Followers

Wednesday, 14 August 2024

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்


இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் மாதம் 6-ம் நாள் உக்ரேனியப் படையினர் ஒரு மிகத்துணிச்சலான படை நகர்வு ஒன்றை இரசியாவின் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் (Kursk Oblast) செய்தனர். 2022-ம் ஆண்டு பெப்ரவரி தொடங்கப்பட்ட இரசிய உக்ரேனின் போரில் 2022இன் இலையுதிர் காலத்தின் பின்னர் இரண்டு தரப்பினரும் சமரணிகள் (battalions) மூலமாகவே படை நகர்வுகளை செய்து வருகின்றனர். ஒரு சமரணியில் சிற நூற்றுக் கணக்கான படையினர் மட்டும் இருப்பார்கள். ஆனால் உக்ரேன் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் ஐந்திற்கும் மேற்பட்ட படைத்தொகுதிகளை (Brigades) கொண்டு இந்த அதிரடித் தாக்குதலைச் செய்துள்ளது. பொதுவாக ஒரு படைத்தொகுதியில் ஆயிரம் படையினர் இருப்பார்கள்.

இரசியக் கண்ணில் மண் தூவல் 

உக்ரேன் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் அனுப்பிய படையில் ஐந்து தரைப்படைத் தொகுதிகளும் ஒரு வான் தாக்குதல் தொகுதியும் கவச வண்டிகள் மற்றும் தாங்கிகள் அறுநூறும் பயன்படுத்தப்பட்டன. ஆளிலிவிமானங்கள் கண்காணிப்புப் பிரிவுகள் என்பவற்றையும் சேர்த்தால் மொத்தம் பத்தாயிரம் உக்ரேனியப் படையினர் கேர்ஸ்க் பிராந்தியத்தில் களமிறங்கினர். புதிய போர் முறைமைகளில் இரகசியமாக எந்த ஒரு படைநகர்வையும் செய்ய முடியாது என்பது போரியலாளர்களின் கருத்தாகும். கண்காணிப்பு விமானங்கள், வேவுவிமானங்கள், உளவு விமானங்கள், ஆளிலிவிமானங்கள், ஆகியவை மட்டுமல்ல செய்மதிகள் போன்றவையும் தொடர்ச்சியாக போர்முனிகளை அவதானித்துக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் உக்ரேன் பத்தாயிரம் படையினர் தாங்கிகள் மற்றும் கவச வண்டிகளுடன் இரசியாவை அதிரவைக்கக் கூடியவகையில் நகர்த்தியமை உலகப் படைத்துறை ஆய்வாளர்களை வியக்க வைத்ததுடன் இரசியாவின் படைதுறையினர அதிர வைத்தது. 1.32 மில்லியன் படையினரைக் கொண்ட இரசியா 510,000 பேரை உக்ரேன் போரில் ஈடுபடுத்தியுள்ளது. 900,000 நிரந்தரப் படையினரைக் கொண்ட உக்ரேன் 500,000 படையினரை போர்முனைக்கு அனுப்பியுள்ளது. இரு நாடுக்ளுக்கும் இடையிலான 2295 கிமீ எல்லையில் எல்லையில் வலுக்குறைந்த புள்ளியைத் தெரிவு செய்வது இலகுவானது. ஆனால் எதிரியின் கண்காணிப்பைத் தவிர்த்து முன்னேறுவது மிகக் கடினமானது.



உக்ரேன் அனுப்பிய படைத்தொகுதிகள்

உக்ரேன் தனது ஊடறுப்பு போரை தொடங்கிய மூன்றாம் நாள் உக்ரேனின் 116வது இயந்திரமயமாக்கிய படைத்தொகுதி (Mechanized Brigade) வெளியிட்ட காணொலிப் பதிவில் உக்ரேனின் தங்கிகளும் கவச வண்டிகளும் தம் சொந்த நிலப்பரப்பில் பயணிப்பது போல் எதிர்ப்பின்றிப் பயணிப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த நாள் உக்ரேனின் 99வது இயந்திரமயமாக்கிய சமரணி (Mechanized Battalion) மிகவும் துரிதமாக தாம் நகர்வதாக ஒரு காணொலியை வெளியிட்டனர். உக்ரேனின் படைத்துறையிலேயே அதன் 99வது இயந்திரமயமாக்கிய சமரணிதான் மிகத் துரிதமாக நகரக்கூடியது. உக்ரேன் இரசியாவின் இரசியாவின் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் (Kursk Oblast) செய்த படைநகர்வை மிகவும் இரகசியமாகவே வைத்திருந்தது. ஊடுருவிய உக்ரேனியர்கள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற இரசியாவின் Su-34 என்னும் நவீன போர் விமானம் ஒன்றை உக்ரேனியர்கள் சுட்டு வீழ்த்தினர். அவர்கள் தம்முடன் ஒரு சிறந்த விமான எதிர்ப்பு படைக்கலன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். ஊடுருவிய உக்ரேனியர்கள் காப்பரண்களை அமைத்து தங்கள் நிலையை வலுப்படுத்துவதுடன் தமது நிலைகளை நெருங்கி இரசியப் படையினர் வர முடியாதவாறு கண்ணிவெடிகளையும் விதைத்துள்ளனர். உக்ரேனியர்கள் பல இரசியர்களைப் போர்க்கைதிகளாக கைப்பற்றியுள்ளனர்.  28 கிராமங்களை உக்ரேனியர்கள் கைப்பற்றியதாக இரசியா சொல்கின்றது. 70 கிராமங்கள் என்கின்றனர் உக்ரேனியர்கள். 



உக்ரேனின் நோக்கங்கள் எவை?

ஆளணித் தட்டுப்பாடும் படைக்கலத் தட்டுப்பாடும் உக்ரேனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கையில் உக்ரேன் ஆறாயிரம் அல்லது பத்தாயிரம் படையினரைக் களத்தில் இறக்கியமை அதனால் துணிச்சனால முடிவுகளை எடுக்க முடியும் என்பதைக் கட்டுகின்றது. உக்ரேனுக்கும் இரசியாவிற்கும் இடையில் நடக்கும் சமச்சீரற்ற போரில் (Asymmetric Warfare) அது அவசியமான ஒன்றாகும். உக்ரேன் இரசியாவின் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் ஊடறுப்புச் செய்தமையின்:

முதன்மை நோக்கம் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனுக்கு மூக்கறுப்பது போல ஓர் அவமானத்தைக் கொடுப்பதாகும்.

இரண்டாவது நோக்கம் உக்ரேன் படையினரின் மீது நம்பிக்கை வைக்க மறுக்கும் ஜேர்மன் முதலான நாடுகளின் கருத்தை மாற்றுவதாகும். மூன்றாவது நோக்கம் இரசியப் படையினரை விரக்தியடையச் செய்வது. நான்காவது நோக்கம் உக்ரேனுக்கு கருங்கடலில் நுழைவு மறுப்பு முயற்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இரசியாவின் கவனத்தை சிதறடித்தல்.

ஐந்தாவது நோக்கம் கேர்ஸ்க் பகுதியில்இரசியாவின் ஐரோப்பாவிற்கான எரிபொருள் விநியோக நிலையத்தை அழித்து இரசியாவிற்கு பொருளாதார இழப்பீட்டை ஏற்படுத்தல்.

ஆறாவது நோக்கம் இரசியாவின் ஒரு பகுதி நிலப்பரப்பை கைப்பற்றி வைத்திருப்பது எதிர்காலத்தில் இரசியாவுடனான பேச்சு வார்த்தையில் ஒரு பேரம் பேசும் வலுவை உருவாக்குதல்.



ஐரோப்பாவிற்கான எரிபொருள் விநியோகம்

 உக்ரேன் கைப்பற்றிய நிலப்பரப்பில் இரசியாவின் பெரிய எரிவாயு விநியோக நிலையத்தைக் கொண்ட Sudzha நகரும் அடங்கும். உக்ரேனியர்களால் அங்கிருந்து எரிவாயும் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க முடியும். Gas Connect Austria என்ற நிறுவனம் தங்களுக்கு குழாய்கள் மூலமாக கிடைக்கும் எரிவாயுவில் தடங்கல் இல்லை என்றது. இரசியாவின் எரிவாயு உற்பத்தி நிறுவனமான Gazprom தாங்கள் இப்போதும் எரிவாயுவை விநியோகிக்கின்றோம் என்கின்றது. 

கனடா இரசியாவில் படைக்கலன் பாவிக்க அனுமதி

உக்ரேனுக்கு பன்னிரண்டு Leopard-2A4 போர்த்தாங்கிகளையும் பா கவச வண்டிகளையும் நூற்றுக் கணக்கான ரோந்து வண்டிகளையும் கனடா வழங்கியுள்ளது. Kirsk மாகாணத்தை உக்ரேன் ஊடுருவிய பின்னர் (2024-08-15) கனடா தனது படைக்கலன்களை உக்ரேனியப் படையினர் இரசிய நிலப்பரப்புகளிலும் பாவிக்கலாம் என்ற அனுமதியை வழங்கியுள்ளது. Kirsk ஊடுருவலுக்கு முன்னர் பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகள் தமது படைக்கலன்களை இரசியாவின் நிலப்பரப்பிலும் பாவிக்கலாம் என்ற அனுமதியை வழங்கியிருந்தன. 

இரசியாவின் எதிர்வினை

இரசியாவினுள் ஊடுருவிய உக்ரேனிய படையினர் நான்கு நாட்கள் கழித்து தங்ளுடைய இருப்பை வலுப்படுத்துவதிலும் காப்பரண்களை அமைப்பதிலும் அதிகம் ஈடுபட்டனர். மேலதிக படையினரையும் படைக்கலன்களையும் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்கு உக்ரேன் அனுப்புவதாகவும் செய்திகள் வருகின்றன.  அவர்களின் நிலைகளை நெருங்கி இரசியப் படையினர் செல்ல முடியாதவாறு பதில் தாக்குதல்களைச் செய்தனர். தனியாக ஒரு வான் எதிர்ப்பு படையணியும் இணைந்து சென்றுள்ளது. இரசியாவால் பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்களைப் பாவித்து சில மணித்தியாலங்களுக்கும் அவர்களை சாம்பலாக்க முடியும். ஆனால் அதன் பின்னர் உக்ரேனுக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் உக்ரேனுக்கும் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை இரகசியமாகவோ பகிரங்கமாகவோ வழங்கினால் போர் ஆளணி இழப்பு மிக்க ஒரு போராக மாறும். இரசியா தனது சிறப்பு படையணிகளை ஆளணி இழப்பைக் கருத்தில் கொள்ளாது கேர்ஸ்க் பிராந்தியத்திற்கு அனுப்பி உக்ரேனியர்களை விரட்டும் முயற்ச்சியில் ஈடுபடும். ஒரு வாரத்திற்கும் மேலாக இரசியா உக்ரேனியர்களை விரட்ட முடியாமல் இருக்கின்றனர். உக்ரேனின் ஊடுருவலின் வேகம் கொடுத்த ஆச்சரியத்திலும் பார்க்க இரசியாவின் பதிலடி மெதுவாக இருப்பது அதிக ஆச்சரியத்தைத் தருகின்றது.  

அணுக்குண்டு பாவிக்கப்படுமா?

உக்ரேன் கைப்பற்றிய பகுதியைச் சுற்றிவர உள்ள பகுதியில் உள்ள மக்களை இரசிய அரசு வெளியேறச் சொல்லியுள்ளது. உக்ரேன் கைப்பற்றிய பிரதேசத்திலும் பார்க்க மூன்று மடங்கு பரப்பளவு கொண்ட நிலப்பரப்பில் இருந்து இரசியர்கள் இரசிய அரசால் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரசியா அணுக்குண்டு பாவிப்பதற்கு ஏதுவாக மக்களை வெளியேற உத்தரவிட்டிருக்கலாம். 

உக்ரேனின் தாக்குதல் பற்றிய கருத்துகள்:

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: இரசியாவை உக்ரேனியர்கள் ஒரு தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியுள்ளனர்.

விளடிமீர் புட்டீன்: உக்ரேன் படையினர் இரசியாவில் நிலைகொண்டிருக்கும் வரை பேச்சு வார்த்தை இல்லை. 

நேட்டோ படைத்துறை அதிகாரி Christopher G Cavoli: உக்ரேனியர் ஒரு வலுவற்ற புள்ளியைக் கண்டறிந்து அதை துரிதமாக தமக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளனர். உக்ரேனியர்களுடைய தாக்குதல் சரியாகப் போய்க்கொண்டிருக்கின்றது. 

டென்மார்க், நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகள் உக்ரேனுக்கு மொத்தமாக 45 அமெரிக்கத் தயாரிப்பு F-16களை வழங்கவுள்ளன. நெதர்லாந்து 2024 ஜூலை இறுதியில் ஆறு F-16களை வழங்கியுள்ளது. அவை முப்பது ஆண்டுகள் பழைய விமான்ங்கள் என்றாலும் பல புதிய இலத்திரனியல் போர் முறைமைகள், ரடார்கள் போன்றவை பொருத்தப்பட்டிருப்பதுடன் பல புதிய தொலைதூர ஏவுகணைகளையும் தாங்கிச் செல்லக் கூடியவை. உக்ரேன் போர் இனி தீவிரமானதாக மாறுவதுடன் இரசிய நிலப்பரப்பில் செய்யப் படும் தாக்குதல்களின் எண்ணிக்கையும் காத்திரமும் அதிகரிக்கும்.  


Wednesday, 7 August 2024

பங்களாதேச ஆட்சி மாற்றம்: அமெரிக்காவிற்கு தளம் அமைக்க மறுத்ததாலா?

பங்களாதேசத்தின் St Martin’s Island என அழைக்கப்படும் வங்காள விரிகுடாலில் உள்ள சிறு தீவை அமெரிக்காவிற்கு கொடுக்க மறுத்ததால் ஷேக் ஹசீனா பேகம் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவர் நாட்டை விட்டுத் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டதா? வங்களா விரிகுடாவில் மியன்மாருக்கு (பர்மா) அண்மையாக உள்ள எட்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட St Martin’s Island என்னும் ஒரு சிறிய தீவு இருக்கின்றது. அது பங்களாதேசத்திற்கு சொந்தமானது. அதற்கு மியன்மாரும் உரிமை கோருகின்றது. 


 St Martin’s தீவில் படைத்தளம் அமைக்கும் உரிமையை அமெரிக்கா பங்களாதேசத்தின் தலைமை அமைச்சராக இருந்த ஷேக் ஹசீனா பேகம் கோரி வந்ததாக 2023 ஜூன் மாதம் பங்களாதேசத்தின் உழைப்பாளர் கட்சியின் டக்கா-8 தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ரஷிட் கான் மேனன் தெரிவித்திருந்தார். மேலும் மேனன் அவர்கள் அமெரிக்கா சீனாவிற்கு எதிரான QUAD என்னும் கூட்டமைப்பில் பங்களா தேசமும் இணைய வேண்டும் என நிர்ப்பந்தித்தாகவும் சொல்லியிருந்தார். 


அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்காவிடில் அவர்கள் பங்களா தேசத்தில் ஆட்சியை ஆட்டம் காண வைப்பார்கள் எனவும் மேனன் எச்சரித்திருந்தார். 13-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பால் பல வங்காளி மக்கள் காளியம்மனை முழுமுதற் கடவுளாக வழிபடும் மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டனர். அதனால் தற்போது பங்களாதேசம் இருக்கும் பிரதேசம் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகவும் தற்போதைய மேற்கு வங்கம் இந்துக்களைப் பெரும்பான்மையாக கொண்ட பிரதேசமாகவும் உருவாகின. இதனால் பாக்கிஸ்த்தான் இந்தியாவில் இருந்து பிரியும் போது மேற்கு வங்கம் இந்தியாவுடனும் தற்போதைய பங்களாதேசம் பாக்கிஸ்த்தானுடனும் இணைக்கப்பட்டன.


பங்களா தேசம் விடுதலையான பின்னர் ஷேக் ஹசினா பேகம் அவர்களின் தந்தையும் தலைமை அமைச்சருமான முஜிபூர் ரஹ்மானை படைத்துறையினர் கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றினர். அந்தச் சதிக்கும் பின்னால் அமெரிக்கா இருந்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது. அதன் பின்னர் பங்களாதேசத்தின் பல இரத்தக் களரி மிக்க ஆட்சி மாற்றங்கள் நடந்தன: 
1975 நவம்பர் மேஜர் ஜெனரல் காலித் மொசராஃப் ஆட்சியைக் கைப்பற்றினார். 1977–1980 பல ஆட்சி மாற்ற முயற்ச்சிகள். 
1982 லெப்டினண்ட் ஜெனரல் ஹுசேன் மொஹமட் எர்சாட் ஆட்சியைக் கைப்பற்றினார். 
1996 சதி முயற்ச்சி. 
2007 காபந்து அரசுக்கு எதிராக கிளர்ச்சி 
2009 கிளர்ச்சி 
2011 சதி முயற்ச்சி
 2024 மாணவர் எழுச்சி 


ஷேக் ஹசினா பேகம் பங்களாதேசத்தின் ஆட்சி தனக்கு மட்டும் சொந்தமானது என்பது போல ஆட்சி செய்தார். எதிர்க்கட்சியினரை அடக்கினார். சுதந்திரப் போராட்ட த்தில் ஈடுபட்டவர்களுக்கு அரச பதவிகளில் முப்பது விழுக்காடு என பங்களாதேசத்தின் அரசியலமைப்பில் உள்ள ஏற்பாட்டைப் பயன்படுத்து தனது கட்சியினரை அரச பதவிகளில் அமர்த்தினார். மாணவர் அமைப்பு என்னும் பெயரில் ஒரு காடைக்கும்பலையும் வழி நடத்தினார். 


 St Martin’s Island என்னும் பவளப் பாறைத் தீவின் அமெரிக்கா படைத்தளம் அமைத்தால் அதில் இருந்து பங்களாதேசம், மியன்மார், இந்தியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவால் அச்சுறுத்தல் கொடுக்க முடியும். மியர்மாரில் சீனாவின் ஆதிக்கத்தையும் சமாளிக்க முடியும். தொடர்ச்சியான விலைவாசி அதிகரிப்பு, எரிபொருள் நெருக்கடி, வலுவிழந்த வங்கித்துறை, ஏற்றுமதியிலும் அதிகமான இறக்குமதி, குறைந்து செல்லும் அந்நியச் செலவாணிக் கையிருப்பு ஆகியவை மக்களை ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்து எழ வைத்தது. வளர்முக நாடுகளில் பொருளாதார நெருக்கடியை உருவாக்குவது அமெரிக்காவிற்கு கைவந்த கலை எனச் சொல்லலாம்.

இந்தியாவும் பங்களாதேசமும்

பங்களாதேசம் இந்தியாவுடன் 54 நதிகளை பகிர்ந்து கொள்கின்றது. இந்தியாவில் இருந்து பங்களாதேசத்திற்கு செல்லும் கங்கை, பிரம்மபுத்திரா, ஆகிய நதிகள் பங்களாதேசத்தின் 1.72மில்லியன் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்புடை நீர்ப்பிடி பிரதேசத்திற்கு நீர் வழங்குகின்றது. பங்களாதேசத்தின் உணவு உற்பத்தி பிரம்மபுத்திரா, கங்கை நதிகளின் வடிநிலத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது. இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் நீர்ப்பங்கீடு, எல்லை போன்றவை தொடர்பான பல முரண்பாடுகள் உள்ளன. இந்தியாவுடன் உறவை சீர் செய்ய பல இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிராக பங்களாதேசம் பல நடவடிக்கைக்களை மேற்கொண்டது. மேற்கு வங்கத்தில் இருக்கும் இந்து வங்காளிகளுக்கும் பங்களாதேசத்தில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு உண்டு. வங்காளிகள் மதத்திலும் பார்க்க இன மற்றும் மொழி உணர்வுகளால் அதிகம் பிணைக்கப் பட்டுள்ளார்கள். பங்களாதேசப் பிரிவினைக்கு முன்னர் கிழக்கு பாக்கிஸ்த்தானில் உள்ள வங்காளிகளுக்கு அட்டூழியம் நடந்த போது மேற்கு வங்காளத்தில் உள்ள வங்காளிகள் கிளர்ந்து எழுந்தனர். பங்களாதேசமும் இந்தியாவும் 4000கிலோ மீட்டர் நீளமான எல்லையைக் கொண்டுள்ளன. இது உலகின் ஐந்தாவது நீளமான எல்லையாகும். மியர்மார், வங்கக்கடல் தவிர பங்களாதேசத்தின் மூன்று திசைகளில் இந்திய எல்லைகள் இருக்கின்றன. இந்தியாவின் அசாம், திரிபுரா, மிசொரம், மெகாலாயா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பங்களாதேசத்துடன் எல்லைகளைக் கொண்டுள்ளன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் ஏழையும் இந்தியாவின் முதன்மை நிலப்பரப்பையும் இணைக்கும் சில்குரி இணைப்புப் பாதை மிகவும் சிறியது என்றபடியால் அது கோழிக்கழுத்து என அழைக்கப்படுகின்றது. இதை சீனா கைப்பற்றினால் அசாம், திரிபுரா, மிசொரம், மெகாலாயா, நாகலாந்து, மணிப்புரி ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் இருந்து துண்டிக்கப்படும். அப்படி ஒன்று நடக்கும் போது இந்திய பங்களா தேசத்தின் ஊடாகவே தனது விநியோகங்களை அந்த ஏழு மாநிலங்களுக்கும் செய்ய முடியும். அந்த மாநிலங்களை சீனாவால் இலகுவாக கைப்பற்ற முடியும்.

பங்களாதேசமும் இலங்கையைப் போல் அமெரிகா, சீனா, இந்தியா ஆகிய அயோக்கிய நாடுகளின் போட்டிக் களமாக மாறியுள்ளது. 


இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...