Followers

Saturday 13 June 2020

தமிழர்களும் கையாள்தல் அரசுறவியலும்




கையாள்தல் அரசுறவியல் (Engagement Diplomacy) உலகில் நீண்ட காலமாக இருந்துள்ளது. அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது அது பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 2008-ம் ஆண்டு பிரித்தானிய வெளியுறவுத்துறை அதற்கு ஒரு கோட்பாட்டு வடிவம் கொடுத்தது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009இல் அதை தனது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய பகுதியாக்கினார். முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில் கிளிண்டனும் பராக் ஒபாமாவும் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்சியாளர்களுடன் மோதலை தவிர்த்து அவர்களை கையாளுதல் என்பதை தமது வெளியுறவுக் கொள்கையில் பாவித்தனர். அமெரிக்காவிற்கு ஒவ்வாத சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் முரண்படாமல் “கையாள்தல்” செய்ய வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது. அமெரிக்காவிற்கு ஒவ்வாத அரசுகளை அயோக்கிய அரசுகள் என ஒதுக்காமல் அவர்களுடன் இருதரப்புக்கும் நலன் தரக்கூடிய வகையில் செயற்படுவதை கையாளும் கொள்கை எனப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை கையாள்தல் என்பது இறுதி இலக்கல்ல, இலக்கை நோக்கிய நகர்வு. மியன்மார் படைத்துறையினரை பராக் ஒபாமா கையாண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூக்கியை ஆட்சிப் பதவியில் அமர வழிவகுத்தார்

அமெரிக்க வெளியுறவில் கையாள்தல் அரசுறவியல்
பில் கிளிண்டன் பொஸ்னியாவிலும் கொசொவாவிலும் படைத்துறைக் கையாளலையும் செய்யத் தயங்கவில்லை. அந்த நடவடிக்கை சீனத் தூதுவரகத்தின் மேல் தெரிந்து கொண்டே குண்டு வீசும் அளவிற்கும் இரசியாவுடன் ஒரு போர் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் வரைக்கும் தள்ளப்பட்டது. தைவானை சீனா ஆக்கிரமிக்க முயன்ற போது தைவான் நீரிணைக்கு அமெரிக்காவின் இரு விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பி சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்ச்சியைக் கிளிண்டன் கைவிடச் செய்தார். எதிரிகளுடன் தெளிவான உறவை உருவாக்க எடுக்கும் முயற்ச்சியை கிளிண்டன் மேற்கொண்டார். இரசியாவை ஜீ-8 அமைப்பிலும் ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு அமைப்பிலும் மற்றும் பல பன்னாட்டு நிதி அமைப்புக்களிலும் இணைய கிளிண்டன் வழிவகுத்தார். பராக் ஒபாமா கையாள்தல் என்பது இறுதி இலக்கல்ல, இலக்கை நோக்கிய நகர்வு என்றார். மியன்மார் படைத்துறையினரை அவர் கையாண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூக்கியை ஆட்சிப் பதவியில் அமர வழிவகுத்தார்
. இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற நாடுகளின் எதிர்ப்புக்கிடையிலும் ஈரானுடன் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பான ஒப்பந்தத்தை ஐந்து நாடுகளுடன் இணைந்து ஒபாமா செய்தார். ஒபாமாவின் கையாள்தல் இருதரப்பு மரியாதை, பொதுவான அக்கறைகள், பகிரும் விழுமியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இரசியா உக்ரேனுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் அமெரிக்காவின் கையாள்தல் அரசுறவியலின் தோல்வியாகப் பார்க்கப்பட்டது. 
விரும்பத்தகாத ஆட்சியாளர்களால் ஆளப்படும் நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்தி அந்த நாட்டு மக்களையும் வர்த்தக அடிப்படையில் சுரண்டுதலை நோக்கமாகக் கொண்டதுதான் பராக் ஒபாமாவில் கையாள்தல் அரசுறவியல்.

ஹென்றி கிசிஞ்சரின் கள்ளத்தனமான கையாளல் அரசுறவியல்
1981 முதல் 1989 வரை அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் ஆட்சியின் போது உலகெங்கும் தென் ஆப்ரிக்காவின் இன ஒதுக்கல் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்த போது தென் ஆபிரிக்காவை ஒதுக்காமல் அதனுடன் உறவை பேணுவதற்கு ரீகனின் வெளியுறவுத்துறைச் செயலர் ஹென்றி கிசிஞ்சரின் “ஆக்கம்சார் கையாளல்” (Constructive Engagement) என்ற பெயரைக் கொடுத்தார். அமெரிக்கா தீவிரமான பனிப்போரில் ஈடுபட்டிருக்கும் வேளையில் இரசியாவிற்கு எதிரான அணியில் தென் ஆபிரிக்கா இருப்பது அவசியமானதாக இருந்தது. சஹாரா பாலைவனத்திற்கு தெற்கில் உள்ள நாடுகளின் பொதுவுடமைவாதம் பரவாமல் இருப்பதற்கு தென் ஆபிரிக்க நிறவெறி அரசின் உதவி அமெரிக்காவிற்கு தேவைப்பட்டது. அதனால் அந்த கள்ள உறவை நியாயப்படுத்த ஹென்றி கிசிஞ்சர் “ஆக்கம்சார் கையாளல்” என்ற பதத்தை பாவித்தார். அவரது திடுட்டுத்தனம் அம்பலமான பின்னர் யாரும் “ஆக்கம்சார் கையாளல்” என்ற பதத்தை பாவிப்பதில்லை. தென் ஆபிரிக்கா மீதான பொருளாதாரத் தடைகளால் அது நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கையில் “ஆக்கம்சார் கையாளல்” என்னும் போர்வையில் படைக்கல ஏற்றுமதி, முதலீடு உட்பட பல உதவிகளை ரீகன் - கிசிஞ்சர் ஆட்சி செய்தது. அப்படிச் செய்வதால் அங்கு மக்களாட்சியை நோக்கிய சீர்திருத்தம் முன்னெடுக்கப்படும் என அவர்கள் சொன்னார்கள். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. 

இந்திய ஜெய்சங்கரின் கையாளல்
இந்திய அமெரிக்க உறவை மிக நெருக்கமாக்குவதில் முன்னின்று செயற்படும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் 2019 டிசம்பர் நடுப்பகுயில் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் 2+2 சந்திப்பை வாஷிங்டனில் நடத்தி முடித்த பின்னர் இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாவதை விரும்பாதவர்களுக்கு பதிலளிக்கும் போது இந்தியா பாக்கிஸ்த்தானைத் தவிர தன்னுடன் முரண்பட்டுக்கொண்டு இருப்பவர்களை எப்போதும் “கையாள்வதை” வழக்கமாகக் கொண்டிருக்கின்றது என்றார். இந்தியாவை சீனாவிற்கு எதிரான அணியில் இணைவதால் உள்ள ஆபத்தை மறைக்க ஜெய்சங்கருக்கு அந்த கையாள்தல் எனற திரை தேவைப்பட்டது.

தமிழர்களால் இந்தியாவைக் கையாள முடியுமா?
இந்தியா தொடர்பாக தமிழ்த் தரப்பு எதிர் நிலையும் எடுக்க வேண்டாம். எடுபிடியாகவும் இருக்க வேண்டாம். கையாளும் மார்க்கங்களைக் கண்டு பிடிக்க வேண்டும்.” என்ற கருத்தை சிலர் ஈழத் தமிழர்கள் முன் வைக்கின்றார்கள். நாம் இந்தியாவை அப்படிக் கையாள முடியுமா? 2009 மே மாதத்தின் பின்னர் ததேகூ ஐ சந்தித்த எம் நாராயணனும் ஷிவ் ஷங்கர் மேனனும் உங்களுக்கு என்ன வேண்டுமென நீங்கள் சொல்ல வேண்டாம், உங்களுக்கு என்ன தேவை என்பதை நாம் முடிவு செய்கின்றோம் என்றனர். கொடுப்பதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக்காரர்கள் நீங்கள் என அவர்களின் நிலைப்பாடு இருந்தது; இன்றும் இருக்கின்றது. அப்படி இருக்கும்போது இருதரப்பு மரியாதை இல்லாத நிலையில் கையாளல் என்ற கொள்கையை தமிழர்கள் முன்னெடுக்க முடியாது. பில் கிளிண்டனின் வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்த ரொபேர்ட் சூட்டிங்கர் கையாளுதல் என்ற சொல் மோசமாக வரையறைச் செய்யப்பட்டு அளவிற்கு அதிகமாகப் பாவிக்கப்படுகின்றது என்றார். அதைத் தான் தமிழர்களும் செய்ய வேண்டுமா? கையாள்தல் என்றால் என்ன, அதை எப்படி முன்னெடுப்பது என்ற விளக்கம் இல்லாமல் இந்தியாவைக் கையாளுவோம் என்கின்றனர். 2013-ம் ஆண்டு இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டைக் கூட்டக் கூடாது என தமிழர்கள் முன்வைத்த போது அதன் பொதுச் செயலராக இருந்த இந்தியர் சொன்னது நாங்கள் இலங்கையை கையாள வேண்டும். என்பது அப்பது அவர்கள் சொன்னது ஒரு நொண்டிச்சாட்டு மட்டுமே. தமிழர்களை ஏமாற்ற சிலர் கையாள்தல் அரசுறவியலைக் கையில் எடுத்துள்ளனர்.
தமிழர்கள் இந்தியாவைக் கையாள வேண்டும் எனப் போதிக்கும் அரசியல் அறிஞர்களின் கருத்துக்கள் நிலையானதாகவோ அல்லது உறுதியானதாகவோ இல்லை. அவர்களின் கருத்துக்கள் 1980களில் இருந்து இப்படி மாறிக் கொண்டு போகின்றது:
·         இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு தனிநாடு பெற்றுத்தரும்.
·         இந்தியா தமிழர்களுக்கு இணைப்பாட்சி பெற்றுத்தரும்
·         இந்தியா தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் பெற்றுத் தரும்
·         இந்தியா தமிழர்களைக் கைவிடாது.
·         இந்தியாவை எதிர்த்து ஒன்றும் பயனில்லை.
ஆனால் இந்தியா தொடர்ச்சியாக பாக்கு நீரிணைக்கு இரு புறமும் உள்ள தமிழர்களுக்கு விரோதமான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில் இவர்களால் இந்தியாவிற்கு சார்பாக அறிவு சார்ந்த விவாதங்களை முன்வைக்க முடியாத நிலையில் ஒரு புதிய விவாதத்தை முன் வைக்கின்றனர். அதுதான் நாம் “இந்தியாவை கையாள வேண்டும்” என்ற முன்மொழிபு. தமிழர்களை இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்திருக்க இந்தியாவிற்கு சார்பானவர்கள் முன் வைக்கும் விவாதம்தான் இந்த கையாள்தல் என்ற வாசகம். 

சிங்களத் தலைவர்களின் மாறிய நிலைப்பாடு
இந்தியக் கொள்கை வகுப்பாளரகள் தமிழர்களை தமது வெளியுறவுக் கொளையைப் பொறுத்தவரை ஒரு முள்ளாகவே கருதுகின்றனர். சிங்களவர்களை தமது பக்கம் நிற்க வைப்பதே இந்தியாவின் நோக்கமாக இருக்கின்றது. இலங்கையை ஆட்சியாளர்கள் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க மாட்டாரகள் என்பது தலைமை அமைச்சர் மஹிந்த ராஜ்பக்ச 2020 மே மாதம் நியூஸ்-18 தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் இருந்து தெளிவாகத் தெரிகின்றது. 2014-ம் ஆண்டு நடந்த இலங்கை அதிபர் தேர்தலின் பின்னர் ராஜபக்சேக்கள் இந்தியா அதிருப்தியடையும் வகையில் சீனாவுடன் உறவை வளர்ப்பது ஆபத்து என்பதை உணர்ந்து கொண்டனர்.

கையாள்தல் அரசுறவியல் என்றால் என்ன?
அரசுறவியலில் தற்போது அரசுகள் அரசிலா அமைப்புக்கள், பன்னாட்டு பொது அமைப்புக்கள், இனக்குழுமங்கள், குடிசார் சமூகங்கள், படைக்கலன்கள் ஏந்திய குழுக்கள் என்ப பல உள்ளடக்கப் பட்டிருக்கின்றன. இவற்றை அரசு அல்லது அமைப்பு எனச் சுருக்கமாக அழைப்போமாக
·         ஓர் அரசு அல்லது அமைப்பு தனக்கு போட்டியாளருடன் அல்லது எதிரியுடன் மோதல் தவிர்ந்த பிறவழிகள் மூலம் தனது நலன்களுக்கும் கௌரவத்திற்கும் பாதகம் ஏற்படாத வகையில் இடைவினையாற்றி இரு தரப்பிற்கும் நன்மையளிக்கக் கூடிய வகையில் இடைவினையாற்றுதல் (interacting) கையாளுதல் எனப்படும்

இந்தியா ஈழத் தமிழர்களின் நலன்களுக்கும் கௌரவத்திற்கும் பாதகம் ஏற்படாத வகையில் செயற்படாதவரையில் தமிழர்களால் இந்தியாவைக் கையாள முடியாது. சிங்கள அரசியல்வாதிகள் இலங்கைப் பாராளமன்றத்தில் நாம் தமிழர்களுக்கு இணைப்பாட்சி கொடுக்கத் தயாராக இருந்தாலும் இந்தியா அதை அனுமதிக்காது என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவின் நிலைப்பாடு உள்ளது. 

கையாள்தல் என்ற சொல் கள்ளர்களின் கடைசிக் குகை.

No comments:

Post a Comment

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...