Followers

Monday, 17 October 2022

சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் உரையின் தாற்பரியம்


2022 ஒக்டோபர் 16-ம் திகதி சீனாவின் மக்கள் பெருமண்டபத்தில் ஆரம்பமான சீனப் பொதுவுடமைக் கட்சியின் 20வது பேராயம் (congress) வரலாற்று முக்கியத்துவமானதாக இருக்கின்றது. சீனப் பொதுவுடமைக் கட்சியின் 90மில்லியன் உறுப்பினர்கள் தெரிவு செய்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை கூடி கொள்கைகளை வகுக்கும் கூட்டம் பேராயம் (congress) எனப்படும்.
சீனப் பொதுவுடமைக் கட்சி, சீன அரசு, சீனப்படைத்துறை ஆகிய மூன்று அதிகார மையங்களும் சீனாவின் பாட்டாளி வர்க்கத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்டவை என்று பொதுவுடமைவாதிகள் சொல்கின்றனர். இவற்றில் அதிக அதிகாரம் கொண்டது பொதுவுடமைக் கட்சியே. தகுதிக்கு முன்னுரிமை கொடுத்தல், நடைமுறைக்கு ஏற்பட மாற்றங்களைச் செய்தல் போன்றவற்றால் பொதுவுடமைக் கட்சி சீனாவில் நிலைத்திருக்கின்றது.

கட்சிக் கட்டமைப்பு



பேராயத்தினர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை கூடி நானூறு வரையிலான நடுவண் குழு உறுப்பினரை தெரிவு செய்வர். நானூறு உறுப்பினர்களும் politburo என்னும் 25 பேர் கொண்ட அரசியற்குழுவை தெரிவு செய்வர். அரசியற்குழு தனது நிலையியற் குழுவைத் தெரிவு செய்யும். தெரிவுக் குழுவின் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளர் இருப்பார். நடுவண் குழுவே பொதுச் செயலாளரைத் தெரிவு செய்யும். அரசுத் தலைவர்: (Head of the State) இவரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் பேராயம் தெரிவு செய்யும். இது இரண்டாவது அதிகார மையமாகும். Politburo: அரசியல்குழு என்பது பொதுவுடமைக் கட்சியின் கொள்கை உருவாக்கும் அமைப்பாகும். 25 உறுப்பினர்கள். பொதுச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது நடுவண் குழுவால் தெரிவு செய்யப்படும். Politburo Standing Committee: அரசியல் குழுவின் நிலையியல் குழு. இது அரசியல் குழுவால் தெரிவு செய்யப்படும். 

ஆயுட்கால அதிகாரம்

20வது பேராயத்தில் பொதுச் செயலாளரின் பதவிக்கால எல்லையான பத்து ஆண்டுகள் இல்லாமல் செய்யப்படும். அதன் படி சீனாவின் அதிகாரமிக்கவராக ஜீ ஜின்பிங் தொடர்ந்து பதவி வகிப்பார். ஒஸ்ரேலியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் கெவின் ரட் அவர்க்ள் நீண்ட ஆயுளைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த 69 வயதான ஜீ ஜின்பிங் இன்னும் 15 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என எதிர்வு கூறியுள்ளார். சீனாவின் அரசுத் தலைவராகவும் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளராகவும் படைத்துறையின் உச்சத் தளபதியாகவும் பதவி வகித்து வந்த ஜீ ஜின்பிங் பொதுச்செயலாளராகவும் தளபதியாகவும் தொடர்ந்தும் பதவி வகிக்கவுள்ளார். உலக அமைதி, உலக பொருளாதாரம் ஆசிய பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவை மிகவும் குழப்பமடைந்துள்ள நிலையில் ஜீ ஜின்பிங் 20வது பேராயத்தில் ஆற்றிய உரை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டது.

தைவானும் கொவிட்-19ம் 

தைவானை சீனாவுடன் இணைப்பது அண்மைக் காலங்களாக ஜீ ஜின்பிங்கின் முதன்மை கொள்கையாக இருக்கின்றது. தைவானை சீனாவுடன் இணைப்பதை மீளவும் உறுதி செய்தார் ஜீ. அமைதியான வழிகளில் இணைக்க முயற்ச்சி மேற்கொள்ளப்படும் என்ற ஜீ அது சரிவராது போனால் படை நடவடிக்கை மூலம் இணைக்க மாட்டேன் எனச் சொல்ல மாட்டேன் என்றார். ஆனால் எப்போது இணைப்பது என்பது பற்றி ஜீ ஏதும் சொல்லாத படியால் உடனடி போர் அபாயம் இல்லை என உறுதியாகச் சொல்லலாம். கொவிட்-19 பெருந்தொற்றை தைவான் மிகச் சிறப்பாக கையாண்டு உலகை வியக்க வைத்துள்ளது. பெருந்தொற்றுக்கு எதிராக ஜீ சீனாவில் எடுத்த மிக இறுக்கமான நடவடிக்கைகள் சீனாவிலேயே அதிருப்தியைக் கிளறியுள்ளது. ஜீ தனது உரையில் கொவிட்-19இற்கு எதிராக தான் எடுத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார்.

பொருளாதாரம் 

கடந்த ஐந்து ஆண்டுகளாக சீனா பெரும் சவால்களை எதிர் கொண்டதை சீனப் பொதுவுடமைக் கட்சியின் 20வது பேராயத்தில் உரையாற்றும் போது ஏற்றுக் கொண்ட ஜீ ஜின்பிங் சீனாவின் பல நகரங்களில் இளையோர் வேலையின்மை 20%இற்கு மேல் இருப்பதைப் பற்றி வாய் திறக்கவில்லை. வீழ்ச்சியடைந்து செல்லும் கட்டிடங்களின் விலை சீனப் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கையில் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது பற்றியும் ஜீ வாய் திறக்கவில்லை. சீனாவின் பொருளாதார வளர்ச்சி உள்நாட்டுக் மக்களின் கொள்வனவையும் உயர்-தொழில்நுட்ப மேம்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டாதாக இருக்கும் என்றார் ஜீ. அவர் பீஜிங்கில் உயர்-தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியைப் பற்றி உரியாற்றுகையில் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒடுக்கக் கூடிய நகர்வுகள் வாசிங்டனில் எடுக்கப்படுகின்றது. சீனாவின் இளையோருக்கு போதிய வேலைவாய்ப்பை வழங்க சீனப் பொருளாதாரம் குறைந்தது 7%ஆவது வளர வேண்டும் ஆனால் நிபுணர்களின் கணிப்பின் படி 2022-ம் ஆண்டு சீனப் பொருளாதாரம் 3.2% மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றது. ஜீயின் உரையில் உணவு உற்பத்தியின் தன்னிறைவு அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 20வது பேராயம் நடை பெறுவதால் 2022இன் மூன்றாம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி தொடர்பான புள்ளிவிபரம் வெளியிடுவதை சீன அரசு தாமதப் படுத்தியுள்ளது. 

பாதுகாப்பு

இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த ஜீ ஜின்பிங்கின் உரையில் அதிக தடவைகள் இடம்பெற்ற வார்த்தை பாதுகாப்பு ஆகும். சீனா அச்சுறுத்தப்படுவதாக காட்ட முயன்ற ஜீ அதை தன்னால் மட்டும் காப்பாற்ற முடியும் எனக் கட்ட முயன்றார். பொருளாதார வளர்ச்சியும் பாதுகாப்பும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்துக் கொண்டு போக வேண்டும் என்றார் ஜீ ஜின்பிங்.

வெளியுறவு

உலகிலேயே அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட சீனாவிற்கு உலக அரங்கில் உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஜீ ஜின்பிங் 20வது பேராயத்தில் அதை கோடிட்டு காட்டினார். தனி ஒரு நாடு உலக ஆதிக்கத்தை செலுத்துவதையும் பனிப்போர் மனப்பாங்கையும் ஜீ தனது உரையில் மறுதலித்திருந்தார்.

தன் பதவிக் காலத்தை தன் ஆயுள்வரை நீடிக்க முயலும் ஜீ ஜின்பிங் இனித்தான் பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். 

Sunday, 9 October 2022

புட்டீனிற்கு பிறந்த நாள் பரிசாக கிறிமியா பாலம் தீயிடப்பட்டதா?

 


கிறிமியாவிற்கு இரசியாவில் இருந்து 2018-ம் ஆண்டு கேர்ச் நீரிணையின் குறுக்கே $3.7பில்லியன் செலவில் 2018-ம் ஆண்டு பெரும் ரவாரத்துடன் கட்டிய பாலம் அவரது பிறந்த நாள் பரிசாக 2022 ஒக்டோபர் 8-ம் திகதி சனிக்கிழமை தீயிடப் பட்டது என உக்ரேனின் படைத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவி-த்துள்ளார். கிறிமியா பாலம், கேர்ச் நீரிணைப் பாலம் போன்ற பெயர்களால் அழைக்கப்படும் 19கிமீ (12மைல்) நீளமான பாலம் ஐரோப்பாவிலேயே பெரிய பாலமாகும். அதை தீப்பிடிக்க வைத்த தாக்குதலுக்கு உக்ரேன் உரிமை கோராவிட்டாலும் உக்ரேனில் பல தரப்பினரும் தம் சமூக வலைத்தளப் பதிவுகளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். “பாலம் ஆரம்பம்; சட்டவிரோதமானதெல்லாம் அழிக்கப்படவேண்டும், களவாடப் பட்ட தெல்லாவற்றையும் உக்ரேன் திரும்பப் பெறவேண்டும்; ஆக்கிரமிப்பாளரகள் வெளியேற்றப்பட வேண்டும்” என உக்ரேனிய அதிகாரி ஒருவரின் டுவிட்டர் பதிவு கூறுகின்றது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்படி ஒரு பாலம் கட்டும் முயற்ச்சி மேற் கொள்ளப்பட்டது.



பயங்கரவாதம் என்ற புட்டீனின் பயங்கர பதிலடியா?

கிறிமியா பாலத்தை சேதப்படுத்தியமையை பயங்கரவாதச் செயல் எனக் கண்டித்தார் விளடிமீர் புட்டீன். அவர் சொன்ன மறுநாள் 2022-10-10 திங்கட் கிழமை உக்ரேனின் ஏழுக்கு மேற்பட்ட நகரங்களில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. உக்ரேன் தலைநகர் கீவ் பல குண்டுவெடிப்புக்களால் பாதிக்கப்பட்டுள்ளது. குண்டுத்தாக்குதல் உக்ரேனின் மேற்குப் புறத்தில் போலாந்து எல்லையில் உள்ள அதாவது இரசியாவில் இருந்து ஆகக் கூடிய தொலைவில் உள்ள நகரங்கள் மீதும் நடைபெற்றுள்ளது. மேற்குப் பிராந்திய நகரமான Lviv நகர் மீடு நடந்த குட்ண்டுத்தாக்குதலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் குடியிருப்புக்கள் வேண்டுமென்றே தெரிவு செய்யப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மக்கள் குடியிருக்கும் பல தொடர் மாடிக் கட்டிடங்கள் மீதான தாக்குதல் பாரதூரமான போர்க்குற்றமாகும்.

தாக்குதல் நடந்த வித்தில் முரண்பாடு

கேர்ச் பாலத்தின் மீது சென்ற வெடி குண்டு நிரப்பிய வண்டியை வெடிக்க வைத்து பாலம் சேதப்படுத்தப் பட்டதாக இரசியா சொல்கின்றது. ஆனால் பாலத்தின் கீழ் ஆட்கள் இயக்கிய அல்லது ஆளில்லா படகு ஒன்றை பாலத்தின் மேல் எரிபொருள் தாங்கிச் செல்லும் ஏழு வண்டிகள் சென்று கொண்டிருக்கையில் வெடிக்கச் தீ மூட்டப்பட்டதாக மேற்கு நாட்டு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். பாலத்தின் உள்ள உருக்குகளை உருகச் செய்யும் அளவிற்கு தீயினால் வெப்பம் அதிகரிக்கும் படி தாக்குதல் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.



உக்ரேனுக்கு சிரமம் கொடுக்க கட்டப்பட்ட பாலம்

கிறிமியாவில் நிலை கொண்டுள்ள இரசியப் படையினருக்கான வழங்கல்களை துரிதமாகச் செய்வதற்கு கட்டப்பட்ட பாலம் 2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கத் தொடங்கியதில் இருந்தே தாக்கப்படலாம் என்ற பேச்சு அடிபட்டது. குளிர்காலம் தொடங்குகின்ற நேரம் பார்த்து அது தகர்க்கும் நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. கொத்தளிப்பான கால நிலையில் கிறிமியாவிற்கான வழங்கல்களை இலகுவாகச் செய்வதற்கு மட்டும் அப்பாலம் கட்டப்படவில்லை. வேண்டு மென்றே கடல் மட்டத்தில் இருந்து 30மீட்டர் உயரத்தில் அதைக் கட்டி கேர்ச் நீரிணை மூலம் உக்ரேனின் பெரிய கப்பல்கள் செல்வதை இரசியா தடுத்தது.

ஊதிப் பெரிதாக்கும் மேற்கு ஊடகங்கள்

வெறுவாயை மென்று கொண்டிருந்த மேற்கு நாட்டு ஊடகங்களுக்கு 2022 செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து உக்ரேனியர்கள் தொடச்சியாக உச்சக்கட்டமாக அவல்களை ஊட்டிக் கொண்டிருக்கின்றனர். அதன் 2022 ஒக்டோபர் 8-ம் திகதி மொஸ்க்கோ நேரம் காலை ஆறுமணிக்கு உக்ரேன் பாலத்தின் மீது தீ வைக்கப்பட்டுள்ளது. புட்டீனின் பொக்கிசம் அழிக்கப்பட்டது; கிறிமியாவிற்கான வழங்கல் துண்டிக்கப்பட்டது; புட்டீனிற்கு பேரிடி போன்று எல்லாம் மேற்கு நாட்டு ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன. சிரியாவிற்கு பெரும் படை நகர்வை துரிதமாகச் செய்த இரசியாவினால் 19கிமீ தொலைவில் உள்ள கிறிமியாவிற்கு வான் வழியாகவும் கடல் வழியாகவும் வழங்கல்களை செய்வது முடியாத செயல் அல்ல. சிறு பகுதி மட்டும் சேதமாக்கப்பட்ட பாலத்தை திருத்தி ஒரு சில மணித்தியாலங்களுக்குள் அதனூடாக பாரம் குறைந்த வண்டிகளை இரசியா ஓட வைத்துள்ளது. ஆனால் தம்பட்டமடிப்பதில் விருப்பமுடைய இரசிய அதிபருக்கு பாலம் தீப்பிடித்தமை ஓர் இடுகுறி இழப்பீடாகும். இரசிய மக்களுக்கு மூடி மறைக்க முடியாத இழப்பாக இது இருக்கின்றது. கிறிமியாப் பாலத்தை 2018இல் திறந்து வைத்துவிட்டு புட்டீன் தானே ஒரு பார ஊர்தியை அதன் மேலாக ஓட்டிச் சென்றார். இரசியாவின் கடற்படையின் இதயமான செவஸ்டோபோல் தளத்தை மேலும் வலுவாக்கியது என அப்போது புட்டீன் சூளுரைத்திருந்தார்.

வலிமையான பாதுகாப்பு

கேர்ச் பாலத்தை பாதுகாக்க இரசியாவின் பெருமை மிக்க S-400 ஏவுகணை எதிர்ப்பு,  செய்மதிக் கண்காணிப்பு, வேவு விமானம், ஈருடக கப்பல்கள், கதுவிகள் (ரடார்கள்) பயிற்றப்பட்ட டொல்பின்கள், நீரடி நீச்சல் கவலாளிகள், படகுகள் என இருபது வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 2022 ஓகஸ்ட் மாதத்தில் செவஸ்டோபோலில் உள்ள கடற்படைத் தலைமையகம் மீது உக்ரேன் ஆளிலிகள் (Drones) மூலம் தாக்குதல் செய்யப்பட்டது. அதே மாதம் கிறிமியாவில் உள்ள இரசியாவின் சாக்கி விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கு மேற்பட்ட இரசிய விமானங்கள் வெடித்துச் சிதற வைக்கப்பட்டன. இத்தாக்குதல்களுக்குப் பிறகு கிறிமியாவில் இருந்து பலர் கிறிமியாப் பாலத்தினூடாக தப்பி இரசியாவிற்கு ஓடியிருந்தனர். அப்போது அப்பாலத்தினூடாக ஒரு நாளுக்கு 38,000 கார்கள் பயணித்திருந்தன.

இரசியாவிற்கு எதிராக பயங்கரமான திட்டமா?

ஒரு புறம் உக்ரேனின் வடகிழக்கு பிரதேசத்தில் உள்ள இரசியப் படையினரை வெளியேற்றுவதில் ஆரம்பித்து பின்னர் லுகான்ஸ்க், மாரியப்போல் ஆகிய பிரதேசங்களில் இருந்தும் இரசியப் படையினரை அகற்றி கிறிமியா நோக்கி உக்ரேன் படையினர் முன்னேறுவது ஒரு திட்டம். மறு திட்டமாக கேர்சன் பகுதியை கைப்பற்றி கிறிமியாவை நோக்கி முன்னேறுவது. அதற்கு வசதியாக கிறிமியாவிற்கான வழங்கல்களை துண்டிக்க வேண்டும் என்பதற்காக கிறிமியா பாலத்தை தகர்க்கும் முயற்ச்சியில் உக்ரேனியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பார ஊர்தி போக்குவரத்துக்கு என்றும் தொடருந்து போக்குவரத்துக்கு என்றும் இரண்டு தனிப் பாலங்களில் பார ஊர்தி பாலம் மட்டும் சேதமடைந்துள்ளது. மீளவும் திருத்தியமைக்க ஆறுமாதம் எடுக்கக்கூடிய வகையில் இரண்டு பாலங்களும் சேதமாக்கப்பட்டால் மட்டுமே இரசியாவிற்கு பின்னடைவு ஏற்படும்.

இரசியா உக்கிரமான பதிலடி கொடுக்குமா?

உக்ரேனின் வட கிழக்குப் பகுதி கார்க்கீவ் பிரதேசத்தில் 2022 செப்டம்பரில் இரசியாவிற்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து இரசியால் உக்ரேனின் உட்-கட்டுமான ங்கள் மீது தாக்குதல் நடத்தி குடிமக்களுக்கு பல அசௌகரியங்களை ஏற்படுத்தியது. அது போல் கிறிமியா பாலத்தின் மீதான தாக்குதலுக்கு இரசியா கடுமையான பழிவாங்கல் நடவடிக்கையை ஏற்படுத்தும். புட்டீனின் ஆதரவாளர்கள் கொடூரமான பதிலடி கொடுக்கும் படி அவரை வற்புறுத்துடவதாக செய்திகள் வெளிவருகின்றன. உக்ரேனும் அதற்கு தயாராகுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

இரசியாவில் தலைகள் உருளுமா?

புட்டீனின் ஆதரவாளர்களாக இருப்பவரகள் இரசியத் தேசியவாதிகள், செஸ்னியன் தலைவர் ரம்ஜான் கடிரோவ், இரசிய கூலிப்படை உரிமையாளர் யெவ்கெனி ப்ரிகொஜின் ஆகியோர் ஆகும். இந்த ஆதரவாளர்கள் உக்ரேன் போரில் இரசியாவின் பின்னடைவிற்கு இரசியத் தளபதி கேர்ணல் ஜெனரல் அலெக்சாண்டர் லப்பின் மீது குற்றம் சுமத்துகின்றனர். அவர் பதவி விலக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது. இரசியாவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்காக இரசியாவின் பாதுகாப்பு அமைச்சர் சேர்கி ஷொய்கு தற்கொலை செய்யவேண்டும் என இரசியா கைப்பற்றிய கேர்சன் பிரதேசத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட Kirill Stremousov பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.



Tuesday, 4 October 2022

இந்தியா உற்பத்தி செய்த முதல் தாக்குதல் உலங்கு வானூர்தி


இந்தியாவின் முதலாவது உள்நாட்டு தயாரிப்பு High-Altitude Combat Helicopter தாக்குதல் உலங்கு வானூர்தி 2022-10-03 திங்கட் கிழமை பறக்க விடப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி இந்தியாவிற்கு தேவையான எல்லா எல்லா பாதுகாப்பு படைக்கலன்களையும் உபகரணங்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் முயற்ச்சியின் ஒரு பெரிய படி என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமைப்பட்டுக் கொண்டார். உக்கிரம் என்னும் பொருள் பட இத் தாக்குதல் உலங்கு வானுர்திக்கு Prachand எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2010இல் இதற்கான முதல் வடிவம் உருவாக்கி தேர்வுக்கு உள்ளாக்கப்பட்டது. Prachand வானூர்திகள் இந்தியாவில் தேஜஸ் விமானங்களைப் போல் Light Combat Aircraft வகையை சார்ந்தது. இதுவரை இந்தியப் படையினருக்கு தேவையான தாக்குதல் உலங்கு வானூர்திகளை போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டது. 

உலகின் மிக உயர எல்லையில் செயற்படும் திறன்
சீன எல்லையில் மிகவும் உயரமான இடத்தில் செயற்படக்கூடிய வகையில் Prachand என்னும்  High-Altitude Combat Helicopter வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 
இந்திய உலங்கு வானூர்தியின் தன்மைகள்:
1. 5.8 தொன் எடை
2. இரட்டை இயந்திரம்
3. எதிரியின் ரடாரக\ளால் கண்டறியக் கடினமான புலப்படாத்தன்மை (Stealth Features)
4. இரவிலும் தாக்குதல் செய்யக் கூடியது
5. எதிரியின் தாக்குதலை தாக்குப் பிடிக்க கூடிய கவசப் பாதுகாப்பு (Armoured Protection)
6. தீவிரவாதிகளுக்கு எதிராக சிறப்பாகச் செயற்படக் கூடியது
இந்திய அரசு Prachand உலங்கு வானூர்தியின் உற்பத்தியை HAL என சுருக்கமாக அழைக்கப்படும் Hindustan Aeronautics Ltd இடம் ஒப்படைத்திருந்தது. இந்தியப் பாதுகாப்புத் துறை முதலில் 15 Prachandஇற்கான உற்பத்தி வேண்டுதலைசெய்துள்ளது. அவற்றின் மொத்தப்பெறுமதி 39பில்லியன் ரூபாக்களாகும். 

அமெரிக்க போயிங் நிறுவனத்தின் Apache உலங்கு வானூர்திகள் 1890குதிரைவலுக் கொண்டவை. இந்தியாவின் Prachandஇன் வலிமை 1430 மட்டுமே. Apache இன் உயர் வேகம் 295கிமி/மணி Prachandஇன் வேகம் 280. Prachand 6500கிமீ உயரத்தில் பறந்து 700கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை இனம் காணக் கூடியது. ஆனால் Apache 6400கிமீ உயரம் மட்டும்வரை பறந்து 480கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை இனம் காணக் கூடியது. 


Prachand என்னும்  High-Altitude Combat Helicopter இன் இயந்திரங்கள் பிரான்சின் Safran SA நிறுவனத்தால் உருவாக்கப் பட்டவையாகும். அதனால் இந்தியாவின் Prachand ஒரு முழுமையான உள்ளூர் உற்பத்தி எனச் சொல்ல முடியாது.  2017-ம் ஆண்டில் இருந்து உலகிலேயே அதிக அளவு படைக்கலன்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது. இந்தியாவிற்கு தேவையான படைக்கலன்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் நிலையை அடைய இந்தியா மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.



Monday, 3 October 2022

காங்கிரசுத் தலைவர் தேர்தலில் சோனியா காந்தி மல்லிகை சூடுவாரா?

 


காங்கிரசு கட்சியின் தலைவர் தேர்வு 2022 ஒக்டோபர் மாதம்17-ம் திகதி நடைபெறவுள்ளது. 2017-ம் ஆண்டு நடந்த தலைமைப் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தி (அவருக்கு விருப்பமில்லாமலே) போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் 2019இல் நடந்த இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான பொதுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி படு தோல்வியடைந்தது. அதைக் சாட்டக வைத்து ராகுல் தன் மீது திணிக்கப்பட்ட தலைமைப் பதவில் இருந்து விலகினார். ஒக்டோபர் 17ம் திகதி நடக்க விருக்கும் தேர்தலில் சோனியா குடும்பத்தின் சொற்படி ஆடக்கூடிய 71 வயதான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சோனியா ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார் என்று கூறப்படுகின்றது. காங்கிரசுக் கட்சியின் உடைப்பூர் பிரகடனம் ஒருவருக்கு ஒரு பதவி தான் எனக் கூறுகின்றது. ஆனாலும் கட்சியின் தலைவராகவும் ராஜஸ்த்தான் முதல்வராகவும் தானே இருக்க வேண்டும் என அசோக் கெலாட் வலியுறுத்தினார். அது முடியாத போது பதவியை ராஜினாமா செய்தாலும் தனது ஆதரவாளர் மட்டுமே முதல்வர் ஆக வேண்டும் என்று அசோக் கெலாட் வேண்டுகோள் வைத்ததாக கூறப்படுகிறது.

ராஜஸ்த்தான் மாநிலத்தில் உட்பூசல் உச்சம் தொட்டது

அசோக் கெலாட் தனது ஆதரவு எம்எல்ஏக்களை தூண்டிவிட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இவர் முதல்வராகவும் தேசிய தலைவராகவும் இருக்கட்டும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரசு சட்டமன்ற உறுபினர்கள் தெரிவித்தனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தி 90 எம்எல்ஏக்கள் மாநில சட்ட மன்றப் பதவியில் இருந்து செய்ய போவதாக காங்கிரசுக் கட்சியை மிரட்டினார்கள். இதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அசோக் கெலாட் கூறியுள்ளார். அசோக் தனது காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் தன் கடும் சவாலாக இருப்பவருமான சச்சின் பைலட் தனக்கு பின் முதல்வராக கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்தியாவில் ஆக சதிஸ்கர் மாநிலத்திலும் ராஜஸ்த்தான் மாநிலத்திலும் மட்டுமே சோனியாவின் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் உள்ளது. 2018-ம் ஆண்டு நடந்த ராஜஸ்த்தான் மாநில சட்ட சபைத் தேர்தலின் முன்னர் யார் முதலமைச்சர் என்ற போட்டி அசோக் கெலாட் என்பவருக்கும் சச்சின் பைலட் என்பவருக்கும் இடையில் நடந்தது. சோனியா காந்தி தனக்கு கீழ்ப்படிந்து நடக்க கூடிய அசோக் கெலாட்டை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தார். தேர்தலில் 200 தொகுதிகளில் காங்கிரசு கூட்டணி நூறு இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 73 இடங்களைக் கைப்பற்றியது. அசோக் கெலாட் முதலமைச்சரானார். 2019இல் நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சோனியாவின் காங்கிரசுக் கட்சி தலைமையிலான கூட்டணி ராஜஸ்த்தானில் 25 தொகுதிகளிலும் தோல்வியுற்றது. அடுத்த ராஜஸ்த்தான் சட்ட மன்றத் தேர்தல் 2023இல் நடக்கவிருக்கின்றது. அதில் காங்கிரசுக் கட்சி மண்கவ்வாமல் இருக்க அசோக் கெலாட்டை தன் கட்சியில் தலைவராக்கும் முயற்ச்சியை சோனியா கைவிட்டார். காங்கிரசுக் குஞ்சுகளைத் தூக்க மேலிருந்து அமித் ஷா என்ற கழுகு பார்த்துக் கொண்டிருப்பது சோனியாவிற்கு தெரியும். 

மல்லிகை சூடிய சோனியா

தன் குடும்பத்திற்கு கீழ்ப்படிந்து நடக்கக் கூடியவரான எண்பது வயதான மல்லிகார்ஜூன் கார்கேயை கங்கிரசின் தலைவர் பதவிக்கான வேட்பாளராக சோனியா நிறுத்தியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த சசி தரூரும் காங்கிரசு தலைமை பதவி வேட்பளராக போட்டியிடுகின்றார். மல்லிகார்ஜுன கார்கேயை சோனியா நிறுத்தினாலும் G-23 குழுவினர் அவருக்கு ஆதரவு வழங்குகின்றனர். அதன் முன்னணி உறுப்பினர்களாகிய மனீஷ் திவாரி, ஆனந்த் சர்மா, பிரிதிவிராஜ் சவான், பூபிந்தர் ஹூடா ஆகியோர் அவரது வேட்பாளர் பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளனர். கர்நாடாகா மாநிலத்தில் பிரபல அரசியல்வாதியான மல்லிகார்ஜூண் கார்கே 1972இல் இருந்து தொடர்ந்து பத்து தடவை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர். 2019இல் அவர் தோல்வியடைந்த பின்னர் அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

3G இற்கு எதிராக G-23

2022இல் காங்கிரசுக் கட்சிக்கு சோனியாவின் குடும்பத்திற்கு வெளியே இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரும் திவிரமாகப் பரப்புரை செய்த தேர்தல்களில் காங்கிரசுக் கட்சி படுதோல்வியடைந்தது. 2019 நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும் தகுதியையும் இழந்தது. காங்கிரசுக் கட்சியின் 3Gs எனப்படும் சோனியா ஜீ, ராகுல் ஜீ, பிரியங்கா ஜீ ஆகியவர்கள் மீது விசனமடைந்த பல முன்னணி உறுப்பினர்கள் 23 பேர் ஒன்று கூடி காங்கிரசுக் கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதினர். அந்த தலைவர்கள் G-23 என அழைக்கப்படுகின்றனர். அந்த குழுவின் முன்னணி உறுப்பினர்களாகிய குலாம் நபி அசாத் கபில் சிபல் ஆகிய இருவரும் காங்கிரசுக் கட்சியில் இருந்தே விலகிவிட்டனர்.

தனித்து விடப்பட்டரா சசி தரூர்?

காங்கிரசுக் கட்சியின் அதிருப்தியாளர் குழுவான G-23இல் ஒருவரான சசி தரூரிற்கு ஆதரவாக அந்தக் குழுவினரே இல்லை. G-23 குழுவின் முக்கிய கோரிக்கை காங்கிரசுக் கட்சியின் எல்லாப் பதவிகளிற்கும் உரியவர்கள் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், தலைமை (சோனியா குடும்பம்) சுட்டு விரல் காட்டுபவர்களை தேர்ந்தெடுக்க கூடாது என்பதே. திருவானந்தபுரம் தொகுதி நாடாளுமன்ன மக்களவை உறுப்பினராக சசி தரூர் காங்கிரசுக் கட்சியின் துடிப்பு மிக்க செயற்பாட்டாளர். தனக்கு G-23 குழுவின் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை என்பதை தன்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றார் தரூர். அவர் தனது தேர்தல் நடவடிக்கையை அம்பேத்கார் பௌத்த மதத்தை தழுவிய இடமாகிய நாக்பூரில் உள்ள தீக்‌ஷபூமி நினைவிடத்தில் ஆரம்பித்துள்ளார். அவர் காங்கிரசுக் கட்சியின் மூன்று ஜீக்களையும் சந்தித்து தான் போட்டியிடப் போவதாகவும் அறிவித்ததுடன் அம்மூவரையும் சந்தித்த பின்னர் கட்சி அதிகார பூர்வ வேட்பாளர் யாரும் இல்லை என்பதை கட்சி (அதாவது மூன்று ஜீ) தன்னிடம் சொன்னதாக ஊடகங்களுக்கு அறிவித்தார். போட்டியில் இருந்து விலகுவீர்களா என ஊடகவியலாளர்கள் கேட்ட போது தன்னைப் போட்டியிட வைத்தது கட்சியின் பொதுச் செயற்பாட்டாளர்கள் என்றும் தன் ஆதரவாளர்களுக்கு தான் துரோகம் செய்ய மாட்டேன் என்றும் கூறினார் சசி தரூர். வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகுவதற்கான கடைசி நாள் ஒக்டோபர் 8-ம் திகதியாகும். கட்சியில் அதிகாராம் கீழ் மட்டத்திற்கு பரவலாக்கப் படவேண்டும் என்பது சசியின் கொள்கை. அதிகாரப் பரவலாக்கம் என்பது (காந்தியின் பெயரை தம்முடன் ஒட்டி வைத்திருக்கும்) நேரு குடும்பத்திற்கு பிடிக்காத கெட்ட வாசகமாகும். பிரித்தானியாவில் பழமைவாதக் (Conservative) கட்சி தலைமைத் தேர்தலில் நடப்பது போல் தானும் மல்லிகார்ஜூண் கார்கேயும் பொது விவாதத்தில் ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் சசி தரூர் சிறப்பாகச் செய்யக் கூடியவர். உலக அரங்குகளிலேயே உரையாற்றி பலரையும் வியக்க வைத்தவர் அவர். கட்சி மக்களாட்சிப் படி நடக்கின்றது மூன்று ஜீக்களின் கட்டளைப்படி இயங்கவில்லை எனக் காட்ட சோனியாவுடன் சேர்ந்து சசி தரூர் நாடகமாடுகின்றாரா என்ற கேள்வியும் உண்டு.

G-23 சுருங்கி G-4 ஆகியதா? 

G-23 குழுவில் பங்கு பெற்ற மனீஷ் திவாரி, ஆனந்த் சர்மா, பிரிதிவிராஜ் சவான், பூபிந்தர் ஹூடா ஆகியோர் ஆனந்த் சர்மா வீட்டில் ஒரு கூட்டத்தை நடத்தினர். திக்விஜய சிங் மற்றும் மனிஷ் திவாரி ஆகியோர் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் போட்டியிடாமல் தமது G-23 உள்ள சசி தரூரை ஆதரிக்காமல் மல்லிகார்ஜூணை ஆதரிக்கின்றார்கள். மல்லிகார்ஜூண் காங்கிரசுக் கட்சியில் தற்போது G-23 என்ற குழு இல்லை எல்லோரும் ஒன்று பட்டு விட்டோம் என்கின்றார்.

அடுத்த போட்டி?

காங்கிரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக மல்லிகார்ஜூண் கார்கே மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் துறந்தார். இப்போது காங்கிரசுக்கு இன்னும் ஒரு தலைவலி ஆரம்பித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை அது தேர்ந்தெடுக்க வேண்டும். மல்லிகார்ஜூண் சோனியாவிற்கு தன் கீழ்ப்படிவைக் காட்ட சோனியாவே யார் எதிர்க்கட்சித்தலைவர் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்கின்றார். எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்வதே சிறந்த மக்களாட்சிப் பண்பாகும். இந்தியாவில் அதெல்லாம் கிடையாது.

சோனியாவின் தந்திரம்

கட்சித் தலைவருக்கு பிரித்தானிய பழமைவாதக் (Conservative) கட்சியப் போல் போட்டி அடிப்படையில் வாக்களித்து தெரிவு செய்ய வேண்டும் என்பது காங்கிரசுக் கட்சியில் உள்ள சிலரின் வேண்டுகோளாக இருந்தது. அந்த அடிப்படையிலேயே G-23 என்ற குழு செயற்பட்டது. இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் பார்க்க காங்கிரசுக் கட்சியை தமது குடும்பக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பது சோனியாவின் முதன்மை நோக்கம், அதற்காக தன் மகன் ராகுலை கன்னியாகுமரியில் இருந்து கஷ்மீர் வரையிலான நடைப்பயணத்திற்கு அனுப்பி விட்டு காங்கிரசுக் கட்சியில் தனக்கு கீழ்ப்படிவுள்ள ஒருவரை தலைவராக்க அதுவும் போட்டி அடிப்படையில் தெரிவு செய்து தலைவராக்க முயல்கின்றார். சசி தரூர் மல்லிகார்ஜூண் கார்கே போட்டி அவரது நாடகமே. அவர் மல்லிகார்ஜூணையே அவர் வெற்றி பெற வைப்பார். எண்பது வயதான அவரால் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே நின்று பிடிக்க முடியும். அந்த சில ஆண்டுகளுக்குள் ராகுலை கட்சித் தலைமைக்கு தயார் படுத்தலாம் என சோனியா அம்மையார் கனவு காண்கின்றார். ஆனால் ராகுலும் அரசியல் முதிர்ச்சி வரவே வராது. ஈழ வினை வந்து வாட்டும்.

Friday, 30 September 2022

புட்டீனின் குழாயடிச் சண்டை

 


இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனிடம் உள்ள வலிமை மிக்க பொருளாதாரப் படைக்கலனாக இரசியாவின் எரிவாயு இருக்கின்றது. மற்ற ஐரோப்பிய நாடுகளின் எரிபொருள் தேவையில் 43% இரசியாவில் இருந்து பெறப்படுகின்றது. அமெரிக்கா இதை கடுமையாக எதிர்த்து வந்தது. இரசியாவில் இருந்து பெறுவது மலிவானது என்பதால் அதன் அயல்நாடுகள் அங்கிருந்து பெறுவதை தவிர்க்க விரும்பவில்லை.

படைக்கலனாக எரிபொருள் விநியோகம்

2014 பெப்ரவரி 20-ம் திகதி இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர்  இரசியா இரசியா உக்ரேன் மீது போர் தொடுத்த பின்னர் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் இரசியா மீது பொருளாதார தடைகளை செய்தன. பின்னர் 2022 பெப்ரவை 24-ம் திகதி இரசியாவின் இரண்டாம் ஆக்கிரமிப்பு போரின் பின்னர் அந்த தடைகள் மேலும் விரிவாக்கப்பட்டன. 2022 பெப்ரவரி ஆக்கிரமிப்பின் பின்னர் நேட்டோ நாடுகளும் ஜப்பான் மற்றும் ஒஸ்ரேலியா போன்ற நாடுகளும் இரசியாவிற்கு எதிராக ஒற்றுமைப் பட்டன-. இந்த ஒற்றுமையைக் குலைக்க புட்டீன் இரசியாவின் எரிபொருள் வளத்தை அரசுறவியல் பகடைக் காயாக பயன் படுத்தினார். இரசியா மீது பொருளாதார தடை விதித்த நாடுகளுக்கு எதிராக தனது எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தினார். அதனால் உலகில் எரிபொருள் விலை ஏறியதுடன் இரசியாவின் ஏற்றுமதி வருமானமும் அதிகரித்தது.

புட்டீனின் பதிலடிகள்

உக்ரேனுக்கு எதிரான போரை இரண்டு வாரங்களில் முடிக்க புட்டீன் போட்ட திட்டம் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் உக்ரேனுக்கு வழங்கும் படைக்கலன்களால் தவிடு பொடியானது. 2022 செப்டம்பர் முதல் வாரத்தில் இரசியா பெரும் பின்னடைவையும் சந்திக்க வேண்டியிருந்தது. இதன் பின்னர் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் பல நகர்வுகளைச் செய்து வருகின்றார். இரசியப் படையினருக்கு ஆட் சேர்ப்பு, இரசியா ஆக்கிரமித்த உக்ரேனின் பிரதேசங்களை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு மூலம் இரசியாவுடன் இணைத்தல் உக்ரேனின் உட்-கட்டுமானங்கள் மீது தாக்குதல் என அவரது நடவடிக்கைகள் விரிகின்றன.



Nord Stream – 1 & 2

தனது எரிவாயு விநியோகத்தின் உக்ரேனூடாக செல்லும் நிலத்தடிக் குழாய்களில் தங்கியிருப்பதை விரும்பாத இரசியா 2011-ம் ஆண்டு Nord Stream – 1 என்னும் பெயரில் 2011-ம் ஆண்டு போல்ரிக் கடலினூடாக ஒரு எரிவாயு விநியோகிக்கும் 1222கிமீ (759 மைல்) நீள குழாயை உருவாக்கியது. பின்னர் 2012 இல் Nord Stream – 1 குழாயையும் உருவாக்க தொடங்கியது. இத்திட்டங்களுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

புட்டீனின் எரிவாயுத் தாக்குதல்கள்

2022 ஜூலை 25-ம் திகதி இரசியாவின் எரிபொருள் உற்பத்தி நிறுவனமான Gazprom ஜேர்மனிக்கு Nord Stream – 1இனூடாக் செல்லும் எர்வாயு விநியோகத்தை 20%ஆல் குறைத்தது. பின்னர் 2022 ஓகஸ்ட் 31-ம் திகதி பராமரிப்பு வேலைகளை மேற்கொள்வதற்காக எரிபொருள் விநியோகம் நடைபெற மாட்டாது என இரசியா அறிவித்தது. 2022/23 குளிர்காலத்திற்கு தேவையான எரிவாயுக் கையிருப்பை ஜேர்மனியும் மற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் சேமிக்காமல் பண்ணவே இரசியா இந்த எரிவாயு விநியோகத்தை அவ்வப்போது தடுத்தது எனக் குற்றம் சாட்டப்பட்டது. உக்ரேன் போரில் 2022 செப்டம்பர் முதல் வாரத்தில் இரசியாவிற்கு ஏற்பட்ட பின்னடைவு இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனை கடும் சினத்திற்கு உள்ளாக்கியிருந்தது. அவருடைய ஆதரவாளர்கள் அவர் போர் நடத்தும் முறை பற்றி தமது அதிருப்தியை தெரிவிப்பதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.



புட்டீனின் குழாயடித் தாகுதல்களா?

2022 செப்டம்பர் 26-ம் திகதி நோர்வேயில் இருந்து டென்மார்க் ஊடாக போலாந்து வரை எரிவாயு விநியோகிக்கும் குழாய் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதே நாளில் Nord Stream – 1 மற்றும் Nord Stream – 2 குழாய் சேதப் படுத்தப்பட்டது. இது அமெரிக்காவினதும் உக்ரேனினதும் வேலை என இரசியா குற்றம் சாட்டுகின்றது. அது இரசியாவின் வேலை என அமெரிக்காவும் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளும் குற்றம் சாட்டுகின்றன. இலையுதிர் காலத்தின் முதலாம் வாரத்திலேயே இந்த எரிபொருள் விநியோகத்திற்கான தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. Nord Stream குழாய்களை யார் சேதப்படுத்தினார் என்பதற்கான ஆதாரம் எதையும் யாரும் முன் வைக்கவில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகள் குளிர்கால எர்பொருள் தேவைக்கான பாதுகாப்பின் வலிமை பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது. Nord Stream குழாய்களுக்கு ஏற்படுத்தப் பட்டுள்ள சேதங்களால் மூன்று இடங்களை எரிவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. எளிதில் தீப்பிடிக்கக் கூடிய வாயு போல்ரிக் கடற்பரப்பில் இருப்பதால் கப்பல் மற்றும் மீன்பிடிப் படகுப் போக்குவரத்துக்கள் தடைபட்டுள்ளன.

மாறி மாறிக் குற்றச் சாட்டுகள்

உக்ரேனும் போலந்தும் இரசியாவே Nord Stream குழாய்களை சேதப்படுத்தியது என்கின்றன. டென்மார்க் தலைமை அமைச்சர் Mette Frederiksen குழாய்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதம் ஒரு விபத்தி என நம்ப முடியாது என்றார். Nord Stream – 2இனூடாக விநியோகம் செய்ய முன்னரே உக்ரேன் மீதான இரசியாவின் இரண்டாவது ஆக்கிரமிப்பு தொடங்கி விட்டபடியால் அதுனூடாக ஒரு போதும் எரிவாயு விநியோகம் செய்யவில்லை. இரசியாவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் Nord Stream – 1 உருவாக்கும் போது செய்த ஒப்பத்தத்தின் படி இரசியா எரிவாயுவை விநியோகிக்கும் கடப்பாடு கொண்டுள்ளது. அதை மீறினால் பன்னாட்டு சட்ட நடவடிக்கை மேலும் பொருளாதாரத் தடை போன்றவற்றை மேற்கு நாடுகள் செய்யலாம். சேதப்படுத்தப் பட்ட குழாயால் விநியோக செய்ய முடியாது என்னும்போது இரசியாவிற்கு எதிரான நகர்வுகளைச் செய்ய முடியாது. அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிளிங்கன் ஆரம்ப தகவல்களின் படை வேண்டுமென Nord Stream குழாய்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளன என்றார்.

உக்ரேனுடான எரிவாயு விநியோகத்தை தடுக்க சதியா?

2019-ம் ஆண்டு இரசியாவும் உக்ரேனும் 40பில்லியன் கன மீற்றர் எரிவாயு உக்ரேனூடாக நிலத்தடி குழாய்கள் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் உக்ரேன் 2024-ம் ஆண்டு வரை $7பில்லியன் வருமானத்தைப் பெற அவ் ஒப்பந்தம் வகை செய்துள்ளது. இரசியாவின் Gazprom நிறுவனம் தற்போது நாளொன்றிற்கு 42.4 மில்லியன் கன மீற்றர் எரிவாயுவை உக்ரேனூடாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புகின்றது. இது உக்ரேனூடாக செல்லும் குழாய்கள் மூலம் அனுப்பக் கூடிய எரிவாயுவின் அளவின் 17% மட்டுமே!

இந்த எரிவாயு அனுப்புதலுக்கு உக்ரேனின் Naftogaz என்னும் நிறுவனம் இரசியாவின் Gazprom நிறுவனம் கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்க வில்லை என தீர்ப்பாயம் ஒன்றில் முறையிட்டுள்ளது. இரசிய Gazprom மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்கு எரிபொருள் விநியோகம் செய்யாமல் இருப்பதற்கே  வேண்டுமென்றே திட்டமிட்டு செய்வதாக மேற்கு நாட்டு ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றது.

குளிர்காலப் போட்டி நகர்வுகள்

குளிர் காலத்தின் முன்னர் இரசியாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாடுகளும் முயல்கின்றன. 155-மில்லி மீட்டர் Howitzers பல்குழல் ஏவூர்தி செலுத்திகள், GMLR ஏவூர்திகள், M-31 HIMARS மற்றும் M-142 HIMARS பல்குழல் ஏவூர்தி செலுத்திகள் போன்ற இரசியப் படையினருக்கும் அவர்களின் படைக்கலன் களஞ்சியங்களுக்கும் பேரழிவு ஏற்படுத்தக் கூடிய படைக்கலன்கள் அமெரிக்கா உக்ரேனியப் படைகளுக்கு வழங்குகின்றது. ஜேர்மனியும் உக்ரேனுக்கான தனது படைக்கல விநியோகத்தை அதிகரித்துள்ளது. இவை இரசியப் படையினருக்கு நடுக்கத்தை ஏற்படுத்த தொடங்கி விட்டன. மேற்கு ஐரோப்பாவை குளிரில் நடுங்க வைக்க எரிவாயுப் போரை புட்டீன் ஆரம்பித்து விட்டாரா என்ற கேள்வி எழுகின்றது. உக்ரேனுடன் பிணக்கு Nord Stream குழாய் சேதம் ஆகியவற்றைப் பார்க்கும் போது இரசிய அதிபர் புட்டீன் ஒரு குழாயடிச் சண்டையை தொடக்கி விட்டார் என்றே தோன்றுகின்றது. இப்போது வலுவாக இருக்கும் புட்டீனின் எரிவாயுப் படைக்கலன் வட ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கான குழாய்மூலமான எரிபொருள் விநியோகம், அமெரிக்காவில் இருந்து திரவப்படுத்தப்பட்ட இயற்கை வாயு விநியோகம் ஆகியவற்றால் இன்னும் 3 ஆண்டுகளில் வலிமை இழந்து போகும். பின்னர் சீனாவிற்கும் இந்தியாவிற்குமான எரிபொருள் விநியோகத்தில் இரசியா தங்கியிருக்க வேண்டியிருக்கும்.

எரிவாயு தொடர்பான கட்டுரையைப் படிக்க இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://veltharma.blogspot.com/2020/06/blog-post_16.html

Monday, 26 September 2022

சீன அதிபரி ஜீ ஜின்பிங்கை சிறையிலடைத்த பொய்-ஹிந்த்

 


சீனாவில் அதிபர் ஜீ ஜின்பிங்கு எதிராக படையினர் புரட்சி செய்து அவரை சிறையில் அடைத்து விட்டதாக பல இந்திய ஊடகங்கள் 2022 செப்டம்பர் 24-ம் திகதி செய்தி வெளியிட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவில் ஒரு பெரிய குழப்ப நிலை என்பது Too good to be true. ஆனால் சீனாவைப் பற்றி அதிகம் அறிந்து வைத்திருக்கும் ஜப்பான் மற்றும் தென் கொரிய ஊடகங்கள் அப்படி ஒரு செய்திகளை வெளிவிடவில்லை. அது மட்டுமல்ல உறுதிப்படுத்தப்பட முடியாத செய்திகளை முந்தியடித்து வெளிவிடுவதை வழமையாக கொண்ட பிரித்தானிய Daily Mail, அமெரிக்க Washington Post ஆகியவை ஜீ ஜின்பிங்க் கைது பற்றி ஏதும் செய்திகளை வெளிவிடவில்லை.



பொய் சொல்லும் ஜெய் ஹிந்த் கும்பல்

ஜெய் ஹிந்த் என தமது உரையாடல்களை முடிக்கும் இந்திய youtube channels பொய்ச் செய்திகளை வெளியிடத் தயங்காதவரகள், மேஜர் மதன்குமார் என்பவர் பாக்கிஸ்த்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தைப் பற்றிய கலந்துரையாடலில் உலகில் தனது சொந்த நாட்டு மக்கள் மேல் விமானத்தில் இருந்து குண்டுகளை வீசிய ஒரே நாடு பாக்கிஸ்த்தான் எனப் பொய்யுரைத்தார். இந்தியா 1966இல் மிஸ்ரோம் மக்கள் மீது குண்டு வீசியமையையும் இந்தியா உட்பட பல நாடுகளின் உதவியுடன் இலங்கை விமானப் படையினர் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தமையையும் ஒரு வாக்கியத்தில் மதன் குமார் மறைக்க முயன்றார். இன்னும் ஒரு youtube channel இல் B-21 Raider போர் விமானங்களை இந்தியா உற்பத்தி செய்வதாக புரட்டினார். ஆனால் அவை அமெரிக்காவின் விமானங்களாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய youtube channels பார்த்தால் இன்னும் சில நாட்களில் சீனா தன் படைக்கலன்களுடன் இந்தியாவிடம் சரணடைந்து விடுபது போலத் தோன்றும். ஈழ விடுதலையையும் தமிழ்த்தேசியத்தையும் கொச்சைப் படுத்துவதற்கு அவர்களுக்கு கூலி கிடைக்கின்றதா என எண்ணத்தோன்றும். 

தமிழர்களைப் பொறுக்கி என அழைக்கும் சுப்பிரமணியன் சுவாமி தன் பதிவை நீக்கி விட்டார்.:



ஜின்பிங்கிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள்

சீனாவின் புரட்சி நடந்தமைக்கு ஆதாரமாக சீனாவில் இருந்து 6,000 விமானப் பறப்புக்கள் இரத்து செய்யப்பட்டன என்பதை முதலாவது ஆதாரமாக முன்வைத்துள்ளன. சீனாவில் பல விமானப் பறப்புக்கள் இரத்துச் செய்யப்பட்டன என்றன. சீனாவில் போர் ஒத்திகை நடக்கும் போது விமானப் பறப்புகள் இரத்துச் செய்யப்படுவதுண்டு. சீன விமானச் சேவைகளின் இணையத்தளங்களில் பறப்பு இரத்துப் பற்றி பெரிதாக எதுவும் இருந்திருக்கவில்லை. SCO மாநாடு முடிய முன்னரே ஜீ ஜின்பிங் உட்பட பல சீனப் பிரதிநிதிகள் உஸ்பெக்கிஸ்த்தான் நகர் சமர்கண்ட் நகரில் இருந்து அவசரமாக நாடு திரும்பினர் என்பது இரண்டாவது ஆதாரமாக முன் வைக்கப்படுகின்றது. 2022 ஒக்டோபர் 16-ம் திகதி சீனப் பொதுவுடமைக் கட்சியின் மாநாடு நடக்கவிருக்கின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் அம்மாநாட்டிற்கான ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் அவசரமாக நாடு திரும்பினர். முன்றவது ஆதாரமாக சீனாவில்  படையினர் நடமாட்டம் அதிகமாக உள்ளதை வெளிப்படுத்தும் காணொலிகள் வெளிவந்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டது. Republic என்ற இந்திய ஊடகம் சீனாவில் 80கிலோ மீட்டர் நீளமான பார ஊர்தி படை வண்டிகள் தலைநகர் பீஜிங்கை நோக்கி நகர்வதாக செய்தி வெளியிட்டது. ஆனால் அக்காணொலி ஒரு சில செக்கண்டுகள் மட்டுமே காட்டப்பட்டன். 80கிமீ என்பது போலிச் செய்தி. இந்திய ஊடகங்கள் முன் வைக்கும் நான்காவது ஆதாரம் சீன அதிபர் எங்குள்ளார் என்பது பற்றி எந்த ஒரு சீன ஊடகமும் செய்தி வெளிவிடவில்லை என்பதாகும். 69 வயதான ஜீ ஜின்பிங்க் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் சீனர்கள் தம்மைத் தனிமைப் படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதையே அவரும் கடைப்பிடித்தார். சில இந்தியர்கள் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி மக்கள் சீனப் படைத்தளபதி லி கியோமிங் விரைவில் சீன அதிபராகுவார் என தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் Newsweek சஞ்சிகையின் இணையத்தளம் சீனா அதிபர் கைதுச் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வலம் வருகின்றன என்றது.

பொய்யாக முன்வைத்த “பின்னணி”

ஜின்பிங் தைவானைக் கைப்பற்ற அவசரப்படுகின்றார் ஆனால் சீனப் படைத்துறையினர் தயக்கம் காட்டுகின்றனர். அதனால் ஜின்பிங்குடன் படையினருக்கு பிணக்கு அதனால் அவர்கள் உஸ்பெக்கிஸ்த்தானில் இருந்து நாடு திரும்பியவுடன் ஜின்பிங்கை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர் என்ற வகையிலும் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. 2022 ஒக்டோபர் 10-ம் திகதி நடக்கவிருக்கும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மாநாட்டில் ஜீ ஜின்பிங் மூன்றாவது தடவையாக சீன அதிபராக பதவி ஏற்கும் வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் அவர் இறக்கும் வரை சீன அதிபராக இருப்பார் என எதிர் பார்க்கப்படுகின்றது. இதை பல பொதுவுடமைக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் விரும்பவில்லை எனக் கருதப்படுகின்றது. ஊழலை ஒழிக்கவும் ஜக் மா உட்படப் பல செல்வந்தர்கள் அளவிற்கு மிஞ்சி செல்வம் சேர்ப்பதை தடுக்கவும் ஜீ ஜின்பிங்க் கடுமையாக செயற்பட்டார். அதனால் அவருக்கு பொதுவுடமைக் கட்சியில் எதிரிகள் அதிகரித்துள்ளனர். ஊழல் செய்தவர்கள் பலரை ஜின்பிங் சிறையில் அடைத்துள்ளார். கொவிட்-2019 பெருந்தொற்று நோய்க்கு எதிராக சுழிய-பொறுமைக் கொள்கையை (Zero-Tolerance policy) ஜின்பிங் கடைப்பிடிப்பதால் சீனாவின் உற்பத்தித் துறையும் பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பல உற்பத்தியாளர்கள் ஜின்பிங் மீது வெறுப்புக் கொண்டுள்ளனர்.

மோடியின் கேடி வால்பிடிகள்

சில மோடி ஆதரவாளர்கள் மோடியைச் சந்தித்த வெளிநாட்டுத்தலைவரகள் பதவி இழக்கும் அளவிற்கு அவரிடம் அதிசய சக்தி உள்ளது எனக் கதை அளந்தனர். டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் பெஞ்சமின் நெத்தன்யாஹூ, பிரித்தானியாவின் பொறிஸ் ஜோன்சன் ஆகியோரின் வரிசையில் ஜீ ஜின்பிங்கும் இணைந்துள்ளார் என்றனர். டுவிட்டரில் சில இஸ்லாமியர்களுக்கும் சில இந்துக்களுக்கும் கடும் மோதல் நடப்பது வழமை. ஜீ ஜின்பிங் என போலிச் செய்தி வெளியிட்ட இந்துக்களை இஸ்லாமியர்கள் கழுவி ஊற்றுகின்றார்கள். ஜின்பிங் கைது செய்யப்பட்டதாக பொய்யாஅ செய்தி வெளியிட்ட youtube பதிகளை அதன் மொக்கை இரசிகர்கள் "ஆகா அற்புதமான ஆய்வு" என தொடர்ந்தும் வழமையான புளுகித் தள்ளி பின்னூட்டமிடுதலை செய்து கொண்டே இருக்கின்றார்கள்.  பல டுவிட்டர் பதிவுகள் இந்திய டுவிட்டர் பதிவுகளை கிண்டல் செய்தன:



உண்மையில் பொதுவுடமைக் கட்சியில் ஜீ ஜின்பிங்கின் எதிரிகளாக கருதப்படுபவர்களை தூக்கிலிட்டும் சிறையிலடைத்தும் தன் இருப்பை வலிமைப் படுத்திக் கொண்டிருக்கின்றார். சீனாவை எப்படி முன்னேற்றி உலகின் முதல்தர நாடாக்குவது என்ற கனவுடன் சீனர்கள் செயற்படுகின்றார்கள். பாவம் இந்தியர்கள் மனுதர்ம சாஸ்த்திரத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு அடுத்த நாடு எப்போ சீரழியும் என்ற கனவுடன் அலைகின்றார்கள். 

உலக நாடுகளின் அசாதாரண நிகழ்வுகள் நடந்தால் தங்கத்தின் விலை மிகவும் அதிகரிக்கும். நாணயங்களின் பெறுமதி குறையும் பங்குச் சந்தையில் விலைச் சுட்டெண் சரியும். அப்படி ஏதும்  நடக்கவில்லை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடக்கவில்லை. 

பொதுவுடமைச் சர்வாதிகாரிகள் தங்கள் நாட்டில் படையினர் அதிகாரப் போட்டியில் தனித்து ஈடுபடாதவாறு பொதுவுடமைக் கட்சியின் முழுக் கட்டுப்பாட்டில் படையினரை வைத்திருப்பார்கள். இது முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் தற்போதைய சீனாவிலும் உள்ளது. சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த போது படையினரால் ஏதும் செய்ய முடியவில்லை. இதை அறியாதவர்கள் பலர் youtube channels நடத்தி மக்களிடையே அறியாமையை பரப்புகின்றார்கள். 

Thursday, 22 September 2022

உக்ரேனில் இரசியப் பின்வாங்கல் பின்னடைவா?

 


2022 செப்டம்பர் 5-ம் திகதி உக்ரேன் படையினர் இரசிய ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிராக் ஓர் அதிரடித் தாக்குதலை உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் உள்ள கார்கீவ் மாகாணத்தில் நடத்தி அம் மாகாணத்தின் பெரும் பகுதியை கைப்பற்றினர். உக்ரேன் கிறிமியா இரசியாவிற்கு சொந்தமானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், உக்ரேன் தனது கிழக்குப் பிராந்தியத்தில் பெருமளவு நிலப்பரப்பை விட்டுக் கொடுக்க வேண்டும், உக்ரேன் தனது படைக்கலன்களை கைவிட வேண்டும், உக்ரேன் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் இணையும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் போன்ற தனது கோரிக்கைகளை உக்ரேனை ஏற்க வைப்பதற்காக இரசியா உக்ரேன் மீது “சிறப்புப்படை நடவடிக்கை” என்னும் பெயரில் இரசியா உக்ரேன் மீது ஆக்கிரமிப்பு படையெடுப்பை 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்தது. அதில் பெரும் பின் வாங்கல் ஒன்றை செப்டம்பர் 5-ம் திகதி இரசியாவை உக்ரேன் செய்ய வைத்தது.

Combined Arms Manoeuvre

தொலைதூரத் தாக்குதல் படைக்கலன்களையும் குறுகிய தூரத் தாக்குதல் படைக்கலன்களையும் ஒன்றிறைந்துக் கையாளும் திறனை படைத்துறையில் Combined Arms Manoeuvre (இணைக்கப்பட்ட படைக்கலன்களை கவனமாககையாள்தல்) என அழைப்பர். இதை தனது 2022 செப்டம்பர் 5-ம் திகதி தாக்குதல்களின் போது உக்ரேன் சிறப்பாகச் செய்தனர். இதனால் இரசியாவின் வழங்கல் பாதைகள், கட்டுப்பாட்டு-கட்டளைப்  பணியகத்தின் புறநிலைகள்(outposts) உட்படப் பல தாக்குதல் வலிமைகள் சேதமடைந்தன. 

பின்வாங்கலின் பின்னர் இரசியா செய்த நகர்வுகள்:

1.இரசியப் படையினருக்கு எதிரான சட்டம்

இரசியப் படையில் இருந்து படை நடவடிக்கைகளின் போது தப்பி ஓடுபவர்களையும் படைக்கலன்களுக்கு சேதம் விளைவிப்பவர்களையும் அதிகாரிகளுக்கு கீழ்ப்படிபவர்களையும் கடுமையாக தண்டிக்கும் சட்டத்தை 2022 செப்டம்பர் 20-ம் திகதி நிறைவேற்றியுள்ளது. இரசியப் படையினர் அதிகாரிகளுக்கு கீழ்ப்படிய மறுக்கின்றார்கள் தங்கள் சொத்துக்களை தாமே சேதப்படுத்துகின்றார்கள், படையில் இருந்து தப்பி ஓடுகின்றார்கள் என மேச்ற்கு நாட்டு ஊடகங்கள் பரப்புரை செய்தபோது இரசியா அவை பொய்யான செய்திகள் என மறுத்து வந்தது. இரசியாவின் மறுப்பை இரசியாவின் இந்த நகர்வு கேள்விக்குறியாக்கியுள்ளது. இரசியா உக்ரேனில் 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்த போரை இரசியா போர் என்று சொல்லாமல் அதை ஒரு சிறப்புப் படை நடவடிக்கை என்றே அழைக்கின்றது. இரசியா உக்ரெனில் போர் செய்கின்றது என்று சொல்வது இரசிய சட்டப்படி குற்றமாகும். இரசிய சட்டத்தில் சிறப்பு படை நடவடிக்கை என ஒன்று இல்லை என்றபடியால் அதற்கான சட்டம் இரசியாவில் தேவைப்படுகின்றது.

2. புதிதாக மேன்படைக்கு (Reserve Force) ஆட்சேர்ப்பு

இரசியா புதிதாக மூன்று இலட்சம் பேரை தனது மேன்படையில் (Reserve Force) இணைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இரசியா தனது படைக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்யலாம் என்ற கரிசனையில் பல இரசியர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடுவதாக பிரித்தானியாவின் டெய்லி மெயில் என்னும் இரசியாவிற்கு எதிரான செய்திகளை வெளியிடும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இரசியாவை பின் வாங்கச் செய்யும் அமெரிக்கப் படைக்கலன்கள்:

அமெரிக்கா தொடர்ந்தும் பல படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்கி வருகின்றது. ஆரம்பத்தில் இருந்தே மட்டுப்படுத்தப்பட்ட வலிமைகளைக் கொண்ட படைக்கலன்களையே அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கி வந்தாலும் 2022 ஜூன் மாதத்தில் இருந்து வலிமை மிக்க பல்குழல் ஏவூர்தி செலுத்திகளை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்குகின்றது.

1. 155-மில்லி மீட்டர் Howitzers ஏவூர்தி செலுத்திகள்

155-மில்லி மீட்டர் Howitzers என்னும் இழுத்துச் செல்லும் ஏவுகணைச் செலுத்திகள். இந்த வகை எறிகணைச் செலுத்திகள் 122ஐ அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியிருந்தது. அவற்றிற்கான குண்டுகள் எட்டு இலட்சம் வரை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியது.


2. அமெரிக்காவின் GMLR ஏவூர்திகள்

GMLR என்னும் துல்லியமாக எதிரியின் இலக்குகளைத் தாக்கக் கூடிய ஏவூர்திகள். இவை GPS மூலம் வழிகாட்டப்படுபவை. 70கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட தாக்கி அழிக்க வல்லவை. இவற்றைச் செலுத்தக் கூடிய 155மிமீ Howitzer செலுத்திகளையும் அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியுள்ளது.



3. அமெரிக்காவின் M-31 HIMARS மற்றும் M-142 HIMARS ஏவூர்தி செலுத்திகள்

M-31 HIMARS M-142 HIMARS என்ற இருவகை High Mobility Artillery Rocket System மிகவும் நகரக் கூடிய பல் குழல் ஏவுகணைச் செலுத்திகள் ஆகும். இவற்றால் பல தொலைதூரம் பாயும் வழிகாட்டல் ஏவுகணைகளை ஒரேயடியாக வீச முடியும். அமெரிக்கா 2022 ஜூனில் உக்ரேனுக்கு வழங்கிய இந்த ஏவுகணைச் செலுத்தியை இரசியர்களின் கட்டளை நிலையங்களையும் படைக்கலன் கழஞ்சியங்களையும் அழிக்க உக்ரேனியர்கள் பயன்படுத்துகின்றார்கள். பல M-31 HIMAR ஏவுகணைச் செலுத்திகளை அழித்ததாக இரசியர்கள் சொல்கின்றனர். உக்ரேனியர்களிடம் முப்பதிற்கும் மேற்பட்ட M-31 HIMARS இருப்பதாக நம்பப்படுகின்றது. M-31 HIMARS ஐப் பாவித்து 400இற்கு மேற்பட்ட இரசிய இலக்குகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை சொல்கின்றது. HIMARS இரசியப் படைக்கலன்களின் அரைப்பங்கை அழித்து விட்டது என சில செய்திகள் வருகின்றன. ஆனால் இரசியா தனது படை நடவடிக்கைகளை தொடர்ந்து செய்கின்றது. M-142 HIMARSஇல் இருந்து வீசப்படும் ஏவூர்திகள் 200மைல்கள்(321கிமீ) தூரம் வரை பாயக்கூடியன. இவற்றைப் பாவித்து கிறிமியாவில் உள்ள இரசியப் படை நிலைகள் மீது உக்ரேனியப் படையினர் தாக்குதல் செய்கின்றனர். இதனால் கிறிமியாவில் இருந்து இரசியாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் வெளியேறியதாகவும் செய்திகள் வருகின்றன. HIMARS ஏவூர்திச் செலுத்திகள் துரிதமாக இடமாற்றம் செய்யக் கூடியவை. ஓரிடத்தில் இருந்து தாக்குதல் செய்து விட்டு உடனடியாக வேறு இடத்திற்கு மாறி மறைந்திருக்க கூடியவை. அதனால் ஏவூர்திகள் செலுத்தப்படும் இடத்தின் மீது பதிலடி தாக்குதல் செய்து அவற்றை அழிக்க முடியாது. 

உக்ரேன் பாவித்தஉத்தி

தெற்கில் கேர்சன் பிராந்தியத்தைக் மீளக் கைப்பற்றுவோம் கிறிமியாவை மீட்போம் எனச் சொல்லி சிறிய தாக்குதலை அங்கு தொடுத்துவிட்டு வடகிழக்கில் கார்கீவ் பகுதியில் அதிரடித் தாக்குதல் செய்தமை. இரசியப் படைத்துறையில் நிலவும் ஊழலும் இரசியாவின் பின்னடைவிற்கு காரணம். உக்ரேனியர்கள் கேர்சனைக் கைப்பற்றப் போகின்றார்கள் என்ற எண்ணத்தில் இரசியா அதிக கவனத்தை அங்கு செலுத்தி வட கிழக்குப் பகுதியில் குறைந்த கவனத்தை செலுத்தியது.

போலந்து வழங்கிய Krab Self-propelled ஆட்டிலெறிகள் பலவற்றை செப்டம்பர் 5-ம் திகது உக்ரேனியர்கள் கார்கீவ் படை நடவடிக்கையின் போது பாவித்தார்கள்.

இடர் சூழ் எதிர்காலம்

இரசியா பெரிய அளவில் படை நகர்வுகளை இனிச் செய்தால் பெரும் ஆளணி இழப்பை சந்திக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  HIMRS Howitzer ஆகியவற்றை பயன்படுத்தும் திறனை உக்ரேனியப் படையினர் மிகத் துரிதமாக கற்றுக் கொண்டனர். உக்ரேனியர்கள் இது போன்ற படைக்கலன்களை ஏற்கனவே தாமே உற்பத்தி செய்தும் பயன்படுத்தியும் உள்ளனர். உக்ரேனின் தெற்குப் பகுதியில் உள்ள கேர்சன் பிரதேசத்தில் எதிரிகளின் படைநிலைகளுக்கு பின்னால் உள்ள படைக்கலன் களஞ்சியங்கள், பாலங்கள் போன்றவற்றை Howitzer இல் இருந்து வீசப்படும் ஏவூர்திகள் மூலம் தாக்கி அழித்துள்ளனர். இரசியப் படையினர் அதிக இடர் மிக்க பறப்புக்களைச் செய்கின்றனர். அதில் பல இழப்புக்களை அவர்கள் சந்திக்கின்றனர். தாழப்பறந்து தமது படையினருக்கு ஆதரவாக குண்டுகளை வீசும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இரசிய வான்படையினரின் Situation Awareness தொழில்நுட்பம் உயர்த தரத்தில் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. Situation Awareness தொழில்நுட்பம் எதிரியின் வான்பாதுகாப்பு மற்றும் வான்எதிர்ப்பு முறைமைகளை முன் கூட்டியே அறிந்து கொள்ளும் முறைமையாகும்.

  விலகி நிற்கும் இரசியாவின் நண்பர்கள்

2022 செப்டம்பர் 16-ம் திகதி உஸ்பெக்கிஸ்த்தான் நகர் சமர்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-ம் உச்சி மாநாடு நடைபெற்ற போது அங்கு வைத்து இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனை சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் தனைத்தனியே சந்தித்தனர். மோடி போர் புரிவதற்கு இது உகந்த காலம் அல்ல என புட்டீனுக்கு மோடி சொல்லியிருந்தார். ஜீ ஜின்பிங்கை சந்தித்த பின்னர் விளடிமீர் புட்டீன் சீனாவிடம் உக்ரேன் போர் பற்றிய கேள்வியும் கரிசனையும் உள்ளன என்றார். சீனாவின் பல முதலீடுகள் உக்ரேனில் இரசியாவின் படை நடவடிக்கையால் அழிக்கப்பட்டுள்ளன. சீனா உக்ரேன் போர் துரிதமாக முடிவிற்கு கொண்டு வரப்படுவதையே பெரிதும் விரும்புகின்றது.

இரசிய தேசியவாதிகளும் சில புட்டீனின் ஆதரவாளர்களும் இரசியா உக்ரேன் மீது முழுமையான போரைச் செய்ய வேண்டும் எனவும் அதிக படையினரையும் அதிக சிறப்பு படையணிகளையும் களமிறக்க வேண்டும் எனவும் புட்டீனை வற்புறுத்துகின்றனர். இரசியா கைப்பற்றிய முழுப் பிரதேசத்தையும் உக்ரேனால் மீளக் கைப்பற்ற முடியாது. இரசியா மேலும் அதிக படையினரை போரில் ஈடுபடுத்தும் போது நிலைமை மாற வாய்ப்புண்டு. 

இரசிய நலன்களைப் பாதுகாக்க எதையும் செய்வோம்; எம்மிடமிருக்கும் எந்தப் படைக்கலனையும் பாவிப்போம் என புட்டீன் சூளுரைத்துள்ளார். அவர் அணுக்குண்டைப் பாவிப்பார் என மிரட்டுகின்றார் என நம்பலாம். அணுக்குண்டுகள் இரசியாவிடம் இருக்கும் வரை இரசியாவிற்கு பின்னடைவு ஏற்படாது. 

இரசியாவின் உக்ரேன் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டமும் நடந்தது:


இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...