Followers

Monday 15 June 2020

புவிசார் குழாயடிச் சண்டை



மசகு எண்ணெயும் எரிவாயுவும் குழாய்களூடாக பல நாடுகளுக்கு விநியோகிக்கப்படுகின்றது. பூமிக்கடியில் 3.5மில்லியன் கிலோ மீட்டர் நீளமான குழாய்கள் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அது மேலும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. குழாய்கள் நிலத்திற்கு அடியில், நிலத்திற்கு மேலே, கடலுக்கு அடியில் என பதிக்கப்பட்டுள்ளன. இதில் அதிக முனைப்புக் காட்டுவது தன்னை ஒரு எரிபொருள் பெருவல்லரசாக்க முயலும் இரசியாவாகும். இரசிய எரிபொருள் நிறுவனங்களான காஸ்புரோமின் பெறுமதி 60 பில்லியன் டொலர்களாகவும் ரொஸ்நெஃப்ட்டின் பெறுமதி 70பில்லியன் டொலர்களாகவும் இருக்கின்றன. இவை இரண்டும் இரசியப் பொருளாதாரத்தின் உயிர்நாடிகளாகும்.



எரிபொருள் அரசியல்

உலகின் மிக நீளமான எண்ணெய்க் குழாய் துருஜ்பா இரசியாவில் ஆரம்பித்து பெலரஸ் நாட்டுக்கு சென்று அங்கு அது இரண்டாகப் பிரிந்து ஒன்று போலாந்து ஜேர்மனி போன்ற நாடுகளுக்கும் மற்றது உக்ரேன், ஹங்கேரி, சுலோவேக்கிய செக் குடியரசு ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றது. மற்ற ஐரோப்பிய நாடுகளின் எரிவாயுத் தேவையில் 37% இரசியாவில் இருந்து செல்லும் குழாய்கள் மூலமாகவே பெறப்படுகின்றன. இரசியா மீது மற்ற ஐரோப்பிய நாடுகள் எரிபொருளுக்கு தங்கியிருக்கக் கூடாது என்பதற்காக சிரியாவினூடாக வளைகுடா நாடுகளில் இருந்து குழாய்கள் மூலமான எரிபொருள் விநியோகம் செய்வதற்கு பஷார் அல் அசாத் உடன்படாமையால் அவரது ஆட்சியை அகற்ற சதி செய்யப்பட்டது. இரசியா தலையிட்டு அவரது ஆட்சியைக் காப்பாற்றியுள்ளார். உக்ரேனுடாகச் இரசியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை எடுத்துச் செல்லும் குழாய்கள் உக்ரேனை ஒட்டிய புவிசார் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கித்துக் கொண்டிருக்கின்றது. உக்ரேன் இரசியாவின் எதிரிகளுக்கு சார்பான நாடாக மாறக் கூடாது என்பதில் இரசியா உறுதியாக இருந்தது.


இரசியாவைத்தாக்கும் எரிபொருள் விலைவீழ்ச்சி

கொவிட்-19 தொற்று நோயின் தாக்கத்தின் பின்னர் எரிபொருள் பெருமளவில் வீழ்ச்சியடைந்திருப்பதால் இரசியாவின் ஏற்றுமதி வருமானத்தில் 60% விழுக்காடும் பாதீட்டு வருமானத்தில் 30% விழுக்காடும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் இரசியப் பொருளாதாரத்தின் மொத்த உற்பத்தி எட்டு முதல் பன்னிரண்டு விழுக்காடு அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. உலக எரிபொருள் சந்தையில் இரசியா ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க அமெரிக்கா பெரும் முயற்ச்சி எடுக்கின்றது.


இரசிய எரிபொருளுக்கு மாற்றீடாக மத்திய ஆசிய நாடான தேர்க்மெனிஸ்த்தானில் இருந்து துருக்கிக்கும் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கும் குழாய் மூலம் எரிபொருள் விநியோக்கிக்கும் திட்டமும் செயற்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றது. கஸ்பியன் கடலுட்டாகச் செல்லும் இந்தக் குழாயகள் Trans-Caspian Gas Pipeline என அழைக்கப்படுகின்றது.

Nord Stream - 2 திட்டம் ஜேர்மனியில் இருந்து இரசியாவிற்கு இயற்கை வாயுவை போல்ரிக் கடலினடியில் போடப்படும் குழாய்களூடாக வழங்கும் திட்டமாகும்.  ந்தக் குழாய்த் திட்டம் Nord Stream 2 AG என்ற இரசிய நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இரசியாவின் மிகப்பெரும் எரிபொருள் நிறுவனமான காஸ்புரோம் ஆகும். இது உலகின் மிகப்பெரிய எரிபொருள் நிறுவனமாகும். முதலில் Nord Stream-2 குழாய் பின்லாந்துக்கும் எஸ்தோனியாவிற்கும் இடையிலுள்ள கடலின் நடுவிலும் பின்னர் சுவீடனுக்கும் லத்வியா, லித்துவேனியா ஆகிய வற்றின் நடுவிலும் பின்னர் போலாந்துக்கும் சுவீடனுக்கும் இடையில் உள்ள கடற்பரப்பினூடாகவும் செல்கின்றது. இரசியாவின் NORD STREAM – 2 என்னும் குழாய் மூலமான எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக அமெரிக்காவின் இரு கட்சிகளையும் சேர்ந்த இரண்டு மூதவை உறுப்பினர்கள் முதவையில் புதிய சட்ட முன்மொழிவை 2020 ஜுன் மாதம் முன்வைத்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்கா இரசியாவின் இந்த் திட்டத்தில் பங்கு கொள்ளும் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அறிமுகம் செய்துள்ளது. அது மேலும் இறுக்கமாக்கப்படவுள்ளது.

முறியடிப்பு முயற்ச்சி

NORD STREAM – 2 குழாய்த் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க விதித்த பொருளாதாரத் தடையால் 2019 டிசம்பரில் இன்னும் நூறு மைல்கள் நீளமான குழாய்களே கடலடியில் இடப்பட வேண்டியிருக்கும் நிலையில் அது நிறுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின் 94% நிறைவேற்றப்பட்டு விட்டது. ஐரோப்பிய ஒன்றியம் தனது உள்ளக எரிவாயுச் சந்தையில் இரசியாவின் காஸ்புறோம் நிறுவனம் செயற்படுவதைக் கடுமையாக்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. NORD STREAM – 2 திட்டத்தை முழுமையாக முறியடிக்கும் திட்டத்தை அமெரிக்கா இப்போது முடுக்கி விட்டுள்ளது. Allseas என்ற சுவிஸ்-டச் நிறுவனம் தனது இரண்டு கப்பல்கள் மூலம் NORD STREAM – 2இற்கான கடலுக்கு அடியில் குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அமெரிக்கப் பொருளாதாரத்தடையால் அது தனது குழாய் பதிக்கும் கப்பலை காஸ்புறோமிற்கு விற்பனை செய்யலாம். அமெரிக்க மூதவை உறுப்பினர்களின் சட்ட மூலம் பின்னோக்கிச் வகையில் செயற்படக் கூடிய வரையப்பட்டுள்ளது. இரசிய காஸ்புறோம் நிறுவனத்திற்கு காப்புறுதிச் சேவை, உபகரணங்கள், தொழில்நுட்பம், துறைமுக வசதி, இணைப்புப்பணி, அளவைப்பணி, கல்லுப்போடும்பணி ஆகியவற்றை வழங்கிய நிறுவனங்களுக்கும் வழங்கவிருக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கவிருக்கின்றது. இந்தப் பொருளாதாரத் தடை இரசியாவில் இருந்து துருக்கிக்கு கருங்கடலூடாக எரிவாயு விநியோகிக்கும் TurkStream pipeline திட்டத்திற்கு எதிராகவும் நடைமுறைப்படுத்தப்படும். இரசியாவின் NORD STREAM – 2  திட்டத்திற்கு போலாந்து, உக்ரேன், லித்துவேனியா, லத்வியா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகளும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் தனது எரிபொருள் உறுதிப்பாட்டில் இரசிய ஆதிக்கத்தையிட்டு கரிசனை கொண்டுள்ளது. இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் NORD STREAM – 2  திட்டம் வெளிநாடுகளின் செயற்பாடுகள் இல்லாமல் இரசியாவாலேயே நிறவேற்றி வைக்கபடும் என சூழுரைத்துள்ளார்.

பல நாடுகள் சம்பந்தப்பட்ட Nord Stream 2

ஜேர்மனி Nord Stream 2 திட்டத்தால் நன்மையடையவிருக்கின்றது. அதனால் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது பாவனை செய்கின்றது. இது முழுக்க முழுக்க ஒரு வர்த்தகத் திட்டம் என்கின்றது ஜேர்மனி. ஒஸ்ரியா, ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த எரிபொருள் நிறுவனங்கள் Nord Stream 2  திட்டத்தில் ஒரு பில்லியன் யூரோ முதலீடு செய்யவிருந்தன. Nord Stream 2 AG என்ற நிறுவனத்தின் தகவலின் படி 25 நாடுகளைச் சேர்ந்த ஆயிரம் நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா தனது நாட்டுக்கு வெளியில் நடக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டம் இயற்றுவதையும் அதை நிறைவேற்றுவதையும் பன்னாட்டு சட்டங்களுக்கு விரோதமானவையாகப் பார்க்க வேண்டும் என்றார் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கான உறுப்பினர் ஒருவர். ஐரோப்பிய ஒன்றியம் சூழல் பாதுகாப்பிற்காக கரியற்ற சூழலை 2050 உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதனால் எரிவாயுப் பாவனை முற்றாக இல்லாமல் போகலாம். அது இரசிய எரிபொருள் விநியோகத்தை பெருமளவு குறைக்கலாம். ஆனால் சீனாவில் எரிவாயுப்பாவனை பெருமளவில் அதிகரித்துக் கொண்டே போகின்றது. 2014-ம் ஆண்டு மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக விதித்த பொருளாதாரத் தடையைத் தொடர்ந்து இரசியாவிலிருந்து சீனாவிற்கு குழாய் மூலம் எரிபொருள் விநியோகம் செய்யும் திட்டத்தை இரு நாடுகளும் ஆரம்பித்தன.

இரசியாவுடன் மென்போக்கை கடைப்பிடித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக எரிபொருள் ஆதிக்கம் என வரும்போது அவர் இரசியாவிற்கு எதிராக உறுதியாக நிற்கின்றார். ஜேர்மனி இரசியாவில் இருந்து எரிபொருள் வாங்குவதற்குப் பதலாகா அமெரிக்காவிடமிருந்து கப்பல் மூலம் விநியோகிக்கும் எரிபொருளை அது வாங்க வேண்டும் என அவர் நினைக்கின்றார். இந்த அடிப்படையில் இரசிய ஆக்கிரமிப்பில் இருந்து ஜேர்மனியைக் காப்பாற்றுவது எனச் சொல்லிக் கொண்டு ஜேர்மனியில் இருக்கும் அமெரிக்கப் படைகளைக் குறைக்கப் போவதாக அவர் சொல்லியுள்ளார். ஜேர்மனியில் தற்போது 34,500 அமெரிக்க படையினர் உள்ளனர். அவர்களில் 9,500ஐ வெளியேற்றி 25000 ஆக குறைக்க டிரம்ப் ஆலோசித்து வருகின்றார். இதற்கு அமெரிக்காவில் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2020-06-14: Nord Strem 2 குழாய்த் திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா அதிகரித்துள்ள பொருளாதாரத் தடையையிட்டு ஜேர்மனி தனது கவலையை வெளியிட்டதுடன் ஐரோப்பாவின் எரிபொருள் பாதுகாப்பில் அமெரிக்க தலையீடாக அமெரிக்காவின் பொருளாதாரத்தடை கருதப்பட வேண்டியுள்ளது என்றது ஜேர்மனி.

No comments:

Post a Comment

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...