஸ்ரேலின் ஒரு பகுதி என அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. பலஸ்த்தீனியர்களின் மேற்குக் கரைப் பிரதேசத்தில் இஸ்ரேல் செய்த யூதக் குடியேற்றங்களை அமெரிக்கா சட்ட விரோதமாக கருதமாட்டாது என்றும் டொனால்ட் டிரம்ப் பிரகடனம் செய்தார். ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், சூடான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் அரச உறவுகளை உருவாக்க டிரம்பின் ஆட்சி முன்னின்று உழைத்தது. இஸ்ரேல் மிகவும் வெறுத்த ஈரானின் படைத் தளபதியை கசீம் சுலேமானியை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி கொலை செய்தது.

பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்

பாதுகாப்புச் செயலர் எனப்படும் பாதுகாப்பு அமைச்சுப் பதவியில் இருந்த மார்க் எஸ்பரை நவம்பர் 6-ம் திகதி நடந்த தேர்தலில் தான் தோல்வியடைந்த பின்னர் டிரம்ப் பதவி நீக்கம் செய்தார். ஆப்கானிஸ்த்தானில் இருந்தும் ஈராக்கில் இருந்தும் அமெரிக்கப் படையினரை வெளியேற்றாமை போன்ற காரணங்களுக்காக அப்பதவி நீக்கம் நடந்ததாக சொல்லப்பட்டாலும் ஈரான் மீது தாக்குதல் நடத்த மார்க் எஸ்பர் மறுத்தமையும் ஒரு முக்கிய காரணமாகும் எனக் கருதப்படுகின்றது. இதற்கிடையில் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிறையன் தான் பதவியில் இருந்து விலக முன்னர் கட்டார்(கத்தார்) நட்டிற்கு எதிராக ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, எகிப்த்து, பாஹ்ரேன் ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொண்டுள்ள முற்றுகையை நீக்குவேன் எனத் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டார்(கத்தார்) நாட்டின் மீதான முற்றுகையால் அந்த நாடு ஈரானில் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஈரானின் இந்த அரசுறவியல் நெம்பு கோலை வலிமையிழக்கச் செய்யவே இந்த நடவடிக்கை.  

இஸ்ரேல் பாஹ்ரேன் உறவு

இஸ்ரேல் சிரிய எல்லையில் ஆட்கொல்லி கண்ணிவெடிகளை புதைக்கப்பட்டதற்கு பதிலடியாக சிரியாவில் உள்ள ஈரானியப் படை நிலைகள் மீது இஸ்ரேல் 2020 நவம்பர் 18-ம் திகதி தாக்குதல் நடத்தியது. அதில் இரு சிரியப் படையினர் கொல்லப்பட்டதாக சிரிய அரசு அறிவித்தது. அந்த தாக்குதலைத் தொடர்ந்து பாஹ்ரெயின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் லத்திஃப் அல் ஜயானியும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பியோவும் இணைந்து இஸ்ரேலுக்கு பயணம் செய்தனர். அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பாஹ்ரேனிய அதிகாரிகள் சூழ ஒரு பேச்சு வார்த்தை இஸ்ரேலியத் தலைநகரில் நடந்தது. பாஹ்ரேனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை சுமூகப் படுத்தவே அமெரிக்க மற்றும் பாஹ்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பயணம் செய்ததாக சொல்லப்பட்டது. இருவரும் இணைந்து இஸ்ரேலுக்கு பயணித்தமை மிகவும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.



யூரேனிய பதப்படுத்தல் ஒப்பந்தம்

2015-ம் ஆண்டு P-5+1 எனப்படும் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சீனா, இரசியா, பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளையும் ஜேர்மனியையும் கொண்ட குழுவுடன் ஈரான் தனது யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தை செய்தது. அந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் 90 நாட்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கும் கையொப்பம் இடவேண்டும். இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் கடுமையாக எதிர்த்தன. டொனால்ட் டிரம்ப் 2016 நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 2017 ஜனவரியில் பதவி ஏற்றார். 2017 ஒக்டோபரில் அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்து கையொப்பமிடவில்லை. அதனால் மற்ற ஆறு நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா செய்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. ஈரான்மீது அமெரிக்கா மேலதிகப் பொருளாதாரத் தடைகளையும் விதித்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜொன் பைடன் தான் மீண்டும் அந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பேன் எனச் சொல்லியுள்ளார். அப்படி அங்கீகரிக்கும் போது ஈரான் அந்த ஒப்பந்தப்படி மட்டுப்படுத்தப்பட்ட யூரேனியப் பதப்படுத்தலைச் செய்யலாம். அதை இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் விரும்பவில்லை. இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாகூவுடனும் சவுதி அரச குடும்பத்துடனும் தனிப்பட்ட அடிப்படையில் அதிக நட்புக் கொண்ட டொனால்ட் டிரம்ப் தான் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற முன்னர் ஈரானின் யூரேனியப் பதப்படுத்தலை தடுக்கும் நடவடிக்கையை செய்ய முயல்கின்றார் என நம்பப்படுகின்றது. டிரம்ப் ஈரானுடனான யூரேனியம் பதப்படுத்தல் ஒப்பந்தத்தை இரத்துச் செய்த பின்னர் ஈரான் தன்னிடமுள்ள பதப்படுத்தப்பட்ட யூரேனிய இருப்பை 12 மடங்காக உயர்த்தியுள்ளது. இப்போது ஈரானிடம் இரண்டு அணுக்குண்டுகளை உருவாக்கக் தேவையான பதப்படுத்தப்பட்ட யூரேனியம் உள்ளது. அத்துடன் ஜோன் பைடனுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்தால் அதில் தொலை தூர ஏவுகணைகளை மட்டுப்படுத்தும் நிபந்தனை உள்ளடக்கப் படுவதை ஈரான் ஏற்றுக் கொள்ளாது எனவும் அறிவித்துள்ளது. அமெரிக்கா யூரேனியம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பின்னர் அந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் பெருமளவு யூரேனியத்தைப் பதப்படுத்தியதும் ஒப்பந்த மீறலாகும்.

பாஹ்ரேய்னின் முக்கியத்துவம்

ஈரானின் யூரேனியம் பதப்படுத்தும் நிலைகள் பாறைகளுக்கு உள்ளே அறுபது அடிகளுக்கு மேற்பட ஆழத்தில் உள்ளன. அவற்றின் மீது அமெரிக்கா தாக்குதல் செய்வதற்கு பாஹ்ரேனில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவின் பங்கு மிக முக்கியம். அதற்கு பாஹ்ரேனின் ஒத்துழைப்பு அவசியம். பாஹ்ரேயின் வெளியுறவுத் துறை அமைச்சரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும் ஒன்றாக இஸ்ரேலுக்கு பயணித்ததின் நோக்கம் பாஹ்ரேனின் ஒத்துழைப்பைப் பெறுவதாக இருக்கலாம். சியா இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக்  கொண்ட பாஹ்ரேனில் சுனி இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி நடக்கின்றது. அங்கிருந்து சியா இஸ்லாமிய நாடான ஈரானின் மீது தாக்குதல் செய்யப்பட்டால் பாஹ்ரேனில் உள்ள சியா இஸ்லாமியர்கள் கிளர்ந்து எழலாம். அதை அடக்குவதற்கான முன்னேற்பாட்டை செய்ய வேண்டும். அதற்கு இஸ்ரேலிய உளவுத்துறையின் பங்களிப்பு அவசியம்.

ஈரானின் மீதான தாக்குதல் சியா இஸ்லாமியர்களைப் பெரும் பான்மையினராக கொண்ட ஈராக்கிலும் பெரும் குழப்பத்தை உருவாக்கலாம். ஈரானின் ஆதரவு பெற்ற சியா இஸ்லாமியப் போராளிகள் அமைப்பான ஹிஸ்புல்லாவும் மற்ற போராளி அமைப்புக்களும் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தலாம். இதனால் அமெரிக்க படைத்துறை மற்றும் வெளியுறவுத் துறை நிபுணர்கள் ஈரான் மீதான தாக்குதலை எதிர்ப்பார்கள். ஆனால் ஜோன் பைடனின் வெற்றி இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் போரைக் கொண்டு வரும் என இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் எக்காளமிட்டுள்ளார். ஈரான் மூன்று பக்கம் மலைகளையும் நான்காம் புறம் பெரும் கடலையும் எல்லைகளாக கொண்ட ஆக்கிரமிக்க முடியாத கோட்டை. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது உலக எரிபொருள் உற்பத்தியையும் விநியோகத்தையும் பெருமளவில் பாதிக்கும். ஈரானை ஏவுகணைகளால் தாக்குவது குளவிக் கூட்டில் கல்லெறிவது போன்றது. ஈரானின் ஆதரவு பெற்ற பல போராளி அமைப்புக்கள் வட அமெரிக்காவிலும் மேற்காசியாவிலும் உள்ள அமெரிக்காவின் படைத்துறை, அரசுறவியல், குடிசார் நிலைகள் மீது தாக்குதல் நடத்தலாம்.

டொனால்ட் டிரம்பைப் பொறுத்தவரை தனக்கு அடுத்ததாகப் பதவிக்கு வரவிருக்கும் ஜோன் பைடனுக்கு எப்படி சிக்கல்களை ஏற்படுத்துவதுதான் முக்கியமானதாகும்.


இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...